நம் குரல்

Tuesday, May 11, 2010

விடைபெறும் நேரம்..




வந்துகொண்டிருக்கின்றன
எதிரெதிர் திசைகளில்
நாம் போக வேண்டிய ரயில்கள்

நம்மை உற்றுப் பார்த்தபடி
தன் தாயிடம் தாவிப் பதுங்கி
ஏதோ பேசுகிறது ஒரு குழந்தை

கட்டண கழிப்பிட வாசலில்
சில்லறைகளைச் சேகரித்தபடி
யாரிடமோ பேசுகிறாள்
அந்த மலாய்ப்பெண்

இருக்கையில் சாய்ந்தபடி
உரத்த குரலில் சிரிப்பினூடே
கைப்பேசியில் யாரையோ சீண்டும்
தலைநரைத்த முதியவர்

ஒவ்வொருவரும் தனியாகவோ
அருகில் இருப்பவரிடமோ
பேசியபடி இருக்கிறார்கள்

கழியும் காலத்தை அறிவித்தபடி
சுவரின் கடிகார முட்கள்
நகர்கின்றன

உன்னிடம் விடுபட்ட உரையாடலை
எங்கே தொடருவது?
எண்ணும் வேளையில்
நீயோ நானோ
போகவேண்டிய ரயிலின் சத்தம்
தொலைவில் கேட்கிறது

நிச்சயமில்லாத பொழுதுகளில்
ஏதாவது கணங்களில்
நிகழலாம்
நம் அடுத்த சந்திப்பு

1 comment:

  1. அன்புள்ள கவிஞருக்கு,

    உங்கள் சமீபத்திய பதிவில், நீயும் நானும் உரையாடியபடி போகும் ரயிலின் ஓசை எங்கோ கேட்கிறது என்ற வரியில் கவிதையின் உயிரை மீட்டுக்கொடுத்துவிடுகிறது. யார் யாரோ யாருடனோ உரையாடியபடி நகரும் தருணத்தில் உங்களுக்கென்று யாருமற்ற வெறுமையை அழகுற பதிவு செய்யும் வேளையில்
    பயணிகள் உரையாடும் நேரத்தில் உங்களின் தோழியுடனான பிரம்மையில் இருக்கும் உங்களின் கவிதையின் பொருளை வாசகன் எளிதில் புரிந்து கொள்கிறான்.
    வாங்கு சக்தியை கொண்டிராத இன்றைய கவிதைகள் வாசக சந்தையில் விற்பனை ஆவதில்லை. தொடர்ந்து எழுதுங்கள்.
    கோ.புண்ணியவான்.

    ReplyDelete