நம் குரல்

Saturday, January 6, 2018

பூனைகளைப் போற்றுதும்


பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு போகுமா? பூனை குறுக்கே போனால் சகுனம் சரியில்லை. மதில்மேல் பூனை. ருசி கண்ட பூனை. பூனையைப் பற்றிச் சிந்தித்தால் நம் நினைவில் இம்மாதிரி பழமொழிகள், சொற்றொடர்கள் வருவது இயல்பு.  பெரும்பாலும் பூனைகள் குறித்து  எதிர்மறையான எண்ணங்களே நம் மனித மனத்தில் பதிவாகியுள்ளன.

எழுத்தாளர் சுந்தர ராமசாமி பூனைகள் பற்றி இரண்டு கவிதைகள் எழுதியுள்ளார். அவற்றில் ஒன்று:

வித்தியாசமான மியாவ்

எனக்குத் தெரிந்த பூனை ஒன்று
நேற்று இறந்தது
சவ அடக்கத்துக்கு
நாங்கள் போயிருந்தோம்
என் நண்பனின் மனைவி
அழத் தொடங்கியபோது
என் மனைவியும் அழுதாள்
குழந்தைகள் அழுதன
சில வார்த்தைகள் பேசும்படி
என் நண்பன் என்னைக் கேட்டுக்கொண்டான்
நான் பேசத் தொடங்கினேன்:
'
இந்தப் பூனையின் மியாவ் மியாவ்                                  
வேறு பூனைகளின் மியாவ் மியாவிலிருந்து
வித்தியாசமானது
மேலும்...



                சுந்தர ராமசாமி 

இதில் பூனையைப் பற்றித்தான் பேசுகிறார் என்று நினைக்கிறீர்களா? தேவையற்ற சடங்குகள், சம்பிரதாயங்கள், வழக்குகள், போலித்தனங்கள் பற்றி இதனில் கேள்வி எழுப்புகிறார். பிரபஞ்சக் குளத்தில் தோன்றிய இடத்திற்கே உயிர்கள் திரும்புகையில் சலனங்கள் எழுவது இயற்கை. தவளை தான் எங்கிருந்து வந்ததோ அந்தக் குளத்திற்குள் குதிப்பதுபோல.  எனவே,  அதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்ற சிந்தனை இதனில் பதிவாகியுள்ளதாக நான் எண்ணுகிறேன். 

ரப்பர் தோட்டத்தில் வாழ்ந்த காலத்தில் ஆடு, மாடு, கோழி, நாய் இவற்றோடு பூனையும் எங்கள் குடும்பத்தின் வளர்ப்புப் பிராணியாக இருந்தது. ஒரு நாள், அதிகாலை ஐந்து மணிவாக்கில் பூனையின் உரத்த மியாவ் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தால் எங்கள் பூனை வீட்டின் உத்திரத்தில்  அமர்ந்து கீழே இறங்கும் வழியறியாது தவித்துக்கொண்டிருந்தது. எலியைத் துரத்திக்கொண்டு மேலே ஏறியதால் வந்த விளைவு.  கடமை என்று வந்து விட்டால் பூனையைப் போன்ற செயல்வீரனைப் பார்க்க முடியாது. அன்று பூனையைக் கீழே இறக்கி விடப் பெரும்பாடாகிவிட்டது.

தோட்டத்திலிருந்து நகருக்குக் குடிபெயர்ந்து விட்ட பிறகு, வளர்ப்புப் பிராணிகளைப் பிள்ளைகளின் பள்ளிப் பாட நூல்களில் மட்டும் பார்க்க முடிந்தது. பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் நம்மைக் கவனிக்கவே நேரத்தோடு அல்லாடும்போது, இன்னபிற உயிர்களையும் உடன் வைத்துப் பராமரிக்கும் நிலைக்குச் சூழலும்  மனமும் இடம்தரவில்லை. தொலைக்காட்சியில் இடம்பெறும் டோம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் நிகழ்ச்சியை எங்காவது பார்க்கும்பொழுது, பூனையின் அழகுக் கண்களையும் மீசையையும் ரசித்து அதன் தலையை ஆசையாய்த் தடவிப் பார்த்த பழைய நினைவுகள் வந்து போகும்.

அண்மைய காலமாகப் பூனைகளின் மீது எங்களுக்கு வெறுப்புக் கூடி வருவதற்கு எங்கள் அண்டை வீட்டார்தாம் காரணம்.  ஆசைக்கு ஒன்றிரண்டு பூனைகள் வளர்க்கலாம். ஆனால், ஒரு பூனைப் பட்டாளமே அண்டை வீட்டில் வாசம் செய்தால் நமக்கு எத்தகைய துன்பம் வந்து சேரும் என்பது உங்களில் அனுபவித்துப் பார்ப்பவர்களுக்கு எளிதாய்ப் புரியும். பூனைகளை வளர்ப்பவர்கள் அவர்கள், நம் வீட்டு வாசலில் சுகமாய் அமர்ந்துபோகும் அதன் கழிவுகளை அப்புறப்படுத்துவது நாம் எனும் நிலைதான் சொல்லொண்ணா வேதனையைத் தருகிறது. நல்ல வேளையாக, அவ்வப்போது நாய்களின் நடமாட்டம் இருப்பதால் பூனைகள் கொஞ்சம் அடக்கியே வாசிக்கின்றன.

இப்படிப் பூனைகள் மீதான வெறுப்பு ஒரு பக்கம் இருந்தாலும் அண்மையில் குடும்பத்தோடு விடுமுறையில் கூச்சிங் நகருக்குப் போனபோது பூனைகளைக் கொண்டாடும் மனங்களைக் கண்டு வியந்து போனேன். யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் என்பார்கள். கிழக்கு மலேசியாவின் தலைநகரான கூச்சிங்கைப் பொறுத்தவரை பூனைக்கு நல்ல காலம்தான்.



                              சாலைச் சந்திப்பில் வரவேற்கும் பூனைகள்


பூனை பெயரிலேயே ஒரு நகர் என்பது  வியப்புதான். கூச்சிங் என்பது இடுகுறிப் பெயரா? காரணப்பெயரா? அங்கே இரண்டுக்கும் தலையசைக்கிறார்கள். அதிகமாக பூனைகள் வளர்க்கப்பட்ட இடம் என்பதால் அந்தப் பெயர் வந்தது என்கிறார்கள். கூச்சிங் என்ற பெயர் அமைந்ததால் அந்நகரைச் சுற்றுலாத்தலமாக மேம்படுத்தும் முயற்சிக்குப் பூனைகளின் தயவை நாடியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

ஆனால், வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால் வேறு கதைகள் இருக்கின்றன. மேற்கு இந்தியாவின் கொச்சின் துறைமுகத்தையொட்டி இந்தப் பெயர் அமைந்திருக்கலாம் என்ற தகவல் உண்டு. இந்தியர்கள் பயன்படுத்திய கலைப் பொருள்கள் கூச்சிங் அருங்காட்சியகத்தில் இன்றும் உள்ளன. ஒரு தவறான புரிந்துணர்வால் இப்பெயர் வந்தது என்ற தகவலும் உண்டு. 1841இல் ஜேம்ஸ் புரூக் தன் ரோயலிஸ்ட் கப்பலில் இங்கு வந்தபோது, “இந்த இடத்தின் பெயர் என்ன?” எனக் கைநீட்டி வழிகாட்டியிடம் கேட்க, கைநீட்டிய இடத்தில் பூனை ஒன்று இருந்ததால் அதைத்தான் கேட்கிறார் என்றெண்ணி, “கூச்சிங்” என்று சொன்னாராம். இதற்குச் சாத்தியம் குறைவு.  ஏனெலில், ஜேம்ஸ் புரூக் இங்கு வந்தபோது இந்த ஊரின் பெயர் சரவாக். பின்னர்தான், ஜேம்ஸ் புரூக் வழிதோன்றலான சார்ல்ஸ் புரூக் காலத்தில் 1872இல் இந்த நகர் கூச்சிங் எனப் பெயர் சூட்டப்பட்டது. மாத்தா கூச்சிங் எனும் பழத்தின் பெயரிலிருந்தும் கூச்சிங் பெயர் வந்திருக்கலாம் என்கிறார்கள்.

