நம் குரல்

Thursday, October 21, 2010

தீபங்கள் பேசட்டும்!



தீபங்கள் பேசட்டும்
தீமைகளைப் பொசுக்கட்டும்
கோபங்கள் குறையட்டும்
கொடுமைகளும் மறையட்டும்
சாபங்கள் விலகட்டும்
சாதனைகள் மலியட்டும்
தாபங்கள் தீரட்டும்
தடையாவும் நீங்கட்டும்!

உணர்வுகளும் பூக்கட்டும்
உரிமைகளைக் காக்கட்டும்
மனங்களெல்லாம் இணையட்டும்
மகிழ்ச்சியிலே திளைக்கட்டும்
குணங்களையும் வளர்க்கட்டும்
குறையாவும் ஒடுங்கட்டும்
இனநலத்தைப் பேணட்டும்
எழுச்சியிங்குக் காணட்டும்!

ஒளிவெள்ளம் பரவட்டும்
ஊரெல்லாம் ஒளிரட்டும்
விழியெல்லாம் நன்னாளை
விழித்திருந்து நோக்கட்டும்
துளித்துளியாய் நம்வாழ்வு
துயரழித்து மீளட்டும்
வழித்துணையாய் இனவுணர்வு
வாழ்நாளும் தொடரட்டும்!

தொன்றுதொட்ட வாழ்நெறிகள்
தொடராகித் துலங்கட்டும்
ஒன்றுபட்ட நல்லினமாய்
ஓரணியில் திரளட்டும்
இன்றெங்கள் சாதனைகள்
ஏறுமுகம் காணட்டும்
என்றுமிந்த நன்னிலையே
இம்மண்ணில் நிலைக்கட்டும்!

வீணான சண்டைகள்
வேர்பட்டுச் சாகட்டும்
வீணான புன்மொழிகள்
வீரியத்தை இழக்கட்டும்
தானாக நம்பிணக்கு
தணிந்திங்கு மறையட்டும்
தூணாக எழுதுகோலும்
துணையாகிக் காக்கட்டும்!

வன்முறையும் பாழ்நெறியும்
வாழ்விழந்து போகட்டும்
அன்புவழி எங்கள்நெறி
அந்தநிலை ஓங்கட்டும்
பண்புமிகக் குமுகாயம்
பண்பாட்டில் நிமிரட்டும்
இன்னமுதத் தமிழெங்கள்
இதயத்தில் நிறையட்டும்!

Monday, October 11, 2010

சிறுகதைக் கருத்தரங்கும் பிரபஞ்சனின் வருகையும்..











லேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், செர்டாங் இலக்கிய வட்டத்தின் ஆதரவோடு சிறுகதைக் கருத்தரங்கினை 9, 10 அக்டோபர் ஆகிய இரு தினங்களின் கோலாலம்பூர் மிடா தங்கும் விடுதியில் நடத்தியது. 130 இலக்கிய ஆர்வலர்கள், சிறுகதை எழுத்தாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

2009ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளுக்கான பரிசளிப்பு, பரிசு பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு வெளியீடு, திரு. முத்து நெடுமாறனின் ‘இணையத்தில் தமிழ்மொழியின் பயன்பாடு: புதிய செய்திகள்’ உரை, சிறுகதைப் பட்டறை - அதன் மீதான கருத்துரை, பங்கேற்பாளர்களின் அனுபவப் பகிர்வு எனப் பல அங்கங்களை இந்த இருநாள் நிகழ்வு கொண்டிருந்தது.

பிரபஞ்சனின் பேச்சு அனைவரையும் கவர்ந்த அங்கம். சிறுகதை குறித்துப் பல கருத்துகளை நகைச்சுவையோடு பகிர்ந்துகொண்டார்.







Wednesday, October 6, 2010

எந்திரன் எனும் மந்திரன்



எந்திரன் எனும் மந்திரன்

ரஜினிகாந்த் படங்களைப் பெரும்பாலும் நான் பார்ப்பதில்லை. சில படங்களில் ரஜினி நடந்தாலும் விரலசைத்தாலும் தஸ்சு..புஸ்சு என்று சத்தம் கொடுத்து வெறுப்பேத்தியது ஒரு முக்கியக் காரணம். தமிழ்ச் சினிமா யதார்த்தத்தோடு கைகுலுக்கி எங்கோ பயணப்பட இன்னும் மசாலாப் படங்களையே தந்து ரசிகனைச் சோதிக்கும் நிலையைச் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை இன்னொரு காரணமாகும். (இன்னும்)

Tuesday, October 5, 2010

தோற்றவர் பக்கம்



தோற்றவர் பக்கம்
நான் நின்றுகொண்டிருக்கிறேன்

இடம் மாறச்சொல்லி
என்னை வற்புறுத்துகிறீர்கள்
உங்களின் இனிப்பு வார்த்தைகளைப்
புறந்தள்ளி இவர்களோடு புறப்படுகிறேன்

இங்கே கண்ணீரும் வியர்வையும்
விரக்தியும் வேதனையும்
சரிவிகிதத்தில் சதிராடுகின்றன

தன்னம்பிக்கை முனைகள்
இங்கே முறிந்து கிடக்கின்றன

கனவுத் தோணிகள்
தரை தட்டிக் கவிழ்ந்து கிடக்கின்றன

எதிர்பார்ப்பு வேர்களில் விஷம் பரவி
இற்றுக்கொண்டிருக்கின்றன

துவண்டுகிடக்கும் இவர்களின்
தோள்களை நோக்கி
என் கைகள் நீளுகின்றன

ஆதரவுக்காய்த் தவிக்கும்
இவர்களை நோக்கி
என் அன்பு மொழிகள் கசிகின்றன

காயங்களைத் துடைத்து
மருந்திட்டு ஆற்ற
விரல்கள் விரைகின்றன

வெற்றி முகாமில் மூழ்கிய
உங்களுக்குக்
கண்ணீரின் கனம் தெரியாது

வியர்வைத் துளிகளின்
வேதனை புரியாது

வெற்றி கானத்தை மீட்டி மீட்டியே
அதனுள் கரைந்து
நீங்கள் காணாமல் போவீர்கள்

வெற்றிக்கதையைப் பேசிப்பேசியே
கனவு வளர்ப்பீர்கள்
அதன் சுகலயத்தில் சொக்கிப்போவீர்கள்

உங்களின் உத்வேகத்தை வாங்கி
நெஞ்சுக்கு இடம் மாற்றிக்கொண்டு

உங்களின் வெற்றியின் வியூகங்களை
யூகித்து உள்வாங்கிக்கொண்டு

நெஞ்சு நிறைய கனவுகளை அள்ளி
நிறைத்துக்கொண்டு

தன்னம்பிக்கை முனைகளை
கூர் சீவிக்கொண்டு

ஆறிக்கொண்டிருக்கும்
பழைய காயங்களைப் பொருட்படுத்தாமல்

வெற்றியின் திசைநோக்கி
இவர்கள் புறப்படுகிறார்கள்

இவர்கள் வென்று வந்தாலும்
தோற்று மீண்டாலும்
இவர்கள் பக்கம் எப்போதும் நான்

ந. பச்சைபாலன், மலேசியா

அன்புள்ள ஆசிரியருக்கு...




காலம் என்னதான் தன் மாயக்கரம் கொண்டு நம் மனமேடையில் அரங்கேறிய பல காட்சிகளை மறைத்து விட்டாலும் நினைவுத் தடாகத்தில் பூத்திருக்கும் சில நித்தியப் பூக்களை அதனால் பறிக்க முடிவதில்லை.

இளம் வயதில் பழகிய தோழர்கள், எனக்குப் பாடம் கற்பித்த ஆசிரியர்கள் எனக்குள் இன்னும் உதிர்ந்து போகாத பூக்களாய் மணம் பரப்பிக்கொண்டிருக்கின்றனர்.

1969ஆம் ஆண்டு, ரவாங் சுங்கை சோ தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மூன்றாம் வகுப்பில் பயின்றுகொண்டிருந்தேன். கூட்டுறவுச் சங்கத் தோட்டமாகையால் துன் வீ.தி. சம்பந்தன் அவர்களின் பெரும் முயற்சியில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தில் பயிலும் வாய்ப்பு கிடைத்தது. அழகான பள்ளிக்கூடம். இயற்கையழகு கொஞ்சும் பசுமை போர்த்திய தோட்டம். தோட்ட லயங்களிலிருந்து நடந்துபோகும் தூரத்தில் பள்ளிக்கூடம் இருந்தது.

