நம் குரல்

Sunday, December 18, 2011

நானொரு நாடகம் பார்க்கிறேன் (சிறுகதை)



“மலர்விழி 82, கண்ணன் 72, மாலதி 75, கோபால் 30..” ஒரு கணம் தாமதித்தேன். கையிலிருந்த தேர்வுத்தாளின் சிவப்புநிறப் புள்ளியில் கண்கள் நிலைகுத்தின. அதற்குமேல் என்னால் புள்ளிகளை வாசிக்க முடியவில்லை. கோபம் எனக்குள் எட்டிப்பார்த்தது. என் முகமாற்றத்தை மாணவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.

எத்தனை விதமான முயற்சிகள்! எவ்வளவு பயிற்சிகள்! பல மாத உழைப்பின் அறுவடையை அளந்து பார்க்கக் காத்திருந்தவனுக்குப் பலன் ஒன்றுமில்லை என்றால் எழும் ஏமாற்றம்தான் என்னையும் துவைத்தது. அரையாண்டுத் தேர்விலேயே இப்படியென்றால் உண்மையான எஸ்.பி.எம். தேர்வில்? நினைத்துப் பார்க்கவே வேதனையாக இருந்தது. தேர்வில் ஒட்டுமொத்தத் தமிழ்மொழித் தேர்ச்சி இந்த ஆண்டு வீழ்ச்சியடைந்தால்...

தேர்வுத் தாளைத் தயக்கத்தோடு வாங்கினான் கோபால். என் முகத்தில் பரவிய கோபத்தின் கடுமையை உணர்ந்திருக்க வேண்டும்.

“மன்னிச்சிடுங்க சார். இந்த தடவ என்னால பாஸாக முடியல்ல.. அடுத்த தடவ முயற்சி செய்யிறேன்.. எல்லார் முன்னுக்கும் என்ன ஏசாதீங்க சார்..” அருகில் வந்து தாழ்ந்த குரலில் கூறினான். தலை கவிழ்ந்திருந்தது.

“அவமானப்படக்கூடாது என்ற விழிப்பு உணர்வு இருக்கிறது. ஆனால், உழைப்பதற்கான முயற்சி இல்லையே. இங்க உன்ன மாதிரிதானே எல்லாருக்கும் பாடம் நடத்துறேன். எல்லாரும் அக்கறையா பாடத்துல கவனமா இருக்கிறாங்க. ஆனா நீ.... வகுப்புலேயும் கவனமில்ல. வீட்டுப் பாடங்களும் செய்யிறதில்ல.. தாய்மொழியிலேயே தடுமாறுனா எப்படி? எவ்வளவு பயிற்சி கொடுத்திருக்கிறேன். அதையெல்லாம் செய்திருந்தா இப்படி மோசமா இருக்குமா? எப்பப்பார்த்தாலும் ஒரே சிரிப்பு, கும்மாளம். நீயெல்லாம்..” நாக்கு நுனியில் வந்துவிட்ட சொற்களைச் சிரமப்பட்டுத் தடுத்தேன்.

வகுப்பு அமைதியாகிவிட்டது. இருபத்தைந்து மாணவர்களில் ஒருவன் மட்டும் தேர்ச்சிபெறவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நூறு விழுக்காடு வெற்றிக்குக் காய்களை நகர்த்தியவன் கடைசி வினாடியில் தோல்வியைச் சந்தித்தால்..
கோபால் பேசாமல் போய் அவன் இடத்தில் அமர்ந்துவிட்டான். குற்றம் இழைத்தவனின் வேதனையைப்போல் அவன் முகம் வாடிவிட்டது.

அதற்குமேல் பாடத்தில் என்னால் மனம் ஒன்றிச் சொல்லித்தர முடியவில்லை. தேர்வுக் கேள்வியில் சிரமமான பகுதிகளை விளக்கினேன். கட்டுரை என்றாலே மாணவர்க்குக் கசப்பு மருந்தாகிவிடுகிறது. அதில்தான் பலர் புள்ளிகளை இழந்திருந்தார்கள்.

வகுப்பு முடிந்து ஆசிரியர் அறைக்குத் திரும்பினேன். மனம் அமைதியடையாமல் முரண்டு பண்ணியது. கோபாலைப் போன்ற மாணவர்களுக்கு ஆசிரியரின் மனவேதனை புரியுமா?

“சார், இன்னொரு வாய்ப்பு கொடுங்க. நான் எப்படியாவது..” பின்னாலேயே வந்து நின்றான் கோபால்.