வரலாற்றுப் பக்கங்களில்தான் தெளிவில்லை. ஆனால், கூச்சிங் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் பூனைகளைக் கொண்டாடுகிறார்கள். நமக்குத்தான் பூனை குறுக்கே போனால் சகுனம் சரியில்லை. அவர்களுக்குப் பூனைகளைப் பார்க்காமல் பொழுதுகள் நகர்வதில்லை. கூச்சிங் நகரில் பயணித்தால் சாலைச் சந்திப்புக்களில் பல வண்ணங்களில் நம்மை நோக்கிக் கைதூக்கும் பூனை சிலைகளைக் காணலாம்.  சுருக்கமாகச் சொன்னால், கூச்சிங் போனால் பூனைகளின் முகத்தில் விழிக்காமல் நம்மால் எந்தச் சாலையிலும் பயணிக்க முடியாது. பூனைகள் முகத்தில் விழித்ததால் கூச்சிங்வாழ் இந்தியர்களுக்குத் தீங்கேதும் நேர்ந்ததாக இதுவரை தகவலேதும் வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது. விழாக் காலங்களில் பூனை சிலைகளை அலங்காரம் செய்து (பூவும் பொட்டுமிட்டு) அழகுபார்ப்பதாக கூச்சிங் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் நந்தினி கூறினார். 



                                      உள்ளே பூனை அருங்காட்சியகம்


கூச்சிங் பயணத்தின்போது  அங்கிருக்கும் பூனை அருங்காட்சியகம் போய்வரலாம் என்று என் மனைவியும் பிள்ளைகளும் அழைத்தார்கள். எனக்கு அதில் அவ்வளவு ஆர்வமில்லை. மனத்தில் பூனை மீதான வெறுப்பு மிஞ்சியிருந்தது. அதன் கழிவுகளை அகற்றிக் காயம்பட்ட மனத்திலிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? அதுமட்டுமில்லாமல் அங்கு அப்படியென்ன இருக்க முடியும்? படம் பிடிக்கப்பட்ட பூனைகளும் பாடம் செய்யப்பட்ட பூனைகளும்தானே?

ஆயினும் போனேன். என் எண்ணத்தை முற்றாக மாற்றியது அந்த அருங்காட்சியகம். பூனைகளைக் கொண்டாடும் இத்தனை உள்ளங்களா? பூனை பற்றி நாமறியாத இத்தனை தகவல்களா? சரித்திரத்தில் இடம்பிடித்த உலகத் தலைவர்களின், பிரபலங்களின்  உள்ளங்களில் எப்படி இடம் பிடித்தன இந்தப் பூனைகள்? பூனை பற்றி இத்தனை உருக்கமான பதிவுகளா? பூனைகளின் படங்கள், சிலைகள், ஓவியங்கள், கலைப்பொருள்கள் என நான்காயிரத்துக்கும் மேல் இங்கு உள்ளன. 1993இல் திறக்கப்பட்ட இது,  பூனைகள் குறித்த ஆய்வு மையமாகவும் விளங்குகிறது.

ஹங்காங்கைச் சேர்ந்த கல்வியாளர் டாக்டர் பெத்தி ஜாமி சுங்  1990களில் இந்த அருங்காட்சியத்துக்கு வந்தபோது பூனைக்கான மையம் கண்டு மனம் நெகிழ்ந்து போனாராம். அவரும் பூனைமீது அலாதி அன்பு உள்ளவர் என்பதால் தம் மரணத்துக்குப் பிறகு தாம் சேகரித்த ஆயிரக்கணக்கான பூனை தொடர்பான கலைப்பொருள்களை உயில் எழுதி வைத்துள்ளார்.  அவர் பெயரில் அமைந்த தனி அறையில் அவை வைக்கப்பட்டுள்ளன. அவர் மறைந்தாலும் பூனைகளின் பொருள்களில் அவர் இங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறார். 



                                          பிரபலங்களின் உள்ளங்களில்..

பூனைகளின் அன்பு வலையில் சிக்கிய உலகப் புகழ்பெற்றவர்களின் பட்டியலைப் பார்த்தால் “இவருமா?” என வியந்து போவீர்கள். அமெரிக்காவில் அடிமைச் சங்கிலியை அறுத்தெறியப் போராடிய அதன் முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் பூனைகளின் மீது அன்பு கொண்டவர். உள்நாட்டுக் கலவரம் ஓய்ந்தபோதெல்லாம், தம் இரண்டு பூனைகளோடு பல மணிநேரம் செலவளிப்பாராம். வெள்ளை மாளிகையில் ஒரு முறை விருந்து நடந்தபோது தம் மேசை மீதிருந்த பூனைகளுக்கு உணவு ஊட்டியிருக்கிறார். “என் பூனை டிக்‌ஷி என் அமைச்சரவையைக் காட்டிலும் அறிவானவள். மேலும்,  என் பேச்சுக்கு மறுபேச்சு பேசாதவள் என்று பூனைக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்திருக்கிறார். 

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தம் பூனைகளோடு நெருக்கமானவர்.  உலகப் போரின்போது குண்டு விழுந்த இடங்களைப் பார்வையிடச்   செல்லும்போது தம் பூனையை உடன் கொண்டுபோவதில் உறுதியானவர். அவரின் அமைச்சரவைக் கூட்டங்களில் அவரின் பூனையும் கலந்துகொள்ளுமாம். இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் என்ஸ்டைன் தன் ஆராய்ச்சியில் மூழ்கி சோர்வுறும்போதெல்லாம் அவரின் தனிமையைப் போக்கி ஆறுதல் அளித்தது பூனைகளின் நெருக்கம்தான் என மனம் திறந்திருக்கிறார்.

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்த கவர்ச்சி நடிகை ஊர்சுலா என்ரெஸ்சும் பூனைப் பிரியர்தான். “என் அழகும் இளமையும் ஆண்களுக்கு. ஆனால், என் மதிநுட்பமும் அன்பும் 
பிராணிகளுக்கு” என்று கூறியுள்ளார். புவி ஈர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்த சர் ஐசக் நியூட்டன், தாம் வளர்த்த இரண்டு பூனைகள் அதன் உருவ அமைப்புக்கு ஏற்ப வெளியே சுதந்திரமாய் சென்று வர  வீட்டுக் கதவில் பெரியதும் சிறியதாய் இரண்டு துளைகளைச் செய்துள்ளார். புளேரென்ஸ் நைட்டிங்கேல் அறுபது பூனைகள் வரை வளர்த்ததாகவும் எங்குச் சென்றாலும் பூனைகளை விட்டுச் செல்வதில்லை என வரலாற்றுக் குறிப்பு உள்ளது.

“வாழ்வின் துன்பங்களிலிருந்து விடுபட இரண்டு வழிகள்: இசையும் பூனைகளும்” என்று கூறினார் நோபல் பரிசு பெற்ற தத்துவமேதை  ஆல்பர்ட் சுவெய்ட்ஷர். இடக்கை பழக்கமுள்ள இவர் தாம் நடத்திய மருத்துவமனையில்  நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டினை வலக்கையால் எழுதுவாராம். ஏன் தெரியுமா? அவரின் ஆசைப் பூனை இடக்கையில் படுத்து உறங்குவதால் அதற்கு இடையூறு செய்யக்கூடாது என்பதால்தானாம். ரஷ்யாவின் புரட்சியாளரும் சோவியத்தின் முதல் அதிபருமான லெனினின் இறுகிய உள்ளத்தையும் உருக்கும் வலிமைகொண்டதாக ஒரு பூனை இருந்ததாம்.


