நம் குரல்

Thursday, March 12, 2015

இறப்பு வீடுகளில்


இறப்பு வீடுகளில் மயான அமைதி
பாலைவெளியில் தனித்து ஒதுங்கிய பறவையாய்
தானாக வந்தமர்கிறது

சொற்களைக் குறைவாய்ப் பேசியவாறு
நினைவலைகளை மீட்டியவாறு உரக்கப் பேசுகிறது
ஒவ்வொரு மனமும்

உடைந்து மறையும் நீர்க்குமிழியாய்
கத்தல்களும் கதறல்களும் அவ்வப்போது
பொங்கியெழுந்து கரைகின்றன

வெட்டவெளியில் விழித்திருக்கும் நிலா ஒளியாய்
உறங்கிப்போனவரருகே
ஒளி சிந்திக்கொண்டிருக்கும் விளக்கு


சிலர் அழுதுகொண்டிருக்கிறார்கள்
சிலர் அழுது ஓய்ந்துவிட்டார்கள்
சிலர் அழுபவர்களைப் பார்த்து
அழுவதெப்படி எனத் திகைத்து யோசிக்கிறார்கள்

இறப்பு வீட்டுக்குரிய ஏதோ மணம்
காற்றில் கலந்து
நாசிகளில் வந்து சேர்கிறது

சிறார்கள் விளையாட வாய்ப்பிருக்குமா
எனக் காத்திருக்கிறார்கள்

நன்கொடை திரட்டும் புத்தகத்தின் பக்கங்கள்
காற்றில் படபடக்கின்றன

பசித்த வயிறுகளை எதிர்பார்த்து
உணவு வகைகள் ஒரு மூலையில்

புதிதாய் வாங்கிய சீட்டுக்கட்டுகளை
ஒரு கூட்டம் கலைத்துப் போடுகிறது
பெரிய எண்ணுக்கும் சிறிய எண்ணுக்கும்
பந்தயம் கட்டுகிறது

நச்சரவமாய் மனங்களில் நுழைந்து
அவர்களை வளைக்கத் தொடங்குகிறது
தீர்ந்து போகாத ஆசை

ஐந்தில் தொடங்கி ஐயாயிரம் வெள்ளிவரை
விடிய விடிய வேட்டை தொடர்கிறது
போதையில் நனைந்த குரல்கள்
கொச்சை வார்த்தைகளில் கைகலக்கின்றன

சீட்டுக்கட்டுகளோடு காணாமல் போகும் கூட்டம்
ஆவலாய்க் காத்திருக்கிறது
அடுத்த இறப்புச் செய்தியை எதிர்பார்த்து

1 comment:

  1. வணக்கம்
    ஐயா
    உண்மையான வரிகள் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete