நம் குரல்

Sunday, February 28, 2010

எஸ்.பி.எம் தேர்வில் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம்

என்னையும் தமிழனாய் இப்புவிக்கு ஈந்த
அன்னையே தமிழே என் ஆவி கலந்தவளே
செம்மொழி நீயானாய் என் சிந்தையில் தேனானாய்
எம்மொழிக்கும் என்னென்றும் நீயே தாயானாய்!

இன்று பொதுவிடுமுறை. ஓய்வெடுக்கும் நாள். ஆயினும், நம் சமுதாயத்தின் முக்கியமான கல்விப் பிரச்சினை குறித்து விளக்கம் பெறவும் கருத்துப் பரிமாற்றம் செய்யவும் அனைவரும் உற்சாகத்தோடு அன்பு அழைப்பினை ஏற்றுத் திரண்டிருக்கிறீர்கள். முதலில் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.

மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் (இலக்கியகம்)

இந்த விளக்கக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கும் மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பதிவு பெற்ற இயக்கமாக இது செயல்பட்டு வருகிறது. அதற்கு, கடந்த பத்து ஆண்டுகளாக, எஸ்.பி.எம். நடவடிக்கைக் குழு என்ற பெயரில் பல பணிகளை அமைதியாக எந்த விதமான ஆர்ப்பாட்டமும் இன்றி மேற்கொண்டு வந்தது. இதனை இங்கே இருக்கும் உங்களில் பலர் நன்கு அறிவீர்கள்.

நோக்கம்

மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகத்தின் முக்கிய நோக்கங்கள் மூன்று: நோக்கம் ஒன்று, எஸ்.பி.எம். தமிழ் இலக்கிய மாணவர் எண்ணிக்கையை உயர்த்துவது. 340ஆகக் குறைந்த தமிழ் இலக்கியப் பாட மாணவர் எண்ணிக்கையை அரும்பாடுபட்டு பல விதமான முயற்சிகளுக்குப் பிறகு நான்காயிரமாக (4000) உயர்த்தினோம். இதற்குப் பல நல்லுள்ளங்களும் சமுதாய அமைப்புகளும் நமக்குக் கைகொடுத்தன. குறிப்பாக, மாநிலந்தோறும் இருக்கும் தமிழ் மொழிப்பிரிவு உதவி இயக்குநர்களின் பங்கு மிக முக்கியமானது.

மாணவர் எண்ணிக்கையை உயர்த்தும் முயற்சியில் முக்கியமாக, எம்.ஐ.இ.டி மூலம் 5000 மாணவர்களுக்கு இலக்கியப் பாட நூல்களைப் பெற்றுத் தந்தோம். இம்முயற்சிக்கு உமா பதிப்பக உரிமையாளர் ஐயா சோதிநாதன் அவர்கள் உற்ற துணையாக இருந்தார். அவருக்கு நமது நன்றியை இவ்வேளையில் தெரிவித்துக்கொள்கிறோம்.

நோக்கம் இரண்டு, இந்தப் பாடம் தொடர்பான ஆசிரியர்களின் செயல் திட்டங்களை ஒருங்கிணைப்பது. ஆசிரியர்களுக்குக் கருத்தரங்குகள் வழி இலக்கியம் கற்பிக்கத் தேவையான பயிற்சியினை வழங்குவது. மாணவர்களுக்கு மாநிலந்தோறும் தேர்வுக் கருத்தரங்குளை நடத்துவது.

நோக்கம் மூன்று. தமிழ் இலக்கியம் கற்பிக்கும் இடைநிலைப்பள்ளி, தமிழ்ப்பள்ளி தமிழாசிரியர்களை, தமிழ் உணர்வாளர்களை ஒரு குடையின்கீழ் கொண்டு வருவது.

இந்த மூன்று நோக்கங்களை முன்வைத்து நம் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் செயல்பட்டு வருகிறது. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளோம்.

ஆலோசகர் திரு மூர்த்தி

ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் ஓர் அமைப்பு வேண்டும். அது கட்டுப்கோப்பான இயக்கமாகச் செயல்படவேண்டும். அதற்குத் தலைவராக வருபவர் ஈராண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்தால் போதும். தலைமைத்துவப் போராட்டத்தைத் தவிர்ப்போம். தேவையான பயன்மிகு செயல்திட்டங்களை மேற்கொள்வோம் என இந்தக் கழகத்தின் உருவாகத்திற்கும் செயல்பாட்டுக்கும் பின்னால் ஒருவர் உந்துசக்தியாக ஒருவர் இருந்து இயக்கி வருகிறார். அவர் வேறுமல்ல. நமக்கு அரிய லோசனைகளை வழங்கிவரும் கழகத்தின் ஆலோசகர் திரு மூர்த்திதான் அவர், மூர்த்தி பெரிது. அவர் கீர்த்தியும் பெரிதுதான் என்று இந்த வேளையில் அவருக்கு நம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

10 பாடம் - அதிர்ச்சி

மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் நம் முயற்சி வெற்றிபெற்று வந்த வேளையில்தான் எஸ்.பி.எம், தேர்வில் 10 பாடங்கள் என்ற அதிர்ச்சி அறிவிப்பைக் கல்வி அமைச்சு கடந்த ண்டு வெளியிட்டது. நம் முயற்சியெல்லாம் வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்த கதையாகின.

கல்வி அமைச்சின் முடிவானது தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் எடுக்கும் மாணவர்களைப் பெரிதும் பாதிக்கும் என்பதை நேரிடையாக சிரியர்கள் என்ற முறையில் நாம் உணர்ந்தோம். உணர்ந்ததைக் கல்வி அமைச்சோடு நடைபெற்ற சந்திப்புக் கூட்டங்களில் பல சமுதாய இயக்கங்களோடு இணைந்து தெளிவாக எடுத்துரைத்தோம். நம் ஊடகங்களும் இதற்கு முக்கியத்துவம் கொடுத்துச் செய்திகளாக வெளியிட்டன.

நம் பிரதிநிதி

அமைச்சரவையில் நம் சமூகத்தின் பிரதி நிதியாக இருக்கும் மாண்புமிகு டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம் அவர்கள் இந்தப் பத்துப் பாடங்கள் என்ற கட்டுப்பாடு நமக்குப் பெரும் பாதிப்பு என்பதை முழுமையாக உணர்ந்து, நம் கோரிக்கையை அமைச்சரவையில் தொடர்ந்து பலமுறை முன்வைத்தார். எஸ்.பி.எம். 12 பாடச் சிக்கலுக்குத் தீர்வு காண அமைச்சரவையின் பிரதிநிதியாக இவர் நியமிக்கப்பட்டார் என்பதில் இருந்து அவரின் பங்களிப்பை நாம் அறிந்துகொள்ள முடியும்.

பாராட்டு

மாண்புமிகு டத்தோ சுப்ரமணியம் அவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் இந்த விவகாரம் குறித்து அமைச்சரவையில் கேள்வி எழுப்பியதால்தான் 10 பாடங்கள் என்ற கட்டுப்பாடு 10 + 2 என்று மாறியது. இப்பொழுது நாம் எழுப்பிய கோரிக்கைக்கு ஏற்ப 12 பாடங்கள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த வெற்றிக்குக் காரணமான டத்தோ அவர்களை நம் தமிழ் இலக்கிய சிரியர் கழகம் மனதாரப் பாராட்டுகிறது. “இனி முடியாது” என்று பலர் மனம் தளர்ந்து போன நிலையில் “முடியும்” என்று சாதித்துக் காட்டினார் டத்தோ. இந்த வேளையில் மாண்புமிகு டத்தோ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அவர்களுக்கு நம் கழகத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துகொள்கிறோம்.

மீண்டும் ர்வம்

டத்தோ அவர்களின் முயற்சியால்தான் இன்று மீண்டும் தமிழும் தமிழ் இலக்கியப் பாடமும் மாணவர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. 12 பாடங்கள் என்ற அறிவிப்பு வந்த பிறகு, மாணவர்கள் மீண்டும் ர்வத்தோடு இப்பாடங்களுக்குப் பதிந்துகொண்டு வகுப்புகளுக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள்.

மழை விட்டும் தூறல்..

மழை விட்டும் தூறல் விடாத கதையாக, 12 பாடங்கள் எடுக்கலாம் என்ற அறிவிப்பு வந்த பிறகும்கூட இன்னும் சில பள்ளிகளில் பழைய நிலைதான் என்ற வருத்தமான செய்திகள் காதுக்கு வருகின்றன. அப்படி இருந்தால் இந்த விளக்கக் கூட்டத்திற்குப் பிறகு அப்படிபட்ட சிக்கல்கள் களையப்படும் என நம்புகிறோம்.

பொன்னான வாய்ப்பு

இது போராடிக் கிடைத்த பொன்னான வாய்ப்பு. இந்த வெற்றியைக் கொண்டாடிவிட்டு போதுமென நாம் ஓய்ந்துவிடக்கூடாது. நம் வெற்றிக்குப் பொருள் இல்லாமல் போய்விடும். உரிமையைக்காக்க, நாம் காட்டிய வேகத்தைச் செயலிலும் காட்ட வேண்டும். 10 000 மாணவர்கள் தமிழ் எடுக்கும் வேளையில் 4 000 மாணவர்கள் மட்டும் இலக்கியம் எடுக்கிறார்கள் என்பது ஏமாற்றத்தைத் தருகிறது. இந்த எண்ணிகையை உயர்த்த மலேசியத் தமிழ் இலக்கிய சிரியர் கழகம் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.



தனிப்பட்ட முயற்சிகள் பலன் தரா. இதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பை நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம். தமிழ் பயிலும் மாணவர்களை இலக்கியமும் படிக்கச் சொல்லி உற்சாகப்படுத்துங்கள். உங்களுக்கும் மாணவர்களுக்கும் உதவ, கைகொடுக்க சிரியர் கழகம் காத்திருக்கிறது.


சிரியர்கள் வழிகாட்டிகள்
சமுதாயக் கட்டமைப்பில் சிரியர்கள் மிக முக்கியமானவர்கள். சமுதாயத்திற்கு வழிகாட்டியாக இருந்து சமூகச் சிக்கலுக்குத் தீர்வைச் சொல்பவர்கள். நாமுண்டு நம் குடும்பமுண்டு என்று சுயநல வேலி அமைத்துக்கொண்டு, கைகட்டி ஒதுங்கி நின்றால் இழப்பு நம் சமுதாயத்திற்குத்தான்.

வாருங்கள். ஒரணியாக இணைவோம். மாணவர் - சிரியர் நலன் ஒன்றையே ஒரே நோக்கமாகக் கொண்ட இந்த சிரியர் கழகத்தில் இன்னும் இணையாதவர்கள் இணையுங்கள். நம் முயற்சிக்கெல்லாம் இனி ஒல்லும் வகையெல்லாம் உதவப்போகிற அமைச்சர் மாண்புமிகு டத்தோ எஸ். சுப்ரமணியம் அவர்களின் ஒத்துழைப்போடும் உங்கள் அனைவரின் தரவோடும் இன்னும் பல இலக்குகளை எட்டிப்பிடிக்க முடியும் என்று நாம் உறுதியாக நம்புவோம்.

விடைபெறும்முன் உங்கள் சிந்தனைக்கு ஒரு கவிதை

தமிழ்க்கல்வி போற்றுதும்
தமிழ்க்கல்வி போற்றுதும்

அரைத்தமிழர் எண்ணிக்கை
அரிதாகி மறைய

உயிர்த்தமிழ் நாட்டில்
உரிமையாய் உலவிட

தீந்தமிழ் உயிரில்
தேனாய்ப் பாய்ந்திட

இனமான உணர்வினை
ஈங்குநாம் காத்திட

ஒங்குபுகழ் தமிழைப்
பாங்காய் வளர்த்திட

இலக்கண இலக்கிய
இன்தமிழ் மாந்திட

புன்மையில் தமிழர்கள்
புதைவதைத் தடுத்திட

பண்பாட்டு வேர்களில்
பாயும் நஞ்சு விலகிட

தகவல் ஊடகம்
வாடும் தமிழ் நிமிர்ந்திட

வன்முறைப் பழக்கம்
வழக்கொழிந்து போக

தமிழ் இதழ் இங்கு
இன்னும் பல தோன்றிட

தமிழரின் சபைகளில்
தலைமையைத் தமிழ்காண

தமிழ்க்கல்வி போற்றுதும்
தமிழ்க்கல்வி போற்றுதும்

உயிர்த்தமிழ் நாட்டில்
உரிமையாய் உலவிட

தமிழ்க்கல்வி போற்றுதும்

அனைவருக்கும் நன்றி கூறி அமைகிறேன், வணக்கம்

(26.2.2010 நாளன்று பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில்,
மலேசிய தமிழ் இலக்கிய ஆசிரியர் கழக ஏற்பாட்டில் மனிதவள அமைச்சர் மாண்புமிகு டத்தோ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற எஸ்.பி.எம் தமிழ் மொழி, தமிழ் இலக்கியப் பாடங்கள் விளக்கக்
கூட்டத்தில் நான் ஆற்றிய உரை)

நமக்கு இல்லையா நல்ல தமிழ் நாவல்?


14 ஆண்டுகளுக்கு முன் (1994) மயில் வார இதழில் இந்தத் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இதே தலைப்பில் கட்டுரை எழுதவேண்டிய சூழல்தான் இன்னும் நிலவுகிறது என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு இங்குப் பதிவு செய்கிறேன்.

மலேசியத் தமிழ் நாவல்களில் தரமான நாவல் எனத் தகுதிபெற ஒன்றுமில்லை என்ற கருத்துக்கு எதிர்வினையாற்றியும் எஸ்.பி.எம்., எஸ்.டி.பி.எம், தேர்வுகளுக்கு மலேசிய நாவல்களே பாட நூல்களாகத் தேர்வாகவேண்டும் என்று வலியுறுத்தியும் அந்தக் கட்டுரையை எழுதியிருந்தேன்.

நம் நாடு அடிமைத் தளையிலிருந்து விடுபட்டு 51 ண்டுகள் கடந்துவிட்டன. சுமார் நாற்பது ண்டுகளுக்கு மேலாக நம் மாணவர்களுக்குத் தமிழக படைப்புகளையே அரிய படைப்புகளாக அடையாளங்கட்டி அவற்றைப் படிக்கும் வாய்ப்பினை வழங்கி வருகிறோம். இதனால் உள்நாட்டுப் படைப்புகளும் படைப்பாளர்களும் ஒதுக்கப்பட்டு வருவதை யாரும் ஒரு பொருட்டாகக் கருதாத நிலை என் தங்கத்தின் அடர்த்தியை அதிகமாக்குவதால் மீண்டும் இது குறித்து எழுத வருகிறேன்.

ஒரு நூறாண்டு கால மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் கவிதை, சிறுகதை, கட்டுரை, புதுக்கவிதை போன்று நாவல் இலக்கியமும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்து வந்துள்ளது. விடுதலைக்கு முந்திய காலக்கட்டத்தில் (1910-1957) சுமார் இருபது நாவல்கள் மட்டுமே வந்துள்ளன. தமிழக, இலங்கைப் பின்னணியைக்கொண்டு நகர்ப்புறத் தமிழர்களால் படைக்கப்பட்ட இந்த நாவல்களில் அங்காங்கே ஊறுகாயாகத் தொட்டுக்கொள்ளும் அளவில்தான் மலேசியத் தோட்டப்புறச் சமுதாயம் காட்டப்பட்டது.

ஆனால், விடுதலைக்குப் பிந்திய காலக்கட்டம் தொடங்கி 2008வரை நூற்றுக்கும் குறையாத நாவல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் தோட்டப்புறச் சமுதாயப் போராட்டமும் நவீன வாழ்வின் சிக்கல்களும் காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, தொடக்க காலத்தில் தோட்டத் தொழிலாளர்களாகத் தமிழர்கள் இங்குக் கொண்டு வரப்பட்ட கதைகளையும் ஆங்கிலேயர்-ஜப்பானியர் ட்சியில் தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளையும் பதிவு செய்யும் முயற்சி எழுபதுகளுக்குப் பின் எழுதப்பட்ட நாவல்களில் காணமுடிகிறது. இது குறித்து விரிவாக முனைவர் வே.சபாபதியின் ‘விடுதலைக்குப் பிந்திய மலேசியத் தமிழ் நாவல்கள்’ என்ற முனைவர் பட்ட ஆய்வேட்டில் காணலாம்.

க.வேங்கடரத்தினம் எழுதிய கருணாகரன் அல்லது காதலின் மாட்சி (1917) என்ற நாவலும் க.சுப்ரமணியம் எழுதிய பாலசுந்தரம் அல்லது சன்மார்க்க ஜெயம் (1918) என்ற நாவலும் நம் தொடக்க கால நாவல்களாகும். ஆனால், நம் மலேசிய மண்ணின் மணம் கமழும், நம் வாழ்க்கைப் போராட்டங்களை ஆழமாகப் பதிவு செய்யும் முயற்சிகளைப் பின் வந்த பல நாவல்களில் காணமுடிகிறது. துயரப்பாதை (கா.பெருமாள்), மரவள்ளிக்கிழங்கு (சா..அன்பானந்தன்), இலட்சியப்பயணம் (ஐ.இளவழகு), செம்மண்ணும் நீல மலர்களும் (எம்.குமரன்), புதியதோர் உலகம் (அ.ரெங்கசாமி), சயாம் மரண ரயில் (ர்.சண்முகம்), வானத்து வேலிகள் (ரெ.கார்த்திகேசு), ஆடும் மஞ்சள் ஊஞ்சள் (பா.சந்திரகாந்தம்), தீமலர் (சு.கமலா) போன்ற சில நாவல்கள் நம் வாழ்க்கையைப் பதிவு செய்யும் முயற்சிகளில் வெற்றிபெற்றுள்ளதைக் காண முடிகிறது. இவை தவிர்த்து, அச்சிலே வந்து இன்னும் நூலுருவில் வராத நாவல்கள் நிறைய உள்ளன.

நாவல் இலக்கிய வளர்ச்சிக்குப் பல அமைப்புகள் பங்கினை வழங்கியுள்ளன. தமிழ் நேசன் நாளிதழ் (நாவல் எழுதும் போட்டி), வானம்பாடி வாரஇதழ் (மாதமொரு நாவல் திட்டம்), மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் இப்படிப் பல தரப்பினரின் பங்களிப்பினை யாரும் மறுக்கமுடியாது.

குறிப்பாக, அண்மைய காலத்தில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், தொய்வடைந்திருக்கும் நாவல் இலக்கியத்திற்கு உயிரூட்டும் வகையில் அஸ்ட்ரோ தொலைக்காட்சி நிலையம், தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம், ஓம்ஸ் குழுமம் இவற்றோடு இணைந்து இரண்டுமுறை நாவல் போட்டியை நடத்தியுள்ளது. முதற்போட்டியில் பரிசு பெற்ற நாவல்களான லங்காட் நதிக்கரை (அ.ரெங்கசாமி), மண்புழுக்கள் (சீ.முத்துசாமி) கிய இரண்டையும் எழுத்தாளர் சங்கம் நூல்களாக வெளியிட்டுள்ளது. இரண்டாம் போட்டியில் வெற்றிபெற்ற மல்லிகைகள் நிறம் மாறுவதில்லை (சிதனா), நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் (கே.பாலமுருகன்) கிய இரண்டையும் இப்பொழுது நூலாக்கும் முயற்சியில் எழுத்தாளர் சங்கம் ஈடுபட்டுள்ளது. மேலும் ஆண்டுதோறும் சங்கம் நடத்திவரும் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப்பரிசளிப்புத் திட்டத்தில் கடந்த 2007 இன் சிறந்த நாவலாக பா.சந்திரகாந்தத்தின் அமுதசுரபிகள் நாவல் தேர்வுபெற்று ரிங். 7000யைப் பரிசுத்தொகையாகப் பெற்றது.

இப்படிப் பல நாவல்கள் நல்ல நாவல்களாக அடையாளங் காணப்பட்டும் அவற்றை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவைத்து விட்டு, இன்னும் தமிழக நாவல்களையே நம்பியிருப்பது ஏன் என்பதற்கான விடை யாருக்கும் புரியாத, தெரியாத பரம இரகசியமாகவே உள்ளது. கடந்த 1992 ம் ஆண்டு மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நாவல் கருத்தரங்கில் இதே கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘சில விதிகள் சில தகுதிகள்’ எனப் பல்கலைக்கழக விரிவுரையாளரால் மழுப்பப்பட்டது.

