நம் குரல்

Friday, December 26, 2014

கடவுள்கள் விற்பனைக்கு





  கோயில் வாயிலில் கம்பீரமாக எழுந்து நிற்கும்
  கோபுர அழகை அள்ளிப் பருகியவாறு நெருங்கி
  வலது பக்கம் திரும்பி
  சிறிய நடைபாதையோரம் நடந்தால்
  கையேந்தும்  மனிதர்களுக்கு எதிரே
  வரிசை பிடிக்கும் கடைகளில் காணலாம்
  விதம்விதமாய்க் கடவுள்களை

  கண்ணாடிப் பிரேமில் நிலைகொண்டவாறு
  ஆயுதங்களோடு அபயக்கரம் நீட்டியவாறு
  மௌனம் பூத்த முகத்தில் காட்சி தந்தவாறு
  கருணைபொழியும் புன்னகை சிந்தியவாறு
  கோபக்கனலில் பொங்கியவாறு
  அணிமணி அலங்காரங்களில் மின்னியவாறு
  விற்பனைக்குக் காத்திருக்கிறார்கள் கடவுள்கள்

  கடைகளிலிருந்து தூதுவர்களின்வழி
  அவர்கள் தொடர்ந்து குரல் கொடுக்கிறார்கள்
  நம்மோடு அழைத்துச் சென்றால்
  நம் சிக்கல்கள் தீர வழி பிறக்குமென்றும்
  நம் இன்னல்கள் இல்லாதொழியுமென்றும்
  நம் கனவுகள் கைகூடுமென்றும்
  நம் இல்லங்களில் மகிழ்ச்சி நிறையுமென்றும்
  நம் பாதைகளில் முட்கள் மறையுமென்றும்
  நம் தீவினைகள் தீருமென்றும்

  அங்கிருந்து திரும்பி நடந்து
  கோபுரம் கடந்து உள்ளே நுழைகையில்
  எதிர்பார்த்துக் காத்திருக்கும் முகங்கள் மலர
  பார்வையால் விசாரித்தவாறு
  நம்மை வரவேற்கின்றன

  வழிபாட்டுக்குத் தம்மால் துணைவர முடியுமென்றும்
  தலவரலாறு தமக்குத் தெரியுமென்றும்
  சிறப்பு வழியில் போகமுடியுமென்றும்
  குறைந்த செலவே ஆகுமென்றும்
  பிடிவாதமாய்ப் பின்தொடரும் கால்கள்

  எல்லாம் தவிர்த்து உள்ளே நடந்து
  பார்வை மறைக்கும் கூட்டத்தின் ஊடே
  தெரிந்ததாய்க் கற்பிதம்செய்து
  கைகூப்பி வணங்கித் திரும்புகிறோம்
  மனம் நிறைய அமைதியை நிறைத்தவாறு
 

Sunday, December 7, 2014

புதிய கவிதை நூல்கள்

'திசைகள் தொலைத்த வெளி', 'இன்னும் மிச்சமிருக்கிறது' ஆகிய என் இரு கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. 296 பக்கங்கள் கொண்ட 'இன்னும் மிச்சமிருக்கிறது' நூல், முப்பது ஆண்டுகளில் (1978 - 2006) நான் எழுதிய கவிதைகளின் முழுத் தொகுப்பாகும். இரு நூல்களும் சிங்கை பாலு மணிமாறனின் தங்கமீன் பதிப்பக வெளியீடாகும்.  நூல் வெளியீடு இனிமேல்தான்( 2014).