நம் குரல்

Friday, May 27, 2011

கடைசியாக எப்பொழுது அழுதீர்கள்?



‘அழுதுவிடு நீ அழுதுவிடு
அழுதே மனதை ஆறவிடு - நான்
அழுதவன் ஆதலால் அனுபவம் அதிகம்
அழுதுவிடு நீ அழுதுவிடு....’

தேர்வுத் தாளிலிருந்த அழுகை பற்றிய கவிதையில்
மாணவர்களோடு நீந்தத் தொடங்கினேன்

கடைவிழி அரும்பும் நீர்மணிகள்
அழுது சிவந்த கண்கள்
மகிழ்ச்சிப் பெருக்கில் பொங்கும் திவலைகள்
அழமாட்டேன் என கம்பீரம் காட்டும் கண்கள்
மனத்தில் விரிந்தன கண்ணின் காட்சிகள்

“கடைசியாக எப்பொழுது அழுதீர்கள்?”
கேள்வித் தூண்டிலை மாணவரிடம் வீசியெறிந்தேன்
வேடிக்கையாய் ஏதும் சிக்குமென
விடை மீன்களுக்குக் காத்திருந்தேன்

“சார், போன மாசம் எங்கப்பா திதிக்கு”
“ போன வாரம் பைலோஜி பேப்பருல பிழையா
செஞ்சுட்டேன்னு அழுதேன்”
“மூனு நாளக்கி முன்ன எனக்கும் தம்பிக்கும் சண்ட வந்தப்போ”
“தெரியல சார் எப்ப அழுதன்னு”
“ரெண்டாம் மாசம் எங்க மாமா எக்சிடண்ல இறந்தபோனப்ப சார்”
“என் கூட்டாளி மாலதி என்னோட பேசமாட்டேன்னு சொன்னப்போ”
“ஏன் சார்? நாங்க அழுத கதையெல்லாம் கேட்டு
கவிதை எழுதப்போறீங்களா?”
“சார் நீங்க எப்போ அழுதீங்க? அத சொல்லுங்க”

யாருமறியாமல் தனிமையில் நான் தேம்பித் தேம்பி
அழுத நினைவுகள் நனைக்கத் தொடங்கின

என் மீது பாய்ந்த கேள்வியை
உங்களிடம் திருப்பி அனுப்புகிறேன்

கடைசியாக எப்பொழுது அழுதீர்கள்?

No comments:

Post a Comment