“எதற்கு இன்னொரு வாய்ப்பு? அடுத்தமுறை 20 எடுத்து என்ன அவமானப்படுத்தவா? இங்க பார் கோபால். நானும் உன்னை மாதிரிதான் படிப்பில ரொம்ப பின்தங்கி இருந்தேன். ஆனா, நல்லா படிச்சி உயர்ந்த நிலைக்கு வருனும்னு கடுமையா உழைச்சேன். சும்மா வெட்டிக்கதை பேசி காலத்த கழிக்கல. உனக்கு எப்பப் பார்த்தாலும் ஆட்டம் பாட்டம். நான் கொடுக்கிற பாடங்களைச் செய்தாலே போதும். ஆனா நீ செய்யமாட்டே. உனக்குத்தான் படிப்பில ஆர்வம் இல்லையே” ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தேன்.

“அப்படி இல்ல சார். கொஞ்சம் விளையாட்டா இருந்திட்டேன். சார், நீங்க வேணும்னா பாருங்க. அடுத்த பரீச்சயில நல்ல மார்க் எடுக்கிறேன். இதுக்காக என்ன நாடகத்தில இருந்து எடுத்திடாதீங்க.. உங்களுக்குத்தான் தெரியுமே. நான் நல்ல நடிப்பேன் சார்”

அடுத்த மாதம் மாவட்ட அளவில் நடைபெறவுள்ள நாடகப்போட்டிக்காக எங்கள் பள்ளி நாடகக் குழுவில் பங்குபெற கோபாலும் பெயர் கொடுத்திருந்தது ஞாபகத்திற்கு வந்தது. கடந்த ஆண்டு நாடகப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பிடித்தோம். இம்முறை முதல் இடத்தைக் குறிவைத்து நாடக வேலையைத் தொடக்கியிருந்தேன். கோபாலும் நடிக்கும் திறமையுள்ளவன்தான். ஆனாலும், தமிழ்ப் பாடத்திலேயே தடுமாறும் இவனுக்கு ஏன் வாய்ப்பு தரவேண்டும்? தமிழில் தேர்ச்சிபெற்ற மற்றவர்களுக்கு அதைத் தரலாமே!

“ஓ, உனக்கு அந்த ஆசை வேற இருக்கா? முதல்ல தமிழ்ல உன் திறமையை காட்டு. அப்புறம் நாடகம் பத்தி யோசிக்கலாம். உன்னைவிட தமிழ்ல நல்ல மார்க் எடுத்த கண்ணன், அமுதன், முகிலன் இவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்னு நினைக்கிறேன்” கோபால் முகத்தில் ஏமாற்ற ரேகைகள் முகாமிட்டன. ஒன்றும் பேசவில்லை. போய்விட்டான்.

பள்ளி வேலையில் மூழ்கினாலும் என் எண்ணமெல்லாம் கோபாலைச் சுற்றியே வட்டமிட்டது. எப்படியாவது அவனைத் தமிழ்ப்பாடத்தில் தேர்ச்சியை நோக்கி நகர்த்தவேண்டும். மூன்று ஆண்டுகளாகப் பெற்ற நூறு விழுக்காடு தேர்ச்சியை ஒரு மாணவனால் தவறவிடக்கூடாது. குதிரையை மல்லுக்கட்டி ஆற்றுக்குக் கொண்டுபோகலாம். தண்ணீரை அதுதானே குடிக்கவேண்டும்?

@ @ @ @ @ @

மாணவர் வருகைப் பதிவேட்டில் முகவரி இருந்ததால் கோபாலின் வீட்டைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கவில்லை. சாலையோர வீடமைப்புப் பகுதியில் நுழைந்து இரண்டாவது வரிசையில் காரை நிறுத்தி வீட்டை நெருங்கினேன்.

மாலை மணி ஆறு. வீட்டில் பேச்சொலி கேட்டது. எட்டிப்பார்த்தேன். “அடியே, உன்னையும் உன் குடும்பத்தையும் அடியோடு அழிக்காம விடமாட்டேன். நீ அழுது ஒண்ணும் இங்கே சாதிக்கமுடியாது.” தொலைக்காட்சியில் ஏதோ நாடகம் ஓடிக்கொண்டிருந்தது. கோபாலின் மொத்தக் குடும்பமே நாடகத்தின் உருக்கமான காட்சியில் சிறையாகி இருந்தது. சோகத்தைக் கிலோ கணக்கில் யாரோ பிழிந்துகொண்டிருந்தார்கள். தொடர் நாடகங்கள் பார்ப்பது நம்மவரின் முக்கிய அன்றாடக் கடமைகளில் ஒன்றாகிவிட்டதா? இதனைச் ‘சைத்தான் பெட்டி’ என்று சொல்வது சரியாகத்தான் இருக்குமோ? கோபாலைக் காணவில்லை.

“வணக்கங்க. நான் கோபாலின் தமிழ் ஆசிரியருங்க. கோபால் விசயமா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். கோபால் இல்லீங்களா?” கேள்வியோடு உள்ளே நுழைந்தேன்.

“வாங்க, உக்காருங்க சார். கோபாலு வீட்டுல இல்லையே. எங்க போயிருக்கான்? பந்து விளையாடத்தானே?” கோபாலின் அப்பா கிருஷ்ணன் தன் மனைவியிடம் உறுதிப்படுத்திகொண்டு என்னை ஏறிட்டார். கலைந்த தலைமுடி. சவரம் காணாமல் முகத்தை அப்பியிருந்த வெள்ளைத் தாடி. அவர் நாடக மயக்கத்தில் இருந்தார்.

“என்ன விசயம் சார்? தப்பு ஏதும் பண்ணிட்டானா? அவன் சாதுவாச்சே” கோபாலின் அம்மாவின் முகத்தில் கேள்விக்குறிகள்.

“தப்பு ஒண்ணும் செய்யிலங்க. தமிழ்ப் பாடத்துல கொஞ்சம்கூட ஆர்வம் இல்லாம இருக்கான். நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துட்டேன். பயிற்சிங்க கொடுத்தா செய்யறதில்ல. அதான் உங்ககிட்ட சொல்லிட்டுப்போக வந்தேன்.” சொல்லிவிட்டு இருவரின் முகங்களைக் கூர்ந்து நோக்கினேன்.

“நல்லா சொல்லுங்க சார். வீட்டுல எங்க படிக்கிறான்? எப்பவும் பந்து விளையாட்டுதான். திடலே கதின்னு கிடப்பான். சாயங்காலம் ஆச்சுன்னா கூட்டாளிங்க வந்திடுவாங்க. அப்புறம் ஆள பார்க்க முடியாது. நீங்க தண்ணி சாப்பிடுங்க சார்” தன்னளவில் எந்தக் தப்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் தொனி கிருஷ்ணன் குரலில் தெரிந்தது.

“ஆமாங்க சார். நாங்க என்னா அவன படிக்கவேண்டாம்னா சொல்றோம். வீட்டுல இருந்தாலும் நல்லா டிவியில நாடகத்த பார்த்துக்கிட்டு பொழுத போக்குறான். நாடகம்னா அவனுக்கு அவ்வளவு உசுரு.” கோபாலின் அம்மா நிலைமையை விளக்கினார்.

“நீங்கதான் அவன் படிக்கிற சூழ்நிலைய வீட்டுல ஏற்படுத்தணும். சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. நீங்களே டிவிய பார்த்துகிட்டு இருந்தா அப்புறம் கோபாலுக்கு எப்படி படிப்புல ஆர்வம் வரும்.” வேறுவழியில்லை. நேரடியாக என் உள்ளக்கிடக்கையைக் கொட்டிவிட்டேன். மூடிமறைத்துப் பேசிப் பயனில்லை.

“என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க? நாங்க வயசான காலத்துல டிவிய பார்த்துகிட்டு காலத்த கழிக்கிறோம். இவனுக்கு எங்க போச்சு புத்தி? படிக்கிற இவனுக்கு தெரியணும் சார். நாளைக்கி படிச்சி வேலைக்குப் போனா அவந்தான நல்லா இருப்பான்” கிருஷ்ணனின் சொற்களில் சூடு ஏறியிருந்தது. பழியைத் தூக்கி அப்படியே மகனின் மீது போட்டுவிட்டார்.

தொலைக்காட்சி கம்பீரமாகக் கொலுவீற்றிருந்த முன் அறையில் தமிழ் நாளிதழோ நூல்களோ இருப்பதற்கான அடையாளம் ஏதும் இல்லை. சுவரில் நடிகர்கள் விஜயும் அஜீத்தும் ஸ்டைல் காட்டிச் சிரித்துக்கொண்டிருந்தார்கள் தனியாக அமர்ந்து படிப்பதற்கான எந்த வசதியும் அங்கில்லை என்பதை என்னால் உணரமுடிந்தது. கோபாலுக்கும் தமிழுக்கும் தூரம் நீண்டிருப்பதற்கான காரணம் எனக்குப் புரியத் தொடங்கியது.

“கோபாலுக்காக நீங்க கொஞ்சம் கூடுதல் முயற்சி எடுக்கணும். பிள்ளைகளுக்காக நாம தியாகம் செய்ய தயாரா இருந்தாதான் அவங்கள வாழ்க்கையில கரை சேர்க்கலாம். வீட்டுல கோபால் படிக்கிறதுக்கு வசதி இருக்கா? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க....” சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன்.

நான் விடைபெற்றேன். நெஞ்சம் முழுக்க ஏமாற்றம் நிறைந்திருந்தது.

“அவன் வந்தா சொல்றேங்க சார். பார்ப்போம். ஆண்டவன் அவனுக்கு ஒரு வழிகாட்டாமலா போவான்” இப்போது பாரத்தை ஆண்டவன் மீது தூக்கிப் போட்டுவிட்டு எனக்கு விடைதந்தார்.

வீட்டின் முன்பகுதியைக் கவனித்தேன் அது கவனிப்பாரற்றுப் புல் மண்டிக்கிடந்தது.

@ @ @ @ @ @ @ @

“புறா மூலம் தூது அனுப்பினேனே கிடைத்ததா? ஏன் இன்னும் மறுமொழியில்லை? என எதிரி நாட்டு மன்னன் ஓலை அனுப்பி இருக்கிறான். என்ன செய்யட்டும் மன்னா? கட்டளையிடுங்கள்” அமைச்சர் முகத்தில் கேள்விக்குறிகள் நிறைந்தன.
“பகை மன்னன் பாண்டியன்தானே? என்ன திமிர் அவனுக்கு? வரட்டும் பார்த்துவிடுவோம். நம் பலம் தெரியாமல் நம்மோடு மோதுகிறான் அந்தப் புல்லன். புறாவுக்கு நேர்ந்த கதிதான் அவனுக்கும். புரிய வைப்போம்” மன்னர் மீசையை முறுக்கினார்.

பள்ளி மண்டபத்தில் நாடக ஒத்திகை தொடங்கிவிட்டது. கடந்த ஆண்டு எங்கள் பள்ளி தவறவிட்ட வெற்றிக்கோப்பையை இம்முறை எப்படியாவது வாகைசூட வேண்டுமே? கடுமையான முயற்சியில் இறங்கிவிட்டோம். அமைச்சர், தளபதி, புலவர், ராணி என எல்லாப் பாத்திரங்களும் கனகச்சிதமாகப் பொருந்தினார்கள். மன்னருக்குத்தான் முறுக்கு போதவில்லை. வாயில் நுழைந்த தமிழும் சிதைந்துகொண்டிருந்தது. குரலில் கம்பீர மிடுக்கும் குறைந்தது. வேறு வழியில்லை. மன்னரை மாற்றிப் பார்த்தேன்.

அப்பொழுதும் திருப்தியில்லை. புதிய மன்னருக்குத் தமிழ் உச்சரிப்பு தகராறு பண்ணியது. மூன்று நாள் பயிற்சி கொடுத்தால் மன்னரைத் தேற்றலாம் என நினைத்தேன். அது அவ்வளவு எளிதில்லை என்பது புரிந்தது. இன்னும் கொஞ்சம் மிரட்டினால் மன்னர் அழுதுவிடுவார் போலிருந்தது. வேறு வழியில்லை அவரை வைத்துத்தான் எப்படியாவது ஒப்பேத்த வேண்டும்.

“சார், எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. முயற்சி பண்றேன். என்னால முடியும். போன வருசம்கூட நடிச்சேனே” பள்ளி முடிந்து மண்டபத்தில் நடக்கும் ஒத்திகைக்கு நாள் தவறாமல் வந்து ஒரு மூலையில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் கோபால்தான் மனு செய்தான்.

“இப்பதானே கொடுத்த பாடங்கள செய்ய ஆரம்பிச்சிருக்க. பார்ப்போம். தமிழ்ல நாற்பது புள்ளிய தாண்டுனா உன்ன பரிசீலிக்கலாம். அதுவரைக்கும் நீ வேடிக்கைதான் பார்க்கணும் கோபால்” நான் திட்டவட்டமாகக் கூறிவிட்டேன். அவன் முகம் வாடியதைக் கவனிக்கத் தவறவில்லை.

“புல்லனே! யாரிடம் மோதுகிறாய்? இமயத்தில் புலிக்கொடி பொறித்த வீர மரபில் வந்தவர்கள் நாங்கள். உங்களின் தலைகளைப் பந்தாடாமல் எங்கள் வாள்கள் உறையில் உறங்காது” மன்னர் வாளை உருவியபடி எதிரியைப் பார்த்துக் கர்ஜித்தார். குரலில் கடுமை போதவில்லை. பயம்தான் எட்டிப்பார்த்தது. நான் பொறுமையை இழந்துகொண்டிருந்தேன்.

நாடகப் போட்டிக்கு மாணவரை அழைத்துப் போக பெற்றோரின் அனுமதி, உணவு ஏற்பாடு, பேருந்து என பல பணிகளை முடிக்கவேண்டியிருந்தது. இடையிடையே மன்னர் எனக்குள் எட்டிப்பார்த்து என்னைப் பயமுறுத்தினார்.

@ @ @ @ @ @ @ @ @

கோபாலிடமிருந்து வீட்டுப்பாடம் வருவது ஆச்சரியம்தான். ஆனால், வந்தது. எழுத்துப்பிழைகள் குறைந்தபாடில்லை. ஆனாலும், முயற்சியின் முதல்படியில் ஏறத்தொடங்கியிருந்தான். அடிக்கடி ஆசிரியர் அறைக்கு வந்து என்னை எட்டிப்பார்த்தான். பேச்சுக் கொடுத்தான். வீட்டுப்பாடத்தை நீட்டினான். வகுப்பில் கும்மாளத்தைக் குறைத்தான்.

நாடகப்போட்டிக்கு இன்னும் இரண்டு வாரங்கள். தொடர்ந்து மன்னரோடு போராடும் சக்தியை நான் இழந்துகொண்டிருந்தேன். நாடகத்தைத் தூக்கி நிறுத்தப்போகும் பாத்திரம் மன்னர்தான், அவரே தடுமாறிச் சொதப்பிக்கொண்டிருந்தால்...

“சார், இந்தாங்க நேத்து நீங்க கொடுத்த கட்டுரை. முடிச்சிட்டேன் சார். வகுப்பறையில் பயிற்சி நூல்களைத் திருத்திக் கொண்டிருந்தவன் தலைநிமிர்ந்தேன். கோபால் கட்டுரை எழுதித் தருவது அபூர்வம். இப்படியாவது தமிழில் தேர்ச்சியை நோக்கி நகர்வானா? மனம் எதிர்பார்ப்புகளை அடுக்கியது.

“ஒரே ஒரு வாய்ப்பு. கொடுத்து பாருங்க. உங்க பேர காப்பாத்துவேன் சார்” கோபாலின் விடாமுயற்சி எனக்குப் பிடித்திருந்தது.

“இல்ல கோபால். உன் முயற்சி போதாது. இன்னும் நீ தீவிரமா உழைப்பை தரணும். அது உன்னால முடியுன்னு நான் நம்புறேன்”

@ @ @ @ @ @

நாடகப்போட்டியில் இம்முறை ஒன்பது பள்ளிகள் கலந்துகொண்டன. நான்காம் ஆண்டாக நடக்கும் நிகழ்வென்பதால் எல்லாப் பள்ளிகளும் நடிப்பாற்றலை வளர்த்துக்கொண்டு கடுமையான போட்டியைத் தந்தன. இலக்கிய நாடகமென்பதால் பலவிதமான உடைகளில் மாணவர்கள் சரித்திரக் கதைமாந்தர்களாய் உருமாறி மேடையைக் கலக்கிக்கொண்டிருந்தனர்.

கடைசிக் குழுவாய் எங்கள் பள்ளி மாணவர்கள் மேடையேறினர். நான் நம்பிக்கையோடு சரித்திரப் பாத்திரங்களோடு ஒன்றிப்போனேன்.

“எம் மண்ணில் கால் வைத்தால் பகைவனின் தலையைப் பந்தாடாமல் விடமாட்டோம். புல்லனுக்கு நம் வீரத்தைப் புரிய வைக்கும் வரையில் நாங்கள் ஓயமாட்டோம். நினைத்ததை அடைந்தே தீருவோம்.” மன்னர் உணர்ச்சிப் பிழம்பாய்ப் பொங்கினார். ஒவ்வொரு பாத்திரத்தின் உடையும் வாளும் அணிகளும் நாடகத்திற்கு உயிரூட்டிக்கொண்டிருந்தன.

மண்டபத்தில் உள்ளோரின் கையொலி போட்டியின் முடிவைச் சொல்லாமல் சொல்லியது. நாடகம் முடிந்து, திரை மூடியது. மேடைக்குப் பின்னால் நின்றிருந்த என்னை நோக்கி என் நாடகக் குழுவினர் வந்தனர். கோபால் மகுடத்தைக் கழற்றிக் கையில் வைத்திருந்தான். நான் அவனை ஆரத் தழுவிக் கொண்டேன்.

தமிழ் நேசன் (18.12.2011)

Thursday, December 15, 2011

முகம் தொலைத்தல்



முகம் மலர்த்தல் எளிது
சிறு புன்னகை, புன்முறுவல்
இதழ்களிடையே தவழவிட்டால் போதும்

முகம் சுளித்தல் எளிது
வாய் இதழ்கள் பிதுக்கி
கண்களில் சிறு வெறுப்பை
உமிழ்ந்தால் போதும்

முகம் மறைத்தல் எளிது
இரு கைகள் கொண்டு
முகத்தை மூடினால் போதும்

முகம் பார்த்தல் எளிது
கண்ணாடி அருகே சென்று
முகம் காட்டினால் போதும்

முகம் மாற்றல் எளிது
முகத்தின் அளவுக்கேற்ப
முகமூடி இருந்தால் போதும்

அவற்றினும் எளிது
முகம் தொலைத்தல்

முகநூலையே நாள்முழுக்க
பார்த்துக் கொண்டு
அதனிலேயே
மூழ்கியிருந்தால் போதும்


நினைவடுக்குகளில்



ஒன்றின்மேல் ஒன்றாய் அழுந்திக்கிடக்கும்
நினைவின் அடுக்குகளில்
ஏதேனும் ஒன்றை உருவினாலும்
பழைய முகத்தின் சாயல்
தூசி படிந்த கண்ணாடிக் காட்சியாய்
உயிர் பெறுகிறது

ஒவ்வொன்றிலும்
கடந்துபோன கணங்களின் துயரமோ
மகிழ்ச்சித் துளியோ
சொல்லமுடியாத உணர்வின் கசிவோ
ஏதோ ஒன்று ஒட்டியிருக்கிறது

ஒவ்வொன்றிலும்
யார் யாரோ உடன் வந்து
பெயர் சொல்லி
முகம் காட்டுகிறார்கள்
ஒவ்வொருவரும் இப்போதும்
ஏதோ சொல்ல நினைத்துத் தயங்குகிறார்கள்

ஒவ்வொன்றிலும்
எனை நோக்கிய
பாராட்டுகள், குற்றச்சாட்டுகள், கசப்புகள்
வேதனைகள், கடுஞ்சொற்கள், துரோகங்கள்
வாசிக்கப்படுகின்றன

ஒவ்வொன்றிலும்
எல்லாக் காட்சிகள் மறைந்தும்
ரசமிழந்த கண்ணாடியின் மேல்
காயாமல் எஞ்சியுள்ளன
சில கண்ணீர்த் துளிகள்

Friday, December 9, 2011

அவசரப் பிரிவில் அரைநாள்




யாரையோ தேடி
மருத்துவமனை வந்த நீங்கள்
இங்கே அவசரப் பிரிவில் நுழைந்தது
எதார்த்தமானது

உங்களைக் கடந்துபோகும்
மருந்துநெடிகளை
வெள்ளை ஆடைகளில் பரபரக்கும்
தாதிகளை மருத்துவர்களை
தரையில் சிந்தும் இரத்தத் துளிகளை
உறவினர்களின் கதறல்களை விசும்பல்களை
மூடிய கதவுக்கு முன்னால்
தவிக்கும் முகங்களை
வாசலில் தயார்நிலையில் நிற்கும் ஆம்புலன்ஸை

எதையும்
கடக்க முடியாமல் திகைத்து நிற்கும்
உங்களிடம் யாரோ ஒரு மூதாட்டி
தன் நெருங்கிய உறவுக்கு நேர்ந்த துயரம்பற்றி
அழுதுகொண்டே
பகிர்ந்துகொள்ள வருகிறார்

நீங்கள் அங்கிருந்து
வெளியேற மறந்து
அவரின் அருகிலமர்ந்து
துயரக்கதை கேட்கத் தயாரானது
அபூர்வமானது


முன்னெப்போதும் இல்லாமல்



முன்னெப்போதும் இல்லாமல்
வெயிலின் வெட்கை கூடிவிட்டது
மழையின் கோரத் தாண்டவம் நிகழ்கிறது
இயற்கை சீற்றம் அதிகமாகிவிட்டது
நிலம் அடிக்கடி நடுக்கம் காண்கிறது
கடல் பொங்கியெழுந்து நிலம் பார்க்கிறது

