நம் குரல்

Wednesday, March 4, 2015

இறுதி அழைப்பு

     


அகால நேரத்தில் உறக்கத்தின் பிடியிலிருந்தவனை
பிடிவாதமாய் எழுப்பியது கைப்பேசி
எதிர்பாராத அழைப்பு அவனிடமிருந்து
உடைந்த குரலில் பேசத்தொடங்கினான்
என்னைப் பேசவிடாமல்

என் கவிதைகளைப் படித்துள்ளதாகவும்
என்னை ஒருமுறை சந்தித்ததாகவும்
மரணம்குறித்த என் கவிதைகள் பிடிக்குமென்றும்
என் கவிதைகளில் அவன் இருந்ததாகவும்
இனியும் தன்னைப் பற்றி எழுதுமாறும்
கூறியவாறு அழத்தொடங்கினான்

இனிமேல் தாங்கமுடியாதென்றும்
நம்பிக்கை இழந்துவிட்டதாகவும்
கண்ணீர் வற்றிவிட்டதாகவும்
முயற்சிகளெலாம் முடிந்துபோனதாகவும்
எனவே இனி அழைக்கமுடியாதெனவும்
போய் வருவதாகவும் தொடர்பைத் துண்டித்தான்

அதிர்ந்துபோய் பலமுறை அழைத்தும்
அவன் தொடர்பு கிடைக்கவில்லை
மரணம் குறித்த என் எல்லாக் கவிதைகளையும்
மனம் வாசித்துப் பார்த்தது
அவனைத் தேடிப் பார்த்தது
முகமில்லா அவனே ஒவ்வொன்றிலும்
சோகமாய் வந்து நின்றான்

மனைவியின் சேலையை மின்விசிறியில் சுற்றி
கட்டடிடத்தின் மேல்தளத்தில் நின்று
விஷத்தை வாயில் ஊற்றிக்கொண்டு
எண்ணெய்யை உடலில் ஊற்றித் தீக்குச்சி தேடி
தண்டவாளத்தில் இரயிலுக்குக் காத்திருந்து
வாகனத்தைப் பாலத்தை நோக்கிச் செலுத்தி
அவன் தயாராகிக் கொண்டிருந்தான்

அவனின் இறுதி யாத்திரையைத் தடுப்பதறியாது
அவனுக்காக எழுதத்தொடங்கினேன்
இன்னொரு மரணக் கவிதை

மரணத்தின் எல்லையை நெருங்கும்போதெலாம்
அவனைத் தடுக்க முயன்றேன்
மூர்க்கமாய் மோதத் தொடங்கினான்
என் சொற்களோடு

1 comment: