நம் குரல்

Monday, June 26, 2017

மழையொடு நனைதல்




எல்லாவற்றையும் நனைத்துவிடும் தீரத்தோடு
வானிலிருந்து விடைகொண்டு
பூமிநோக்கி விரைகின்றன
மழைத்தாரைகள்

சிறுமி ஒருத்தி கைகளை உயர்த்தி
மழையின் குளிர்ச்சியை  உணர்ந்தவாறு
மழையோடு உரையாடுகிறாள்  
அவள் கால்கள்
மழைநீரில் கோலங்கள் வரைய
குதூகலத்தில் நிறைகிறாள்

மழைத்துளிகள் சொட்ட சொட்ட
இறுகியிருக்கும் சிலரின் மனத்தாழ்ப்பாள்
நெகிழ்கிறது                                                        

மழைச்சாரல் உடல் நனைத்து
இருமனங்களின் இடைவெளி குறைத்து
அன்புத்தூறலைத்  தொடக்கி வைக்கிறது  
        
மழையின் கோரத்தாண்டவம்
நினைவுப் பள்ளத்தில்
தீராத மோகத்தை நிரப்பியவாறு                      
அலைக்கழிக்கிறது              
                            

ஒரு மழைநாள்
நினைவூஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும்
இன்னொரு மறக்கவியலா  மழைநாளை
அழைத்து வருகிறது                                           

ஒவ்வொரு மழைத்துளியிலும்
கலந்து கரைகிறது
வெம்மையின் பெருமூச்சு                                  

ஒவ்வொரு மழைத்துளியிலும்
எப்படியோ கலந்து விடுகிறது
மண்ணின் மணம்
                                        
மழைக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது
உடலை மட்டுமின்றி
உயிரையும் நனைக்கும் மாயம்                                   

மழையில் நனைந்து மழையொடு
கலந்து கரையும் சிறுமி
தான் தாயான காலத்தில்
கவனமாயிருக்கிறாள்                                                     

சன்னலின் வழியே
மழைபார்த்து ரசிக்க
சிறுமியான தன் மகளை அனுமதிக்கிறாள்                     

                                               

2 comments:

  1. வணக்கம்
    ஐயா

    கவிதையை படித்த போது நானும் மழையில் நனைந்தால் போல் நினைவு அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரூபன். மழையில் என்னோடு சேர்ந்து நனைந்ததற்கு நன்றி

      Delete