மலேசிய தேர்வு வாரியத்தைப் பொறுத்தவரை ‘நல்ல நாவல்’ என்பதற்கான அளவுகோல் அல்லது வரையறை தளர்த்த முடியாத சில கொள்கைகளின் அடிப்படையில் அமைந்திருப்பதாகத் தெரிகிறது. ஒன்று, தேர்வு மதிப்பீட்டின் அடிப்படையில் பாடநூலாகத் தேர்வு பெறும் நாவல், மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குக் கேள்வி தயாரிக்கப் போதுமான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கவேண்டும். இரண்டு, தேர்வை எதிர்நோக்கும் 17 வயது மாணவர்களுக்குப் பொருத்தமான கதைக்களத்தைக் கொண்டிருக்கவேண்டும். மூன்றாவதாக, காலங்காலமாக தமிழக நாவலைத் தேர்வுசெய்யும் மரபைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும் (இல்லாவிட்டால் இத்தகைய மரபைப் போற்றிய முன்னோர்கள் மன்னிக்கமாட்டார்கள்)

தமிழக நாவல்களோடு ஒப்பிட்டுப் பார்த்து நம் நாவல்கள் நல்ல நாவல்களா என்று முடிவுசெய்ய வேண்டியதில்லை என்பது என் தாழ்மையான கருத்தாகும். இந்த மண்ணிலே நம் எழுத்தாளர்கள் நம் உண்மையான வாழ்க்கையை மிகைபுனைவு இன்றி பதிவுசெய்திருந்தாலே அவை நல்ல நாவல்களாக ஏற்றுக்கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்படும் நாவல்களை மாணவர்ப் பதிப்புகளாகக் கொண்டுவரலாம். இதன்வழி கேள்வி தயாரிக்கத் தேவையான உள்ளடக்கம் இருப்பதையும் உறுதி செய்யலாம். இது குணப்படுத்தக்கூடிய நோய்தான். இந்நோய்க்கு மருந்து இருக்கிறது. மனம் வைத்தால் மருத்துவத்தைத் தொடங்கி விடலாம்.

மலேசிய நாவல்களே நம் மாணவர்களுக்குப் பாட நூல்களாக அமையவேண்டும் என்பதற்குப் பல காரணங்களைக் கூறலாம். பின்வரும் மூன்று காரணங்கள் முக்கியமானவை.

அ) நம் நாவல்களுக்கு இலக்கிய அங்கீகாரம் கிடைக்கிறது. போட்டிகளில் நாவல்கள் சிறந்த நாவல்களாகப் பரிசுகளைப் பெறுகின்றன. ஆனால், சமூக அங்கீகாரம் இல்லை. மாணவர்கள் மூலமாக பரவலாகச் சமூகத்தில் சென்று சேரும்பொழுது அவற்றுக்குச் சமூக அங்கீகாரம் கிடைக்கும். தமிழ் எழுத்தாளர் சங்கம் இருமுறை தமிழகத்திற்கு மேற்கொண்ட இலக்கியப் பயணம் மூலமாக இன்று, பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரியில் நம் நாட்டுப் படைப்புகள் பாட நூல்களாக வைக்கப்பட்டுள்ளன. தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்திலும் நம் நூல்கள் இடம்பெற்றுள்ளன. வெளிநாட்டு அங்கீகாரம்கூட சாத்தியமாகிவிட்டது. உள்நாட்டு அங்கீகாரத்திற்கு நாற்பது ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கிறோம்.

) இந்நாட்டு இளையோர்கள் நம் இனத்தின் வரலாற்றையும் நம் வாழ்க்கைப் போராட்டங்களையும் இலக்கியம் வழி அறிந்து தெளியும் வாய்ப்பினை நாம் வழங்கவேண்டும். இந்நாட்டுக்கு வந்த நம் முன்னோர்கள் தொடக்கத்தில் எதிர்நோக்கிய சிக்கல்களையும் இன்னல்களையும் அவர்கள் அறியும் நிலையை இலக்கியம் வாயிலாக உருவாக்கவேண்டும். இதை விடுத்து அவர்களுக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத இன்னொரு நாட்டு மக்களின் வேறுபட்ட வாழ்க்கை முறைகளையும் போராட்டங்களையும் முன் வைப்பதால் என்ன பயன் விளையப்போகிறது?

இ) இந்நாட்டு நாவல்கள் மாணவர்களுக்குத் தேர்வு நூல்களாகத் தேர்வுபெற்றால்தான் தொடர்ந்து இத்துறையில் புதிய நாவல்கள் தோன்றுவதற்கு உந்து சக்தியாக இருக்கும். மாணவர்களுக்குப் பொருத்தமான நாவல்களைப் படைக்க எழுத்தாளர்களைத் தூண்டும். இல்லாவிட்டால் நாம் நடத்தும் நாவல் போட்டியும் நாவல் கருத்தரங்கும் ஏதோ ஒப்புக்கு நடத்தும் இலக்கிய விழாக்களாக அமைந்துவிடும்.

எம்மாதிரியான நாவல்கள் பாடநூல்களாக அமைந்தால் சிறப்பு என்று எண்ணிப் பார்த்தேன். இன்று நகர்ப்புறத்தில் விளிம்பு மனிதர்களாகி நாம் எதிர்நோக்கும் இன்னல்கள் கதைகளாக வருகின்றன. நவீன வாழ்க்கையின் சிக்கல்களும் பதிவாகின்றன. இவற்றைவிட தொடக்க காலத்தில் சஞ்சிக்கூலிகளாக நம்மவர்கள் இந்நாட்டில் குடியேறிய வரலாற்றுச் செய்திகளைக் கருவாகக் கொண்ட நாவல்கள் பாட நூல்களாக அமைந்தால் நம் தொடக்க கால வரலாற்றினை நம் இளம் தலைமுறையினர் புரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். ஆங்கிலேயர் - ஜப்பானியர் காலனித்துவ ஆட்சியில் நம்மவர்கள் பட்ட இன்னல்களை மையமிட்ட நாவல்கள் குறிப்பாக, சயாம் மரண ரயில் அமைப்பதில் கொடுமைக்கு ஆளான கதைகளைப் பதிவுசெய்த நாவல்கள் முக்கியமானவை. தோட்டப்புற வாழ்வில் தொழிலாளர்கள் எதிர்நோக்கிய போராட்டங்கள் பற்றிய நாவல்களும் வந்துள்ளன. இவையும் மாணவர்களுக்கு ஏற்ற நாவல்களாக அமையும்.

இந்தோனேசிய நாவல்களை நம்பியிருந்த மலாய் இலக்கிய உலகம், பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த காலனி உணர்விருந்து மீண்டு உள்நாட்டு எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேர்வு செய்து பரிந்துரைத்து, இன்று எல்லா நிலைகளிலும் நம் நாட்டு மலாய் எழுத்தாளர்களின் படைப்புகளே தேர்வுக்குரிய நூல்களாக உள்ளன. நாமும் காலனி உணர்விலிருந்து மீள வேண்டியவர்களாக இருக்கிறோம்.
‘அக்கரையில் விளைபவையே
சத்து
இக்கரையில் வருவதெல்லாம்
சொத்தை’

என்ற இரசனைப் பிடிவாதம் இன்னும் நம்மை ஆட்டுவிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. இந்தப் போக்கு மாறவேண்டும். இந்நாட்டு நாவல் இலக்கிய வளர்ச்சிக்குத் மலேசியத் தேர்வு வாரியமும் தனது பங்கினையாற்றவேண்டும். அப்படியொரு சிந்தனை மாற்றம் ஏற்பட்டு நம் நாட்டு நாவல்களே தேர்வுக்கான பாட நூல்களானால் நம் நாவல் வளர்ச்சியில் இன்னுமொரு மைல்கல்லாக அது திகழும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

ஊர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தம் பிள்ளை தானே வளரும் என்பதெல்லாம் சத்தியமாய் இந்த நாவல் விஷயத்தில் நடக்காது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நம் பிள்ளை சவலையாய்க் கிடப்பது யார் கண்களுக்கும் தெரியாமல் போனது எப்படி? எண்ணியெண்ணிப் பார்க்கிறேன். எனக்கு வியப்பாக இருக்கிறது.

உரக்கப் பேசும் மௌனம்

1.
மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் தற்பொழுது சிற்றிதழ்கள் முளைவிடும் காலம் என்று துணிந்து கூறலாம். நம் நாட்டில் இதுவரைக்கும் நூற்றுக்கும் குறையாத இதழ்கள் வலம் வந்து கால நதியில் கலந்து காணாமல் போய்விட்டன. அவற்றிலிருந்து மாறுபட்டுத் தீவிர இலக்கியத் தாகத்தோடு புதிய சிற்றிதழ்கள் வெளிவருவது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.

சீ.அருண் ‘அருவி’ கவிதை இதழைச் சில ண்டுகள் வெளியிட்டு வந்தார். ‘முகம்’ அறிமுக இதழ் வெளிவந்து நின்றுபோனது. ‘காதல்’ சில இதழ்களோடு காணாமல் போனது. ம.நவீனின் ‘வல்லினம்’ இதழ் கலை, இலக்கிய இதழாகத் தொடர்ந்து வெளிவருகிறது. கெடா கே. பாலமுருகன் ‘அநங்கம்’ இதழை வெளியிட்டு வருகிறார். இந்த ண்டு தொடக்கம் முதல் ஜாசின் கவிஞர் ஏ.தேவராஜன் ‘மௌனம்’ எனும் தற்காலக் கவிதைக்கான சிற்றிதழை வெளியிட்டு வருகிறார்.

சிறுகதை, கட்டுரை, கவிதை என இலக்கியப் படைப்புகளால் நம் நாட்டு நாள், வார, மாத ஏடுகளை நீண்ட காலம் அலங்கரித்து வருபவர் ஏ. தேவராஜன். அதோடு, பாடல், பலகுரல் வண்ணம், நிகழ்ச்சி அறிவிப்புப் பணி, ஓவியம் என பன்முகம் கொண்டவர். இவரின் தொடர்ச்சியான எழுத்துத் தவம் நமக்கு வியப்பைத் தருவதாகும். கவிதை உலகில் பழைமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைப்பவர். இவரின் தீவிர இலக்கிய ஈடுபாட்டின் நீட்சியாக இந்தக் கவிதை இதழ் முயற்சியைக் காண்கிறேன்.

‘நினைத்த நேரம் வெளிவரும் இதழ்’ என்ற அறிவிப்போடு 5 இதழ்கள் வந்துள்ளன. அனைத்தும் நம்பிக்கை தருவனவாக உள்ளன. முக்கியப் படைப்பாளிகளான பலரின் கவிதைகளைத் திரட்டி அச்சேற்றியிருப்பதில் தேவராஜனின் உழைப்பு தெரிகிறது. கவிதைகளை நேர்த்தியாகத் தொகுத்துப் பக்க அமைப்பிலும் கவனம் செலுத்தி ஏற்ற ஓவியங்கள், படங்களை இணைத்துக் காண்பாரை ஈர்க்கும் வண்ணம் இதழை உருவாக்கியிருக்கிறார்.

இதழின் பல கவிதைகள் வாசகர்களுக்குப் புதிய வாசிப்பு அனுபவத்தைத் தரும் என்பது உறுதி. நவீன வாழ்வின் சிதைவுகளை, விளிம்பு மனிதர்களின் வேதனையை, நிகழ்கால சமுதாய நடப்பை, மனத்தில் மக்கி மடிந்துபோகும் உணர்வுகளின் பதிவை, தொலைதூரத்தில் கேட்கும் நம்மினத்தின் இன்னல்களைக் கலைமுலாம் பூசி நம் கையில் தந்துவிடுகின்றன பல கவிதைகள். நல்ல கவிதைகளைத் தேடிப் படிக்க முடியாத வாசகனுக்குப் பயன் தரும் வகையில் மொழிபெயர்ப்புக் கவிதைகள், எடுத்துக்காட்டுக் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தின் தீவிர இலக்கிய வளர்ச்சிக்குச் சிற்றிதழ்களின் பங்களிப்பை மறுக்க முடியாது. இங்கேயும் தீவிர இலக்கியம் முகம் காட்டத் தொடங்கிவிட்டது. கவிதை குறித்த உரையாடல்களை, விமர்சனங்களை, சிந்தனைகளை முன்வைக்க ‘மௌனம்’ களம் அமைத்துத் தருகிறது. அணியெனும் பிணி இல்லாமல் படைப்பாளர்கள் ‘மௌனம்’ இதழில் ஒன்று சேர்ந்துள்ளார்கள். கவிதையை நேசிக்கும் கவிதைக் காதலர்களையும் வாசகர்களையும் தம் கவிதை அணியில் இணைப்பதில் தேவராஜன் வெற்றிபெற்றுள்ளார்.

2.
இவ்வேளையில் ‘மௌனம்’ எப்படி உருவானது என்பதை எண்ணிப் பார்க்கிறேன். கடந்த ண்டு டிசம்பர் மாதம் சிரியர் பணி நிமித்தமாக தேவராஜனும் நானும் பினாங்கு மாநிலத்தில் ஒரு வாரம் தங்கும் விடுதியில் ஒன்றாகத் தங்கினோம். அப்பொழுது கவிதைப் போக்குக் குறித்தும் அதற்கு ஏடுகளில் கிடைக்கும் மரியாதை குறித்தும் பல கருத்துகளைப் பகிர்ந்துகொண்டோம்.

நீண்ட காலமாக கவிதைத் துறையில் ஈடுபாடு காட்டிவரும் தேவராஜனின் மனமெங்கும் தங்கம் நிறைந்திருப்பதை அன்று கண்டேன். புதிய முயற்சிகளுக்கு ஏடுகளில் இடமில்லை என்பதோடு புரியாத கவிதைகள் என்ற முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுவதை வருத்தத்தோடு கூறினார். கவிதை குறித்த சிந்தனைகளுக்கும் புரிதல்களுக்கும் ஏடுகளில் இடமில்லை என்பதையும் இருவரும் ஒப்புக்கொண்டோம். இதற்கு வழிகாண வேண்டும் என்ற சிந்தனை வயப்பட்டவராக தேவராஜன் அந்த ஒரு வாரமும் இருந்ததாக எனக்கு நினைவு.

பணி முடிந்து வீடு திரும்ப பேருந்து நிலையத்தில் விடைபெற்றபோது, தேவராஜன் ஒரு முடிவுக்கு வந்து விட்டார். உடனே ஒரு கவிதை இதழைத் தொடங்கவேண்டும். கவிதைத் துறைக்கு நிலையான ஒரு பங்களிப்பாக இருக்கவேண்டும் என்ற முடிவோடு பேருந்தில் ஏறினார். சொன்னபடியே மூன்றாவது வாரத்தில் 48 பக்கங்களில் முதல் ‘மௌனம்’ இதழ் என்னைத் தேடி வந்து வியப்பில் ழ்த்தியது. பினாங்கு மாநிலத்தில் மனத்தில் விழுந்த விதை, ஜோகூர் மண்ணில் முளைவிட்டுக் கிளை விட்டது.

3.
இதுவரை வெளிவந்துள்ள 5 இதழ்களையும் ஒரு பருந்துப் பார்வையாகப் பார்க்கையில் தேவராஜனின் அசுர உழைப்பைப் பார்க்க முடிகிறது. ‘நயனம்’ சிரியர் திரு. இராஜகுமாரன் கேட்டதுபோல் “எப்படி இவரால் இத்தனைக் கவிதைகளைத் திரட்ட முடிந்தது?” என நானும் கேட்க விழைகிறேன். விடாப்பிடியாக இருந்து பலரிடம் கவிதைகளைக் கேட்டு வாங்கி அச்சு வாகனத்தில் அமர்த்தி அழகுபார்த்திருக்கிறார். தன்னை முன்னிலைப்படுத்தாமல் மற்ற படைப்பாளிகளின் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

ஏடுகளில் சராசரி கவிதைகள் எழுதும் படைப்பாளர்கள் ‘மௌனம்’ இதழில் தங்களின் மாறுபட்ட கவிதைகளை எழுதியிருப்பது ‘மௌன’த்தின் வெற்றியாகும். வழக்கமான கவிதைகளை விடுத்து மௌனத்தின் போக்கும் நோக்கும் உணர்ந்து கவிதைகளை வழங்கியுள்ளனர்.

புதிய படைப்பாளிகளின் வரவும் ‘மௌனம்’ இதழுக்குத் தனிச் சிறப்பை அளிக்கிறது. அதே வேளையில் மூத்த படைப்பாளிகளையும் ஒதுக்கிவிடாமல் அவர்களையும் அரவணைத்து மௌனத்தில் பாகுபாடு இல்லை என்பதை மெய்ப்பித்திருக்கிறார். சிலர் புனைபெயர்களில் உலவிக்கொண்டு முகங்காட்டாமல் கவிதைகளால் பேசியுள்ளனர்.

‘புரிதல்’ மௌனத்தில் அழுத்தமான முத்திரையைப் பத்திக்கும் பகுதி. இதுவரை வாசக மனங்களுக்குப் புலப்படாத படைப்பாளனின் உள்முகத்தைத் திரை விலக்கிக் காட்டும் பகுதி. வெறும் எழுத்துகளால் பக்கங்களை நிரப்பாமல் மாறுபட்ட ஓவியங்களால் அழகு செய்து வாசகர் மனங்களைக் கவிதைகளுக்கு அழைத்துச் செல்லும் பாங்கு மௌனத்தின் தனிச் சிறப்பாகும்.

தேவராஜன் எனும் மிகப் பொருத்தமான கவிஞனின் மேற்பார்வையில் 5 இதழ்களிலும் ‘மௌனம்’ உரக்கப் பேசியிருக்கிறது. அதன் ஒவ்வொரு பக்கத்திலும் சிந்திக் கிடக்கும் அவனின் வியர்வைத் துளிகளை அவற்றின் ஊடே பயணம் போகும் நாம் ஒவ்வொருவரும் நிச்சயம் உணர முடியும்.

Wednesday, February 24, 2010

ரேணிகுண்டா (பட விமர்சனம் குறித்து..)

அன்புள்ள பாலமுருகனுக்கு வணக்கம்.

ரேணிகுண்டா பட விமர்சனம் சற்று வித்தியாசமாக இருந்தது.
படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் தங்கள் விமர்சனம்
படித்தபோது படத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் என்னைத்
துரத்துகிறது.

வழக்கமான சினிமாவாக இல்லாமல் மாற்றுச் சினிமாவாக இப்படம்
அமைந்திருப்பதை உணரமுடிகிறது. விமர்சனம் படித்தவுடன் ஜானி,
டப்பா, மாரி, பாண்டுரங்கன், ஆகிய ஐவரும் மனத்திற்குள்
சம்மணம் போட்டு அமர்ந்துவிட்டார்கள்

இளம் குற்றவாளிகளை மையப்படுத்தி, திரைக்கு முன்னால்
அமர்ந்திருப்பவர்களை உள்ளே ஈர்த்துக்கொள்ளும் கலையில்
இயக்குநர் வெற்றி பெற்றிருப்பதை
தங்கள் விமர்சனம் தெளிவாக்குகிறது.

வழக்கமான சினிமா உலகின் ஆர்ப்பாட்டங்களுடன் சமரசம்
செய்து கொள்ளாமல் தனித்து நிற்கும் இம்மாதிரி மாற்றுப்
படங்களுக்காகத்தான் நல்ல ரசிகன் காத்திருக்கிறான்.

நம்பி வரும் ரசிகனை அவமானப்படுத்துவது போன்று
பல படங்கள் அமைந்துவிடுகின்றன.
ரேணிகுண்டா ரசிகனின் ரசிப்புத்தன்மையை அங்கீகரிக்கிறது.

ஒரு நல்ல கவிதையைப்போன்று மனத்திற்குள் ஆழமான உணர்வு
அலைகளை எழுப்பித் தமிழ் சினிமா மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

ஒரு நல்ல படத்தை முன்மொழிந்தமைக்கு வாழ்த்துகள்!

அன்புடன்,
ந. பச்சைபாலன், மலேசியா
http://www.patchaibalan.blogspot.com/

Tuesday, February 23, 2010

மதாபிமானம்



அழாதீர்கள்!
உங்கள் கண்ணீர்த்துளிகளைத் துடைக்க
எங்கள் கைகள் நிச்சயம் நீளும்

வறுமை உங்களைத் தின்றுத்தீர்ப்பதை
வேடிக்கை பார்க்க
எங்கள் மனம் எப்படி ஒப்பும்?

போர் அரக்கனின் கொடூரப் பிடியிலிருந்து
உங்களை மீட்டெடுத்துப்
புனர்வாழ்வு தரும் பணிகளில்
எங்களின் பங்களிப்பு தவறாமல் உண்டு

இயற்கைப் பேரிடரின் கொடுங்கனவிலிருந்து
உங்களைக் காப்பாற்றிக் கைதூக்கிவிட
நாங்களும் இருக்கிறோம்

உங்கள் சுமைகளை இறக்கி வைக்க
உங்கள் வாழ்வாதாரத்திற்கு
வழிகாட்ட நாங்கள் இருக்கிறோம்

திக்கற்றுத் திரியும்
உங்கள் வாரிசுகளுக்குப் புதுவாழ்வு தருவது
எங்கள் பொறுப்பு

உலகப்பந்தின் எந்த மூளையில்
நீங்கள் இருந்தாலும் தேடி வருவோம்

எல்லாமும் சாத்தியம், நம்புங்கள்
யினும் ஒரு சின்ன நிபந்தனை!

நீங்கள் எங்கள் மதத்தினராய்
இருந்தால் போதும்!

தேசியம் ( சிறுகதை)

கோலாலம்பூர் ராஜா லாவுட் சாலையை அணைத்தவாறு கம்பீரமாக நிற்கும் அந்த ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியை அண்ணாந்து பார்த்தார் இளங்கண்ணன். மாலை மங்கி இருள் கௌவத்தொடங்கிய பொழுது. கண்ணைப் பறிக்கும் வண்ண வண்ண விளக்குகள் அந்த முப்பது மாடி தங்கும் விடுதியின் மேனியை வெளிச்ச வெள்ளத்தால் நனைத்திருந்தன.

ஏற்பாட்டு வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டன. இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்கு ஒரு வரலாற்று நிகழ்வு நடந்தேறப்போகிறது. யாரும் எதிர்பார்த்திராத நிகழ்வு. அதற்குப் பின்னணியில் தான் இருப்பதை நினைத்துப் பார்க்கும்பொழுதே இனம்புரியாத மகிழ்ச்சி அவர் மனத்தின் கரைகளில் பேரலையாய்ப் புரண்டது.

இப்பொழுதுதான் இரவு மணி 7.00. இன்னும் நிகழ்ச்சி தொடங்க ஒரு மணி நேரம் இருக்கிறது. அதற்குள் அழைக்கப்பட்ட பல முக்கிய பிரமுகர்கள் வரத்தொடங்கிவிட்டனர். அவர்களை வரவேற்பதில் கழகத்தின் செயற்குழுவினர் முனைப்பாக இருந்தனர். இளங்கண்ணன் விடுதியின் முகப்பில் கட்டப்பட்ட தமிழிலும் மலாய் மொழியிலும் அமைந்த பதாகைகளின் நேர்த்தியை இரசித்தார். ‘மலேசியத் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஏற்பாட்டில் தேசிய இலக்கியவாதிகளுக்கு விருதளிப்பு விழா’ இளம்பச்சை நிறம் பின்னணியில் இருக்க, பொன்னிற எழுத்துகளில் பதாகைகள் கம்பீரம் காட்டின. பக்கத்தில் புன்னகை நாயகனாக முக்கியப் பிரமுகர்.

“தலைவரே, இங்க பாருங்க. யாரு வந்திருக்கான்னு..” துணைத்தலைவர் தமிழ்மாறன் அழைத்தார். இளங்கண்ணன் திரும்பினார். அங்கே கழகத்தின் முன்னாள் தலைவர் சேதுபதி. “என்னையா, என்னன்னமோ செய்றீங்க. ஏதும் வில்லங்கம் வந்திடாதே? எல்லாம் சரியாதானே போவுது? நாலு பேர விசாரிச்சு பார்த்துதானே செய்றீங்க?” நியாயமான பயம் அவர் சொற்களில் எட்டிப்பார்த்தது. பதினைந்து ண்டுகள் எழுத்தாளர் கழகத்தை நேர்த்தியாக வழிநடத்தியவர். ஒல்லும் வகையெலாம் இலக்கியப் பணியாற்றி ஈராண்டுகளுக்கு முன் இளங்கண்ணனிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தவர்.

“அப்படியெல்லாம் ஒன்னும் காது தலைவரே. சரியா திட்டமிட்டு எல்லாரும் கலந்து பேசிதான் இதுலே இறங்கியிருக்கோம். நமக்கு வெற்றி கிடைக்கும்னு எதிர்பார்க்கிறோம். நீங்களும் பார்க்கப் போறீங்க”

“எது எப்படியோ, சட்டச் சிக்கல் வரக்கூடாது. ஒங்களுக்கு அப்புறமும் நம்ம கழகம் இருக்கணும். அதுக்கு மூடுவிழா செய்துட்டு போயிடாதீங்க” முதுமையில் உடல் தளர்ந்தாலும் உள்ளத்தின் உறுதி தெரிந்தது.

இளங்கண்ணன் சேதுபதியோடு நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்தில் நுழைந்தார். யிரம்பேர் அமரக்கூடிய அருமையான மண்டபம். அரைப்பகுதி நிறைந்துவிட்டது. வருகையாளர்களில் தமிழ் எழுத்தாளர்களோடு மலாய், சீன எழுத்தாளர்களும் இருந்ததைப் பார்க்க சேதுபதிக்கு வியப்பாக இருந்தது. அவர் காலத்தில் அப்படியொரு முயற்சியில் இறங்கியதில்லை. அவர்களில் சிலருக்குச் சேதுபதியை இளங்கண்ணன் அறிமுகப்படுத்தினார். மேடையிலிருந்து மெல்லிய இசை புறப்பட்டு மண்டபம் முழுமைக்கும் பரவி வருகையாளர்களின் இதயங்களைத் தாலாட்டிக்கொண்டிருந்தது.

இப்படியொரு இலக்கிய விழாவை மலேசியத் தமிழ் எழுத்தாளர் கழகம் பொறுப்பேற்று நடத்தலாம் என்ற சிந்தனையை இளங்கண்ணன் செயலவைக் கூட்டத்தில் முன் வைத்தபோது முதலில் பலர் ஒப்புக்கொள்ளவில்லை. அதிலும் குறிப்பாக, அடுத்துத் தலைவர் பதவிக்குக் குறிவைத்துக் காத்திருந்த செயலாளர் கவிஞர் அறவாணன் கடுமையாக மறுத்துப் பேசினார்.

“தலைவர் பேசறது எனக்கு என்னவோ சரியாப் படல. இது தமிழ் எழுத்தாளர்களுக்காக உள்ள அமைப்பு. இங்கே நம்ம நடவடிக்கை எல்லாம் தமிழ் எழுத்தாளர்களுக்கு பயன் தருவதா இருக்கணும். இத விட்டுட்டு சீன, மலாய் எழுத்தாளர்ன்னு போனம்னா அப்புறம் சிக்கல்தான்.”

“நம்ம எழுத்தாளர் கழகம் தமிழ் எழுத்தாளர் நலம் காக்கும் அமைப்பு என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. னா, இந்த குறுகிய வட்டத்தை விட்டு கொஞ்சம் வெளியே வந்து பாருங்க. 1969 இல் நாட்டில் இனக்கலவரம் நடந்த பிறகு 1971இல் தேசிய பண்பாட்டுக் கொள்கை வகுக்கப்பட்டது. அதே சமயத்துல தேசிய இலக்கியம் என்ற கொள்கையும் உருவாக்கப்பட்டது. மலாய் மொழியில் எழுதும் படைப்புகள் மட்டும் தேசிய இலக்கியமாக ஏற்றுக்கொள்ளும் நிலை வந்தது. இது உங்க அனைவருக்கும் தெரியும்” இளங்கண்ணன் வரலாற்றைத் துணைக்கழைத்தார்.

“இது பழைய கதை தலைவரே. கடந்த முப்பத்தெட்டு வருசமா இதுதானே இங்க நிலை. இத மாத்த முடியும்னு எனக்கு நம்பிக்கையில்ல” செயற்குழு உறுப்பினர் குணசேகர் வாய்திறந்தார்.

“நம்பிக்கைதானே வாழ்க்கை குணசேகர். நாம நம்ம சக்திக்கு ஏற்ப முயற்சி செய்வோம். நாம ஒன்றுபட்டு ஒற்றுமையா செயல்பட்டா தமிழ் இலக்கியத்துக்கு இந்த நாட்டுல அங்கீகாரத்தை எப்படியாவது வாங்கிடலாம்” இளங்கண்ணனின் சொற்களில் நம்பிக்கை ரவாரித்தது.

“கேட்க நல்லா இருக்கு தலைவரே. ஒன்னு செய்வோம். அடுத்த மாசம் ண்டுக்கூட்டம் வருது. வழக்கம்போல தீர்மானம் போடுவோம். அரசுக்கு அனுப்பிவைப்போம்.” செயற்குழு உறுப்பினர் திருமதி சாருமதி தன் பங்குக்குப் பேசினார்.

“எத்தனை தீர்மானம்? எத்தனை மகஜர்? எல்லாம் என்னா ச்சு? வறண்டு போன நிலத்துல எத்தனை முறை மண்வெட்டியால கொத்துனாலும் தண்ணி வராது. நம்ம அணுகுமுறையை மாத்தணும். அதற்குத்தான் இந்த லோசனை. நான் சொல்றத கொஞ்சம் ழமா சிந்திச்சுப் பாருங்க” செயற்குழுவினரின் சம்மதத்தைப் பெற்றுவிடுவதில் தலைவர் உறுதியாக இருந்தார்.

“தலைவரே, டேவான் பஹாசா டான் புஸ்தாகா அதிகாரிங்க வந்திருக்காங்க. வாங்க” தமிழ்மாறன் அழைத்தார். அறவாணனோடு சேர்ந்து நிகழ்ச்சி நிரலைச் சரிபார்த்துக்கொண்டிருந்த இளங்கண்ணன் அவர்களை அன்போடு அழைத்துச் சென்று முன்னிருக்கைகளில் அமரவைத்தார். தலைவர் பொறுப்புக்கு வந்தவுடன் மலாய் இலக்கியம் வளர்க்கும் அந்த அமைப்போடு நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொண்டவர் அவர்.

“சரிங்க தலைவரே, நம்ம தமிழ் இலக்கியத்தையும் தேசிய இலக்கியமா அரசு அங்கீகரிக்க என்ன காரணத்த முன் வைக்கப்போறோம்? இது சாத்தியமா?” செயற்குழு உறுப்பினர் மாதவன் ர்வம் பொங்கக் கேட்டார்.

“மலாய்க்காரர், சீனர், இந்தியர்ன்னு மூன்று இனமும் சேர்ந்து ஒற்றுமையா இருப்பதுதானே மலேசியாவுக்குப் பெருமை. நாட்டு வளர்ச்சிக்கு சீனரும் இந்தியரும் தந்த அயராத உழைப்பை, அர்ப்பணிப்பை யாரும் மறுக்க முடியுமா? இந்த இரண்டு இனங்களும் தங்கள் மொழியைப் படிக்க, பண்பாட்டைக் கடைப்பிடிக்க இங்க எந்த தடையும் கிடையாது. உயர்கல்வி வரைக்கும் தங்கள் மொழியில படித்துப் பட்டம்பெற வாய்ப்பு இருக்கு. இந்த இனங்களோட இலக்கியமும் அப்படித்தானே மதிக்கப்படணும். உரிய அங்கீகாரத்தை பெறணும். இதுநாள் வரைக்கும் யாரும் கேட்கல. அதுனால கிடைக்குல. இனி கேட்போம். அதை கொடுக்க வேண்டியது இந்த பரிவுமிக்க அரசின் கடமைன்னு உணர வைப்போம். அதற்கான சிறு துளி முயற்சிதான் இந்த இலக்கிய விழா” தன் மனத்தின் கரைகளில் பிரவகித்த உணர்வுகளை இளங்கண்ணன் கொட்டிவிட்டார்.

“அப்படி போடுங்க தலைவரே. இந்த மண்ணுல எழுதுற சோங்கும் குப்புசாமியும் யாரைப் பத்தி எழுதுறாங்க? இங்குள்ள வாழ்க்கையைதானே? இது குறைந்த பட்சம் கவனிக்கப்படவேண்டாமா? சக படைப்பாளியை மதிச்சி அங்கீகரிக்க வேண்டாமா? அந்த இலக்கை அடைய இது உதவும்னா நான் வரவேற்கிறேன்.” துணைத்தலைவர் தமிழ்மாறனின் உறுதியான தொனி தலைவருக்கு றுதலாக இருந்தது. மற்றவர்களையும் சிந்திக்கத் தூண்டியது.

“சிங்கப்பூரில் உள்ள தமிழ் எழுத்தாளரும் சீன எழுத்தாளரும் சிங்கப்பூர் அரசால் பரிந்துரைக்கப்பட்டு சியான் விருதைப் பெறுகிறாங்க. இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் அந்த சிறப்பை அடைந்திருக்காங்க அத்தகைய நிலை இங்கு இல்லையேன்னு நினைக்கும்போது வருத்தமா இருக்கு. எத்தனை பேரு இங்க பிரதிபலன் பார்க்காம எழுதிக் குவிச்சி ஓய்ந்து போயிட்டாங்களே..அவங்கள நினைச்சுப் பாருங்க..” உதவித்தலைவர் கண்ணனும் அதே சிந்தனை வட்டத்துக்குள் வந்து விட்டார்.

வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லாமல் ஒட்டுமொத்த செயற்குழுவும் ஒரே முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

மண்டபம் ஏறக்குறைய நிறைந்துவிட்டது. கபேனா, பேனா போன்ற மலாய் எழுத்தாளர் அமைப்புகளிலிருந்து நிறைய நண்பர்கள் அழைப்பை ஏற்று வந்திருந்தார்கள். சீன எழுத்தாளர் சங்கத்திலிருந்தும் திரளான படைப்பாளிகள் ர்வத்தோடு கலந்துகொள்ள வந்திருந்தனர்.

விருது பெறும் மூன்று இலக்கியவாதிகளுக்கும் முன் வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டு அவர்களும் தயார் நிலையில் காத்திருந்தனர். இளங்கண்ணன் கடிகாரத்தைப் பார்த்தார். இரவு மணி 7.40. இன்னும் விழாவுக்குத் தலைமை தாங்கும் முக்கியப் பிரமுகர், சமுதாயத் தலைவர்கள் வரவேண்டும். வந்தவுடன் விழா தொடங்கிவிடும். வி.ஐ.பி அறை அவர்களுக்காகக் காத்திருந்தது.

“சரிங்க தலைவரே, இந்த நிகழ்ச்சியை எப்படி நடத்தலாம்? விவரமா சொல்லுங்க” செயற்குழு உறுப்பினர் மாதவன் ர்வம் பொங்கக் கேட்டார்.

“மலாய், சீன, தமிழ் இலக்கியவாதிகளில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ள மூவரைத் தேர்வு செய்து விருதும் பணமும் வழங்கி சிறப்பு செய்வோம். இந்த விழா தலைநகரில் ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியில் மிகச் சிறப்பாக நடக்கவேண்டும்”

“இலக்கியவாதிகள் தேர்வு?” அறவாணன் கேள்விக்கணையை வீசினார்.

“தமிழ் இலக்கியவாதியைத் தேர்வு செய்ய ஓர் அறிஞர் குழுவை நியமிப்போம். மலாய், சீன இலக்கியவாதிகளைத் தேர்ந்தெடுக்க மலாய், சீன எழுத்தாளர் அமைப்புகள் நமக்குத் துணையாய் இருப்பாங்க.”

“கொஞ்சம் செலவாகும்போல இருக்கு தலைவரே?” பொருளாளர் அமுதவாணன் பணத்தில் குறியாக இருந்தார்.

“கொஞ்சமில்ல. செலவு நிறையவே கும். ளுக்கு குறைந்தது பத்தாயிரம் ரிங்கிட்டாவது கொடுத்தாதான் இந்த விருதுக்கும் நம்ம முயற்சிக்கும் பெருமை. இல்லனா பத்தோடு பதினொன்னு. அத்தோடு இது ஒன்னுன்னு போயிடும்”

“க மூனு பேருக்கு முப்பதாயிரமா? ஒரு நாவல் போட்டியையே நடத்திடலாம்போல இருக்கு தலைவரே. ஏற்பாட்டுச் செலவும் நிறைய வரும்போல இருக்கே” யிரம் இரண்டாயிரத்துக்குக் காசோலையில் கையெழுத்திடும் அமுதவாணன் தலைவர் தந்த அதிச்சியில் இருந்து மீளவில்லை.

“அதையும் நடத்துவோம். எனக்குத் தெரிந்த சில பிரமுகர்கள், தொழில் அதிபர்களிடம் இதைப்பற்றி பேசியிருக்கேன். எல்லாம் சரியா கைகூடி வரும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. உங்க எல்லார் ஒத்துழைப்பும் முழுமையா இருந்தா இதற்கு மேலேயும் சாதிக்கலாம்.”

“விழாவுக்கு யார் தலைமை தாங்கிறதுன்னு நீங்க சொல்லவே இல்லையே தலைவரே” சாருமதி குரலில் ர்வம் எட்டிப்பார்த்தது.

“வேறு யாரு? இந்த மாதிரி விழாவுக்குத் தலைமை தாங்க மிகச் சரியானவர் நம் நாட்டுப் பிரதமர்தான்”

“பிரதமரா? அவர் வருவாரா? இது சாத்தியமா?” பலரும் வியப்பு காட்டினார்கள்.

“ஏன் எல்லாருக்கும் இந்த சந்தேகம்? அவர் ஒட்டுமொத்த மலேசியாவுக்கும்தானே பிரதமர்? எந்த ஒரு இனத்துக்கும் தனிப்பட்ட பிரதமர் இல்லையே. அதிலும் மிக முக்கியம் வாய்ந்த இந்த விழாவுக்கு மிகச் சரியான தேர்வு நம்ம பிரதமர்தான். நம்ம எதிர்பார்ப்பு, ஏக்கம், உணர்வு, கனவு எல்லாம் அவர் காதுக்கு மட்டுமல்ல நெஞ்சுக்கும் போகணும். நாம அழைக்கிறோம். அவர் வருவார். இது சாத்தியம்தான்.” பிரதமரை நேரில் பார்த்து அழைப்பு விடுத்து அவரின் வருகையை உறுதிப்படுத்திவிட்டு வந்தவரைப்போல இளங்கண்ணன் தீர்மானமாகப் பேசினார். பலரின் மனக்கண்ணில் அப்பொழுதே விழா காட்சிகள் படமாக ஓடத்தொடங்கிவிட்டன.

இரவு மணி 7.50. பிரதமர் தங்கும் விடுதியின் முன் காரில் வந்து இறங்கினார். இளங்கண்ணனோடு செயற்குழுவினரும் முக்கிய மலாய், சீன எழுத்தாளர்களும் சமுதாயத் தலைவர்களும் அவரை முன்நின்று வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.

முதலில் தேசிய கீதம் பாடப்பட்டது. அடுத்து, மூவினங்களின் பண்பாட்டுச் சிறப்பைக் காட்டும் வகையில் நடனங்கள் படைக்கப்பட்டன. வரவேற்புரைக்குப் பின் இளங்கண்ணன் மேடையேறினார். “எங்கள் அன்புக்குரிய மாண்புமிகு பிரதமர் அவர்களே, இங்கே மூன்று இனங்களிடையே ஒற்றுமை மிக மிக முக்கியம் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறீர்கள். குறைகூறல்களுக்குக் காதுகொடுக்கும் உங்களின் வெளிப்படையான போக்கு எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இதோ, இந்த விழாவும் மூவின ஒற்றுமையை மையப்படுத்தியே நடக்கிறது. இலக்கியம் மூலமாகவும் நாம் ஒன்றுபட முடியும். இந்த நாட்டில் இலக்கியம் படைக்கிற ஒவ்வொரு படைப்பாளியையும் அரசு அரவணைக்க வேண்டும். திறமை இருந்தால் உரிய அங்கீகாரம் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தவேண்டும். தேசிய இனங்களாக மூன்று இனங்களும் இருக்கும்பொழுது இவர்களின் இலக்கியங்களும் தேசிய தகுதியைப் பெற வேண்டும். தேசியம் என்ற உணர்வு பெருகினால் இங்கே நம்மிடையே உறவு வலுப்பெறும். உண்மையான இன ஒருமைப்பாடு இங்கே சாத்தியமாகும்..”

