நம் குரல்

Friday, May 6, 2011

பால்யத்தின் பக்கங்கள்


நினைவுகளின் நீரோடையில்
கால் நனைக்கிறேன்
திரும்ப முடியாத பாதைகளில்
எனைத் திரும்பத் திரும்ப
அழைத்துப் போகிறது

பாதை நெடுக
காய்ந்து உதிர்ந்த இலைகளினூடே
படபடத்து விரிகின்றன
என் பால்யத்தின் பக்கங்கள்

பக்கங்கள் தோறும் பதிந்துகிடக்கும்
பழைய முகங்கள் பழகிய குரல்கள்
எனக்குக் கண்ணாமூச்சி காட்டி
இதய ஓடைகளுக்குள் ஒளிகின்றன

இதயத்தில்
இருக்கைபோட்டு அமர்ந்து
கதைகள் பேசி
கனவுகள் வளர்த்தவர்கள்
எழுந்துபோய்விட்ட பிறகு
அந்த வெற்றிடம்
எதையும் இட்டு நிரப்ப முடியாமல்
வெறுமையாய் நீளுகிறது

வெறுமையை விலக்கிப் பார்த்தால்
கனவு விதை தின்று நிமிர்ந்த மரங்கள்
அடர்த்தியாகிப் பக்கங்களை
அழகு செய்கின்றன

அழகான பக்கங்களில்
இலைகளில் கலந்து சிரிக்கும் பூக்களாய்
எத்தனையோ சொல்ல மறந்த கதைகள்
கொஞ்சம்
சொல்ல முடியாத கதைகள்



No comments:

Post a Comment