நம் குரல்

Friday, July 15, 2011

எனக்கான விடுதலை


அரிய பொருளைத் தொலைத்தவனின்
சஞ்சலம் மிகுந்த தவிப்பைப்போல்
நீண்டுகொண்டே இருக்கிறது
என் தேடுதலின் தாகம்

என் கைகளை இறுக்கும்
கைவிலங்கைத் திறக்கும் சாவி
யார் கையில் இருக்குமென
வருவோர் போவோரையெல்லாம்
தீவிரமாய் விசாரித்தாயிற்று
எல்லாரும் உதடு பிதுக்கி
கைகளை விரித்து
ஏளனப் பார்வை சிந்தி
நமட்டுச் சிரிப்போடு
என்னைக் கடந்து போகிறீர்கள்

உங்களில் யாரோதான்
திட்டமிட்டு
என் சாவியைத் திருடிவிட்டு
என்னைத் தவிக்க வைப்பதாய்
என் காதுக்குத்
தகவல்கள் வருகின்றன

நான் ஓரிடத்தில் முடங்க
தடுப்புச் சுவரெழுப்பி
எனைத் தவிக்கவிடுவது
நண்பர்களில் யாரோதான்
நம்பத் தொடங்கினேன்


எவ்வளவோ முயன்றும்
விலங்கை உடைத்தெறிய நினைத்து
போராடிப் போராடி
நிறைவேறாமலே போனது
விலங்குடைக்கும் எண்ணம்

எல்லாரையும் எல்லாவற்றையும்
குறை சொல்கிறேன்
எதிர்ப்படும் முகங்களைச்
சந்தேகப் பார்வையில் சலிக்கிறேன்
என் மீது வீசப்படும்
விமர்சனங்கள் மீது
விசாரணை நடத்துகிறேன்

மிஞ்சுவது வெறுமையும்
மனம்நிறைய விரக்தியும்
கைநிறைய ஏமாற்றங்களும்

கடைசிவரை
என்னை இறுக்கும் கயிறுகளை
என் கைகளே பற்றியிருக்கும்
கொடுமை அறிந்திலேன்

இதிலே
எங்கிருந்து வந்து
விலங்கு என்னைச் சிறைப்படுத்தியது?
விபரம் அறிந்திலேன்


No comments:

Post a Comment