தேசிய மொழியில் தன் மனத்தில் உழன்றுகொண்டிருந்த எண்ணங்களை ஒளிவுமறைவின்றி இளங்கண்ணன் வெளிப்படுத்தினார். அறிவுபூர்வமான அவரின் கருத்துகளைக் கூட்டத்தினரின் கைதட்டல் வழிமொழிந்தது. “தலைவரு சொல்ல வேண்டியத அழுத்தமா சொல்லிட்டாரு. இனி நடக்கிறது நடக்கட்டும்.” தமிழ்மாறன் அறவாணனின் காதைக் கடித்தார்.

அடுத்து, இலக்கிய விருதுபெறும் மூன்று இலக்கியவாதிகளான நாவலாசிரியர் அஸ்மான் பூத்தே, கவிஞர் தமிழழகன், எழுத்தாளர் தோக் யா போங் கிய மூவரும் மேடைக்கு அழைக்கப்பட்டுப் பிரதமரால் சிறப்பு செய்யப்பட்டனர். ஒவ்வொருவரும் விருதோடு பத்தாயிரம் ரிங்கிட்டுகளையும் பரிசாகப் பெற்றனர். மேடையின் அகன்ற திரையில் அவர்கள் ஒவ்வொருவரின் எழுத்துலகச் சாதனைகள் படமாகக் காட்டப்பட்டன.

நிகழ்வின் முத்தாய்ப்பாக உரையாற்ற பிரதமர் வந்தபொழுது அவரின் முகத்தில் ழ்ந்த பூரிப்பைக் காண முடிந்தது. “மூன்று இன எழுத்தாளர்கள் ஒரே மேடையில் இந்நாட்டில் சிறப்பிக்கப்படுவது இதுதான் முதல் முறையென்று நான் நினைக்கிறேன். இப்படியொரு விழா இதுவரை நாட்டில் ஏன் நடத்தப்படவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. அரசு முன்நின்று நடத்தியிருக்க வேண்டிய நிகழ்ச்சி இது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் கழகம் முயற்சியில் இந்த விழா நடந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களுக்குப் பாராட்டுக்கள். இன்று விருது பெற்ற மூன்று இலக்கியவாதிகளுக்கும் என் பாராட்டுகள். இந்த விழா மூலம் ஒரு முக்கிய கோரிக்கையை அரசுக்கு நீங்கள் முன் வைத்துள்ளீர்கள். இந்நாட்டில் இலக்கியம் படைக்கிற இலக்கியவாதிகளை இனப்பாகுபாடின்றி அரவணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முக்கியமான ஒன்றாக நான் நினைக்கிறேன். இது குறித்து அமைச்சரவையில் விரிவாகப் பேசப்போகிறேன். இன்றைய விழா என்னைப் பொறுத்தவரையில் மிக முக்கிய விழாவாக நினைக்கிறேன். இலக்கியம் மூலமாக இனங்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த முடியுமென்றால் அந்த முயற்சியில் அரசு ஈடுபடும்......”

பிரதமர் மனம் நெகிழ்ந்து விழாவில் நீண்ட நேரம் பேசினார்.

மறுநாள் ஏடுகளில் விழா பற்றிய செய்திகள் விரிவாக இடம்பெற்றன.

இரண்டு வாரங்களுக்குப் பின் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் அறவாணன் இளங்கண்ணனிடம் கேட்டார். “சரிங்க தலைவரே, இந்த முறை நாம சிரமப்பட்டு விழாவை பிரதமரை வரவழைத்து சிறப்பா நடத்திட்டோம். இனி அடுத்த வருசம்?

இளங்கண்ணனின் இதழ்களில் அரும்பிய புன்னகையே அதற்குப் பதிலாக அமைந்தது.

Friday, February 19, 2010

கடற்கரை யோகம்





நீங்கள் வராத நாளில்
நான் மட்டும் சென்றிருந்தேன்
அந்தக் கடற்கரைக்கு

நம் அரட்டைகள் இல்லாத
அந்தக் கணங்களில்
என்னுடன் உரக்கப் பேசியது காற்று

நம் சிரிப்பலைகளில் தவறவிட்ட
அலைகளின் செல்லச் சிணுங்கல்கள்
காதுமடல்களை நனைத்தன

கால் விரல் இடுக்குகளில் மறைந்து
என்னுடன் பயணிக்க விழைந்தன
மண் துகள்கள்

தொலைத்தூரத்து மஞ்சள் வானத்திலிருந்து
குளிப்பதற்காக கடலுக்குள் இறங்கியது
அந்திச் சூரியன்

நம்மைப்போல கூட்டமாகக் கதைபேசி
எங்கோ அவசரமாகப் பயணப்பட்டன
மேகங்கள்

நாம் இதுவரை காணத்தவறிய
சின்னஞ் சிறு நண்டுகள்
மணலில் விளையாடக் கண்டேன்

நாம் பேசியிருந்த தருணங்களில்
வேகங்காட்டிய மணித்துளிகள்
மெல்ல மெல்ல நகர்ந்தன
வினாடிகளாய்....

நீங்களும் போய் வாருங்களேன்
அந்தக் கடற்கரைக்கு ஒருநாள்
தனியாக..

பின் தொடரும் வாடை




சிறுநீர்ப்பையைக் கையில் பிடித்தவாறு
ஒரு மூலையில் நிற்கும் சீன முதியவர்
காலில் பெரிய கட்டோடு
நடக்கச் சிரமப்படும் இளம் பெண்
பைநிறைய மருந்தோடு
என்னைக் கடக்கும் மூதாட்டி
ஒற்றைக்காலால் கைத்தடியுடன்
என் முன்னே போகும் மலாய் இளைஞன்

ஆங்காங்கே அரை மனிதர்கள்
ஆடைகளை இழந்ததால் அல்ல
அங்கங்களை இழந்ததால்...

எங்கும் மரண பயத்தில் நனைத்தெடுத்த
கவலை முகங்கள்

என்னைச் சுற்றிலும்
நடமாடும் மனிதர்களின் கைகளில்
மருந்துப்பையா? உணவுப்பையா?

என் நாசியில் நீக்கமற நிறைவது
மருந்துவாடையா?

நோயால் அவதியுறும் அம்மாவுக்காக
செராஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில்
ஒவ்வொரு முறையும்
மருந்து வாங்கப் போய் திரும்புகையில்
தன் கோரப்பற்களோடு
என்னைத் தொட்டுவிடும் தூரத்தில்
என் பின்னால்
வந்துகொண்டே இருக்கிறது
முதுமை

ஹைக்கூ நதிக்கரை (3)




புறம்போக்கு வீடுகள்
பலகைகளில்
பிரதமர் படங்கள்

தூங்கி வழியும் மாணவன்
வகுப்புக்கு வெளியே
சுறுசுறுப்பாய்ச் சூரியன்

மழை ஓய்ந்தது
இசைக்குக் காத்திருந்தேன்
எங்கே தவளை

உனை எப்படிக் காப்பேன்?
மன்னிப்பாய் பூச்சியே
பசியோடு பல்லி

மீன்கள் துள்ளும்
குளத்தில்
எண்ணெய்க் கசிவு

ரசித்தேன்
மலையேறும்
நத்தை

உயர்ந்த கட்டடம்
மண்ணுக்குக் கீழே
தட்டான் பூச்சி பிடித்த காடு

எரிந்த வீட்டில்
தேடினாள்
முதல் கடிதம்

மனிதர் நிறைந்த மண்டபம்
ஓடிப் பிடித்து விளையாடும்
குருவிகள்

உடைந்தால் என்ன?
இதுவும் அழகுதான்
குளத்தில் நிலவு

(இன்னும் நனைக்கும்..)

Thursday, February 18, 2010

மரத்தொடு கலத்தல்


வாடகை வீடு விட்டு புதிய வீட்டுக்கு வந்தபோது
வேலிக்கு வெளியே சின்ன உருவமாய்
பச்சைக் கண்களால் என்னை வசீகரித்தாய்

வீடமைப்பாளரின் உபயமாய் எல்லா வீடுகளிலும்
உன் உறவுகள்

யாரும் நெருங்கமுடியாதபடி உன் உடலெங்கும்
ஊசிகளாய் முட்கள் தெரிந்தன
உனைத்தடவத் துடிக்கும் விரல்களை
அவை தடுத்தன

ஆயினும் அவ்வப்போது என் வாயிதழ்களில்
உனைநோக்கி அன்பு மொழிகள் கசியும்

அம்மா சொல்லித்தான் உன் திருநாமம்
கல்யாண முருங்கை என்றறிந்தேன்

பக்கத்து வீடுகளில் பழ மரங்கள்
அழகு காட்ட.. நீ உடல் நீண்டாய்
வேலி தாண்டி உள்ளே நிழல் பரப்பினாய்

வீட்டுக்கு வெளியே எடுத்த படங்களில்
எங்களுக்குப் பின்னால் நின்ற
உன் பசுமைச் சிணுங்கல் பதிவானது

“ரெண்டு பழமரத்த நட்டிருந்தா
ஏதும் பலன் கிடைச்சிருக்குமே”
அம்மாவின் அங்கலாய்ப்பு தொடர்ந்தது

பெயர் தெரியாத பறவைகளுக்கு
உன் இடஒதுக்கீட்டுக் கொள்கை
எனக்குப் பிடித்திருந்தது

வெளியே போய்வந்தால் காத்திருந்து
எங்களை முதலில் வரவேற்பாய்

ஒருநாள் மனைவியின் நச்சரிப்பு தாளாமல்
ரம்பம் கொண்டு உன் உடல் அவயங்களை
ஒவ்வொன்றாக அறுக்கத் தொடங்கினேன்

அறுபட்ட இடங்களில்
மிஞ்சியிருந்த உன் வெள்ளை இரத்தம்
கசியத் தொடங்கியது

சிதறிய உன்னை அள்ளி வீசி
வேலிக்கு அப்பால் அப்புறப்படுத்தினேன்

கொலை வெறி தீராமல் உன்னை விட்டு
எங்கோ பயணப்படத் தொடங்கின
இரக்கமில்லா கரையான்கள்

பயணக் குறிப்புகள்


எதிரெதிர் திசையில் பயணமாகி
வழியில் சந்தித்துக்கொள்கிறோம்
முன்பின் அறிமுகமில்லை எனினும்
சிறு புன்னகையில் நெருங்குகிறோம்
கைகுலுக்கலில் தொடங்கி அறிமுகமாகி
நலம் விசாரிக்கிறோம்

நம் கைகளில் இருக்கும் நாளிதழ்கள்
இருவரிடையே உரையாடலைத் தொடக்க
நிகழ்கால நடப்பை அலசி
நம் நிலைப்பாட்டை முன்வைக்கிறோம்
தோளில் சுமந்துவந்த துயரங்களை,
கைகளின் காயங்களைப்
பகிர்ந்துகொள்கிறோம்

அதுவரை சேகரித்து வைத்துள்ள
இருப்புகளைப் பற்றிப் பெருமைபேசுகிறோம்
நின்றுகொண்டே தொலைதூரத்துக்கும்
பயணம் போய் வருகிறோம்
எதிர்காலம் பற்றிய நம்பிக்கை அவநம்பிக்கை
இருவரிடமும் சமஅளவாய் இருப்பதை
வியந்து இரசிக்கிறோம்

கைக்குலுக்கி விடைபெற்று நடந்து
மீண்டும் முகம் திருப்புகிறோம்

முகத்திலிருந்து கழற்றப்பட்ட ஏதும்
தென்படுகிறதாயென
மற்றவர் கைகளில் தேடுகிறோம்

காலமாகாத கவிதை


எளிமையானது உன் கவிதை
ஆடம்பர அணிவகுப்புகளை இரசிக்க
இதயம் தவிப்பவர்களுக்கு
இடமில்லை உன்னிடம்

சாலையோர மரங்களின் இலைகளில்
படிந்து கிடக்கும் மண்துகள்களாய்
உன் கவிதைகளில் உன் அனுபவங்கள்

உன் போக்கில் நீ முன்னால் பயணமானாய்
பின்னால் வரும் வாசகர்களின்
உணர்வுக்காக பயணத்தைத் தாமதித்ததில்லை

கட்டுமானப் பகுதியில்
ஒவ்வொரு செங்கல்லாய் அடுக்கும் இடத்தை
நீ கடந்திருப்பாய் யினும்
உன் கவிதையில் அதன் பாதிப்பு இராது

நீ வித்தையேதும் கற்றவனில்லை
ஆயினும் வேகமாக ஓடும்
எந்த வாசகனும் உன் கவிதை கடக்கையில்
வேகம் குறைக்கிறான்

நீ வீண் செலவுகளை விரும்பிச் செய்பவனல்லன்
உன் கவிதையில்
நீ எண்ணியெண்ணிச் செலவு செய்வதை
விருந்துக்கு வந்தவர்களுக்கு உணர்த்துகிறாய்

உரத்தக்குரல்களில் கத்தல்களையும்
போலிப் பிரசாரங்களையும் நீ வெறுத்தவன்
உன் கவிதையில் நீ தனியனாய் மேடையில்
ஒலிபெருக்கியோடு ஒதுங்கியதில்லை

எளிய மக்களின் இன்னல்களை
இதயத்தில் ஏந்தியவன் நீ
அவர்களின் காயாத கண்ணீர்ச் சுவடுகளை
உன் கவிதையில் வரைந்துகொண்டே இருந்தாய்

அமைதியானது உன் கவிதை
ஊரடங்கிய வேளையில்
புறம்போக்கு நிலத்துக் குடிசையில் நிகழ்ந்த
உன் மரணத்தைப்போல

நிதர்சனங்கள் (சிறுகதை)


அன்று நண்பகல் பத்திரிகை அலுவலகத்திற்கு வேலைக்குப் போனபோது வழக்கம்போல் எனக்குச் சில பணிகள் காத்திருந்தன. சங்கச் செய்திகளை ஒரு பக்கத்தில் அடங்குமாறு தொகுத்துத் தரவேண்டும். ஏற்கெனவே எடுத்த பேட்டிகளைச் செப்பமிட்டு ஞாயிறு மலர் பொறுப்பாசிரியர் பார்வைக்கு அனுப்பவேண்டும். இடையிடையே செய்திகளின் பிழை திருத்தம் வேறு. ஒற்றுப்பிழைகள் மலிந்து வருவதாகத் தீவிர வாசகர்கள் கோபித்துக்கொள்கிறார்களாம். வாராந்திர பணியாளர்கள் கூட்டத்தில் சிரியர் அடிக்கடி சுட்டிக்காட்டுகிறார். எல்லாரும் தலையை ஆட்டுகிறோம். ஏட்டில் எப்படியாவது பிழைகள் முகங்காட்டிவிடுகின்றன.

அலுவலகம் மந்தகதியில் இயங்கிக் கொண்டிருந்தது. மூன்று மணியானால்தான் பரபரப்புக் காய்ச்சல் பரவத் தொடங்கும். வெளியூர் நிருபர்கள் மின்னஞ்சலில் அனுப்பும் செய்திகள் வரத்தொடங்கிவிட்டன. கணினியில் நுழைந்து சங்கச் செய்திகளை மோப்பம் பிடித்தேன். “பாலு சார், பெரிசு கூப்பிடுறாரு. போங்க” எங்கள் அலுவலகத்தின் அழகு நங்கை கோனிஷமா (இப்படியெல்லாம் பெயர் வைக்க உட்கார்ந்து யோசிப்பானுங்களோ?) என் பக்கம் வந்து லிப்ஸ்டிக் பூசிய உதடுகளால் சிணுங்கினார்.

ஆசிரியர் அறைக்குள் நுழைந்தேன். அவரின் அனுபவத்துக்கும் உருவத்துக்கும் எங்களிடையே அன்போடு உலவும் பெயர்தான் பெரிசு. அறை முழுக்க நாளிதழ்கள், கோப்புகள், புத்தகங்கள். கொஞ்சம் அடுக்கிவைத்தால் அறையே அழகாக இருக்கும் என்று தோன்றியது. அன்றைய ஆங்கில நாளிதழ் அவர் மேசையில் விரிந்து கிடந்தது. “வாங்க பாலு. இத படிச்சி பாருங்க. கண்பார்வை இல்லாதவங்க பத்தி இதிலே வந்திருக்கு. வித்தியாசமான கட்டுரை. இந்த மாதிரி படைப்பு நம்ம பத்திரிகையில வரணும். வாசகர்ங்க இதைத்தான் எதிர்ப்பார்க்குறாங்க. கொஞ்சம் கவித்துவமா எழுத நீங்கதான் சரி. உடனே புறப்படுங்க. பேட்டியோடு வாங்க.”

“சார், சங்கச் செய்திகள இன்னும் முடிக்கல. நாளைக்கு போகட்டுமா ”
“அதான் வேதா இருக்கிறாரே. அவரு பார்த்துக்குவாரு. நீங்க புறப்படுங்க”

பெரிசு சொன்னால் சொன்னதுதான். தொலைபேசியில் தொடர்புகொண்டு பேட்டிக்கான ஏற்பாட்டைச் செய்தேன். அலுவலகத்துப் பக்கத்திலுள்ள ஒட்டுக்கடையில் சுவையான தேநீரில் தாகசாந்தி பெற்றுக் காரில் புறப்பட்டுவிட்டேன்.

எப்போது போனாலும் பரபரப்பு குறையாத பிரிக்பீல்ட்ஸ் பகுதி. அந்தத் திங்கட்கிழமை மாலையில் சாலைகளில் நிறைந்துபோகும் வாகனங்களாலும் மனிதர்களாலும் கடைகளில் கேட்கும் செவிப்பறைக் கிழிக்கும் பாடல்களாலும் கலகலத்துக்கொண்டிருந்தது. பரபரப்பு, மனிதர்களின் ஆடையாயிருந்து இப்பொழுது அங்கமாக மாறிவிட்டதா? அமைதியான வாழ்க்கைக்கு மீள அவரவரும் ஆதிமனிதன் வாழ்க்கையில் மூழ்கியெழ வேண்டுமோ? இதிலே கண் பார்வையற்றவர்களின் நிலை என்ன? கடைகளுக்கு மேல் இருந்த மின்கம்பிகளில் பறவைகள் அமர்ந்து மனிதர்களின் வேகத்தை இரசித்துக்கொண்டிருந்தன. பிரிக்பீல்ட்ஸ் கடந்து அதன் பின்னால் நீளும் சாலையில் நுழைந்தேன். கண்பார்வையற்றோர் சங்கத்துக்குப் பக்கத்தில் உள்ள அடுக்குமாடியின் கீழே காரை நிறுத்தினேன். ஐந்தாவது மாடிக்கு லிப்ட்டில் சென்றடைந்து வீட்டின் கதவைத் தட்டினேன்.

கதவைத் திறந்துகொண்டு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் கையில் ஊன்றுகோலைத் தரையில் தட்டியவாறு வெளியே வந்தார். கலைந்த தலைமுடி. இடுங்கிய கண்கள். சவரம் செய்யப்படாமல் தாடையில் படர்ந்த வெள்ளைத்தாடி. மெலிந்த தேகம். முகத்தில் அப்பிய மெல்லிய சோகம்.

“வணக்கங்க. நான் பாலு. தமிழ்ப்பத்திரிகையிலிருந்து பேட்டிக்காக வரேன். இங்க டேவிட்...?”

“வாங்க தம்பி. டேவிட் நான்தான். மொத போன்ல கூப்பிட்டது நீங்கதானா? இன்னைக்கு ஒடம்புக்கு முடியல. காலையில இருந்து கால் வலி. அதான் வேலைக்கு போகல. உள்ள வாங்க”

உள்ளே சென்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தேன். என் முன்னே அவரும் அமர்ந்துகொண்டார். இரண்டு அறைகள் கொண்ட சிறிய வீடு. அலங்காரங்களும் பொருள்களும் குறைவாகக் காணப்பட்டன. சுவரில் இருந்த தமிழ் நாள்காட்டியில் தலைவர் ஒருவர் மாலையோடு சிரித்துக்கொண்டிருந்தார். யாரோ வரைந்து பிரேமிட்ட இரண்டு அழகான ஓவியங்களும் இருந்தன. அந்த ஓவியங்கள் யார் பார்த்து இரசிப்பதற்காக?

“ எங்க வேலை செய்றீங்க? ஏதாவது கம்பனியிலா?”

“என்ன தம்பி இப்படி கேட்டுட்டீங்க. நாங்க ஏன் கையகட்டி ஒருத்தங்கிட்ட வேலை செய்யணும்? நாங்களே சுயமா ஒழைக்கிறோம். நல்லா இருக்கோம். கொஞ்சம் இருங்க. எங்க தலைவரும் தோழர்களும் வேல முடிஞ்சி வருவாங்க. அவங்ககிட்ட விலாவாரியா கேளுங்க?” பிசிறில்லாத தெளிவான குரல். நான் அமர்ந்த இடத்தை அனுமானித்து வெறித்து நோக்கும் தீர்க்கமான பார்வை.

காத்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் டேவிட் சொன்ன தலைவரும் தோழர்களும் வந்தனர். அவர்களில் ஒரு மலாய்த் தோழியும் இருந்தார். எல்லார் கைகளிலும் ஊன்றுகோல். ‘இழுக்கல் உடையுழி ஊற்றுகோல்’ - வழுக்கல் நிலத்தில் நடக்க மனிதருக்கு ஊன்றுகோல் உதவும் என்று திருவள்ளுவர் பாடினார். அவர்களுக்கோ ஊன்றுகோல் உடலின் அவயமாக ஆகியிருப்பதைக் கண்டேன். “இவரு என் அண்ணன் மைக்கல். இவரு மணியம், இவரு சியா சூன் பாட், அவரு கணபதி, அவங்க சாலினா. இதுதான் எங்க குடும்பம். இந்த புளோக்லதான் எல்லாரும் இருக்கோம். இன்னும் நாலு பேரு வேல முடிஞ்சி வரல. அண்ண, இவரு பாலு. தமிழ்ப்பத்திரிகையில இருந்து பேட்டிக்காக வந்திருக்காரு. நம்மல பேட்டி கண்டு போடணும்மா” டேவிட் அறிமுகப்படுத்தினார். எல்லாரும் என்னைச் சுற்றி அமர்ந்துகொண்டார்கள்.

“வணக்கங்க. எதுக்காக எங்கள பேட்டி காணப்போறீங்க? நாங்க ஒன்னும் பெரிசா சாதிக்கலையே. ஏதோ கண் பார்வை இழந்த பத்துபேரும் ஒத்துமையா இங்க இருக்கோம். இத சாதனையா நெனக்கிறீங்களா?” மைக்கல் எனக்கு வித்தியாசமான தலைவராகத் தெரிந்தார். பத்திரிகையாளனாக எத்தனையோ தலைவர்களைப் பார்த்துவிட்டேன். பட்டம், பதவி, மாலை, பொன்னாடை, பரிவாரம் என பரபரப்பாக வேறு தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் தலைவர்கள்.

“இதுவும் சாதனைதான். இங்க பத்துபேரும் மதம், இனம்னு எந்த வேறுபாடும் பார்க்காம ஒன்னா இருப்பதும் சாதனைதான். உங்க வாழ்க்கை மத்தவங்களுக்கு பாடமா அமையும். வெளிய போய் பார்த்தா ஒன்னா இருக்கிறோம்னு சொல்லிகிட்டு தனித்தனியா பிரிஞ்சிபோய் கிடக்கிறோம். நல்லா நடிக்கிறோம். எனவே உங்க பேட்டி முக்கியம்னு நெனக்கிறேன்.” சொல்லிவிட்டு மைக்கல் முகத்தை ஏறிட்டேன்.

அங்கு எந்தச் சலனத்தையும் காணமுடியவில்லை. ஏதோ சிந்திக்கிறார் என்று தெரிந்தது. அதுதான் சமயம். நான் கேள்விகளோடு தயாரானேன். “முதல்ல தண்ணி சாப்பிடுங்க. டேவிட் எல்லாருக்கும் தண்ணி கொண்டு வா.” சுடச்சுட தேநீர் தொண்டையை நனைத்தது. பதிவுநாடாவை இயக்கினேன்.

“உங்க பின்னணி பத்தி கொஞ்சம் சொல்லுங்க, மைக்கல்”

“செந்தூல் பகுதியிலதான் நான் பிறந்து வளர்ந்தேன். எங்க அப்பா அம்மா பலசரக்கு கடை வச்சிருந்தாங்க. எட்டு வயசா இருக்கும்போது கொஞ்சம் கொஞ்சமா பார்வை குறைஞ்சிடுச்சு. எங்க பரம்பரையில இந்த மாதிரி இருந்ததா அப்பா சொன்னாரு. இதோ என் தம்பி டேவிட்டுக்கும் அதே நிலமை.”

“பார்வை குறைஞ்சதும் உங்களுக்கு மனதளவில ரொம்ப பாதிப்பு ஏற்பட்டிருக்குமே. எப்படி தாங்கிக்கிட்டீங்க?”

“அத வார்த்தயால சொல்ல முடியாது. ஸ்கூல் விட்டதும் கூட்டளிங்களோட சொதந்திரமா சுத்தித் திரிவேன். எத்தனையோ இயற்கை காட்சிகள கண்டு ரசிச்சிருக்கேன். அப்பவே ஓவியம்கூட வரைவேன். இப்ப அதெல்லாம் எப்போவாது கனவுல வருது. நான் ரொம்ப படிக்கணும்னு ஆசப்பட்டேன். அது முடியாம போச்சின்னுதான் வருத்தமா இருக்கு. பார்வை இருந்திருந்தா பெத்தவங்களுக்கு என் கடமையை நெறைவா செஞ்சிருப்பேன். அதுவும் முடியாம போச்சு” விரக்தியும் வேதனையும் கலந்த சொற்கள் பெருமூச்சோடு வெளிப்பட்டன. மற்றவர்கள் தங்கள் தலைவர் கூறுவதை உன்னிப்பாகக் கவனித்தார்கள்.

“அப்ப உங்க படிப்பு அதோட நின்னு போச்சா?’

“கண்பார்வை இல்லாதங்க பள்ளியில சில வருசம் படிச்சேன். அப்புறம் பிரிக்பீல்ட்ஸ் கண்பார்வையற்றோர் சங்கத்தில சேர்ந்தேன். கூடை பின்னுவது, கைவினைப்பொருளு செய்றதுனு கத்துக்கிட்டேன். இருவது வயசுல இந்தப் பக்கம் வந்தேன். இதோ இருவத்தஞ்சு வருசம் ஓடிருச்சு. ஒவ்வொருத்தரா வந்து பிளாட்ல என்னோட சேர்ந்தாங்க. இப்ப பத்து பேரா குடும்பம் பெருசாயிடுச்சு.”

“இப்ப கூடை, கைவினைப்பொருளு விக்கிற வேலதான் செய்றீங்களா?”

“அத செய்து பார்த்தோம். வருமானம் பத்தல. இப்ப பதினைந்து வருசமா டிஷ்யூ பேப்பரு விக்கிறோம். ஒரு கம்பனி ஸ்போன்சர் பண்றாங்க. அதனால ஓரளவுக்கு போதுமான வருமானம் கிடைக்குது. பட்டினி கிடக்குற நிலமயில்லாம் இங்க இல்ல. நம்புங்க” குரலில் நம்பிக்கை இழையோடியது.

“டிஷ்யூ பேப்பரு வித்தா ஒரு மாசத்துக்கு எவ்வளவு கிடைக்கும்?”

“கொறஞ்சது ஆளுக்கு ஐந்நூறு வெள்ளி கிடைக்கிது. அப்புறம் சமூகநல இலாகாவுல கொஞ்சம் பணம் தராங்க. அதுபோதும் தம்பி. நாங்க யாரு கையையும் எதிர்பார்த்து வாழல பாருங்க. அதுதானே முக்கியம்.” நம்பிக்கை உற்சாக நதியாக ரவாரித்தது.

“நீங்க எதிர்நோக்குற பிரச்சனை ஏதும் உண்டா?”

“நெறைய இருக்கு தம்பி. கடைவீதி ஓரமா நடந்துபோறது சிரமமா இருக்கு. மேடு பள்ளம், குண்டு குழியின்னு நாங்க படாதபாடு படறோம். முன்ன மாதிரி ரோட்ட தாண்ட முடியல. பல முற எக்ஸிடெண்ல மாட்டியிருக்கோம். அதவிட கொடும, டிஷ்யூ விக்கும்போது எங்க குவளையிலயிருந்து காச களவாடியிருட்டு போரானுங்க. களவாணிப் பசங்க” மைக்கல் கண்களைத் தேய்த்துக்கொண்டார். கோப ரேகைகள் அவர் முகத்தில் படர்ந்ததை என்னால் உணர முடிந்தது. அவரே தொடர்ந்தார்.

“அத விடுங்க. ஒரு அஞ்சி மாசத்துக்கு முந்தி நடந்த சம்பவம். இப்ப நெனச்சாலும் எங்க ஈரக்கொலையே நடுங்குது. எப்பவும் ஆளுக்கொரு பக்கமாதான் டிஷ்யூ பேப்பர விக்கப்போவோம். ஒரு நாளு ராத்திரி மணி எட்டாச்சு. நாங்கல்லாம் வந்திட்டோம். சாலினாவ காணோம். நாங்க பதறிப்போயிட்டோம். இந்த பிரிக்பீல்ட்ஸ் பகுதியையே ராத்திரி பன்னண்டு மணி வரைக்கும் அலசிட்டோம். கிடைக்கல.” சாலினா என்று தன் பெயர் உச்சரிக்கப்பட்டதும் அந்த மலாய்க்கார மாது எங்கள் பக்கமாய்த் தலையைத் திருப்பினார்.

“அப்புறம் மறுநாளு இங்க கண்பார்வையற்றோர் சங்க ஆபிசுக்குப் போயி விசாரிச்சோம். அப்பதான் தெரிஞ்சது. சாலினா பிச்ச எடுக்குதுன்னு போலிசுல புடிச்சுக்குட்டு போயிட்டாங்களாம். ஒரு நாள் முழுக்க சாலினா ஜெயில்ல இருந்து அவதிபட்டு அழுது துடிச்சிருக்கு. இன்னைக்கும் அந்த பயம் போகல அதுக்கு. நீங்களே சொல்லுங்க தம்பி. நாங்க டிஷ்யூதான விக்கிறோம். பிச்சையா எடுக்கிறோம்?” தங்களோடு வசிக்கும் ஒரு மலாய்க்காரப் பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம் இவர்கள் மனத்தில் எப்படி மாறாத வடுக்களாக மாறிப்போனது?

“இஞ்சே, நான் பத்து வருசத்துக்கு முந்தி கண்பார்வையற்றோர் சங்கத்துக்கு பயிச்சிக்கு வந்தேன். அப்ப இருந்து மைக்கல்தான் எங்களுக்கு வேல வாங்கி தந்து தேவையான உதவிகள செஞ்சு கடவுள் மாதிரி கூடச் இருந்து கவனிக்குறாரு. எங்களுக்கு நல்ல தலைவரு கிடச்சிருக்காரு. அதலாலதான் நாங்க அவருக்கு கீழ ஒத்துமையா இருக்கோம்.” சாலினா எழுந்து வந்து என் கைகளைப் பிடித்துக்கொண்டு மலாய்மொழியில் நெகிழ்ச்சியாகச் சொன்னார்.

“அரசாங்கம், பொதுமக்கள் இவங்ககிட்டு என்ன எதிர்பார்க்குறீங்க மைக்கல்?”

“கண் தெரியலங்கிறது ஒரு நோய் இல்ல. அத எல்லாரும் புரிஞ்சிக்கணும். பக்கத்துல கையில ஒருத்தன் தடியோட தரைய தட்டிக்கிட்டு வந்தானா அவன வெறுக்காதீங்க. அவன் சடம் இல்ல. சக மனிதனா பாருங்க. கொஞ்சம் அன்பா பேசுங்க. அரசாங்கம் நெனச்சா பஸ் போக்குவரத்துல எங்களுக்கு இன்னும் வசதிய ஏற்படுத்தலாம். இவ்வளவு பெரிய சிட்டியில எங்களுக்கு நல்ல வேல வாய்ப்ப ஏற்படுத்தணும்.” தீர்க்கமான தீர்மானமாய் மைக்கல் தன் உள்ளக்கிடக்கையைக் கொட்டினார். மனம் திறந்து மணியம், கணபதி, சியா சூன் பாட் ஆகிய மற்றவர்களும் கொஞ்சநேரம் என்னுடன் பேசினார்கள். எல்லாவற்றையும் பதிவுசெய்தேன். அனைவரையும் நிற்கச்சொல்லிக் குழுப்படம் எடுத்தேன். மணி ஆறாகிவிட்டது. அனைவரிடமும் கைகுலுக்கி விடைபெற்றேன்.

அப்பொழுது வெளியே சிலர் வந்து நிற்பது தெரிந்தது. கைகளில் பொதுத்தேர்தலுக்கான சுற்றறிக்கை. மைக்கல் வெளியில் சென்று அவர்களிடம் பேசினார். அறிக்கைகளை வாங்கிக்கொண்டார். “நம்ம தலை எழுத்த மாத்த முடியாதுங்க. ஆன நம்ம வருங்கால தலைமுறை நல்லா இருக்க ஏதாவது செய்யலாமே, என்னா சொல்றீங்க, நல்லா யோசிச்சுப் பாருங்க. நீங்க எல்லாரும் மறக்காம வந்து ஓட்டு போடுங்க. அது ரொம்ப முக்கியங்க. சரிங்கலா?” அவர்களில் ஒருவர் உள்ளே எட்டிப்பார்த்துச் சொன்னார்.

அவர்கள் போனவுடன் மைக்கல் உள்ளே வந்தார்.
“நீங்களும் தேர்தல ஓட்டு போடுவீங்களா?”

“என்னா இப்படி கேக்குறீங்க? அது நம்ம உரிமை தம்பி. நாட்டுக்காக நம்ம கடமை. நான் மட்டும் இல்ல. இங்க அத்தன பேரையும் அழைச்சுக்கிட்டு போயி ஓட்டு போட வைக்குறது என் பொறுப்பு. சிலபேரு புரியாம ஓட்டு போடமாட்டோம்னு மல்லுக்கு நிப்பாங்க. அது சுத்த பைத்தியக்காரத்தனம். ஓட்டு போட்டாதான நமக்கு புடிச்ச திறமைசாலிங்களையும் அரசாங்கத்தையும் தேர்ந்தெடுக்க முடியும்?”

“இங்க நீங்க பத்துபேரும் மதம், இனம், ஏற்றத்தாழ்வுன்னு இல்லாம ஒற்றுமையா, ஒருவருக்கொருவர் உதவிக்கிட்டு வாழ்றீங்க. வெளியில நாம எதிர்பார்க்கிற ஒற்றுமை இன்னும் கைகூடாத கனவா இருக்கே. எப்ப பாத்தாலும் இனங்களுக்கு இடையே சின்ன சின்ன சர்ச்ச இருந்துகிட்டே இருக்கு. இதற்கு என்ன காரணம்னு நெனக்கிறீங்க?” என்னையும் அறியாமல் என் மனத்தின் ஆழத்தில் அமிழ்ந்து கிடந்த உணர்வலைகள் அவிழ்ந்து கொண்டன.

“உங்க கேள்விக்கு விடைதான் எங்ககிட்டேயே இருக்க தம்பி. நாங்க பத்து பேரும் எப்படி ஒன்னா சேர்ந்தோம்? நாங்க பட்ட துன்பமும் துயரும்தானே எங்கள ஒன்னா ஒரு குடும்பமா ஆக்கிருக்கு. மத்தவங்க துயரத்த தாங்கிக்கிற தோளா ஒவ்வொருத்தரும் தயாரா இருக்கோம். இந்த நாட்டு சரித்திரத்த எடுத்து புரட்டிப்பாருங்க. அதுதானே நடந்துச்சு. அன்னைக்கி ஜப்பாங்காரனும் வெள்ளைக்காரனும் படுத்திய பாடு தாங்க முடியாம எல்லாரும் ஒன்னா ஒத்துமையா இருந்து சுதந்திரக்குப் போராடினோம். ஜெயிச்சோம். இன்னைக்கு என்னா ஆச்சு?”

“என்னா ஆச்சு?”

நாடு வளமாயிருச்சி. வெளியே போராட்டங்கள் குறைஞ்சி போச்சு. அதனால ஒவ்வொரு இனமும் ஒரு திசையில முகத்த திருப்பிகிட்டு தன் இனத்தை எப்படியாவது காப்பாத்திக் கரைசேர்க்க முனைப்பு காட்டுது. அது இயற்கை. தப்பில்ல. ஆனா பக்கத்துல இன்னொரு இனத்துக்காரன் அழுது புலம்பறது தெரியாம, அவன் துயரத்த கண்டும் காணாம, கிடைச்சத வாரி சுட்டிகிட்டு கிளம்பற மோசமான நிலம இருக்கே. அதை நெனச்சாதான் எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்கு.”

“இதற்கு வழி?”

“சுனாமி மாதிரி வெளியே இருந்து ஒரு துயரம் தாக்குனா அப்ப எல்லாரும் ஒன்னா சேர்வோம். மத்தவங்க துன்பத்த தாங்க தோள் கொடுக்க தயாரா இருப்போம். எல்லா இன தலைவர்களும் முதல்ல அவங்க இத உணருனும். அவங்க இனத்துக்கும் உணர்த்தனும்”

எனக்குத் தெளிவாகப் புரிந்தது. மைக்கலுக்குக் கண்பார்வை மட்டும்தான் இல்லை. அதற்குள் அலுவலத்திலிருந்து வேதா மூன்று முறை குறுஞ்செய்தி அனுப்பிவிட்டார். ‘பாலு, எங்க போய் தொலைஞ்ச? சீக்கிரம் வாயா. வேல தலைக்கு மேல இருக்கு’ அனைவரிடமும் மீண்டும் விடைபெற்றுக்கொண்டு அலுவலகத்துக்கு விரைந்தேன். என் வேலையை வேதாவிடம் தள்ளிவிட்டு என் மனத்தின் உணர்வுகளைப் பிசைந்துகொண்டிருந்த அன்றையப் பேட்டியை ஒரே மூச்சில் கணினியில் டைப் செய்து சிரியரிடம் அனுப்பினேன். மறுநாள் அழைத்தார். “பாலு, எதிர்பார்த்தபடி பேட்டி சிறப்பா வந்திருக்கு. பாராட்டுக்கள். ஆனா.. உங்க பேட்டி இன்னும் மூன்று வாரம் கழிச்சிதான் வரும். இங்க பாருங்க இந்த படங்களை. இது இரண்டு வாரங்களுக்கு போகும். இதற்குத்தான் இப்ப நீயூஸ் வேல்யூ அதிகம்.

பார்த்தேன். கோடம்பாக்கமே அணி திரண்டு வந்ததுபோல் சினிமா நடிகைகள் அரை குறையான இறுக்கமான ஆடைகளில் உள்ளூர் மேடையில் போடும் கிளுகிளுப்பான ஆட்டத்ததை எங்கள் பத்திரிகையின் புகைப்படக் கலைஞர் மாதவன் பல கோணங்களில் தன் முழுத்திறமையைப் பயன்படுத்திப் பதிவு செய்திருந்தார்.

நினைவின் நீரோடை (சிறுகதை)


வீட்டிற்கு வெளியே வந்து வானத்தை அண்ணாந்து நோக்கினேன். அங்கே இறைந்து கிடக்கும் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல் தோன்றியது. மௌனத்தைப் பூசி மெழுகிப் பரந்து விரிந்த வானத்தில் நட்சத்திரங்கள் கண்களைச் சிமிட்டியவாறு என்னிடம் ஏதேதோ பேசின. இயற்கையை நெருங்கும் போதெல்லாம் இனம்புரியாத அமைதியும் ஆனந்தமும் மனத்தில் பிரவகிப்பதை உணரமுடிகிறது.

வீட்டில் தீபாவளிப் பரபரப்பு உச்சத்தில் இருந்தது. பலகாரம், புத்தாடைகள், வீட்டு அலங்காரம் என ஏற்பாடுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் அம்மாவுக்கும் மனைவிக்கும் இன்னும் வேலை முடியவில்லை. விடிந்தால் தீபாவளி ஆதலால் கடைசிநேர வேலைகளில் மூழ்கிவிட்டார்கள். என்னை வேறு, அரிசி மாவு வாங்கி வா, அரை மூடித் தேங்காய் வாங்கி வா என அடிக்கடி கடைக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.

பிள்ளைகளின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பள்ளித்தேர்வுக்குப் புத்தகமும் கையுமாக இருந்தவர்கள் இப்பொழுது மத்தாப்பும் கையுமாக மாறிவிட்டார்கள். இருள் அப்பிய வெளியில் மத்தாப்பைக் கொளுத்தி ஒளிச்சித்திரங்களை வரைந்து ரசித்தார்கள்.

அவர்களைப் பார்க்கையில் தோட்டத்து லயங்களில் நான் என் வயது ஒத்த தோழர்களோடு பட்டாசும் மத்தாப்பும் கொளுத்தி மகிழ்ச்சியில் கழிந்த நாட்கள் என்னுள் நிழலாடத் தொடங்கின. எங்கே இருக்கிறார்களோ அந்தச் செல்லையாவும் மனோகரனும் மோகனும் சேகரும். அவர்களோடு மீண்டும் மத்தாப்புக் கச்சேரி நடத்த மனம் ஆசைப்பட்டது. கற்பனையில் எல்லாம் சாத்தியம்தான். கொஞ்சநேரம் கண்களை மூடி அவர்களை மனத்தில் படம் பிடித்தேன்.

“அப்பா, நீங்களும் வாங்க. எங்களோடு விளையாடுங்க. இந்தாங்க மத்தாப்பு” மகள் என்னையும் அழைத்தாள். கொஞ்சநேரம் அவர்களோடு வயதைத் தொலைத்து மத்தாப்பின் ஒளிச் சிதறல்களில் ஒன்றினேன். பக்கத்து வீடுகளில் உள்ள மலாய், சீனப் பிள்ளைகளும் ஆர்வத்தோடு நெருங்கி வந்து மத்தாப்பு கொளுத்தத் தொடங்கினார்கள்.

கொஞ்ச நேரத்தில் ஏதோ நினைவு வந்தவனாக வீட்டின் மாடிக்கு வந்தேன். வழக்கம்போல் இந்த ஆண்டு தீபாவளிக்கும் அப்பாவும் அண்ணனும் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்கள் வருகிறார்களோ இல்லையோ, அவர்களை எப்படியாவது வரவழைத்து விடுவேன். அவர்களோடு பேசிக்கொண்டிருப்பதே எனக்கு அலாதியான இன்பம்.

அப்பாவும் அண்ணனும் இன்னும் மாறவில்லை. அப்படியே இருந்தார்கள். அண்ணன் என் மேசையில் அடுக்கப்பட்டிருந்த கவிதை நூல்களில் ஒன்றைப் படித்து அதில் மூழ்கிப் போயிருந்தார். அப்பா அரைக்கால் சிலுவார், வெள்ளைப் பனியன் அணிந்து சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறு சுருட்டு பிடித்துக்கொண்டிருந்தார். இறுக்கமான முகம். ஏதோ சிந்தனையின் வசமாகி மோட்டு வளையில் பார்வையைப் பதித்திருந்தார்.

அப்பா எப்போதுமே எனக்குப் புதிர்தான். அவருக்கும் எனக்கும் நிகழும் உரையாடல்கள் வழக்கமாக ஒரு சில சொற்களில் முடிந்துவிடும். சொற்களின் நீட்சிக்காக மனம் பல நாட்கள் ஏங்கித் தவித்திருக்கிறது. மனத்துக்குள்ளேயே பேசிக்கொள்வாரோ? மனிதர்களோடு பேசுவதற்கு விருப்பம் இல்லாமல் மனத்தில் விரக்தி படர்ந்திருக்குமோ? உள்ளே அன்பிருந்தும் அதை வெளியே காட்ட முடியாத மனிதரா? இருபத்தேழு ண்டுகால கேள்வி இது. இனியும் விடை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.

“பொஞ்சாதி புள்ளைக்கு துணிமணி வாங்கிட்டியா?” சுருட்டை விரல்களுக்கு இடம் மாற்றிப் புகையை ஊதியவாறு என்னைப் பார்த்தார்.

“வாங்கிட்டேன்பா. உங்களுக்கும் அண்ணனுக்கும் கூட சட்டை வாங்கியிருக்கேன்.”

“எங்களுக்கு எதுக்குடா? நீ நல்லா இருக்கிற. அந்த சந்தோசம் போதும்டா எங்களுக்கு. உனக்கு ஞாபகம் இருக்கா? எஸ்டேட்டுல நீ சின்னப் பயலா இருந்தபோ ஒவ்வொரு தீபாவளிக்கும் புதுச்சட்ட இல்ல, புது சிலுவாரு இல்லன்னு அடம்புடிச்சிகிட்டு காலையில எந்திருக்க மாட்டே. ரொம்ப கஸ்டப்படுத்துவடா எங்கள..” அதிசயமாக அப்பாவின் வாயிலிருந்து சொற்கள் அருவியாகப் புறப்பட்டன.

“ஆமாம்பா. உங்க நிலம அப்ப எனக்கு புரியல. சின்ன வயசு. சம்பளம் போதாம நீங்க பட்டபாடு உங்களுக்குத்தானே தெரியும்..” கித்தா மரங்களைச் சீவி அப்பாவும் அம்மாவும் நடத்திய வாழ்க்கைப் போராட்டம் இப்பொழுது எனக்குப் புரிகிறது.

“ஒருமுற செனயா இருந்த செவல ஆட்ட மேச்சலுக்கு ஓட்டிகிட்டு போயி தொலச்சிட்டு வந்திட்ட. இந்த கையால ஒன்ன அன்னைக்கி அறஞ்சிருக்கேன். ஒங்க அம்மாகூட ஏங்கூட சண்டைக்கு வந்திட்டா.” என்றோ நடந்துபோன நிகழ்வை அப்பா ஞாபகப்படுத்துகிறார். என்னால் எளிதில் மறக்கக்கூடிய நிகழ்வா அது? சில நிகழ்வுகள் எத்தனை ஆண்டுகள் கடந்துபோனாலும் உள்மனத்தில் உயிர்ப்போடு உலவிக்கொண்டே இருக்கும். எந்தக் கறையானும் அவற்றை அரித்துவிட முடியாது. அவை ஏற்படுத்திய ரணங்கள் என்றும் ஆறுவதில்லை.

“அத எப்படிப்பா அவனால மறக்கமுடியும்? நீங்க அறஞ்ச பிறகு அன்னைக்கி முழுதும் றாம் நம்பரு நெரையில அழுதுகிட்டு ஒக்கார்ந்திருந்தானே? நான்தான அவன போயி கூட்டியாந்தேன். அந்த சென ஆட்ட தேடி கித்தா காடு முழுக்க ஒரு வாரமுல்ல அலஞ்சிருக்கோம். இவனும் சாப்பிடாம கொள்ளாம கொஞ்ச நாளா ஒரு மாதிரியா இல்ல கிடந்தான்” அண்ணனின் நினைவுகளிலும் அந்த ஆட்டுச் சம்பவம் அப்படியே பதிவாகியிருந்தது.

அப்போது, மகள் அறைக்கதவைத் திறந்துகொண்டு “அப்பா, அண்ணன பாருங்க. அடிக்க வரான்” என அறைக்குள் ஓடிவந்து என் நாற்காலி பின்னால் பதுங்கினாள். கண்களில் நீர்த்திவலை. கையில் தீபாவளி முறுக்கு.

“அப்பா, இத அடிக்காம என்னா செய்யிறது. பாட்டி செஞ்சி வச்ச முறுக்க எடுத்து இப்பவே சாப்பிடுது. இன்னும் சாமிகூட கும்பிடுல” மகன் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தான்.

“சாப்பிட்டா என்னப்பா. சொல்லுங்க இவங்கிட்ட” மகள் என்னிடம் மேல்முறையீடு செய்தாள். கொஞ்சம் ஏமாந்தால் முறுக்குச் சண்டை இரத்தக்களறியில் முடிந்துவிடும். இருவரையும் ஒருவழியாக சமாதானப் படுத்தி அனுப்பிவைத்தேன்.

அப்பா மீண்டும் சுருட்டின் சுகலயத்தில் ஆழ்ந்து கண்களை மூடி அதன் வசமாகியிருந்தார். அண்ணன் கைகளில் இப்பொழுது என் கவிதைக் கோப்பு. ஒவ்வொரு கவிதையையும் ஆழ்ந்து வாசித்து அவற்றுள் ஒன்றிப் போயிருப்பதை என்னால் உணரமுடிந்தது. நான் ஒரு படைப்பாளியாக உருவாகக் காரணமே அவர்தானே? அவரின் சிறுகதைகளைப் படித்துத்தானே நான் எழுதத் தொடங்கினேன். என் கவிதைகளில் அவர் தன்னைத்தானே தரிசிக்கிறாரா?

“எனக்குப் பெருமையா இருக்குடா. நான் எவ்வளவோ எழுதுணும்னு ஆசைப்பட்டேன். உனக்கும் தெரியும். அதெல்லாம் முடியாம போயிருச்சு. எனக்கு அப்பவே தெரியும். நீயும் ஒரு படைப்பாளியா உருவாக முடியும்னு. ஆனாலும் உன் எழுத்துத் தீவிரம் போதாதுன்னு எனக்குத் தோணுது. நிறைய படி. வித்தியாசமா எழுது. செக்குமாடு மாதிரி எதுக்கு எழுதியதையே மீண்டும் எழுதிக்கிட்டு?” படைப்பு குறித்த ழ்ந்த ஈடுபாடு அவருக்கு இன்னும் குறையவில்லை.

“சொன்னதையே மீண்டும் சொல்லவேண்டிய சூழல் இங்கே இருக்குதே. ஆனாலும் நீங்க சொன்னீங்களே வித்தியாசமா எழுதணும்னு. அதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஒவ்வொரு முறையும் படைப்பு முயற்சியில ஈடுபடும்போது அந்த எண்ணம்தான் முன்னே நிற்கிது. ஆனா, சில வேளைகளில்தான் அது சாத்தியமா இருக்கு.” என் நிலையை அண்ணனிடம் விளக்கினேன்.

“நீ சொல்றதும் உண்மைதான். ஆனா புதிய முயற்சில ஈடுபடுறத விட்டுறாத. உன் கவிதையெல்லாம் புரட்டிப் பார்த்தேன். முன்பு தோட்டப்புறத்தப் பத்தி எழுதுவே. இப்ப நவீன வாழ்க்கையின் நலிவு பத்தி எழுத முயற்சி பண்றே. இன்னும் இந்த வாழ்க்கையின் உள்ளே ஆழ்ந்துபோ. அப்பதான் உன் பதிவு உயிர்ப்பா இருக்கும்.” இலக்கியம் குறித்து என்னோடு விரிவாகப் பேச அண்ணனை விட்டால் எனக்கு யார் இருக்கிறார்கள்? ஒத்த உணர்வு உள்ளவர்கள் நம் பக்கத்திலே எப்போதும் இருப்பது சாத்தியமில்லையே.

தமிழின் ருசியை எனக்குக் காட்டியவர் அண்ணன்தான். தோட்டத்து வீட்டில் வசித்தபொழுது அவர் வாங்கி அலமாரியில் அடுக்கி வைத்திருந்த நூல்கள்தான் என் புலன்களின் பசியைத் தூண்டிவிட்டன. அது மட்டுமா? நண்பர்களோடு தோட்டத்தில் அவர் அமைத்த கலைமகள் நூலகத்தையும் மறக்கமுடியுமா?

அப்பா இன்னமும் சுருட்டின் புகையோடு ஐக்கியமாகி தவத்தின் பிடியில் சிக்குண்ட மௌனத்துறவியாக அமர்ந்திருந்தார். அப்பொழுது அறைக்கதவைத் திறந்து அம்மா உள்ளே எட்டிப் பார்த்தார். மூத்துத் தளர்ந்த உடல். மொத்தமாய் நரைத்துப் போன தலை. வெற்றிலைக் காவியேறிய பற்கள். பல ஆண்டுகளாக வலப்பக்கக் காலின் வலியால் நடக்கும்பொழுது கொஞ்சம் இழுத்து இழுத்து நடக்கும் நிலை அம்மாவுக்கு.

“என்னம்மா, எல்லா பலகாரமும் ரெடிதானே? வேலை எல்லாம் முடிஞ்சதா?”

“ஏண்டா, நல்ல நாளும் பெருநாளுமா சட்டுபுட்டுன்னு குளிச்சோம்மா, வீட்ட அழகுபடுத்துவோம்மான்ணு இல்லாமா ஏன் இப்படி உட்கார்ந்திருக்கிற.. சீக்கிரம் கடைக்குப் போய் பூஜை எண்ணெய் வாங்கிட்டு வா.”

அம்மா ஒன்றைச் சொன்னால் அப்பொழுதே செய்து முடித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் இடைவிடாது முனகிக்கொண்டே சொற்களால் தாளித்துவிடுவார். உடனே குளித்தேன். கடைக்குப்போய் பூஜை எண்ணெய்யோடு வந்தேன்.

மீண்டும் அறைக்குள் நுழைந்தேன். அப்பா மௌனம் கனத்துத் தேங்கிய முகத்தோடு சன்னல் கண்ணாடி முன் நின்று வெளிப்பார்வையாக இருந்தார். ஓர் ஆண்டு இடைவெளியில் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் அண்ணனுக்கு என் அறையில் நிறையவே இருந்தன. கவிதைகளை ஒன்று விடாமல் அலசினார். விட்ட இடத்திலிருந்து என்னுடன் பேசத்தொடங்கினார். வீட்டுக்கு வெளியே எங்கோ பட்டாசு வெடிச்சத்தம் தொடர்ந்து கேட்டது. பட்டாசு வெடிக்கக்கூடாது என்ற அரசின் தடையைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லையே! தடைகளை மீறுவதே ஒரு தனிச் சுகமோ?

“இவ்வளவு காலம் எழுதுறியே, உனக்கான ஒரு கவிதை மொழி இருக்கா? இதப்பத்தி யோசிச்சிருக்கியா? மரபோ புதிதோ எதை வேண்டுமானாலும் எழுது. ஆனா உன் ஆளுமையைக் காட்டும்படியான கவிதை மொழி உனக்குத் தனியாக அமையவேண்டும். மற்ற படைப்பாளிகளிடமிருந்து உன்னை வேறுபடுத்திக்காட்டும் கவிதைமொழி.”

“எனக்கான கவிதை மொழியைக் கண்டடையும் முயற்சியில் இன்னும் இருக்கிறேன். இது நாளைகூட சாத்தியமாகலாம்.”

அண்ணன் இதழ்களில் அரும்பும் புன்னகையோடு என்னை நோக்கினார். “அப்படியா, சரி அதை விடு. டாக்டர் மு.வ. ஒரு நல்ல ஆசிரியர். ஆனா, அவர் ஒரு படைப்பாளி அல்லன்னு ஒரு கருத்து இங்கே சொல்லப்பட்டுச்சே. அத பத்தி உன் எண்ணம் என்ன? எதிர்வினையாற்றல் என்பது முக்கியம் இல்லையா?”

நா.பார்த்தசாரதி, மு.வ., அகிலன், ஜெயகாந்தன் போன்றோரின் நூல்களைப் படித்துதான் அண்ணன் எழுதத் தொடங்கினார். அவர் மனத்தின் மதிப்பீடுகளில் அவர்கள் எவ்வளவு உயர்ந்து நிற்பார்கள் என்பதை நான் நன்கறிவேன்.

“அவர்கள் நம் இலக்கிய முன்னோடிகள். நம் இலக்கியப் பரப்பில் சலனத்தை ஏற்படுத்தியவர்கள். தரமான வாசகக் கூட்டத்தைக் கொண்டிருந்தவர்கள். இப்பொழுது உள்ள நவீன இலக்கியக் கொள்கை என்ற கண்ணாடியை மாட்டிக்கொண்டு அவர்களின் படைப்புகளின் மீது திறனாய்வு விளக்கை அடித்துப் பார்ப்பது பிழை. என் எதிர்வினையாற்றல் இப்படித்தான் இருந்திருக்கும்ணா”

“இன்னொன்றையும் நீ கவனிக்கணும். இன்னும் இருபது வருசம் கழித்து வரப்போற அதிநவீன படைப்பாளிகள் இப்போது உள்ள நவீன படைப்பாளிகளை மறுதலிக்கும் நிலை வருமே. யோசித்துப் பார்த்தியா?” நானும் அதை யோசித்துப் பார்த்திருக்கிறேன்.

அப்பொழுது என் மூத்த மகள் அறைக்குள் வந்தாள். “அப்பா, உங்களுக்கு வந்த தீவாளி வாழ்த்துக் கார்டுகள கொடுங்க. கீழே சுவருல அழகா ஒட்டலாம்.” அங்கங்கே கிடந்த கார்டுகளைத் தேடி எடுத்துத் தந்தேன். “அப்பா, உங்களுக்கு கேல் பிரன்ஸ¤ம் அனுப்பி இருக்காங்கபோல.. இருங்க அம்மாகிட்ட சொல்றேன்..” மகள் கிண்டலடித்துக்கொண்டு போனாள்.

அப்பா எதையோ சொல்ல வந்து தயங்கினார். “என்னப்பா, சொல்லுங்க’ என்றேன். “நாம எஸ்டேட்டுல இருந்தப்போ நம்ம குடும்பத்துல மனம்விட்டு கலந்துபேசறது ரொம்ப கொறவுடா.. மனசுல அன்பு இருக்கும். ஆனா வெளிய காட்டிக்க மாட்டோம். அது ஒரு காலம். ஆனா நீ என்ன மாதிரி இல்லாம பிள்ளைங்ககிட்ட நல்லா கலகலப்பா பேசறடா.. என் தவறு இப்ப எனக்குப் புரியுது..” காலங்கடந்து அப்பா வருந்துகிறார். அவருக்கு என்ன சொல்லித் தேற்றுவது? எனக்குத் தெரியவில்லை.

அண்ணன் என் படிக்கும் மேசையை நோட்டமிட்டார். “உன் மேசையைப் பார்த்தா வார மாத இதழா நெறைய கிடக்குதே. இத படிக்கவே உனக்கு நேரம் சரியா இருக்குமே. அப்புறம் எங்கே தீவிர இலக்கியப் பக்கம் நீ போறது?” அண்ணனின் கேள்வி நியாயமானதுதான்.

“எல்லாம் உங்களால வந்த பழக்கம். இப்ப போதைப்பழக்கம் மாதிரி ஆயிடுச்சு. சாயங்காலமானா தேத்தண்ணி என்கிற தேவபானத்துக்கு நாக்கு அலையுது. அதுமாதிரிதான் இதுவும். கொஞ்சம் கொஞ்சமாத்தான் இந்த போதை வஸ்துகிட்ட இருந்து என்னைக் காப்பாத்திக்கணும்.”

“நொறுக்குத் தீனி சுவையா சுகமாகத்தான் இருக்கும். ஆனா உடலுக்கு பயன் இல்லையே. இலக்கியத்திலும் நொறுக்குத்தீனிய ஒரு அளவா வச்சுகிட்டு சத்துள்ள சாப்பாடா தேடிச் சாப்பிடு. அப்பதான் இலக்கியத்தில நீ ஏதாவது இலக்க அடைய முடியும்.”

“மேலே என்னா செய்றீங்க? நேரமாச்சு. சீக்கிரம் வாங்க. கதை கவிதைன்னு உட்கார்ந்திராதீங்க” கீழிருந்து மனைவியின் குரல் உரக்கக் கேட்டது. என் போக்கில் என்னை விட்டுவிட்டு குடும்பச் சுமையின் பெரும் பகுதியைத் தானே சுமப்பவள் அவள். “அப்பா, படையல் போட நேரமாச்சு. அம்மா கூப்பிடுறாங்க. கீழே வாங்க” இப்பொழுது மகனின் குரல் கேட்டது. “மருமக கூப்பிடுது. போய் படையல போடு” அப்பா அவசரப்படுத்தினார்.

“அப்பா, அண்ணா நீங்களும் வாங்க.” இருவரையும் அழைத்தேன்.

“நாங்க இல்லாமலா, நீ முதல்ல போ. நாங்களும் வரோம்.” அண்ணன் கூறினார்.

மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தேன். வரவேற்பறையின் ஓரத்தில் படையலுக்குத் தேவையான பலகாரங்கள், பழங்கள், புத்தாடைகள், சூடம், சாம்பிராணி கிய அனைத்தும் தயாராக இருந்தன. ஊதுபத்தியின் நறுமணம் என் நாசியை நனைத்தது. விளக்கேற்றி தீபத்தை மும்முறை காட்டினேன். படையலில் நடுநாயகமாக இருந்த படங்களிலிருந்து அப்பாவும் அண்ணனும் என்னைப் புன்னகையுடன் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர்.


ந. பச்சைபாலன், காஜாங் (2007)

வாக்குமூலம்


என்னை வேடிக்கை பார்க்க
உள்ளே வருகிறீர்கள்

நான் சரிந்துகிடக்கும் அறையின்
சிமெண்டுத் தரையின் குளிர்வதை
என்னை எழுப்புகிறது

உடலெங்கும் எரியும் ரணங்கள்வழி
கசிந்து வெளியேறுகிறது என் உயிர்

சொல்லமுடியாத இடங்களிலும்
என்னைப் பிடித்துத் தின்கிறது வலி

காலணி மிதித்த இடங்களில்
கன்றிப்போயிருக்கும் தோல்

என் மேல் விளையாடிய கட்டைகளால்
தாறுமாறாய் முதுகிலும் மார்பிலும்
கோடுகள்

சிமெண்டுத் தரையிலும் சுவரிலும்
சிந்திக்கிடக்கும் இரத்தத் துளிகள்

காக்கும் இந்நிலையம் காரணப்பெயர்
என்று நம்பியிருந்தேன்
இது இடுகுறிப்பெயரென்பது
இப்பொழுது புரிந்தது

திடீரென்று அந்நிய குரல்கள்
அறையை ஆக்கிரமிக்கின்றன

ஐந்தாவது சுற்றுக்கான விசாரணை
தொடங்கிவிட்டது

நீங்கள் போய் விடுங்கள்

என்மேல் விழும் ஒவ்வோர்
அடிஉதையும் விழுகிறது
உங்கள் அறியாமையிலும்

Wednesday, February 17, 2010

என் பார்வையில்.. (கவிதை ஆய்வு)


மலேசிய தேசியப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆண்டுதோறும் தேசிய அளவில் இளையோருக்குச் சிறுகதை, கவிதைப் போட்டிகளை நடத்தி அவற்றை நூலாக்கும் வரிசையில் இது 13வது இலக்கிய முயற்சியாகும். 1997இல் தொடங்கிய இலக்கியப்பணி விடாமுயற்சியோடு தொடர்வது நெஞ்சுக்குள் ஆச்சரியங்களை அள்ளி இறைக்கிறது.

நூல் வெளியிடுவது எளிய பணியன்று. அ·து அரும் பணி. தேர்வுக்காகப் பாட நூல்களுக்குள் கூடுகட்டிக்கொண்டு வாழாமல் தமிழ்த்துறை இல்லாத நிலையிலும் படைப்பிலக்கியத்திற்குத் தம் பங்களிப்பை ஆண்டுதோறும் வழங்கி வருகிற செயல்துடிப்புமிக்க மாணவர்களை வாழ்த்துகிறேன்.

16 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்ட கவிதைப்போட்டிக்கு இம்முறை 160 கவிதைகள் வந்து குவிந்தன. எண்ணிக்கையளவு தரத்திலும் இருக்கவேண்டுமே என்ற இதயவேண்டுதலோடு கவிதைகளை ஆராய்ந்தேன். கொஞ்சம் வியப்பு, கொஞ்சம் ஆறுதல், கொஞ்சம் ஏமாற்றம் என கலவையான மனநிலைக்கு ஆளானேன்.

மலேசியாவில் 1964இல் தமிழ் முரசில் சி.கமலநாதனின் “கள்ள பார்ட்டுகள்” எனும் மரபு மீறிய முதல் கவிதை வெளியானது. 45 ஆண்டு காலக்கட்டத்தில் இந்தப் புதிய கவிதையின் வளர்ச்சி பல்வேறு பரிணாமங்களை எட்டிப்பிடித்துள்ளது. புதுக்கவிதைக் கருத்தரங்கம், புதுக்கவிதைப் போட்டி, புதுக்கவிதை நூல்கள் என இப்புதிய கவிதை தன் பயணத்தைத் தொடர்கிறது. வல்லினம், அநங்கம், மௌனம் போன்ற தீவிர இலக்கிய இதழ்கள் நவீன கவிதையின் வளர்ச்சிக்கு நெம்புகோல்களாகி அதன் அடுத்தகட்ட பயணத்திற்குப் பாதை அமைக்கின்றன.

மரபான கவிதை வடிவத்திற்கு எதிரான கலகமாக உருவெடுத்த கவிதை காலந்தோறும் தனக்கான மொழியை புனரமைக்கும் முயற்சியில் உள்ளது. 1980இல் மலேசியாவில் எழுதப்பட்ட புதுக்கவிதைகளுக்கும் புத்தாயிரத்தில் எழுதப்படும் நவீன கவிதைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை ஆழ்ந்து நோக்கினால் இதனை உணர முடியும்.

இன்றையை கவிதை பழைய பிரச்சார பாணியை விடுத்து, அழகியல் கூறுகளைப் புறமொதுக்கி, சொல் விளையாட்டுகளை விட்டு விலகி, அலங்காரங்கள் இல்லாமல் உரைநடைத் தன்மையிலேயே வாசகனை நெருங்கி வருகிறது. இன்றைய கவிதை இதுவரை சொல்லாத வாழ்வின் கணங்களைப் பதிவு செய்கிறது; எந்தக் கருத்தாக்கத்தையும் கேள்விக்குட்படுத்துகிறது; மதிப்பீடுகளைக் கலைத்துப் போடுகிறது; எழுதி எழுதி சலித்துப்போன வழக்கமான சொல்லாடல்களை விலக்குகிறது; மனத்தின் ழங்களை திறந்து காட்டுகிறது. மொத்தத்தில் படைப்பாளிகள் தங்களைப் தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ள கவிதை மொழி நெகிழ்ந்து கொடுக்கிறது.

இம்முறை போட்டிக்கு வந்த கவிதைகள் இருவகைகளில் (பழைய முறையிலும் புதிய முறையிலும்) அமைந்துள்ளன. இன்று இளையோரிடையே கவிதை எழுதும் ஆர்வம் தணியாமல் இருப்பதைப் போட்டிக்கு வந்த கவிதைகள் அறிவிக்கின்றன. போட்டிக்கு வந்த படைப்புகளின் எண்ணிக்கை மகிழ்வைத் தந்தாலும் அவற்றின் தரம் மனத்திற்கு நெருடலைத் தருகிறது.

மாறிவரும் கவிதையின் போக்கைப் பல கவிதைகளில் காண முடியவில்லை. ஒரு படைப்பாளியின் வாழ்க்கை அனுபவத்தோடு பரந்த வாசிப்பு அனுபவமும் இணையும்போதுதான் கவனத்தைக் கவரும் படைப்புகள் தோன்றும். உள்ளூர் ஏடுகளில் அச்சில் வரும் படைப்புகளை மட்டும் வாசித்துவிட்டு அவற்றையே கவிதைக்கான முகவரியாக ஏற்றுக்கொள்ளும் நிலையை நம் படைப்பாளர்கள் கட்டாயம் தவிர்க்கவேண்டும். அவற்றை நகலெடுத்து அதே பாணியில் எழுதுவதால்தான் நீர்த்துப்போன, உள்ளடக்கப் புதுமையில்லாத, தரமான வாசகனின் பொறுமையைச் சோதிக்கும் படைப்புகளாக அமைந்துவிடுகின்றன.

கவிதையில் எல்லாவற்றையும் சொல்லத்துடிக்கும் ஆர்வம் அதன் கலைநேர்த்தியைச் சிதைத்துவிடலாகாது. எல்லாவற்றையும் விளக்கிச் சொல்வது கட்டுரையின் வேலை. கவிதை தேர்ந்த சொற்களால் வாசகனின் மனத்தில் கல்லெறிந்து சலனத்தை ஏற்படுத்துகிறது. கவிதையில் சொல்வதைவிட உணர்த்தலே முக்கியம்.

இனி, பரிசுக்குரிய படைப்புகளையும் தேர்வான படைப்புகளையும் உங்களின் பார்வைக்குக் கொணர்கிறேன்.

‘திரும்பவும் ஒரு பறவை’ முதல் பரிசைப் பெறுகிறது. இதில் நகரம் துயரப் பெருவெளியாக நம் கண் முன்னே விரிகின்றது. அங்கு வெறுமைக்கும் பரபரப்பான இயந்திரகதி வாழ்வுக்கும் இரையாகும் மனிதனைக் காட்சிபடுத்துகிறது.

சுவர்களில் படிந்திருந்த
வெயிலை விழுங்கத் துவங்கினார்கள்
சில பரபரப்புகளுடனும் அவசரத்துடனும்
ஒருவரை ஒருவர் கடந்து சென்றுகொண்டிருந்த
நிர்பந்தத்தில்

நகரத்தில் மனிதரைப்போல் பறவைகளும் புறக்கணிக்கப்படுகின்றன. மீண்டும் மீண்டும் அவை நகரம் திரும்பி நகரச் சந்தையில் காணாமல் போவதுபோல் மனிதனும் கரைந்து காணாமல் போகும் கொடுமை குறியீடாகக் காட்டப்படுகிறது. அன்பானவர்களை, உறவுகளை நகரப் பெருவெளியில் தொலைத்துவிட்டுத் திரியும் மனிதனின் உள்ளார்ந்த வலி இதனில் உரக்கக் கேட்கிறது.

நேற்றைய அனுபவங்களும் இரைச்சல்களும்
பெரும் கூச்சலுடன்
ஒரு பறவையைப் போல
நகரம் திரும்பியது

மீண்டும் முதலிலிருந்து
அடுக்கத் துவங்கினேன்
தொலைந்தவர்கள் பற்றியும்
தொலைத்தவர்கள் பற்றியும்

தோட்டப்புறங்களை விட்டு, நகரங்களை நோக்கி நகரும் மனிதர்கள் அங்கே அந்நியப்பட்டு விளிம்பு மனிதர்களாகிவிடும் நவீன வாழ்வின் நலிவை இங்கே ஆழமாக உணரமுடிகிறது. பறவையைப்போல் மனிதன் மீண்டும் மீண்டும் அங்கே திரும்பிக்கொண்டிருக்கிறான். வாழ்க்கையை வயிற்றுக்கு விற்றுவிட்டவனால் வேறு என்னதான் செய்ய முடியும்?

‘வார்த்தைகளும் காயங்களும்’ இரண்டாம் பரிசைப் பெறுகிறது. மனித வாழ்க்கையே சொற்களால் பின்னப்பட்டுள்ளது. நம்மை மாற்றிக்கொள்ள முக்கியத் தேவை சொற்கள்தாம். மனத்தில் உள்ளதை எப்படிப் பேசவேண்டும் என்பதையும் பிறரைக் காயப்படுத்தாமல் எப்படிச் சொற்களை வெளிப்படுத்தவேண்டும் என்பதையும் பலர் அறியாமல் இருக்கின்றனர். சொற்கள் விதைகளாகி நமக்கு சிறந்த விளைவைத் தரும் என்ற சிந்தனையை இக்கவிதை நமக்குத் தருகிறது.

வார்த்தைகள் பல
என்னைச் சுற்றி
உதிர்ந்து கிடக்கின்றன
உயிரோடும் உயிரற்றும்..
சில சமயம்
வார்த்தைகளுக்குக்
கைகள் முளைக்கின்றன..
முளைத்த கைகள்
மெல்ல நீண்டு
கழுத்தை நெரிக்கின்றன..

ஆசிரியரின் சொற்கள் மந்திரமாகி, மருத்துவரின் சொற்கள் மருந்தாகிப் பலரின் வாழ்வில் திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. பிறரைப் புறக்கணிக்காத, அவமதிக்காத சொற்களால் பெரும் நன்மைகள் விளைகின்றன என்ற கருத்தை இக்கவிதை வலியுறுத்துகிறது.

புன்னகையோடு
வார்த்தைகளை அணிந்துகொள்ள
தொடங்கிய நாள்முதல்
வார்த்தைகளின் கைகள்
இறுக்கம் தளர்ந்து
காயப்பட்டுக் கிடக்கின்றன

‘தேநீர் மிச்சங்களில் சில எச்சங்கள்’ மூன்றாம் பரிசைப் பெறுகிறது. இதன் பாடுபொருள் பழையது என்றாலும் பெண் பார்க்கும் படலத்தில் பெண்ணுக்கு நேரும் அவமானங்களை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது.

ஆரம்பமே
தொழில் தொடங்கி
கல்வியில் நிற்க..
உன் முதுகலையும்
என் இளங்கலையும்
முரண்பாடுகளில்

இன்றைய நிலையில் உறவை நிச்சயிப்பதில் கல்வியிலும் பொருளாதாரத்திலும் காணும் ஏற்றத்தாழ்வுகள் இடையூறாக இருக்கும் கொடுமையை இது படம் பிடிக்கிறது. ஒப்புக்கு அரங்கேறும் உரையாடல்களில் பெண்ணின் மன உணர்வுகள் புறக்கணிக்கப்படும் நிலையை பின்வரும் வரிகள் நம் முன்னே காட்சிகளாக்குகின்றன

பிடித்தது பிடிக்காதது
அரசியல்
மார்க்சியம்
கடவுள் என
உன் கொள்கைப் பரப்புகளை
மலையாய்ப் பேசி முடித்து
துளியாய் என்னையும்
கேட்டு வைத்தாய்

‘புத்தகங்களுக்குள் எனது சமாதி’, ‘உயிர் சுடுகிறது’, ஒரே மலேசியா’, ‘வலித்தாலும் சிரிக்குதம்மா எம் மனசு’ கிய நான்கும் றுதல் பரிசுகளைப் பெறுகின்றன. புத்தகங்கள் மனிதச் சிந்தனையின் சேமிப்புக் கிடங்குகளாகி அவனின் உயர்வுக்கு அடித்தளமாக உள்ளன. ஆனால், வெறும் ஏட்டுக்கல்வியினால் முழுமையான மனிதனை உருவாக்க முடியாது. புத்தகங்கள் மனிதனை மீட்டெடுப்பதை விடுத்து அவனை உள்ளீடற்ற மனிதனாக, மூளைக்குள் தகவலைச் சேமிக்கும் இயந்திரமாக உருவாக்கும் கொடுமையைப் ‘புத்தகங்களுக்குள் எனது சமாதி’ கவிதை பேசுகிறது. புத்தகங்களுக்குள் வலிந்து தள்ளப்படும் மனிதன் அவற்றை வெறுத்து ஒதுக்கிறான்.

என் மனமும் கவனமும்
லயிக்காத அந்தப் புத்தகச் சிறைக்குள்
எல்லாரும் விரும்பித் தள்ளிவிடுகிறார்கள்

என் பூத உடலைப் பிடித்து
நூலின்முன் நிறுத்திவிடலாம்
என் ஆன்மாவைப்
பிடிக்க முடியுமா உங்களால்?

‘உயிர் சுடுகிறது’ கவிதை, மது அருந்திவிட்டு விபத்தில் சிக்கிக் காயமடைந்து கிடக்கும் ஒருவனின் இமைகளின் வழி பதிவான காட்சிகளை நம் முன் விரிக்கின்றது.

கசக்கி விடப்பட்ட
மேகங்கள்
பரிதாபத்தை
முணுமுணுக்கிற
உதடுகள்

குருதியின் எச்சத்தில்
விரிகிற
சாலை

சில்லுகளாய்ச்
சிதறிக்கிடக்கிற மகிழுந்து

கடந்த ஆண்டு (2009) நம் நாட்டில் 6000 மனித உயிர்களைச் சாலை விபத்துகள் தின்று தீர்த்து விட்டன. அதன் அகோரப் பசி என்றும் தீர்வதில்லை. அவற்றில் மதுவினால் நிகழ்ந்த விபத்துகள் எத்தனையோ என்ற சிந்தனையை இக்கவிதை நம்முள் எழுப்புகிறது.

மலேசிய மக்களை இனவேறுபாடின்று ஒரே உணர்வில் ஒன்றிணைக்கும் முயற்சியான நம் பிரதமரின் கொள்கைமீது விமர்சன அம்புகளை வீசுகிறது ‘ஒரே மலேசியா’ கவிதை. இரயில் பயணத்தில் சிலர் சகல வசதிகளோடு சொகுசாகப் பயணப்பட, வேறு சிலரோ இருக்கையில்லாமல் நின்றுகொண்டு பயணிக்கும் அவலத்தைக் காட்டி, ஒரு குறியீடாக விமர்சனத்தை முன் வைக்கிறார் படைப்பாளர். அந்நியத் தொழிலாளிகளின் வருகையும் அதனால் விளையும் பாதிப்பும் இங்கே சுட்டப்படுகிறது.

ஒரு குழுவினருக்கு உட்காரவும்
கால்நீட்டிப் படுத்துக்கொள்ளவும்
இடம் தாராளமாய்
ஒதுக்கப்பட்டிருக்கிறது

நானும்
என்னைப்போல் சிலரும் இன்னும்
நின்றுகொண்டிருக்கிறோம்

இடையே
ஒரு நிறுத்தத்தில்
புதிய பயணி -
அந்நியத் தொழிலாளி

‘வலித்தாலும் சிரிக்குதம்மா எம் மனசு’ ஆணாகவும் பெண்ணாகவும் இல்லாமல் இடையிலே வேறு பாலினமாகப் பிறந்துவிட்டவரின் சோக இராகங்களை மீட்டுகிறது. தன் சோகத்தைத் தன் தாயிடமே சொல்லி அரற்றுவதோடு அவரைக் காலமெல்லாம் காக்கக் கிடைத்த வாய்ப்பாகத் தன்னைத் தேற்றிக்கொள்ளும் நிலையை இப்படைப்பு பதிவு செய்கிறது.

ஏன் இந்தப் பிறப்பு
யாருக்காக?
எத்தனைப் பெயர்கள்
எனக்காக

கீழ்த்தரப் பேச்சும்
ஏளனப் பார்வையும்
நீங்காத கதையாய்
என் வாழ்க்கையில்

காலமெல்லாம்
உன் ஆயுள் வரை
உன்னைக் காக்கத்தான்
அரவாணியாய் இப்பிறவி
கடவுள் எனக்காகக் கொடுத்தாரோ!

இம்முறை போட்டிக்கு வந்த பெரும்பாலான கவிதைகள் ஆய்வாளனுக்கு அதிகம் வேலை வைக்காத படைப்புகளாக அமைந்துவிட்டன. சொற்சிக்கனமும் கலைநேர்த்தியும் இன்னும் கைவரக்கூடாத படைப்புகளின் படையெடுப்பு இன்னும் எத்தனை காலத்திற்கோ யானறியேன்!

“கவிதைகள் பற்றிய பேச்சுகளை நாம் தொடர்ந்து விரிவுபடுத்துவதன் மூலமே கவிதை என்ற வடிவத்தில் படியும் பூஞ்சைகளை விலக்கித் தமிழ்க் கவிதையைத் துலங்கச் செய்ய முடியும்” என்று மனுஷ்ய புத்திரன் நம் கவிதைத் துறையின் தொடர்ந்த வளர்ச்சிக்கு சிறந்த லோசனையை முன் மொழிகிறார். கவிதை குறித்த உரையாடல்களில் நம் கவனம் குவிந்தால் கவிதை முயற்சிகள் எதிர்பார்க்கும் பலனைத் தரும் எனத் திண்ணமாய் நம்பலாம்.

ஆயினும், கவிதைப் போட்டிக்குப் படைப்புகளை அனுப்பியவர்களில் பலர் புதியவர்கள் என்பதை அவர்களின் படைப்புகளே சான்று கூறுகின்றன. கவிதை வயலின் வரப்புகளில் நின்று வேடிக்கை பார்க்காமல் நாற்றுநட சேற்றுக்குள் இறங்கிவிட்ட இவர்களை வரவேற்பதோடு நல்ல விளைச்சலை நோக்கிப் பயணப்பட வாழ்த்துகிறேன்.