மோகன், சுந்தர், செல்வராஜ், இராமசாமி, இராமன், மனோகரன், கலைச்செல்வன் என எனக்கு நிறைய தோழர்கள். ஆட்டம் பாட்டத்திற்குக் குறைவில்லாமல் காலம் கழிந்தது.

அப்போதுதான் திரு.சுப்ரமணியம் தற்காலிக ஆசிரியராக எங்கள் பள்ளிக்கு வந்தார். கண்ணாடி அணிந்து மெலிந்த, உயரமான உருவம். கண்டிப்பானவர் என்பதைப் பறைசாற்றும் பார்வை. ஆனால், பாடம் போதிக்கையில் அவரின் கனிவைக் கண்டோம். அவர் எங்கள் வகுப்பாசிரியராக வந்ததில் எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.

பள்ளி பரிசளிப்பு விழாவுக்காக எங்கள் வகுப்பு மாணவர்கள் நாடகம் படைக்க வேண்டும் என்று முடிவாகி ‘ஆட்டுத் திருடன்’ எனும் தலைப்பில் ஒரு நாடகத்தை எங்களுக்குப் பயிற்றுவித்தார் திரு.சுப்ரமணியம்.

காவல் அதிகாரியாக சுந்தர். ஆட்டின் உரிமையாளராக செல்வராஜ். ஆட்டுத் திருடனாக நான். ஆடாக மனோகரன் என நடிகர்கள் தேர்வு முடிந்து நாடக ஒத்திகை நடந்தது.

ஆட்டைச் சந்தைக்கு ஓட்டிக்கொண்டு வருகிறான் செல்வராஜ். நான் வழிமறிக்கிறேன். “ஆட்டை எங்கே ஓட்டிக்கொண்டு போகிறாய்?” “சந்தைக்குத்தான். ஏன் ஆட்டை நீ வாங்கப்போகிறாயா?” என்று செல்வராஜ் கேட்கிறான்.

பக்கத்து வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த கருப்பையா ஆசிரியர் வேகமாக ஓடி வந்தார். எங்கள் ஆசிரியரோடு ஆலோசனை கலந்தார். “பேச்சு நடைக்கு வசனத்தை மாத்து” என்று அவர் செல்வராஜ் பேச வேண்டிய வசனத்தைப் பேசிக் காட்டினார். “சந்தைக்குத்தான் ஓட்டிக்கிட்டு போறேன். ஏன் நீ வாங்கப் போறீயா? நீ என்னா கசாப்பு கடைக்காரனா?”

இந்தப் பாணியிலேயே நாடகம் முழுதும் அமைந்தது. எங்கள் வகுப்பாசிரியர் திரு. சுப்ரமணியம் முழு மூச்சாக எங்களைப் பயிற்றுவித்தார். நான் தேர்ந்த ஆட்டுத் திருடனாக மாறியிருந்தேன். சுந்தர்தான் காவல் அதிகாரிக்கான மிடுக்குப் போதாமல் அடிக்கடி கருப்பையா ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டு விழித்தான்.

பரிசளிப்பு விழாவுக்கு நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. நாங்கள் ஆவலாகக் காத்திருந்தோம். திடீரென்று ஒரு நாள் எங்கள் ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாற்றாலாகிப் போய்விட்டார். முதல் நாடக அரங்கேற்றத்திற்குக் காத்திருந்த நாங்கள் தவித்துப் போனோம். முழங்காலிட்டு நான்கு கால்களில் ஆடாகப் பழகியிருந்த மனோகரன் பெருமூச்சு விட்டான். நல்ல வேளை. கருப்பையா ஆசிரியர் எங்களுக்கு அபயக்கரம் நீட்டினார்.

