நம் குரல்

Saturday, January 2, 2016

நானறிந்த இராஜகுமாரன்




வாசிப்பின் சுவையறிந்து நான் வாசிக்கத் தொடங்கிய காலத்தில் எனக்கு அறிமுகமாகிய எத்தனையோ படைப்பாளிகளில் இராஜகுமாரனும் ஒருவர். படிவம் மூன்று முதலே ஏடுகளுக்கு நான் எழுதத் தொடங்கி விட்டேன். அப்போது வாசகர் கடிதங்களோடு சிறு சிறு கட்டுரைகளும் எழுதிக்கொண்டிருந்தேன். 1978ஆம் ஆண்டில் வானம்பாடி வார இதழின் வருகை எனக்குள் துயில் கொண்டிருந்த கவிதை உணர்வுகளை எழுப்பிக் கவிதையுலகில் என்னையும் ஆற்றுப்படுத்தியது. கவிதைக்குள் என்னை ஈர்த்த படைப்பாளிகளில் இராஜகுமாரனும் முக்கியமானவர். வானம்பாடி வார இதழ் மூலம்தான் இவரின் படைப்புகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆதி.குமணன்,  இராஜகுமாரன், அக்கினி, தியாகு, பாலு என அணிவகுத்த ஆசிரியர் குழுவில் இராஜகுமாரனைத் தனித்த ஆளுமையாக அடையாளம் காண முடிந்தது.

நான் எழுதிய முதல் கவிதை வானம்பாடியில் ‘மங்குகள்’ என்ற தலைப்பில் வெளிவந்தது. அது குறித்து ‘என் முதல் கவிதை’ என்ற கட்டுரையில், இராஜகுமாரன் அல்லது அக்கினி கைபட்டு என் கவிதை சற்று மாற்றங்களோடு வெளிவந்தது என்று குறிப்பிட்டுள்ளேன். என் கவிதைப் பயணத்தைத் தொடக்கி வைத்தவர்களில் இவரையும் நன்றியுணர்வோடு நினைத்துப் பார்க்கிறேன்.

வானம்பாடியில்  வெளிவந்த இராஜகுமாரனின் ‘சாசனங்கள்’ கட்டுரைத் தொடர் அற்புதமான படைப்பாகும். நான் மிகவும் விரும்பி வாசித்த தொடராகும். மலேசியத் தமிழ் இலக்கிய வெளியில் அத்தகைய கனமான, மாறுபட்ட சிந்தனையைக் காண்பது அரிது. இராஜகுமாரன் யார் என்று பலருக்கும் அறிமுகப்படுத்திய கட்டுரைகளாக அமைந்தன. அது நூல் வடிவம் பெற்றிருந்தால் மலேசிய இலக்கியத்திற்குச் சிறந்த படைப்பு கிடைத்திருக்கும். ஒரு படைப்பாளியின் விழித்திருந்த இரவுகள், காலத்தில் கணக்கின் வராமல் காற்றில் கலந்து மறைந்துபோவது எத்தனை துயரமானது, இழப்புக்குரியது என்பதை ஒரு படைப்பாளியாக என்னால் உணர முடிகிறது.


சிறுகதை வடிவத்திலும் இராஜகுமாரன் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டவர். வெறும் சம்பவங்களின் தொகுப்பாக அமைந்துவிடும் மலேசியச் சிறுகதைகளிலிருந்து மாறுபட்டதாக இவரின் சிறுகதைகள் அமைந்துள்ளன.  நல்ல வேளையாக அவை தொகுக்கப்பட்டு ‘மனமெல்லாம் கைகள்’ என்ற தலைப்பில் நூலாக வந்துவிட்டன. புறத்தைவிட  கதைப்பாத்திரங்களின் அகத்தை ஆராயும் உளவியல் பார்வைகொண்ட கதைகளாக அவற்றை எழுதியுள்ளார்.

1983ஆம் ஆண்டு ஸ்ரீகோத்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் நான் பயின்ற காலம். தமிழ் ஓசையில் பணியாற்றிய  இராஜகுமாரனைத் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். கல்லூரியில் இடுபணிக்காக அவரின் சிறுகதைகள் குறித்து அவரோடு பேசவேண்டும் என்றேன். மறுக்காமல் வரச் சொன்னார். மறுநாள் மாலை சென்றேன். அலுவலகத்தில் வேலை முடிந்த கையோடு,  தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதையையும் விரிவாக விளக்கினார். மிகுந்த மனநிறைவோடு விடைபெற்றேன். நான் சிறுகதைத் துறையில் கால் பதித்த காலக்கட்டம் அது. அவரின் விளக்கம் படைப்பாளியான எனக்குப் பயனாக அமைந்தது.

