நம் குரல்

Saturday, January 29, 2011

மெளனத்தின் உரையாடல்கள்... பா.அ.சிவம்


(‘மௌனம்’ 12ஆவது கவிதை இதழில், பா.அ.சிவம் என் கவிதைகள் குறித்துத் தம் கருத்துகளைக் கட்டுரையில் பதிவு செய்துள்ளார். என் கவிதைகள் பற்றிய முதல் ஆழமான, அழகான பதிவாக இ•து அமைந்துள்ளது. ‘மௌனம்’ தேவராஜனுக்கும் பா.அ.சிவத்திற்கும் நன்றியறிதலோடு இங்கு மீண்டும் வெளியிடுகிறேன்.)

ந.பச்சைபாலனெனும் இடைவெளியை நிரப்பிச் செல்லும் கவிஞன்


இந்தக் கட்டுரைத் தொடருக்கு எண் போடக் கூடாது என எண்ணிக் கொண்டே, இதனைத் தொடங்குகிறேன். இதற்கான காரணத்தைக் கட்டுரையின் இறுதியில் குறிப்பிடுகிறேன்.

கவிதைகள் இல்லாது போனால், வாழ்க்கை என்னவாகும் என ஒருநாள் திடீரென எண்ணத் தோன்றியது. அதற்குப் பின்னர், தூங்கவே வெகுநேரம் ஆகிவிட்டது. நான் கவிதைகளை எதற்காக எழுதுகிறேன்... எனது கவிதைகள் எதைப் பற்றி பேச விரும்புகின்றன? கவிதையில் இதுவரை நான் என்ன அடைந்திருக்கிறேன்...என்ன இழந்திருக்கிறேன்... பிறர் வாசிக்க வேண்டும் என்பதற்காக, நான் தொடர்ந்து எழுத வேண்டுமா ?
சிறிது காலம் எழுதாது போனால், இவன் இலக்கியத்திலிருந்து விலகி வேறொரு பாதைக்குச் சென்று விட்டான் என பிறர் பலவாறு பேசுவார்கள் என்பதற்காக எழுத வேண்டுமா ? இவ்வாறு கேள்விகள், கணங்களைக் கடத்திச் செல்கின்றன.

ஒரு காலத்தில் பத்திரிகையில், இதழ்களில் பெயர் வரவேண்டும் எனக் கவிதைகள் எழுதியது, பின்னர், போட்டிகளில் பரிசு பெற வேண்டும் எனக் கவிதைகளை உருவாக்கியது, பின்னர், தமிழகக் கவிதைகளுக்கு இணையாகக் கவிதைகள் எழுத வேண்டும் என வறுத்திக் கொண்டது, தற்போது எனக்காக நான் கவிதைகள் எழுதிக் கொள்வதாக எனது திசையை நான் நிர்ணயித்துக் கொண்டது...கவிதைகள் இல்லாத வாழ்க்கை சாத்தியமில்லை. நினைத்துப் பார்க்கவே பயமாக, பயங்கரமாக இருக்கிறது.

நான் ஐந்தாம், ஆறாம் படிவங்களில் பயிலும் போது, நயனம் வழி நான் அறிந்த ஒரு சிறந்த கவிஞர்தான் நண்பர் ந.பச்சைபாலன்... அவரது கவிதைகள் பற்றித்தான் இக்கட்டுரையில் விவாதிக்கவுள்ளேன். எனது பள்ளிக் காலங்களிலிலேயே நான் அறிந்த ஒரு கவிஞரை, இன்று நண்பராகக் கொண்டிருப்பது ஒரு வரன் என்றுகூடச் சொல்லலாம். 2002 ஆம் ஆண்டு, பினாங்கு - துங்கு பைனுன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் புதுக்கவிதைக் கருத்தரங்கில், அவருடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. ஆகக் கடைசியாக, இவ்வாண்டு செப்டெம்பர் மாதம் 18 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலையில், லிட்டல் இந்தியா பிரிக்பீல்ட்ஸ்-சில், நாகாஸ் உணவகத்தில், அவருடன் கவிதைகள் பற்றிச் சற்று நேரம் கலந்துரையாடினேன்.

மெளனத்தில் வெளிவந்த கவிதைகள் பற்றியும், எனது கவிதைகள் பற்றியும் விவாதித்தோம். கவிதைகள் மீதான அவரது பார்வை மாறியிருப்பதை நன்கு உணர்ந்தேன். மெளனத்தில் கடந்த இதழில் வெளிவந்த எனது "கைவிடப்பட்டவர்கள்" கவிதை பற்றியும் அவர் என்னோடு பேசினார். மிகவும் மகிழ்ச்சிகரமான சந்திப்பு அது.
பல சந்திப்புகள் அவ்வாறு அமைவதில்லை.

ந.பச்சைபாலன் கவிதைகள் இன்று நவீன மொழிநடையை உள்வாங்கிக் கொண்டு, ஒரு சீரான பாதையில் பயணிப்பதை நாம் கவனிக்கலாம். புதுக்கவிதைக்கும் நவீன கவிதைக்கும் இடையிலான ஒரு பாலத்தை அவர் கடந்திருப்பது மட்டுமின்றி, தொடர்ந்து பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. புதுக்கவிதைக் காலத்தில், அவ்வடிவத்தில் எழுதிய பல கவிஞர்கள்,புதுக்கவிதையைக் கடந்து, நவீன கவிதை முயற்சியில் ஈடுபடாமல், புதுக்கவிதை வடிவத்திலேயே தேங்கி நின்று விட்டதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ந.பச்சைபாலன் அவ்வாறு இல்லை. தன்னைப் புதுப்பித்துக் கொண்டார். புதுக்கவிதை உலகிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு, நவீனமொழியில் கவிதைகளைப் படைத்து, நமது கவிதை உலகை இன்னொரு மறுமலர்ச்சி காலத்திற்குக் கொண்டுச் சென்றவர்களில் ந.பச்சைபாலனும் ஒருவர் என்று துணிந்து கூறலாம். இன்றைய தலைமுறையில், ம.நவீன், தோழி என வெகுசிலரே புதுக்கவிதை மொழியிலிருந்து நவீ ன மொழிக்குத் தங்களைப் புதுப்பித்துக் கொண்டு, இங்குப் புதிய அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். புதுக்கவிதை படைப்பில் பலரின் கவனத்திற்கு உள்ளான சுங்கை பெட்டாணி சிவா, அதற்கு முன்னரே எழுதி வந்த கு.தேவேந்திரன் உட்பட மேலும் சிலர், இந்த முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. நவீன மொழி ஆளுமையை அவர்கள் வெளிப்படுத்தவில்லை.

கோ. புண்ணியவான் , ஏ. தேவராஜன் ஆகியோர் புதுக்கவிதையிலிருந்து நவீன கவிதை உலகிற்குப் பெரும் வீச்சுடன் பாய்ந்தவர்கள் என நான் குறிப்பிடுவேன். இருவகைக் கவிதைகளையும் அவர்கள் பெரும் தாக்கத்துடன்தான் படைத்து வருகின்றனர். சீ.அருணின் கவிதைகள், முன்பிலிருந்து ஒரு தனித்துவ அடையாளத்துடன்தான் பதிவு செய்யப்பட்டிருப்பதால், "புதுக்கவிதை- நவீன கவிதை" எனும் கால வெளியைக் கடக்கிற தேவை அவருக்கு இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. கே.பாலமுருகன் , எழுதத் தொடங்கியதிலிருந்து, அவரது கவிதைகள் நவீன மொழியின் வெளிப்பாடாகத்தான் அமைந்துள்ளன. புதுக்கவிதையிலிருந்து நவீன கவிதைக்குப் பாய்கிற சூழல் அவருக்கு ஏற்படவில்லை என்றே கருதுகிறேன்.

ந.பச்சைபாலன் எனும் மலேசியத் தமிழ் இலக்கிய உலகம் நன்கு அறிந்த ஒரு கவிஞர், நல்ல மனிதர் என்பதைப் போலவே அவரது கவிதைகளும் அமையப்பெற்றிருக்கின்றன. நான் அவரது கவிதைகளை, நல்ல கவிதைகள் என்று சொல்வதைக் காட்டிலும், ஒழுங்குள்ள கவிதைகள் என்றே சொல்ல விரும்புகின்றேன்.இதற்கு அவர் மீது நான் கொண்டிருக்கும் மரியாதை அல்லது நல்ல அபிப்பிராயம் காரணமாக இருக்கலாம். அதையும் கடந்து, அவர் ஓர் ஆசிரியர் என்பதால், அவரது கவிதைகள், அவரது பணிக்கு ஏற்றாற் போலவே சீராகவே அமைந்துள்ளன.

கடந்தாண்டு, மெளனத்தில் வெளிவந்த அவரது ஒரு கவிதை, அவரது நவீன மொழி ஆளுமையை வெளிப்படுத்தியது. இந்தியர்களின் வாழ்வியலைப் பேசும் கவிதையாக அது அமையப்பெற்றது மேலும் நம்பிக்கையை அளிக்கிறது. நண்பர் கோ.புண்ணியவானின் "அவன் நட்ட மரங்கள்" கவிதை மலேசிய இந்தியர்களின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கவிதையாகக் கருதப்படுகிறதோ, அது போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கவிதையைப் பதிவு செய்துள்ளார் நண்பர் ந.பச்சைபாலன்.


மரண வாக்குமூலம்

என்னை வேடிக்கை பார்க்க
உள்ளே வருகிறீர்கள்

நான் சரிந்து கிடக்கும் அறையின்
சிமெண்டு தரையின் குளிர் வதை
என்னை எழுப்புகிறது

உடலெங்கும் எரியும் இரணங்கள் வழி
கசிந்து வெளியேறுகிறது என் உயிர்

சொல்ல முடியாத இடங்களிலும்
என்னைப் பிடித்துத் தின்கிறது வலி

காலணி மிதித்த இடங்களில்
கன்றிப்போயிருக்கும் தோல்

என் மேல் விளையாடிய கட்டைகளால்
தாறுமாறாய் முதுகிலும் மார்பிலும்
கோடுகள்

சிமெண்டுத் தரையிலும் சுவரிலும்
சிந்திக் கிடக்கும் இரத்தத் துளிகள்

காக்கும் இந்நிலையம் காரணப் பெயர்
என்று நம்பியிருந்தேன்
இ•து இடுகுறிப்பெயரென்பது
இப்போது புரிந்தது

திடீரென அந்நியக் குரல்கள்
அறையை ஆக்கிரமிக்கின்றன

ஐந்தாவது சுற்றுக்கான விசாரணை
தொடங்கி விட்டது

நீங்கள் போய் விடுங்கள்

என் மேல் விழும்
ஒவ்வோர் அடியும் உதையும்
விழுகிறது
உங்கள் அறியாமையிலும்...

- ந.பச்சைபாலன்


தடுப்புக் காவலில் உயிரிழந்த எனது நண்பனின் தம்பி தர்மராஜனின் கதையைத்தான், இக்கவிதை என் கண் முன் கொண்டு வருகிறது. தடுப்புக் காவலில் மோசமாக நடத்தப்பட்ட அல்லது தடுப்புக் காவலில் உயிரிழ்ந்தவர்களின் கதைகளை நீங்கள் கேட்டிருக்கக் கூடும். அதனை ந.பச்சைபாலன் கவிதையாகப்
பதிவு செய்துள்ளார்.

ந.பச்சைபாலனின் இக்கவிதையில், என்னைக் கவர்ந்த வரிகள், இறுதிக் கன்னியில் அமர்ந்துள்ளன. என்மேல் விழும்/ ஒவ்வோர் அடியும்/ விழுகிறது / உங்கள் அறியாமையிலும்... எனும் இவ்வரிகள் தடுப்புக் காவலில் சிலர் வதைப்பட்டுக் கொண்டிருக்கும் போது, நாம் நமது வேலையில் மூழ்கிப் போயிருக்கும் போக்கையும், பிறர் அழுதால் நமக்கென்ன எனும் சுயநலத்தையும் சாடுவதாக அமைந்துள்ளது. அறியாமையில் இருப்பவர்களால்தானே இதுபோன்ற போக்கைக் கொண்டிருக்க முடியும்? அதற்காக, தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் அனைவருக்கும் நான் வக்காளத்து வாங்கவில்லை. இக்கவிதையில், என்னை/ வேடிக்கை பார்க்க/ உள்ளே வருகிறீர்கள்/ எனக் கவிஞர் கவிதையைத் தொடங்கியிருக்கும் விதம் கவிதைக்குள் நம்மை அழைத்துச் செல்கிற பாங்கை ஏற்படுத்துகிறது. இங்குப் பல கவிதைகள் அவ்வாறு அமைவதில்லை.

கவிதைக்குள் செல்வதே அல்லது முதல் வரி வாசிப்பே சோர்வைத் தருகிறது. ந.பச்சைபாலனின் "மரண வாக்குமூலம்" ஒரு சிறந்த கவிதைக்கான அனைத்துத் தன்மைகளையும் கொண்டுள்ளது. அக்கவிதையை முன்நிறுத்த வேண்டும் எனும் நோக்கத்திலேயே அதனை உங்களின் பார்வைக்குக் கொண்டு வந்துள்ளேன்.

ந.பச்சைபாலனின் கவிதைகள் ஒழுங்குள்ள கவிதைகள் என நான் குறிப்பிட்டதற்கான சான்றும் மேலுள்ள அவரது கவிதையில் உள்ளது. சொல்ல முடியாத/ இடங்களிலும்/என்னைப் பிடித்துத் தின்கிறது/ வலி... என்று எழுதியுள்ளார். சொல்ல முடியாத இடங்கள் எனும் சொற்றொடருக்குப் பதிலாக, நவீன கவிதைகள் என்ற பெயரில் சிலர் அப்பட்டமான ஆண்குறி அல்லது பெண்குறி சொற்களை வலிந்து திணித்து விடுவார்கள். பச்சைபாலனின் கவிதைகளில் நாம் அவற்றை எல்லாம் காண முடியாது.உடல் உறுப்புகளை மையப்படுத்தி அல்லது உருவகமாக எடுத்துக் கொண்டு எழுதினால்தான் நவீன கவிதை என்று ஒரு தவறான அணுகுமுறையும், தமிழ்க் கவிதைச் சூழலில் உள்ளது. அது போன்ற தவறான புரிதல்களை இவர் கொண்டிருக்கவில்லை என்பதற்கு இக்கவிதை சிறந்த சான்று.
மரண வாக்குமூலம் முன்வைக்கும் விவாதப் பொருளை ஒத்த ஒரு கவிதையை சில ஆண்டுகளுக்கு முன்னர் நானும் எழுதியிருக்கிறேன் என்பதால் அதனையும் உங்களின் வாசிப்புக்காக தருகிறேன்.


சந்தேகத்திற்கு இடமின்றி
கொலை செய்தவன்
ஜாமினில் விடுதலை...

சந்தேகத்தின் பேரில்
கைதானவன்
லாக்கப்பில் படுகொலை...

- பா.அ.சிவம்


"கடவுள் மீதான வன்முறைகள்" எனும் கவிதையில் கடவுள் எனும் நம்பிக்கையை உடைக்க முயலும் கவிஞர்களுக்குப் பதில் கூறியுள்ளார் பச்சைபாலன். அக்கவிதை பற்றி அவரிடமும் நான் நேரில் கூறியிருக்கிறேன்.


கழிவறைக் காகிதத்தில்
கடவுளின் பெயரைக் கிறுக்கிக் கொண்டு
தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தான் ஒருவன்...

எனும் இவரது இந்த வரிகள் ம.நவீனுக்காக எழுதப்பட்டவை என்று நான் நினைக்கிறேன்.


தலைதெறிக்க ஓடிவந்தவன்
கடவுள் தன்னைக் கொல்லப் பார்ப்பதாக
புகார் கூறினான் ...

எனும் இந்த வரிகள் மஹாத்மனுக்காகவும்,

நானறிந்த கடவுள்
இறந்து விட்டதாக ஒருவன்
தன்னிலை விளக்கம் தந்தான்...

எனும் இந்த வரிகள் அநேகமாகக் கே.பாலமுருகனுக்காகவும்,

கடவுள் நல்ல கற்பனை என்று
கடவுள் மீது பின்னப்பட்ட சிந்தனைகளைக்
கலைத்துக் கொண்டிருந்தான் ஒருவன்...

எனும் வரிகள் பா.அ.சிவம் எனும் எனக்காகவும் எழுதப்பட்டவை என்று நான் திண்ணமாக நம்புகிறேன். கடவுள் நல்ல கற்பனை எனும் எனது கவிதை, மெளனத்தில் வாசித்திருப்பீர்கள். வெளிப்படையாகவே சொல்கிறேன். எனக்கு இறைநம்பிக்கை உண்டு. ஆனால், என்னைத்தான் நான் பெரிதும் நம்புகிறேன் முழுமையாக. நான் நம்பிக்கையுடன் நடைபோடுவதற்கு, எனக்கு இறைநம்பிக்கை அவசியமாகிறது. அதே வேளை, கடவுள் வியாபாரமாக்கப்படும் போது, அல்லது கடவுள் மீதான அரசியல் நடவடிக்கைகள் அரங்கேறும்போது, அவற்றைப் படைப்பில் கொண்டு வருவதற்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.

சில கவிஞர்கள் உடைத்துப் போடும் கடவுள் நம்பிக்கையை மீண்டும் கட்டுவதற்கான முயற்சியைத்தான் ந.பச்சைபாலன் அக்கவிதையில் மேற்கொண்டிருக்கிறார். மாறாகத், தனிப்பட்ட தாக்குதல் இல்லை என்று என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது.

ஹைக்கூ கவிஞராக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்ட ந.பச்சைபாலன், இன்று காலவெளியைக் கடந்து, நவீனமொழியை தன்வசப்படுத்திக் கொண்ட கவிஞராக மிளிர்கிறார். கவிதைகளோடு நின்றுவிடாமல், கவிதை குறித்த விமர்சனங்களையும், எதிர்வினைகளையும் அவர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நான்
எதிர்பார்க்கிறேன்.

இறுதியாக,
இ•து இத்தனையாவது தொடர் என எண் போட்டு இம்முறை எழுதாததற்குக் காரணம் வேறு ஒன்றுமல்ல. அவ்வப்போது நான் சோம்பேறியாகி விடுவதால், தொடர் விடுபடுகிறது. எண் கூடாமலே போகிறது. அதற்காகத்தான்...

