நம் குரல்

Tuesday, October 28, 2014

ஒற்றனின் வருகை




இடைநின்று ஊடாடும் காற்றாக
சரித்திரப் பக்கங்களில் இடைச்செருகலாக
தலைநீட்டி வாழ்ந்து ஓய்ந்தவன் அவன்

மந்திராலோசனை அரங்கேறும் அரண்மனையின்
அந்தரங்க இடங்களில் நின்றிருக்கும் தூணாகிச்
செவிவழி புகும் ஏவல்களை ஏற்றுச் செயலாற்றியவன்

மக்கட்திரளில் நுழைந்து கலந்து
வெயிலில் அலைந்து திரிந்து
குவியும் தகவல்களில் உண்மைகளை மட்டும்
சல்லடைபோலும் சலித்துத் திரட்டி
இரகசியாய்ச் சுமந்து வந்தவன் அவன்

புராதனச் சாம்பலிலிருந்து எழுந்து
காலத் திரைச்சீலை விலக்கி
நவீனங்களால் நனையும்
குளிர்சாதன அறைக்குள் நுழைந்து
கடலையைக் கொறிக்கத் தொடங்குகிறான்

கண்முன்னே ஒளிரும் கணினித் திரையை
மக்கட்திரளெனக் கற்பனை செய்கிறான்
உண்மைகளையும் பொய்களையும் பிசைந்து
புதிய கலவையை உருவாக்கித் தன்னை வியக்கிறான்

அறைச்சுவரில் காது வைத்துக்கேட்டு
அதிலிருந்து கசியும் ஒலியை மொழிபெயர்க்கிறான்
தன் அனுமானங்களையும் ஆரூடங்களையும் கலந்து
புதிய தகவலைக் கண்டுபிடித்ததாய்ப் பூரிக்கிறான்

அறைக்குள் வந்துபோவோரின் பேச்சொலியிலிருந்து
தரவுகளைச் சேகரிக்கிறான்
சொல்லப்படுகிறது நம்பப்படுகிறது அறியப்படுகிறது
போன்ற சொற்களால் தன் முகம் மறைக்கிறான்

திரைமறைவிலிருந்து யார் யாரோ இடும்
யார் யாரோ கொண்டு வரும் கட்டளைகளை
மறுக்கவியலாது கைகுலுக்கி வரவேற்கிறான்

இவன் கண்ணிற்படுவானா எனப் பலரும்
காத்திருக்கிறர்கள் உங்களைப்போலவே
கோபங்கலந்த சொற்களைச் சேகரித்தவாறு




No comments:

Post a Comment