‘இராத்திரிப்பூ’ இவர் எழுதிய நாவலாகும். மாதந்தோறும் ‘ஒரு வெள்ளியில் ஒரு நாவல்’ திட்டத்தில் குயில் நிறுவனத்தின் வெளியீடாக இந்நாவல் வெளிவந்தது. அந்த நாவலில் இடம்பெறும் ஒரு கருத்து ஏனோ இன்னமும் என் மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. ‘மரணம் ஒரு வீட்டின் கதவைத் தட்டும்போது, அந்த வீட்டில் இருக்கும் பிரச்சினைகள் இன்னொரு வீட்டைத் தேடிப் போய்விடும்’. எவ்வளவு பொருள் பொதிந்த சொற்கள் இவை. மரணத்தின் மாயக்கரம் பிரச்சினைகள் மீது போர்வையைப் போர்த்திவிட்டு அவற்றின் தீவிரத்தைக் குறைத்து விடுகின்றன  என்பதை உணர்த்தும் வரிகள் இவை.

இராஜகுமாரன் வெளியிட்டு வரும் நயனம் இதழ், இந்நாட்டுத் தமிழ் இதழியல் வரலாற்றில் இவரின் பெயரைத் தவறாமல் பதிவு செய்யும் என்பது உண்மை. இதனால், ‘நயனம் இராஜகுமாரன்’ என்ற அடைமொழியே இன்று இவருக்கு நிலைத்துவிட்டது. தமிழகத்தின் குமுதம் இதழின் மலேசியப் பதிப்போ என்று எண்ணும் அளவுக்குக் கையடக்க அளவில் வாசகர் இதயங்களைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் நயனம் இதழ் வெளிவந்தது. ஏடுகளில் ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் இலக்கியத்தை வாசிக்கும் இதயங்களை அரவணைத்து புதிய படைப்புகளை அறிமுகம் செய்தது. நயனத்தின் அழகில் ஈர்க்கப்ப்ட்டு அதன் தீவிர வாசகனாய் நானும் மாறினேன். ஒவ்வொரு வாரமும் நயனத்தின் வருகைக்கு ஏக்கத்தோடு காத்திருந்து அதன் படைப்புகளை வாசித்து மகிழ்வேன். இன்று நயனம் மாத இதழாகி வாசகர் எண்ணிக்கையும் குறைந்திருக்கலாம். ஆனால், பல படைப்பாளிகளுக்குத் தன் கதவுகளை அகலத் திறந்துவிட்டு எழுத வழங்கிய வாய்ப்புகளை  யாரும் மறுக்க முடியாது.

நயனத்தில் எழுத எனக்கும் வாய்ப்புகள் வழங்கினார். என் இரண்டு தொடர்கள் நயனத்தில் வெளிவந்தன. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தமிழகத்துக்கு மேற்கொண்ட இலக்கியப் பயண அனுபவத்தை, ‘இலக்கியப் பயணத்தில் ஹைக்கூ பாடகன்’ என்ற தலைப்பில் தொடர் கட்டுரையாக எழுதினேன். ஒவ்வொரு வாரமும்  இவரே தலைப்புகள் எழுதி தொடரைச் சுவையாக்கினார். ஓவியர் வேலவன் பக்க அமைப்பில் மெருகூட்டினார். பின்னர், அது நூலாக வடிவம் பெற்றபோது, இராஜகுமாரன்  அணிந்துரை எழுதி நூலுக்குச் சிறப்புச் சேர்த்தார்.

தொடர்ந்து, ‘என் எழுதுகோலே நெம்புகோலாக’ என்ற கவிதைத் தொடரையும் நயனத்தில் எழுத வாய்ப்பினை வழங்கினார். “எத்தனை வாரம் வேண்டுமானாலும் தொடர்ந்து சுதந்திரமாக எழுதுங்கள்” என்றார். ஐம்பது வாரங்கள் எழுதினேன். இவ்வாண்டு வெளிவந்த ‘இன்னும் மிச்சமிருக்கிறது’ கவிதை நூலில் அந்தக் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

இவர் கவிதைத் துறையிலும் தன் பங்களிப்பை வழங்கி வந்துள்ளார். புதுக்கவிதைக்காகக் குரல் கொடுத்த தொடக்ககாலப் படைப்பாளர்கள் அணியில் இருந்தார். எம்.ஏ.இளஞ்செல்வன் தொகுத்த ‘புள்ளிகளைப் புறக்கணிக்கும் புதுக்கோலங்கள்’ கவிதை நூலில் இவரின் கவிதை இடம்பெற்றுள்ளது.

எத்தனை கவிதைகள்
படுக்கை கொப்புளங்களாக
மன முதுகில்
பழுக்கின்றன

விடிந்தால்
எழுத்துக்கூட்டங்களின்
அனுபவ அலுப்பில்
விமர்சன சந்நியாசிகளின்
குறட்டை தாலாட்டில்
லயித்த
இலக்கிய சோம்பேறித்தனத்தால்

இன்று ஒரு கவிதை
எழுதாமல் வீணாகிவிட்டது

(பறிக்கப்படாத பூக்கள்)

இராஜகுமாரனின் மனத்தில் பூத்த எத்தனையோ கவிதைகள் இப்படித்தான் ஏட்டில் முகங்காட்டாமல் மறைந்துவிட்டனவோ? தொடர்ந்து எழுதியிருந்தால் இவரின் மாறுபட்ட சிந்தனையைக் கவிதைகளில் நாம் தரிசித்திருக்க முடியும். நயனத்தில் ‘புது நிலவு’ என்ற பெயரில் எழுதினார். அவை காதல் மனத்தின் பதிவுகளாக, இளைய உள்ளங்களை ஈர்க்கும் கவிதைகளாக அமைந்தன.

‘இணையம்’ என்ற சொல்லை உலகுக்கு வழங்கியவர் இராஜகுமாரன். கோலாலம்பூரில் நூல் வெளியீடுகள், இலக்கியச் சந்திப்புகளில் கலந்துகொண்டு தொடர்ந்து ஆதரவை வழங்கி வருகிறார்.  ஆதி.குமணன் இன்று நம்மிடையே இல்லை. அந்தக் குறை தீர்க்க ஆதி.இராஜகுமாரனாக நம்மிடையே வலம் வரும் இவர், இலக்கியம் நேசிக்கும் இதயங்களில் என்றும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பார் என்பது உறுதி.

மலேசியத் தமிழ்த் திரைப்படங்கள்: கனவுகளின் காலம்



அண்மையில் இரண்டு மலேசியத் தமிழ்ப்படங்களைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இரண்டுமே நம்பிக்கை ஊட்டும் படைப்புகள். குறைந்த எதிர்பார்ப்புகளோடுதான் திரையரங்கம் போனேன். ஆனால், இரண்டுமே மிகுந்த மனநிறைவைத் தரும் வகையில் அமைந்து மகிழ்ச்சியைத் தந்தன. இரண்டு படங்களின் கதைகளும்  ஒரே மையப்புள்ளியில் இருந்து தொடங்குகின்றன. வன்முறைக்குள் சிக்கிக்கொண்டு வாழ்வைத் தொலைத்துவிட்டுத் தடுமாறும் நம் சமூகத்தின் பதிவாக இவை அமைந்துள்ளன. ஆயினும், இயக்குநர்கள் மாறுபட்ட அணுகுமுறையில் கதை நகர்த்திச் சென்று தத்தம் முத்திரையைப் பதித்துள்ளனர்.

மறவன்

அக்டோபர் மாதம் திரைக்கு வந்த படம் மறவன். அண்மையில் பிரிக்பீல்ட்ஸ் என்யூ செண்டரில் கிள்ளான் பண்டார் புத்ரி, சரவணன் கருணை இல்லத்தின் வளர்ச்சி நிதிக்காக மீண்டும் திரையேறியது. அரங்கம் நிறைந்த ரசிகர்கள் கூட்டம் ஆச்சரியமூட்டியது. படம் பார்த்து முடித்தபோது எல்லாக் கூறுகளிலும் மனநிறைவைத் தந்த படமாக மறவன் திரைப்படம் இருந்ததை உணர்ந்தேன்.  இயக்குநர் புவனேந்திரனின் திட்டமிட்ட கடும் உழைப்பில் சிறந்த படைப்பாக மறவன் உருவாகியுள்ளது.




மனைவி, இரண்டு பிள்ளைகளோடு பால்மரம் சீவி குறைந்த வருமானத்தில் சிரமத்தை எதிர்நோக்கும் ஒருவன் வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுத் தானே போய் வம்பில் மாட்டிக்கொண்டு அதிலிருந்து மீள முடியாமல் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகித் தவிக்கிறான். குழந்தைகளைக் கடத்தி உடல் உறுப்புகளைத் திருடுதல், போதைப்பொருள் கடத்துதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பலில் சிக்கிக்கொண்டு  குமரேசன் படும் அவஸ்தை மிக நேர்த்தியாகப் படமாக்கப்பட்டுள்ளது.  படத்தில் இன்னொரு கதையாக, சில இளைஞர்கள் குறுக்கு வழிக்குப் போகாமல்  அரசின் உதவியோடு விவசாயத்தில் ஈடுபட்டு முன்னேற முனைப்புக் காட்டுகின்றனர்.




உயிர்ப்பான வசனங்கள், இயல்பான நடிப்பு, சிறந்த ஒலி – ஒளிப்பதிவு, நகைச்சுவை, பிரச்சாரம் இல்லாமல் இயல்பான கதைப்போக்கு, அடுத்து என்ன..என்ன என்ற எதிர்பார்ப்பை  ரசிகர்களிடம்  ஏற்படுத்தும் பாங்கு என ஒவ்வொன்றையும் நுணுக்கமாகச் சிந்தித்து  இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.  குறிப்பாக, வில்லனாக  நடித்த ஹரிதாஸ் மிகச் சரியான தேர்வு. இவரின் குரலும், நடிப்பும் வசனமும் உச்சரிப்பும் நம்மை வியக்க வைக்கின்றன. சில இடங்களில் பயமுறுத்துகின்றன. வசனமே பேசாத துணைவில்லன் பார்வையால் மிரட்டுகிறார். படம் முழுக்க மோதிக்கொள்ளும் இருவரின் காதல் அழகிய கவிதை! ஒரு வெண்பொன் மாலை, வான் வெண்பனி பொழியும் வேளை, குளிருக்குக் குளிரை ஊட்டும் பெண்ணைக் கண்டேனே பாடல் எப்போது கேட்டாலும் சலிக்காத பாடல்.



குமரேஷ், டேனிஸ், ஹரிதாஸ், லோகன், சீலன், ஷான், கவிதா தியாகராஜன், சங்கீதா கிருஷ்ணசாமி, புஸ்பா நாராயண் என நடிகர்களின் பங்களிப்பு மனநிறைவைத் தருகிறது. கையில் கிடைத்த கேமராவைத் தூக்கிக்கொண்டு நானும் படமெடுக்கிறேன் என்று படம் எடுத்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. திரைப்படத்துறையின் நுணுக்கங்களை/ வித்தைகளைக் கற்றுக்கொண்டு நம்பிக்கைப் படைப்புகளைத் தரும் காலமிது. இதை நிரூபிக்கும் படம் மறவன்.



இயக்குநர் புவனேந்திரன் ஆறு ஆண்டுகள் தமிழகத்தில் பல படங்களில் பணிபுரிந்து திரைப்படக்கலையை உள்வாங்கிகொண்டு இப்பொழுது திரைப்பட முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நம்பிக்கை ஊட்டும் இயக்குநர்! இவரிடன் இன்னும் எதிர்பார்க்கலாம். இப்படத்தை இன்னும் பார்க்காதவர்கள் நமக்குப் பக்கத்தில் இருக்கும் சிலாங்கூரின் பண்டார் ரிஞ்சிங்,  புரோகா, செமினி போன்ற ஊர்களின் இயற்கை அழகை தரிசிக்கும் வாய்ப்பை இழக்கிறார்கள்.


ஜாகாட்


ஜாகாட் திரைப்படம் பார்க்க அண்மையில் என்யூ செண்டர் திரையரங்கு சென்றபோது என் இருக்கைக்கு இரு பக்கமும் சீனர்கள். முன்னும் பின்னும் சீனர்களின் முகங்கள். வேறு படத்திற்கு வந்துவிட்டோமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆங்கில, சீன ஏடுகளில் விமர்சனம் படித்துவிட்டு அவர்கள் ஆர்வத்தோடு வந்திருந்தார்கள். மற்ற இனத்தாரையும் ஈர்த்ததில் ஜகாட் வெற்றிபெற்றுள்ளது.
இப்படம், இந்திய சமுதாயத்தின் கடந்துவந்த பாதையின் இருண்ட பகுதிகளை மீண்டும் பதிவு செய்து நம் கண் முன்னே காட்சிகளாக்கிக் காட்டுகிறது. 1990களில் தோட்டப்புறங்களை விட்டுப் புறம்போக்கு நிலங்களில் குடியேறி வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மனிதர்களை நம் கண்முன்னே நடமாடவிட்டு அவர்களின் அவலங்களை உரக்கப் பேசுகிறது. வழக்கமாகச் தமிழ்ச் சினிமாவில் காணும் காதல், டூயட், நகைச்சுவை, கதாநாயகனைச் சுற்றிக் காட்டப்படும் பிம்பம் என அனைத்தையும் முற்றாகப் புறக்கணித்துவிட்டு இரத்தமும் சதையுமாக ஓர் இனத்தின் அவலத்தைப் பதிவு செய்யும் முயற்சி இப்படம். துணிந்து இம்முயற்சியில் ஈடுபட்டுக் கடும் உழைப்போடும் சமரசமில்லாமலும் இப்படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர் சஞ்சய் மற்றும் அவர்தம் குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.