Thursday, January 27, 2011

விடுதலை


விடுதலை 1

விட்டு விலகாத இருள் வடிந்து
வழியெங்கும் வெளிச்ச வெள்ளம்
கைபிணைத்த விலங்குகள் நொறுங்கிவிட்டன

வாருங்கள்!
ஒரே உணர்வில் ஒரே சிந்தனையில்
கைகளை உயர்த்தி எங்களோடு இணையுங்கள்

பேசுங்கள் பேச்சுரிமைக்குப் பஞ்சமில்லை
ஆயினும் மெதுவாகப் பேசுங்கள்
வரம்புக்குள் கேளுங்கள்
நினைத்ததெல்லாம் பேசாதீர்கள்

இழிசொற்கள் முதுகில் மேயும்
பொருட்படுத்தாதீர்கள்
கட்டிய ஆடை அவிழ்க்கும்
முயற்சிகள் அரங்கேறும்
அலட்டிக்கொள்ளாதீர்கள்
விடுதலைத் தீபத்தைக் கைகளிலேந்தி
விடுதலை கீதத்தை உரக்கப் பாடி
புறப்படுங்கள்!
கரை புரளும் உங்களின் உற்சாகம் கண்டு
ஆனந்தம் எங்களுள் ஆரவாரிக்கிறது


விடுதலை - 2

விடுதலையை உச்சரித்த உதடுகளை
தேடித் தேடித் தின்றுத் தீர்த்தன
இதயமில்லாத ஆயுதங்கள்

முள்வேலிக்குள் முடங்கிய
எஞ்சிய முகங்களிலும் முகாமிட்டது
மரணத்தின் கோர பிம்பங்கள்

வல்லரசுகள் அப்பாவிகளாய் ஒதுங்க
மதமென்றால் முண்டாசு தட்டுவோர்
கண்டும் காணாமல் விலக

ஒரு தலைமுறைக்கே
வாய்க்கரிசி போட்ட சாதனையில்
பூரித்துக் கிடக்கிறது இழிந்தவர்களின் பூமி

பக்கமிருந்தோருக்குப் பரிதவிப்பு இல்லை
கைகளைக் கட்டிக்கொண்டு
வேடிக்கை பார்ப்பதில் நாம் வெற்றி பெற்றோம்

ஒவ்வொரு விடியலிலும்
அறிக்கைகளோடு அரசியல் நடத்தும்
நமக்குப் புரியுமா?

விடுதலை வேள்விக்காக
உடல்களையே தானம் தந்து
கல்லறைகளில் முன்னுரை எழுதிய உன்னதம்

Sunday, January 16, 2011

இண்டர்லோக் நாவலும் இனமான இழிவும் NOVEL INTERLOK - MANGSA PRASANGKA LIAR?



தேசிய இலக்கியவாதி டத்தோ அப்துல்லா உசேனின் ‘இண்டர்லோக்’ நாவல் இவ்வாண்டு எஸ்.பி.எம். மாணவர்களுக்கு மலாய் மொழிப்பாடத்தின் இலக்கிய நூலாகத் தேர்வு செய்யப்பட்டதால் எழுந்துள்ள சர்ச்சை யாரும் எதிர்பாராதது. ஒரு மாத காலத்துக்கும் மேலாகத் தகவல் ஊடகங்களில் இது குறித்த பல்வேறு கருத்துக்கள் பலராலும் கூறப்பட்டு வருகின்றன. இந்த நாவலில் இந்திய இனத்தை இழிவுபடுத்தும் ஒரு சொல்லை நீக்கவேண்டும் அல்லது ஒரு பத்தியை நீக்க வேண்டும் அல்லது நாவலையே நீக்கவேண்டும் என ஒவ்வொரு தரப்பும் தம் வாதங்களை முன்வைக்கிறார்கள். இதற்கான முடிவு என்ன என இந்திய சமுதாயம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மலேசிய மக்களே காத்திருக்கிறார்கள்.

இந்த நாவல் ‘ஒரே மலேசியா’ கொள்கைக்கு வலுவூட்ட அண்மையில் எழுதப்பட்ட நாவல் என்றே பலரும் நினைக்கிறார்கள். இந்த நாவல், நாடு சுதந்திரம் அடைந்த 10 ஆண்டுகள் நிறைவையொட்டி 1967இல் டேவான் பகாசா டான் புஸ்தாகா நடத்திய நாவல் போட்டிக்காக எழுதப்பட்டது. 1910 முதல் 1940 வரை ஆங்கிலேயரின் காலனித்துவ ஆட்சியில் மலாய்க்காரர், சீனர், இந்தியர் ஆகிய மூன்று இனங்களின் பின்னணியையும் அவர்கள் எதிர்நோக்கிய சிக்கல்களையும் முன்வைக்கிறது. குறிப்பாக, செமான், சிங் குவாட், மணியம் ஆகியோரின் மூன்று குடும்பங்களைப் பற்றிய கதைகள் மூன்று அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. இறுதி அத்தியாயத்தில், ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கையிலிருந்து விடுபட்டு மூன்று இனங்களும் தமக்குள் உதவிக்கொண்டு ஒன்றுபடும் சூழலை நாவலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்த நாவலையும் கதைப்போக்கையும் ஆழ்ந்து நோக்கினால் ஒன்று தெளிவாகப் புரிகிறது. நல்ல நோக்கத்துக்காக இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. மூவின ஒற்றுமையின் முக்கியம் குறித்த சிந்தனையை நாவலில் காணமுடிகிறது. ‘ஒரே மலேசியா’ கொள்கைக்கு ஏற்ப இந்த நாவலின் கருத்துகள் அமைந்துள்ளன. ஆனால், இந்தியர் அடையாளம், பின்னணி குறித்து நாவலில் இடம்பெற்றுள்ள சொல், வாக்கியங்கள் இந்தியரை இழிவுபடுத்துவதாக உள்ளதால் இந்தியரிடையே சினத்தைக் கிளறியுள்ளது.

இழிவுபடுத்துவதாக உள்ளது ஒரு சாராரும் இழிவுபடுத்தவில்லை என்று இன்னொரு சாராரும் முரண்படும் சூழல் செய்திகளாகித் தகவல் ஊடகங்களில் சூடு பறக்கிறது. தமிழ் நாளிதழ்களில் கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள், நாவல் எரிப்பு என எதிர்ப்புக்குரல்கள் உரத்து ஒலிக்கின்றன. ஆனால், மலாய்மொழி ஏடுகளில் குறிப்பாக, உத்துசான் மலேசியா, பெரித்தா ஹரியான் போன்றவற்றில் இந்த நாவலைத் தற்காக்கும் தீவிர முயற்சிகளைக் காண முடிகிறது.