இன்னும் நம்பிக்கையோடு,

ந. பச்சைபாலன்
15.1.2010

நீதான் பெண்ணே


இன்னும் மிச்சமிருக்கிறது


மலேசிய ஹைக்கூ கவிதைகளில் சமுதாயப் பார்வை (ஆய்வுக் கட்டுரை)

சிற்றின்ப நதியின் தீரத்தில்


நீண்ட நேரம் கரையோரம் அமர்ந்து
ஆசை தீர கால்களை நீட்டி அசைத்து
உடலின் அணுக்களில் ஊடுருவும்
நீரின் குளுமையை அனுபவித்துவிட்டு
போதுமென்றெண்ணி
நீரினின்று கால்களை விடுத்து
விலகி நடக்க நினைத்தும்

முரண்டு பிடித்துக் கால்கள்
நீரின் ருசிக்கு ஏங்கியபடி
எனை இழுத்துக்கொண்டுபோய்
கரையிலே விடுகின்றன

கவ்விப் பிடித்த நீரின் தினவுக்குக்
கால்களைத் தந்துவிட்டு
உயிரை வருடும் அதன் குளுமையை
அதிசயித்தபடி
மீண்டும் மீண்டும் அதனில்
மூழ்கித் திளைக்குமென் மனம்

ஆவிகள் உலவும் படுக்கையறை


தலையணையில் முகம் புதைத்து
தூக்கத்தின் பிடியில்
கொஞ்சம் கொஞ்சமாக எனையிழந்த
நடுநிசியின் ஏதாவது தருணங்களில்
அவற்றின் ஆட்டமும் அட்டகாசமும்
தொடங்கிவிட
படுக்கையோடு எனைத் தவிக்கவிட்டுத்
தூக்கம் தூரப்போகிறது
முகம் மூடிய விரல்களின் இடுக்குகளில்
பயக்கண்களால் துழாவுகிறேன்
தலைவிரிக் கோலத்தில்
ரத்தம் வழியும் கோரப் பற்கள்
பார்க்கச் சகியாத சிதைந்த முகங்கள்
உயிர் பிடுங்கியெறிய நீளும்
நீள்நகம் முளைத்த விரல்கள்
ஒவ்வொன்றாய் முளைக்கின்றன
கட்டிலின் கீழேயிருந்து
பின்னாலிருந்து
மேலிருந்து
இருள் அப்பிய அறையின்
எல்லா முடுக்கிலிருந்தும்

எல்லா முகங்களிலும் ஒட்டியிருக்கின்றன
நாளிதழிகளில் வண்ணத்தில்
சிதைந்திருந்த முகங்களின்
தொலைக்காட்சி மர்மத் தொடர்களில் தோன்றிய
கோர முகங்களின்
தடயங்கள்.. தடயங்கள்

Tuesday, February 16, 2010

ஒரே குடையின் கீழ்


சிறுதூறாலாய்த் தொடங்கி
பெருமழையாய் வலுத்ததால்
சாலையில் வந்த இருவரின் பெரிய குடைக்குள்
நுழைந்தேன்..
நாங்கள் மூவரானோம்

குடைப்பிடியோடு மற்ற இருவரும்
நெருங்கி நின்றதால்
என் மேல் மழைத்துளிகள்
சிந்திக்கொண்டே வந்தன
நனைந்து நனைந்து குளிர்
என் உயிர்வரை ஊடுருவி
உணர்வுகளைப் பற்ற வைத்தது

என் நனைதல் பற்றிக் கூறியும்
அதைப் பொருட்படுத்தாது
வழியில் நனையும் ஆடுகளுக்காக
மனம் இரங்கினார்கள்

அந்தக் குடை விட்டு விலகி
மொத்தமாக நனைந்து
மழையை எதிர்கொண்டு
தனிக்குடை பற்றிச் சிந்தித்தபொழுது

அந்தக் குடை விட்டால் எனக்குப்
பாதுகாப்பில்லை என்றும்
குடைக்குள்ளே வந்து ஒண்டி
உயிர்காத்துக்கொள்ளுமாறும்
குடையிலிருந்து
கேட்டுக்கொண்டேயிருந்தது
ஒரு குரல்

உலகம் பார்க்கிறது


எல்லாச் சன்னல்களும் திறந்துகொண்டன
எல்லாக் கதவுகளும் விலகிக்கொண்டன
மூடிய திரைச்சீலைகளும் கீழிறக்கப்பட்டன
அறைகளுக்குள் எட்டிப்பார்த்து
அவை துலாவுகின்றன..
வேவு பார்க்கின்றன

யாருக்கும் தெரியாமல்
நீங்கள் அரங்கேற்றும்
அடக்குமுறைகள், அத்துமீறல்கள்,
அதிகாரத் துஷ்பிரயோகம், ஆபாசச் சேட்டைகள்
எல்லா இரகசியங்களும் அவிழ்ந்துகொள்ள
உங்களை நெருங்கி நின்று
உற்றுப் பார்க்கிறது உலகம்
ஊடகங்களின் நுண்பெருக்கிக் கண்களால்

ஹைக்கூ நதிக்கரை (2)


நிமிர்ந்த கித்தா மரங்கள்
குனிந்தபடி அப்பா
ஒரு பழைய படம்

மலர்கள் குவிந்தன
நண்பர்கள் கூடினார்கள்
இறுதி ஊர்வலம்

அக்காவுக்குத் திருமணம்
அப்பா விலை பேசினார்
நான் வளர்த்த மாடுகள்

பழைய தோழர்கள் இல்லை
தோட்டச் சாலையில் என்னோடு
அதே நிலா

வாயிலிருந்து
கடுஞ் சொற்கள்
கைகளில் புறா

விபத்தில் இறந்தார்
நாளிதழ் வியாபாரி
நாளை அவர் படம்

தோட்டம் கைமாறியது
உடைந்த வீட்டுக்குள்
என் பழைய முகம்

மின் விளக்குகள்
தனியாக
நிலா

மெதுவாகச் சிலந்தியே
என் மகன் கையில்
ஓவியத் தாள்

செடிகளே வெளியூர் போகிறேன்
என்னை உணர்ந்தவன்
என் மகன்

(இன்னும் நனைக்கும்..)

மாறும் முகம்


என் முகம் இப்பொழுது மாறியிருக்கிறது
என் பழைய முகத்தை மட்டும் அறிந்தவர்கள்
எனை அடையாளம் காணுவதில் சிரமமிருக்கலாம்

முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த
வெள்ளிக் கம்பிகள் தலைமுழுக்க
மொத்தக் குத்தகை எடுத்துவிட்டன

கம்பீரம் காட்டிய மீசையின்
அடர்த்தி இப்பொழுது குறைந்து விட்டது
நெற்றியின் பரப்பளவு கூடியிருக்கிறது
கண்களுக்குக் கீழே கரு வளையங்கள்
முகங்களில் புதிதாய்க் கோடுகள்

வண்ணங்களைக் குழைத்து
ஆனமட்டும் என்மேல் வரைந்துகொண்டே
இருக்கின்றன காலனின் கைகள்

“உங்கள எங்கோ பார்த்த மாதிரி இருக்கே?”
என் முகத்தை ஊடுருவும் உங்களுக்கு
அடையாளம் காட்டுகிறேன்
உங்களுக்குப் பரிச்சயமான என் பழைய முகத்தை

எனைக் கூர்ந்து பார்த்து
பழைய முகத்தை நினைவுபடுத்தும்
உங்களால்
அவதானிக்க முடியலாம்
முடியாமலும் போகலாம்

தன் போக்கில் மாறிக்கொண்டிருக்கும்
என் கவிதை முகத்தை

Monday, February 15, 2010

ஐக்கூ நந்தவனத்தில் (ஐக்கூ ஆய்வு)



கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார்கள். சின்னஞ் சிறிய மூன்று அடிகளால் அமைந்து நமக்குள் ஆச்சரியங்களை அள்ளி இறைக்கும் ஹைக்கூ கவிதைகளுக்கு இது மிகவும் பொருந்தும். ஹைக்கூ கவிதைகள் எனக்கு முதலில் அறிமுகமானபோது இந்தப் பழமொழிதான் என் நெஞ்சில் இனித்தது. மூன்று வரிகளில் வாழ்க்கையின் பல்வேறு காட்சிகளை அழுத்தமாய், தெளிவாய், ஆர்வமாய்க் கோடிட்டுக் காட்டும் தன்மையுடையது ஹைக்கூ.

மூன்று வரிகள் கொண்ட எளிய வடிவமாக இருந்தாலும் ஹைக்கூ நுண்ணிய உணர்வுகளைத் தன்னுள் பதியமிட்டுள்ளது. இந்தத் துளிப்பாக்களின் இறுக்கம், சொற்களின் சுருக்கம், அர்த்தத்தின் பெருக்கம் அவற்றை வாசிப்போரைக் கவிதானுபவத்தில் மூழ்க வைக்கும் ஆற்றல் மிக்கவை எனலாம்.

“ஹைக்கூ கவிதைகளைச் செய்ய முடியாது. அவை எங்காவது தென்படும். அவற்றை அடையாளம் காண ஒரு தனிப் பார்வை வேண்டும்” என்பார் கவிக்கோ அப்துல் ரகுமான். ஹைக்கூ பற்றிப் பிளித் என்பார் கூறியுள்ள கருத்தும் நம் சிந்தனைக்குரியது. “ஹைக்கூ நம்மைத் தட்டி அழைக்கும் கை; பாதி திறந்திருக்கும் கதவு; இயற்கையின்பால் நம் கவனத்தை ஈர்க்கும் இலக்கிய வடிவம்; பேசாமல் பேசி நம் மனிதாபிமானத்தில் பங்கு கொள்ளும் இலக்கியச் சாதனம்”.

கவிதை மனங்களைக் கைது செய்யும் இந்த அற்புதமான இலக்கிய வடிவம் இனிய நண்பர் ‘இனிய நந்தவனம்’ சந்திரசேகரனையும் ஈர்த்ததில் ஆச்சரியமில்லை. 2004இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 33 எழுத்தாளர்களோடு தமிழகம் - புதுவைக்கு மேற்கொண்ட இலக்கியப் பயணத்தின்போது சந்திரசேகரன் எனக்கு அறிமுகமானார்.

திருச்சி தமிழ்ச்சங்க மண்டபத்தில் எங்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தபோது, மேடைக்குப் பின்புறம் அழைத்துச் சென்று அவசரமாக ஹைக்கூ நேர்காணலை நடத்தியதும் நிகழ்ச்சி முடிந்து பேருந்தில் பயணித்தபோது உடன் வந்து, ஹைக்கூ கவிதைகளை எழுதச்சொல்லி வாங்கிக்கொண்டு இடையிலே விடைபெற்றதும் என் நினைவின் பிடியில் இன்னும் இறுக்கமாகவே உள்ளன. அப்பொழுதே கவிதை மீதான அவரின் காதலையும் ஈடுபாட்டையும் நான் கண்டுகொண்டேன். அதன் பிறகு, மலேசிய எழுத்தாளர்களின் படைப்புகளையும் அவர்தம் பேட்டிகளையும் இனிய நந்தவனத்தில் வெளியிட்டு ழமான இலக்கிய உறவுக்குக் கைகொடுத்தார். அதற்குச் சான்றாக இதோ, கடல் கடந்து இவரின் ஹைக்கூ நந்தவனத்தின் அழகை அள்ளிப் பருக வந்துள்ளேன்.

இவரின் ஹைக்கூ நந்தவனத்தில் பூத்து மணம் பரப்பும் மலர்கள் பல நிறங்களில் உள்ளன. அவற்றில் இயற்கையோடு கைகுலுக்கும் துளிப்பாக்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. சங்க காலம் தொடங்கி இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்த நாம் அதைப் புறக்கணித்துவிட்டு நவீன வாழ்வுக்குள் நம்மை இழந்துகொண்டிருக்கிறோம்.

சிறகு முளைக்குமா?
பறிக்க சை
நட்சத்திரப் பூக்கள்

குடிசைக்குள்ளும்
மெர்குரி வெளிச்சம்
முழுமதி

‘நிலவுக்கு நேரம் வைத்து உறக்கம் கொள்க’ என்றார் வைரமுத்து. இங்கே வறுமைக்கு வாழ்வைத் தந்துவிட்டவர்களுக்கு இயற்கையை இரசிக்க நேரமேது? ஆனாலும், குடிசைக்குள்ளும் நிலவு எட்டிப்பார்க்கிறது. அவர்களின் இருண்ட வாழ்விலும் ஒளி பாய்ச்சுகிறது. நட்சத்திரங்ளை ரசிக்கும் கவிஞனின் மனக் கை அவற்றைப் பறிக்கும் ஆவலில் நீளுகிறது. கருத்தைச் சொல்வது மட்டுமன்று. தன் மனத்தளவில் அரும்பும் உணர்வுகளுக்கும் வடிவம் தந்து வாசகர் பந்திக்கு அனுப்பும் வேலையை ஹைக்கூ செய்கிறது.

ஹைக்கூ உலகம் அன்புலகம். தினையளவும் திணை வேறுபாடு காட்டாத அதிசய உலகம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். பொதுவாகத் தமிழ்க்கவிதைச் சூழலில் அதிகம் பாடப்படாத எளிய உயிர்கள் ஹைக்கூ கவிதைகளில் முக்கியப் பாடுபொருள்களாகின்றன. தவளை, காகம், எறும்பு, நத்தை, பல்லி, வண்ணத்துப்பூச்சி போன்ற எளிய உயிர்கள் அற்பமானவை என ஒதுக்கப்படாமல் உயர்ந்த இடத்தைப் பெறுகின்றன. நம் மனக்குளத்திலும் கல்லெறிந்து அலைகளை எழுப்புகின்றன. சந்திரசேகரனும் மனந்தோய்ந்து அவற்றைப் பாடுகிறார்.

சிறகிருந்தும்
பறக்க முடியாமல்
ஜோசியக் கிளி

நீரைத் தேக்காதீர்கள்
சுதந்திரமாய் வாழட்டும்
மீன்கள்

சூரியனே
கொஞ்சம் பொறு
தாமரைக்குள் வண்டு

வாழட்டும்
விட்டில் பூச்சிகள்
எரியாத விளக்கு

ஹைக்கூவின் மிக முக்கியமான பண்பு அதன் ஜென் தத்துவப் பார்வையாகும். அதன் அடிப்படையை ஓரளவுக்காவது புரிந்துகொண்டால்தான் ஹைக்கூவின் ஆழங்களை அடையாளம் காணமுடியும். இந்த உலகத்தின் எல்லாப் படைப்புகளையும் புழுவோ பூச்சியோ மனிதனோ ஒவ்வொன்றையும் ஒரே வயிற்றின் உடன் பிறப்புகளாக, உயர்வு தாழ்வில்லாமல் ஜென் பார்க்கிறது. எளிய உயிர்களைச் சக உயிரிகளாய்க் காணும் மனநிலையை ஹைக்கூ கற்றுத் தருகிறது. இதனால்தான் மேற்காணும் ஹைக்கூக்களில் சந்திரசேகரன் கூண்டில் அடைபட்ட கிளிக்காக, மீன்களுக்காக, வண்டுக்காக, விட்டில் பூச்சிகளுக்காக மனம் இரங்குகிறார்.

காய்ந்த நிலம்
உணவு தேடும் எலிகள்
உணவாய் விவசாய்க்கு..

உணவு தேடும் எலியே விவசாயிக்கு உணவாகும் கொடுமை இந்தத் துளிப்பாவில் பதிவாகியுள்ளது. இங்கே எளிய உயிர்க்கு மட்டுமன்று. வறுமையின் பிடியில் சிக்குண்ட ஏழைக்கும் இதயம் கசிகிறார் சந்திரசேகரன்.

சமுதாய அவலங்களுக்கும் ஹைக்கூ காது கொடுக்கிறது. ஆனால், அவற்றை நேராகச் சுட்டிக்காட்டுவதோ, தீர்வு காண முயல்வதோ ஹைக்கூவில் இல்லை. ‘நெம்புகோல் கவிதைகளைத் தருவோம் என்னும் அறிவிப்போ புரட்சிக்கு அழைக்கும் அறைகூவலோ அரசியல் வாடையோ போர் நிகழ்ச்சியோ எதுவுமில்லை’ என்பார் முனைவர் நிர்மலா சுரேஷ். இந்தத் தொகுப்பின் கவிதைகளில் சந்திரசேகரனின் சமுதாயப் பார்வை மிக மென்மையாக இழையோடியிருப்பதைக் காண்கிறோம்.

யார்யாரோ எச்சில்படுத்த
பசியாறினான் சிறுவன்
குப்பைத் தொட்டி

வண்ணத்துப்பூச்சியே
என் வீட்டோரம் வராதே
கைம்பெண் அக்காள்

என்னதான் இன்றைய சமுதாயம் நவீன வாழ்க்கைக்குள் நகர்ந்துகொண்டிருந்தாலும் குப்பைத்தொட்டியில் வீசப்படும் உணவுக்குக் காத்திருக்கும் அவலம் இன்னும் தீரவில்லையே என்ற ஆதங்கத்தை முதல் ஹைக்கூ அறிவிக்கிறது. இரண்டாம் ஹைக்கூவில் வாழ்வில் துணையிழந்தவள் அலங்காரத்தையும் இழந்து நிற்கும் கொடுமை வண்ணத்துப்பூச்சியை வீட்டோரம் வராமல் வழிமறிப்பதில் வெளிப்படுகிறது. வண்ணங்களை ஆடையாய் அணிந்துள்ள வண்ணத்துப்பூச்சி கைம்பெண் மனத்தில் காயங்களை ஏற்படுத்தலாம் என்ற தவிப்பை உணர முடிகிறது.

ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளில் காதல் உணர்வுளைக் காண்பது மிக அரிது. நால்வகைப் பருவங்களின் மாற்றங்களையும் அந்த மாற்றங்கள் மனித மனங்களில் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் அதிகம் காணலாம். ஆனால், தமிழில் ஆண் - பெண் காதலுணர்வுகளை வெளிப்படுத்தும் ஊடகமாக ஹைக்கூ திகழ்கிறது. இந்த ஹைக்கூ நந்தவனத்திலும் சில காதல் பூக்கள் மலர்ந்துள்ளன.

அவள் சொல்லும்போது
அழகாய் இருந்தது
என் பெயர்

கல்லறையில்
என் காதலி
மெல்ல நடங்கள்

என்னவளின்
பாதச் சுவடு
அலையே நில்

குறுகிய வடிவத்தில் ஒவ்வொரு காதல் காட்சியும் முழுமையற்றதாகத் தோன்றும். படைப்பாளன் வாசகனின் மனக்குளத்தில் கல்லெறிகிறான். வாசகன் தன்னுள் எழும் அலைகளைக்கொண்டு படைப்பாளனின் மன நிலையை எட்டிப்பிடிக்கிறான். அப்பொழுதுதான் காதலியின் வாய் உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லிலும் கசியும் இன்பத்தை உணர முடியும். காதலி இறந்தாலும் அவள் மீது கொண்ட அன்பு குறையாத மனநிலையை அறிய முடியும். காதலியின் பாதச்சுவடுகளை அலைகள் அழிக்குமோ என்ற இதயத் தவிப்பை உணர முடியும்

ஹைக்கூவின் பார்வை மேலோட்டமானதோ பொதுவானதோ அல்ல. ஏதாவதொரு நிகழ்வை, அனுபவத்தை கூர்ந்து நோக்கிய பார்வையாக உள்ளது. ஒரு பரந்த காட்சியிலிருந்து ஒரு குவிந்த காட்சிக்கு நிழற்படக் கருவியைப்போல் நம்மை அழைத்துச் செல்லும்.

காயத்தின் வலியை
யார் அறிவார்?
பூப்பறித்த காம்புகள்

அத்தகைய கூர்ந்து பார்க்கும் பார்வைக்குத்தான் பூப்பறிக்கப்பட்ட காம்பும் தெரியும். அதன் வேதனையையும் உணர முடியும். இப்படிப் பார்க்கத் தெரிந்தால் நாமும் ஹைக்கூவின் காதலர்களாகி அதன் அழகை ராதிப்போம்.

சந்திரசேகரனின் ஹைக்கூ நந்தவனத்தில் சில மலர்களில் மணம் குறைந்தாலும் பல மலர்களில் கமழும் இனிய மணம் இதயத்தைக் கொள்ளையடிக்கின்றது.

இந்த ஹைக்கூ பயணத்தில் இன்னும் சில இலக்குகளை எட்டிப்பிடிக்க இனிய நண்பர் சந்திரசேகரனை வாழ்த்தியனுப்புகிறேன்.