நம் குரல்

Wednesday, October 22, 2014

மரண இரயில் பாதை : சில குறிப்புகள்


     
•  நினைவுச் சாளரத்தின் வழியாக
 மங்கலான காட்சியாயினும்
 மறையாமல் நீண்டுகொண்டே இருக்கிறது
 எல்லாவற்றுக்கும் சாட்சியான அந்த இரயில் பாதை

• அதன் வழி நெடுக
கற்களுக்கும் கட்டைகளுக்கும் அடியில்
யார் காதுக்கும் எட்டாமல்
ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன
உயிர் பிழியும் கத்தல்கள் கதறல்கள்
   
•  அடர்ந்த காட்டின் இருளைத் துளைத்து
 மலைகளைக் குடைந்து நதிகளைக் கடந்து
 மலைச்சரிவுகளில் தவழ்ந்து
 தீரா வேட்கையோடு அது முன் நகர்ந்தது

•  தொலைதூரத்தில் ஒலித்த உறவுப் பறவைகளின்
 துயர இராகங்கள் நெருங்க முடியாமல்
 அடைய வேண்டிய தூரத்தைக் கணக்கிட்டவாறு
 பயணப்பட்டது

•  வழிநெடுக உதிர்த்த பிணங்களை
 தன் இரு பக்கங்களில் வீசியும்
 தன்  அடியில் புதைத்தும்
 தன் கொடூர முகத்தை மறைத்தவாறும்
 அதன் பயணம் தொடர்ந்தது

•  பேராசை மனங்களில் வழிந்த
 அடங்காத ஆவலுக்கு வளைந்து கொடுத்து
  தடைகளைத் தகர்த்தவாறு விரைந்தது

•  வரலாற்றுப் பக்கங்களில் வாழ்விழந்து
 தன் முகத்தை மட்டும் காட்டிவிட்டு
 இரகசியங்களைத் தன்னில் புதைத்தவாறு
 மௌனம் காக்கிறது

•  நாம் கடந்துபோகும்
 ஒவ்வொரு இரயில் பாதையும் நினைவூட்டுகிறது
 மனித உடல்களின் மீது மூர்க்கமாய்ப் பயணம்போன
 இரயில் பாதைகள்.
.

No comments:

Post a Comment