இந்தியரை இழிவுபடுத்தும் வாசகங்கள் பல இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டாலும் பின்வருபவை முக்கியமானவை:

Mereka yang dari arah ke utara sedikit bercakap bahasa Malayalam atau Telugu, tetapi hampir semuanya tahu bahasa Tamil. Malayalam dan Telugu pun berasal dari satu rumpun bahasa Dravidia. Satu perkara besar yang membuatkan mereka senang berkaul adalah kerana mereka tergolong dalam satu kasta Paria. (பக்கம் 211)

வடக்குப் பகுதியிலிருந்து வந்தவர்கள் மலையாளம், தெலுங்கு மொழிகள் பேசுவார்கள். ஆனால், அனைவருக்கும் தமிழ்மொழி தெரியும். மலையாளமும் தெலுங்கும் திராவிடமொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை. அவர்கள் அனைவரும் இயல்பாகப் பழகுவதற்குக் காரணம் எல்லாரும் பறையர் சாதியைச் சேர்ந்தவர்கள்


Mereka tidak perlu takut akan mengotori sesiapa kalau bersentuhan. (பக்கம் 211)

யாரையும் தொட்டால் தீட்டாகும் என்று அவர்கள் பயப்பட வேண்டியதில்லை.

இந்தியரின் கோபத்திற்கு இவையே முக்கிய காரணங்கள். சாதிய உணர்வுகள் சமுதாயத்தின் எல்லா மட்டங்களிலும் மண்டிக்கிடந்தாலும் ஏடுகளிலும் எழுத்துகளிலும் அவற்றை வெளிப்படையாக எழுதுவது இல்லை. இந்த உணர்வை மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியுமா? இதுதான் இந்தச் சிக்கலுக்குக் காரணமாக உள்ளது.

மலாய் ஏடுகளில் நாவலைத் தற்காப்பவர்கள் முன் வைக்கும் வாதம், சாதியமுறை இந்திய இனத்தில் இன்னும் உள்ளது. இதைத்தானே எழுதியுள்ளார். இதில் தவறு ஏதும் இல்லையே. அதுமட்டுல்லாமல் இது வரலாறு. அதை எப்படி மாற்றி எழுத முடியும்? இவர்களின் வாதத்திற்கு இணைப்பேராசிரியர் முனைவர் சிவமுருகன், உமாபாகன் அம்பிகைபாகன், பரதன் குப்புசாமி, குமரவேல், சுவா சோய் லெக், லிம் சுவீ தின் போன்றோரைத் துணைக்கு அழைக்கிறார்கள். இவர்களைப் போன்று இன்னும் பலரும் நாவலில் இன இழிவு இல்லை என்று கூறுகிறார்களாம்! அதுமட்டுமல்லாமல், மகாத்மா காந்தி சாதி ஒழிப்புக்குப் பாடுபட்டதையும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள Untouchable, Coolies, Nectar in a Sieve, He Who Rides a Tiger போன்ற நாவல்கள் சாதியக் கொடுமைக்கு வெளிப்படையாகக் குரல் கொடுத்துள்ளதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

(இன்னும்...)







Thursday, January 13, 2011

ஓராயிரம் உதடுகள்


போர்க்களத்திலிருந்து
இறுதி நிலவரத்தோடு
புறப்பட்டு வருகிறேன்

மனம் வெதும்பி
வேதனைத் தீயில் கருகாதே
என் மாணவத் தோழா!

விசாரித்துப் பார்த்தேன்
வெற்றி முகாமில் உன் பெயர்
உச்சரிக்கப்படவில்லை

ஏவுகணையும் எறிகணையும்
உன்னை உலகம் கடத்தியதாக
ஊரெங்கும் பேச்சு

நீ வித்தைகளைப்
படித்துக் கிழிக்கவில்லையாம்
படித்தனயாவும் உன்னைக்
கிழித்துப்போட்டதாக
ஊருக்குள் உயிரோடு உலவுகிறது
ஒரு கிசுகிசு

வியூகங்களையெல்லாம் யோசிக்காமல்
போர்க்களம் நோக்கி
அவசரமாய்ப் புறப்பட்டதாக
உன் மீது வருகிறது குற்றச்சாட்டு

முன்பு வாயெல்லாம் பற்கள்
இன்று கவலைக் குளங்களில்
உன் கண்கள்

எழுந்து வா தோழா!
தனிமைச் சிறைக்குள் புகுந்து
உடைந்து போகாதே!

கண்ணீர் நதியில் மூழ்கி
கரைந்து போகாதே

சோகங்களைக் கைகுலுக்கிச்
சொந்தம் பாராட்டாதே

சூழ்ச்சிகளின்
சூட்சமம் அறி

வெற்றி தேவதையின்
முகவரி தேடு

எதிர்வரும் தடைகளை
உடைத்துப் போடு

அடுத்த போருக்கு
ஆயுதம் தயாரி

அசுரப் பயிற்சிக்கு
உன்னை ஆளாக்கு

இதுவே இறுதிப் போரென
உன்னிடம் இயம்பிய
புல்லன் யார்?

இன்னும் இருக்கிறது
போர்க்களம்

உன்னை அலங்கரிக்க
வெற்றி மகுடமும்
உன் பெயரை உச்சரிக்க
ஓராயிரம் உதடுகளும்
காத்துக்கிடக்கின்றன!