பரிசளிப்பு விழா அன்று நாங்கள் அரிதாரம் பூசி மெருகு கூட்டிக்கொண்டிருந்தோம். ஆனால், ஆடாக நடிக்க வேண்டிய மனோகரனைக் காணவில்லை. கருப்பையா ஆசிரியர் எனக்கு மீசை வரைந்து திருடனாக மாற்றிக்கொண்டிருந்தார். வகுப்பறைக்குப் பின்னால் இருந்து எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த மனோகரனை இழுத்து வந்து ஆடை களைந்து பவுடரை அப்பி சாதுவான ஆடாக மாற்றினார். “மே மே” என்று சட்டென்று எதிர்பார்த்தபடி நல்ல ஆடாக மாறினான் மனோகரன்.


‘ஆட்டுத் திருடன்’ நாடகம் எதிர்பார்த்தபடி சிறப்பாக அமைந்தது. நாடகம் முடிந்து வேசத்தைக் கலைத்துக்கொண்டிருந்தபோது எங்கள் நாடக ஆசிரியர் திரு.சுப்ரமணியம் அப்பொழுது அங்கே வந்தார். எங்கள் நடிப்பைப் பாராட்டினார். நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

எனக்கு அது முதல் கலையுலக அனுபவம். தமிழின் மீதான ஈடுபாட்டுக்கு அடித்தளம் அமைத்த நிகழ்வு. 41 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த இந்த நாடக அனுபவம் இன்னும் பசுமையாய் நெஞ்சில் பதிந்துள்ளது.

இது மட்டுமல்ல. தமிழ்ப்பள்ளியில் எனக்குக் கற்பித்த தலைமையாசிரியர் சூசை, நரசிம்மன், கருப்பையா, சுப்ரமணியம், இரபேல், வர்ணமுத்து, மார்கழி போன்ற ஆசிரியர்களின் தன்னலங் கருதா சேவையுணர்வும் காட்டிய அன்பும் இன்னும் என் இதய அறைகளில் நீக்கமற நிறைந்துள்ளன.

36 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் என் ஆசிரியர் திரு.சுப்ரமணியத்தைச் சந்திக்க நேர்ந்தது. முதுமையின் கோலங்களை முகம் சுமந்தாலும் அதே பழைய கனிவான பழகும் தன்மையை அவரிடம் கண்டேன். ‘ஆட்டுத் திருடன்’ நாடகத்தையும் அன்றைய பழைய நிகழ்வுகளையும் இன்னும் மறவாமல் நினைவு கூர்ந்தார். அப்பொழுது மக்கள் ஓசை நாளிதளில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

ஆசிரியர்கள் நம் வாழ்க்கையில் முக்கியமானவர்கள். வாழ்வின் ஒரு பகுதியைச் சுவையான கதைகளால், இனிய தமிழால், இலக்கியத்தால், நம்பிக்கை ஊட்டும் சொற்களால், அன்பால், அறியாமையை அகற்றி அறிவூட்டலால் வாழ்வின் பெரும் பகுதிக்கு வண்ணம் தீட்டுகிறார்கள்.

இடைநிலைப்பள்ளியில் திரு.பொன்னழகு, திரு, கோவிந்தன், கல்லூரியில் திரு கந்தசாமி, பல்கலைக்கழகத்தில் முனைவர் ஒஸ்மான் பூத்தே என வாழ்க்கை நெடுக ஆசிரியர்கள் எனக்கு வழிகாட்டியுள்ளனர்.

என் எல்லா ஆசிரியர்களையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். ‘எழுத்தறிவித்தவன் இறைவனாகும்’ என்று நம் இலக்கியம் ஆசிரியர்களுக்கு உயர்வான இடத்தை வழங்குகிறது. எல்லா ஆசிரியர்களும் பாடங்களைக் கற்பிக்கிறார்கள். சில ஆசிரியர்களோ மாணவர்களின் இதயங்களைத் தொடுகிறார்கள்; உணர்வில் நிறைகிறார்கள்; ஊக்கமூட்டி உயர்வை நோக்கி ஆற்றுப்படுத்துகிறார்கள்.

இத்தகைய ஆசிரியர்களுக்காக மாணவர்கள் காத்திருக்கிறார்கள். மாணவர்களின் மனமேடைகளில் இத்தகைய ஆசிரியர்களின் உருவங்கள் என்றும் நிழலாடிக்கொண்டிருக்கும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.