நம் குரல்

Monday, June 26, 2017

குரலற்றவர்களின் குரல்


   

உயிர் உருக்கும் அந்தக் குரல்
காற்றுவெளியில்
கவனம் ஈர்க்க
எங்கும் நீக்கமற நிறைகிறது

இடைவிடாது ஒலித்தும்
யார் காதுக்கும் கேட்பதில்லை
அவர்களின் குரல்

தோல் தடித்த காதுகள்
சில ஒலிகளை  மட்டும்
எப்பொழுதும் உள்வாங்குவதில்லை

அவர்கள்
பாலைவனத்தில் சுடுமணல்
கடந்து பயணிக்கிறார்கள்
அகதிமுகாம்களில் நீண்ட வரிசையில்
நிற்கிறார்கள்
வாழுமிடங்களை  நெருங்கிவரும்                      
இயந்திரங்களைப் பார்க்கிறார்கள்
சாலையோரங்களில் கடந்துபோகும்
மனிதர்களிடம் கையேந்துகிறார்கள்
போரில் சிதலமான வீடுகள் முன்
செய்வதறியாது கலங்குகிறார்கள்

அவர்கள்
குறைந்த வருமானத்தில்
வாழ்வதறியாது தவிக்கிறார்கள்                                
தீவிரவாதத் தாக்குதலில்
சிதைந்த உடல் உறுப்புகளோடு                                
நடமாடுகிறார்கள்
பேச்சுரிமைகள் மறுக்கப்படுவதால்                          
தமக்குள்ளாக முணகுகிறார்கள்      

அவர்கள்                   
மதத்தின் கைகள் தங்கள் கழுத்தை
இறுக்குவதைப் பொறுக்காமல்
புலம்புகிறார்கள்                                                                    
அதிகார பீடங்கள் தங்களைக்
கீழே தள்ளி எழுப்பப்படுவதால்
துடிக்கிறார்கள்                                                                                 

நம் முகங்களின் சாயல்களில்
அவர்கள் முகங்கள் இருந்தும்
நாம் அவர்களை எளிதாய்க்
கடந்து போகிறோம்

காதில் விழும் ஏதேதோ ஒலிகளை
இரசித்துத்  தலையசைத்தவாறு






2 comments:

  1. வணக்கம்
    ஐயா

    உண்மைதன் யாவும் மனிதனுக்குத்தான் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரூபன். உடனே கருத்துக்கூறி என்னை உற்சாகமூட்டுகிறீர்கள்.
      மிக்க நன்றி

      அன்புடன்
      ந.பச்சைபாலன்

      Delete