Friday, January 7, 2011

அல்வா காலம்


இது அல்வா காலம்
அங்கிங்கெனாதபடி எங்கும்
கணக்கு வழக்கில்லாமல்
அல்வா விநியோகிப்படுகிறது

பசியென்று யாரும்
வாயைத்திறந்தால் போதும்
இந்தா புசி என்று வாயில்
அல்வா திணிக்கப்படுகிறது

எல்லாருக்கும் அல்வா பிடிக்கும்
அதிலும்
நமக்கு அதிகம் பிடிக்கும் என்பதால்
அள்ளியள்ளிப் பரிமாறப்படுகிறது

அல்வா பரிமாறல் பற்றி
அறிவிப்பு வந்ததும்
அதைப் பெறுவதற்கான கூட்டம்
கூடிக்கொண்டே போகிறது

வயிற்றுக்கு உணவு இல்லார்க்கு
அல்வா ஈயப்படும் என்பதால்
பரவாயில்லை என்றே
பலருக்கும் படுகிறது

நாளைகளைப் பற்றி
பலருக்கும் கவலைகள் கிடையாது
சுடச் சுட அல்வா
உடனே கிடைத்தால்
போதுமேன்றே கூட்டம் புறப்படுகிறது

அல்வாவோடு வருவோர்க்குத் தெரியும்
வயிற்றுக்கும் இதயத்துக்கும்
தூரம் அதிகம் இல்லை என்பது

வயிறு நிறைந்தால்
இதயம் குளிரும்
இதயம் குளிர்ந்தால்
அல்வா அள்ளித் தந்த கைகளை
இதயம் கொண்டாடும் என்பது


பொய் சொல்லாமல் சொல்லுங்கள்
உங்கள் வீட்டுக்கு
அல்லது உங்கள் வீடமைப்புப் பகுதிக்கு/
தாமானுக்கு
அல்லது உங்கள் ஊருக்கு
அல்வா கிடைத்ததுதானே?

எத்தனை காலத்துக்கு
அல்வாவைத் தின்றே
நாம் காலத்தைக் கழிப்பது?
இனிப்பு நோய் வந்து
ஆயுளைக் குறைக்காதா?





Thursday, January 6, 2011

அன்புமகள் கனிமொழிக்கு...


காலச்செடியில்
மீண்டுமொரு மலர் பூக்கிறது
உன் பிறந்தநாளின் நினைவுகளை
உடன் அழைத்து வருகிறது

நினைவுகளூடே
நீ இந்த பூமிக்கு வந்த
அந்த ஞாயிற்றுக்கிழமையின் குதூகலம்
அடி மனத்தில் ஆழத்தில்
இன்னும் அப்படியே..

முதல் முத்தம்
முதல் காதல்போல
முதல் குழந்தை வருகையும்
எப்பொழுது நினைத்தாலும்
மனக்குளத்தில் கல்லெறிந்து
அலைகளாய் விரிகின்றது...

கல்விச் சாலையில்
நீ ஒவ்வோர் இலக்கிலும்
வெற்றிமாலை சூடி
பயணத்தைத் தொடர்ந்தபோது
சகபயணியாக
உன் வெற்றியைக் கொண்டாடினோம்

இன்னும் உன் பயணம்
தொடர்கிறது...
எதிலும் நீ வெற்றிகானம் மீட்ட
மனம் எப்பொழுதும்
வாழ்த்துத் தந்தி அனுப்பி மகிழ்கிறது

சொத்துகள் சேர்ப்பதிலே
எப்போதும் ஆர்வம்
இருந்ததில்லை எனக்கு
பிள்ளைகளாய் உன்னோடு
இன்னும் இருவரை
ஆசைச் சொத்தாய் அடைந்த பிறகு..

கவிஞனாய் இதுவரையில்
எதையெதையோ பாடினேன்
ஒரு கவிதையான
உன்னைப் பாடாத
குறையின்று தீர்த்தேன்

21 ஆண்டுகளுக்கு முன்பு
உன் முதல் பிறந்தநாளில்
மனத்தில் எழுதிப்பார்த்த வரிகளை
மீண்டும் நினைவுச் சரத்தில் கோர்க்கிறேன்:

‘என்றுமுள தென்தமிழாய்
நன்று புகழ் நீ பெறவும்
குன்றா நலனில்
என்றும் நிறையவும்
இன்று உன்றன் பிறந்தநாளில்
அப்பா நான்
ஆசையாய் வாழ்த்துகிறேன்!’

(8.1.2011 அன்று 22ஆம் பிறந்தநாளைக் கொண்டாடும் அன்புமகள்
கனிமொழியாளுக்கு என் வாழ்த்துக்கவிதை)





Wednesday, January 5, 2011

சீ.முத்துசாமியின் ‘மண்புழுக்கள்’ நாவல் - ஒரு பருந்துப் பார்வை



மலேசிய எழுத்தாளர்களில் சீ.முத்துசாமி முற்றிலும் மாறுபட்ட படைப்பாளி. வழக்கமான கதை சொல்லும் பாணியிலிருந்து விலகிக்கொண்டு தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு அதிலே பயணிப்பவர். நான் படிவம் ஐந்தில் படித்த காலத்தில் (1978) தமிழ் நேசன் நாளிதழ் நடத்திய போட்டியில் முதல் பரிசுபெற்ற அவரின் ‘சிறகுகள் முறியும் மானுடக் கனவுகள்’ குறுநாவல் அந்நாளிதழில் தொடராக வெளிவந்தபோது படித்தேன். நான் வாழும் தோட்டப்புறச் சூழலை மையமிட்ட நாவல் என்பதால் என்னை அது மிகவும் கவர்ந்தது. வாசிப்பின் ருசியை நான் உணரத் தொடங்கிய காலக் கட்டம் அது.

பின்னர், அவரின் சில சிறுகதைகளையும் நாளிதழில் வாசித்தேன். கல்லூரியில் பயின்ற காலத்தில் அவரின் ‘விதைகள் பாலைவனத்தில் முளைப்பதில்லை’ நாவலை ஆவலோடு வாசித்தேன். 22 வயதில் என்னை ஆழமாகப் பாதித்த, உணர்வுகளை உலுக்கிய, தீவிர வாசிப்புக்குள் தள்ளிய நாவல் இதுவாகத்தான் இருக்கும். கல்லூரி இதழில் இந்த நாவல் குறித்த என் விமர்சனத்தை ஆசையாய் எழுதியது இன்னும் நினைவில் உள்ளது. சிதையும் ஒரு குடும்பத்தின் சோகத்தை நனவோடை உத்தியில் அகநோக்கு நிலையில் கதைப்பாத்திரங்கள் பேசுவதாக அமைந்த நாவல் இது.

இதோ, சீ.முத்துசாமியின் மூன்றாவது படைப்பான மண்புழுக்கள் நாவலை, இடையிலே கிடைத்த மருத்துவ விடுப்பில் ஒரே மூச்சில் வாசித்துவிட்டு என் எண்ணங்களை இங்கே பதிவு செய்ய வருகிறேன். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சி நிறுவனம், தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய மூன்றும் இணைந்து நடத்திய போட்டியில் இது முதல் பரிசு பெற்ற நாவல்.