படத்தில் பிரச்சாரம் இல்லை. சொல்ல வந்த கருத்துகளை திரைமொழியான காட்சியாக்கிக் காட்டுவதில் முனைப்புத் தெரிகிறது. படம் தொடங்கும்போதே ஒரு சிறுவனின் மனத்தில்  திரைப்படங்களில் காணும் வன்முறையும் சமயத்தில் காணும் வன்முறையும் பாதிப்புகளை ஏற்படுத்துவது காட்சியாக்கிக் காட்டப்படுகின்றன.  தொடர்ந்து பல காட்சிகளில், குறைந்த வசனங்களில் அழுத்தமான முகபாவங்களாலும் உடல்மொழியாலும் கதை நகர்த்தப்படுகிறது.

ஒரு குடும்பத்தை மையமாக்கி அந்தக் குடும்பத்தின்  வெவ்வேறு மனிதர்கள் வன்முறைக்கு இரையாகும் நிலை காட்டப்படுகிறது.  அப்போய் கதைப்பாத்திரத்தில் சிறுவனாக  நடித்துள்ள ஹர்விந்த்குமார் முகபாவனையால் நம்மை ஈர்க்கிறர். அவரின் அப்பாவாக வரும் மணியம் (குபேந்திரன்)வறுமையில் சிக்கிக்கொண்ட மனிதராக,  முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்துகிறார். வன்முறையில் ஈடுபட்டு இழப்பைச் சந்தித்து ஒதுங்கி வாழும் பாலா, குண்டர் கும்பலில் சிக்கிக்கொண்டு அதிலிருந்து மீளத் தவிக்கும் மெக்சிகோ என ஒவ்வொரு கதைப்பாத்திரமும்  நம் மனங்களில் அழுத்தமாகப் பதிகின்றது.



மலேசியச் சூழலை நம் கண்முன்னே காட்டும் பிற இன கதைப்பாத்திரங்களும் படத்தில் வலம் வருகின்றன. குண்டர் கும்பலுக்கு ஆள் சேர்க்கும் சீனர், லஞ்சம் வாங்கிக்கொண்டு குண்டல் கும்பலைக் கண்டு கொள்ளாத போலீஸ் அதிகாரி எனச் சமரசமின்றி உண்மைகளைப் போட்டு உடைக்கும் துணிவும் படத்தில் கவனிக்கத் தக்கது.

மாணவனின் இயல்பறிந்து அரவணைக்காமல் அவனை வகுப்பறையிலிருந்து நாடுகடத்தும் போக்குப்  படத்தில் சுட்டப்படுகிறது. அப்போய் சற்று மாறுபட்டுச் சிந்திக்கிறான். ஆனால், வகுப்பில் புறக்கணிக்கப்படுகிறான். இளம்தலைமுறையினர் வன்முறைக்குப்  போகாமல் தடுத்தாற்கொள்ளும் கல்வி வேண்டும் என்ற சிந்தனை பரிமாறப்படுகிறது.



சஞ்சய், யுவராஜன், சிவா பெரியண்ணன் ஆகியோரின் வசனங்கள் ஆர்ப்பட்டமில்லாத கதையின் போக்குக்குப் பொருந்தி வருகின்றன. சினிமாத்தனம் இல்லாமல் நம் கதையை உள்ளவாறு சமூகப் பொறுப்புணர்ச்சியோடு முன்வைத்த படம் ஜாகாட் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ரசனையின் பள்ளத்தில் கிடக்கும் நம் ரசிகர்களைக் கைத்தூக்கிவிட்டு, உண்மையான சினிமா பற்றிய புரிதல்களுக்குத் திசைகாட்டும் முயற்சி ஜாகாட். இன்னும் பார்க்காதவர்கள் அவசியம் பார்க்க வேண்டும்.


மலேசியத் தமிழ்த் திரைப்படங்களின் நீண்ட கால கனவுகள் நிறைவேறிவரும் தருணம் இது.  மறவன், ஜாகாட் ஆகிய இரண்டு படங்களும் அந்தக் கனவுக்கான தொடக்கப் புள்ளியில் இருப்பதை திரைப்பட விமர்சகர்கள் நிச்சயம் ஒப்புக்கொள்வார்கள். நம் மண்ணில் உருவாகும் முயற்சிகளுக்கு நம் பங்களிப்பும் சேர வேண்டாமா?