இப்படி, இன்னும் எத்தனையோ புகழ்பெற்றவர்களின் இதயங்களைச் சிறைபிடித்த பூனைகளைப்   பற்றிய தகவல்களைக் கண்டு வியந்தவாறும், எனக்கும் பூனைக்கும் இந்தப் பிறவியில் ஏழாம் பொருத்தமாக ஆனது  ஏன் என்று யோசித்தவாறும் அருங்காட்சியகத்திலிருந்து வெளியேறினேன். “அப்பா, உங்களுக்கு பூனை வாங்கி வளர்க்க ஆசை வந்திருச்சா?” என்று மகள் கேட்டாள். என் வாழ்க்கையில் எப்படி இன்னொரு காதலுக்கு இடமில்லையோ அதுபோல இன்னொரு பூனைக்கும் இடமில்லையென்றே உள்மனம் சொல்கிறது. உலகம் முழுவதும் 50 கோடி பூனைகள் வீடுகளில் வளர்க்கப்படுவதாக ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. சரி, என் ஒருவனால் இந்தப் புள்ளிவிபரத்திற்குப் பாதிப்பு வராது என்றே நம்புகிறேன். 


                                                           வின்ஸ்டன் சர்ச்சில்



                                                   ஊர்சுலா என்ரெஸ்                


             
                                                                 லெனின்

இப்படி, இன்னும் எத்தனையோ புகழ்பெற்றவர்களின் இதயங்களைச் சிறைபிடித்த பூனைகளைப் பற்றிய தகவல்களைக் கண்டு வியந்தவாறும், எனக்கும் பூனைக்கும் இந்தப் பிறவியில் ஏழாம் பொருத்தமாக ஆனது  ஏன் என்று யோசித்தவாறும் அருங்காட்சியகத்திலிருந்து வெளியேறினேன். “அப்பா, உங்களுக்கு பூனை வாங்கி வளர்க்க ஆசை வந்திருச்சா?” என்று மகள் கேட்டாள். என் வாழ்க்கையில் எப்படி இன்னொரு காதலுக்கு இடமில்லையோ அதுபோல இன்னொரு பூனைக்கும் இடமில்லையென்றே உள்மனம் சொல்கிறது. உலகம் முழுவதும் 50 கோடி பூனைகள் வீடுகளில் வளர்க்கப்படுவதாக ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. சரி, என் ஒருவனால் இந்தப் புள்ளிவிபரத்திற்குப் பாதிப்பு வராது என்றே நம்புகிறேன்.

சுந்தர ராமசாமியின்  பூனை பற்றிய மற்றொரு கவிதையில் ஒரு பகுதி இது:  

                          பூனைகள் குறுக்கே வராமலிருப்பது
                          அவற்றுக்கும் நமக்கும் நல்லது
                         
குறுக்கே தாண்டிய பூனைகள்
                          நெடுஞ்சாலைகளில்
                         
தாவரவியல் மாணவனின் நோட்டில்
                          இலைபோல ஒட்டிக் கிடப்பதைக் கண்டதுண்டு
                          சிறிய பூனைகள்தான்
                          பெரிய பூனைகள் ஆகின்றன.
                         
பூனைகளின் முதுமையைக் கண்டறிவது கடினம்.
                         
அவற்றின் மரணத்திற்குச் சாட்சியாக நிற்பது கடினம்.
                         
அவற்றின் பேறுகால அனுபவங்கள் பற்றி
                          நாம் யோசிப்பது காணாது.
                         
இருப்பினும் அவை இருக்கின்றன
                          பிறப்பிறப்பிற்கிடையே

எளிய உயிர்களுக்கு இதயம் நெகிழும் மனிதர்கள் எங்கும் இருக்கிறார்கள். மனிதரை அண்டிவாழும் பூனை மீதான இரக்கத்தை இக்கவிதையில் பதிவுசெய்கிறார் சுந்தர ராமசாமி.  இப்பொழுதெல்லாம் மதாபிமானம் எங்கும் பெருகி வழிகிறது. அதன் தீவிரவாத கொடும்முகம் நம்மை அச்சமூட்டுகிறது. அதற்கு இடமளித்துவிட்டு ஒதுங்கி  நின்று மனிதாபிமானம் வேடிக்கை பார்க்கிறது. உயிராபிமானம் தான் இனி நாம் உரக்க உச்சரிக்க வேண்டிய பொதுமொழியாக இருக்க வேண்டும்.

என்னை நெகிழச் செய்த பூனை பற்றிய ஹைக்கூ இது:

                          கொட்டும் மழைக்கு
                          வாய் திறந்தபடி
                            இறந்த பூனை                

                                            - மைக்கல் மக்லிண்டால்