இதுவும் சீ.முத்துசாமியின் நெஞ்சுக்கு நெருக்கமான தோட்டப்புறப் பாட்டாளிகளின் வாழ்க்கைச் சுவடுகளின் சோகத்தைப் பதிவுசெய்யும் முயற்சியாக அமைந்துள்ளது. சுதந்திரத்திற்கு முற்பட்ட காலக்கட்டத்தில் தோட்டப் பட்டாளிகளின் போராட்ட வாழ்க்கையைக் கதைக்களனாகக் கொண்டு நாவலைப் புனைந்துள்ளார். மண்புழுக்களாகத் தோட்ட மண்ணை நம்பித் தங்களின் வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் நிலையை ஓர் ஆவணச் சித்திரமாக நம் கண் முன்னே நிறுத்துகிறார்.

இந்நாவலில் குறிப்பிடத்தக்க அம்சம், தோட்டப்புற வாழ்வின் மிக நுணுக்கமான விவரிப்பும் தகவலின் தொகுப்புமாகும். மலேசியாவில், இதுவரை வெளிவந்த நாவல்களில் இந்த அளவுக்கு தோட்ட வாழ்க்கையை ஆழமாக, நுணுக்கமாக பதிவுசெய்த படைப்பு இல்லை என அறுதியிட்டுக் கூறலாம். தோட்ட வாழ்க்கையைக் கடந்து வந்த வாசகர்கள் இதன் ஊடாகப் பயணப்படும்போது நிச்சயம் உணர்வார்கள். எழுத்தாளரின் கடுமையான உழைப்பை இது தெளிவாக்குகிறது.

வைரமுத்துவின் ‘கருவாச்சி காவியம்’ போல் இதுவும் பேச்சு நடையில் அமைந்துள்ளதால் நாவலை யார் வாசித்தாலும் அதனோடு ஒன்றித்துவிடும் நிலையை நாவல் ஏற்படுத்துகிறது. நாவல் உயிர்ப்போடு திகழ இது முக்கியப் பங்காற்றுகிறது. தோட்டப்புற மக்கள் தங்கள் சோகத்தையும் பாடுகளையும் தங்கள் மொழியிலேயே பேசுவது சுவையாக இருக்கிறது. ‘நம்ம பாடு எவனுக்கு தெரியுது?.. பொண கனத்துல, ஏணிய துக்கி தோள்ள போட்டுக்கிட்டு, அந்த மீனா பூண்டு காட்டுல லோலோன்னு ஓடி, பதினோரு மணிக்கு நானூறு மரத்த, ஏணில ஏறி, அண்ணாந்து பாத்து, மேலே போய்விட்ட வெட்டுக் கோட்டுல கத்தி போட்டு, தடிச்சு காஞ்சு கெடந்த மொரட்டு பட்டங்களோடு வரட்டு வரட்டுனு ஓரியாடி, முடிச்சுட்டு, வாளிக் கடக்கு வர்றதுக்குள்ள பாதி உசுரு போயிரும்’. இப்படி உரையாடல் மட்டுமல்லாமல் நாவல் முழுமையும் பேச்சு நடையே நிறைந்திருக்கிறது. நவீனமாகிவரும் நம் வாழ்க்கைச் சூழலில் தோட்டப்புற மொழி இப்பொழுதே கரைந்து காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. அதை ஒரு பொறுப்புள்ள படைப்பாளியாக அடுத்த தலைமுறைக்கு இந்நாவலில் பதிவு செய்திருக்கிறார் சீ.முத்துசாமி.

நாம் பேச்சுநடையில் தவிர்க்கும் அசூசையான சொற்கள் இந்நாவலில் ஆங்காங்கே கலந்திருப்பது சில வாசகர்களுக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்தலாம். தணிக்கை இல்லாத தோட்டப்புற மக்களின் வாழ்க்கைப் பதிவு என்பதால் ‘உள்ளதை உள்ளவாறு உரைத்தல்’ என்ற நிலையில் எழுத்தாளர் இத்தகைய எழுத்து நடையைக் கையாண்டிருப்பது புரிந்துகொள்ளக்கூடியதுதான்.

மண்புழுக்கள் நாவலின் கதை என்ன? கதையின் சுவைக்காக மட்டும் இந்நாவலை அணுகுவோர் நிச்சயம் ஏமாற்றமடைவர். முதல் அத்தியாயத்தை வாசித்த என் மகள் கேட்டாள். “எங்கப்பா கதையைக் காணோம்?” பலருக்கும் இத்தகைய எண்ணம் தோன்றலாம். நம் புனைவு இலக்கியத்தில் நிகழ்ச்சிகளும் சம்பவங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால், இந்நாவலில் கதையென்பது ஒரு மெல்லிய இழையாக ஊடாடிவர தோட்டப் பாட்டாளிகளின் போராட்ட வாழ்க்கையின் பதிவே முக்கியக் களமாக அமைந்துள்ளது. கதை சொல்லும் முறையில் ஒரு கட்டுடைப்பை நிகழ்த்தியிருக்கிறார் சீ.முத்துசாமி.

வழக்கமாக நாவலில் குறிப்பிட்ட சில கதைப்பாத்திரங்களை ஒட்டியே கதை நகர்த்தப்படும். இங்கே, ஆட்டுக்கார சின்னக்கருப்பன், அவன் மகள் சின்னபுள்ள, மனைவி பெரியதாயி, சாலபலத்தான், முத்துவேலு, கசியடி முனியப்பன், கண்ணுசாமி, தண்டல் பொன்னுசாமி, தொரசாமி, கடைக்காரர் திக்குவாயர், தண்ணிமலை கவுண்டர், புட்டுகாரர், ஓடும்பிள்ளை, மேனேஜர் மேனன், பெரிய கிராணி சுப்பையா இப்படிக் கதைப்பாத்திரங்களின் பட்டியல் நீளுகிறது.

ஆயினும், ஆட்டுக்கார சின்னக்கருப்பனின் வாழ்க்கை மையமாக இருக்க, அவனைச் சுற்றி நிகழும் பல்வேறு கிளைக்கதைகளும் நினைவுகளும் நாவலில் வந்து போகின்றன. ஆட்டுக்கார சின்னக்கருப்பனின் மகள் சின்னப்புள்ளையைக் கசியடி முனியப்பன் பால்மரக்காட்டில் கற்பழித்துக் கொலை செய்துவிட, போலீசாரால் கைது செய்யப்படுகிறான். சயாம் மரண ரயில் பாதை அமைக்கும் வேலையில் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் ஜப்பானியரிடம் பட்ட துன்பக் கதைகளும் நாவலில் இடம்பெறுகின்றன. ஜப்பானிய காலனித்துவ ஆட்சிக்குப் பிறகு, நாட்டைப் பிடிக்கக் கம்யூனிஸ்ட்டுகள் முயற்சியில் இறங்குகிறார்கள். அவர்கள் கூட்டத்தில் சேர்ந்துவிடும் கசியடி முனியப்பன் மீண்டும் தோட்டத்திற்கே வந்து தன்னை முன்பு அடித்து உதைத்த டன்லப் துரையைச் சுட்டுக்கொன்று விடுகிறான். காலில் முள் குத்திப் புண்ணாகிக் ஒரு காலை இழந்துவிடும் ஆட்டுக்காரன், மனைவியின் உதாசினத்திற்கு ஆளாகிறான். அவனின் மகள் பழனியம்மா எதிர்த்த வீட்டுப் பையைனோடு ஓடிவிட, வேதனை தாங்காது அவன் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவோடு கையில் கயிற்றோடு மரத்தடியில் அமர்ந்திருப்பதாக நாவல் முடிகிறது.

சீ.முத்துசாமியின் மூன்று நாவல்களிலும் ஒரு ஒற்றுமையை என்னால் காண முடிகிறது. கதையின் போக்கில் வாசகர் மனங்களில் சோக இராகங்களை எழுப்பி அவர்களைக் கதையோடு ஒன்றித்துவிடச் செய்வதில் இவரின் எழுதுகோல் முனைப்பு காட்டுகிறது. இவரின் முன்னைய இரண்டு நாவல்களின் தலைப்புகளே (சிறகுகள் முறியும் மானுடக் கனவுகள், விதைகள் பாலைவனத்தில் முளைப்பதில்லை) இதனை உறுதிப்படுத்துகின்றன.

‘மண்புழுக்கள்’ நாவல் மலேசியத் தமிழ் இலக்கிய நாவல் உலகில் முக்கியமான படைப்பாகும். சஞ்சிக் கூலிகளாக மலையகம் வந்து காட்டையும் மேட்டையும் திருத்தித் தோட்டக்காடுகளின் லயங்களில் முடங்கிப்போனவர்களின் கதையை, நம் முன்னோர்களின் வேர்களின் விலாசங்களை ஆவணமாக்கியிருக்கும் சீ.முத்துசாமியின் முயற்சி பாராட்டுக்குரியது.

இருபது ஆண்டுகள் எழுத்து வனவாசத்திற்குப் பிறகு இத்தகைய படைப்பை இவரால் தரமுடியுமென்றால் தொடர்ச்சியான எழுத்துத் தவம் மேற்கொண்டால் இன்னும் சில இலக்குகளை இவரால் அடையமுடியுமென்று உறுதியாய்த் தெரிகிறது.

ந.பச்சைபாலன், மலேசியா


Tuesday, January 4, 2011

வட்டாரங்கள் வாழ்க


கட்சிக்குள் பயங்கர குழப்பம்
உறுப்பினர்களிடையே கடும் அதிருப்தி
இதனால் கட்சிக்கு இனி பாதிப்புதான் என
அந்த வட்டாரம் அறிவித்தது

அவரைத் தொடர்ந்து
கட்சியை விட்டு ஆயிரக்கணக்கில்
உறுப்பினர்கள் வெளியேறுவர் என
நம்பப்படுகிறது

இது குறித்து
தலைவருக்கும் துணைத்தலைவருக்கும்
மனக்கசப்பு தோன்றி
இடியப்பச் சிக்கலாக மாறியிருப்பதாக
கூறப்படுகிறது

....இப்படியெல்லாம் நிலைமை
கட்டுக்கடங்காமல் போய்விட்டதாகச்
சொல்லப்படுகிறது

...மேலும் உடனடி நடவடிக்கை
இல்லாவிட்டால் போராட்டம் வெடிக்கும் என
அறியப்படுகிறது

.... நிலைமை இப்படியே போனால்
எல்லாரையும் ஒன்றுபடுத்துவது சிரமம் என்று
பேசப்படுகிறது

எல்லாரும் செய்திகள் படித்துப்
பேசிச் சிரித்து
உணர்ச்சியில் பொங்கி
பொழுதுகள்போக்கி
இன்புற்றிருக்கச் செய்வதன்றி
வேறொன்றும் அறியார் பராபரமே!

Monday, January 3, 2011

நோயெனப்படுவது யாதெனின்



வேகம் காட்டிய காலம்
சுவர்க் கடிகாரத்தின் முட்களில் மாட்டி
நகர முரண்டு பிடித்த அதிசயம்

வாசிப்பின் ருசி தேடி
மனசின் நாக்கு அலைய
மேசையில் நிறைந்த நூல்கள்
ஆசையாய் உள்ளிழுத்தன

இயந்திர கதியில் சிதறிய கவனம்
குவிமையமாய்
உடலின் மீது பரவியது

உறவுப் பறவைகளின்
அன்பில் அரவணைப்பில்
கசிந்த சொற்கள்
சிறகுகோதி மனம் வருடின

நான்கு சுவர்களுக்குள் அடைந்தாலும்
கற்பனையின் குதிரை ஏறியதில்
அடிக்கடி வெளிப்பயணம் சாத்தியமாயிற்று

முன்னிலும் தீவிரமாய்
தூக்கத்தின் மர்மக் கைகள்
தாவிப் பிடித்து அணைத்தன

சுற்றியிருந்த உதடுகள்
ஓயாமல் உச்சரித்ததில்
கடவுளின் நாமம்
உணர்வை நனைத்து
உதடுகளில் உறவாடத் தொடங்கியது

மரணத்தின் கோர முகம்
முதன்முறையாய் தலைக்கு மேலே
தொங்கி உற்றுப் பார்த்தது

‘நோயில் இருந்த நாட்கள்
கணக்கில் இறந்த நாட்கள்’
நாட்குறிப்பின் வாசகத்தைக்
கிழித்து வீசினேன்