முன்னெப்போதும் இல்லாமல்
நாற்காலிகளுக்குப் போட்டி வலுக்கிறது
வார்த்தைகள் தடிக்கின்றன
இனத்துவேஷம் கட்டவிழ்க்கப்படுகிறது
திரைமறைவில் சதிகள் பின்னப்படுகின்றன

முன்னெப்போதும் இல்லாமல்
அன்பளிப்புகள் அதிகமாகிவிட்டன
கையேந்தும் காட்சிகள் கூடிவிட்டன
கருணைக் கைகள் நீளுகின்றன
ஆதரவுக் கரங்கள் தழுவுகின்றன
இதழ்கள் புன்னகை சிந்துகின்றன

முன்னெப்போதும் இல்லாமல்
ஒற்றுமை விரிவாகப் பேசப்படுகிறது
ஒன்றுகூடும் நிகழ்வுகள் ஏற்பாடாகின்றன
இனிப்பு அறிவிப்புகள் செய்திகளாகின்றன
வாக்குறுதிகள் அள்ளி வழங்கப்படுகின்றன


கிழிக்கப்பட்ட பக்கங்கள்


நானில்லா நேரத்தில் அறைக்குள் நுழைகிறீர்கள்
உங்களின் கைகளில் எப்படியோ
சிக்கிவிடுகிறது என் டைரி

இதழ்களில் வெற்றிப்புன்னகை தவழ
தவிப்போடு பக்கங்களைப் புரட்டி
என் தனிமைக்குள்
என் அந்தரங்கங்களுக்குள்
என் சொல்லாத கதைகளுக்குள்
என் சேமித்த சிந்தனைகளுக்குள்
என் இராத்திரி அறைகளுக்குள்
எனக்கு மட்டுமே புரியும் கிறுக்கல்களுக்குள்
என் இரகசியங்களுக்குள்
நுழைகிறீர்கள்

உங்களை
வன்மையாய்ப் பாதியில்
தடுத்துப் நிறுத்திவிடுகிறது
அதன் கிழிக்கப்பட்ட பக்கங்கள்


Thursday, December 8, 2011

புலம்பெயர்தலின் பேரின்பம்


குகை வாழ்க்கை சலித்து
ஆதிமனிதனின் கால்கள்
நதிக்கரை நோக்கிப் பயணித்தன

அரண்மனை வாழ்வை விடுத்து
விடைகளைத் தேடிப் புறப்பட்டார் சித்தார்த்தன்

ஹென்றி இளவரசரின் கட்டளை சுமந்து
பார்த்தலோமிய டயஸ், வாஸ்கோ டி காமா
புதிய பாதையில் பயணம் தொடங்கினர்

மக்காவின் உதாசீனங்களை உதறிவிட்டு
மதினாவில் வரவேற்கக் காத்திருக்கும்
கரங்களை நோக்கி விரைந்தார்
அண்ணல் நபி

வறுமையின் கோரப்பிடியில் சிக்கி
மண்ணுக்கு உரமாகாமல்
சேலத்திலிருந்து குடும்பத்தோடு
புறப்பட்டார் தாத்தா

புதிய வீடு வாங்க ஒப்பந்தம் செய்துவிட்டதாக
சிட்னியிலிருந்து மாமா கடிதம் அனுப்பினார்

அடுத்த மாதம் பாரிசில் நடக்கும்
தமிழ்ப்பண்பாட்டு நிகழ்வுக்கு வரும்படி
சிற்றப்பா மின்அஞ்சல் அனுப்பியிருந்தார்

கனடா தொரொந்தோ நகரில் வெளிவரும்
தமிழ் நாளிதழ்களை எனக்குத் தபாலில்
அனுப்பினார் அண்ணன்

கடைவாயில் வெற்றிலையை அதக்கிக்கொண்டே
பாட்டி சொன்னார்:
“நட்ட இடத்திலேயே நின்னா மரஞ்செடிக்கு அழகு
மனுசனுக்கு இல்லடா
கால்போன போக்குல போயித்தான் பாக்கணும்
கடிவாளம் கையில இருந்தா கவலையேன் படணும்”

கடைசியாய் நிலா பார்த்தது



மாணவர்கள் கடைசியாய் நிலா பார்த்த
தங்களின் அனுபவத்தைச் சொல்லத் தொடங்கினர்:

“சார், போன மாசம் இராத்திரியில..”
“தெய்வத்திருமகள் படத்தில விக்ரம் காட்டுவாரு”
“படத்துல பாட்டுக்காட்சியில நிறைய பார்த்திருக்கிறேன்”
“புத்தகத்துலதான் இருக்கே சார்”
“ஓவியத்துல”
“பேஸ்புக்ல அழகழகா நிறைய இருக்கு”
“போன வாரம் சாப்பிட வெளியே போனப்ப”
“ஞாபகம் இல்ல சார்”
“சின்னப் பிள்ளையில அம்மா சோறு ஊட்டும்போது”

நிலாவுக்கும் அவர்களுக்குமான இடைவெளி
கூடியிருப்பது தெரிந்தது

தூக்கம் வெறுத்த நேற்றைய இரவில்
சாலையில் தனியாய் நடக்கையில்
துணையாய் வந்த நிலாவைக் கவனித்தேன்
முன்னைவிட நிலா எல்லாரையும் விட்டு
தூரத்தில்போய் நின்று கண் சிமிட்டியது

Monday, December 5, 2011

பாறையின் இடுக்கில்



பாறையின் இடுக்கில்
தவறிய விதைகள்
நீர்குடித்துப் போராடி
முட்டி முளைப்பதுபோல்

உணவைத் தேடி உயரப் பறந்து
சோர்வுறும் சிறகு சுமந்து
கண்டங்கள் தாண்டும்
பறவைகள்போல்

பின்னிய வலைகள்
அறுந்து வீழ்ந்தும்
எச்சிலால் மீண்டும்
பின்னலைத் தொடரும்
சிலந்தியைப்போல்

கூட்டுப் புழுவாய்
சிறைக்குள் ஒடுங்கியும்
ஓட்டை உடைத்துப் பறக்கும்
பட்டாம்பூச்சிபோல்

நீரில்லாப் பாலையில்
கனல் கக்கும் வெம்மையில்
பொதிசுமந்து கடமையாற்றும்
ஒட்டகம்போல்

கைத்தடியால் தரைதடவி
கைப்பொருள் தனைவிற்று
தன்னுழைப்பால் நிமிரும்
கண்ணில்லா மனிதர்போல்

பொய்க்காலைப் பொருத்தி
பயிற்சியிலே தேர்ந்து
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும்
காலில்லா மனிதர்போல்

விளக்கில்லா வீட்டில்
மெழுகுவர்த்தி எரியவிட்டு
நூல்களைப் புரட்டும்
பிடிவாத மாணவனைப்போல்

பனிக்காலம் முழுதும்
வெண்போர்வை போர்த்தி
பொய்யுறக்கம் பூண்டு
வசந்தத்தில் கண்விழிக்கும்
பூமரங்கள்போல்

உன்னைச் சுற்றியும்
வாய்ப்புகள் பறிபோகும்
பள்ளங்கள் தோன்றும்
இடர்கள் இடைமறிக்கும்
சொந்தங்கள் பகையாகும்
முயற்சிகள் முடமாகும்
வழிப்பாதை களவுபோகும்

அவற்றைப்போல்
அவர்களைப்போல்
நீயும் மீண்டு வருவாய்!
மீண்டும் வருவாய்!


Monday, November 14, 2011

ஒட்டப்பட்ட மீசைகள்


கீழே கிடந்தது என் மீசை
எப்படிக் கீழே?
காற்றடித்து விழுந்ததா?
கழற்றி யாரும் எறிந்ததா?

காண்ணாடி பார்க்கிறேன் சகிக்கவில்லை
மீசையில்லா முகம்
இவ்வளவு அசிங்கமா?

“டேய் ஊருக்கு முகவரி ஆறுடா
நெத்திக்கு முகவரி நீறுடா
நம்ம முகத்துக்கும் இனத்துக்கும்
முகவரி மீசைடா!”

மீசை முறுக்கி தாத்தா சொன்னது
இன்னும் நினைவில்....

கண்ணாடிப் பிரேமில்
அடர்த்தியான மீசையில்
கம்பீரமாகச் சிரிக்கும் அப்பா...

பாட்டி சொன்ன கதைகளில்
இன்னும் பரவசப்படுத்தும்
இராஜகுமாரன்
உருவிய வாளும்
முறுக்கிய மீசையுமாய்...

நான் மட்டும் எப்படி
மீசையில்லாமல்?

உடனே எடுத்து
உதட்டில் ஒட்டினேன்
யாருக்கும் தெரியாமல்

எதிரில் வந்த நண்பர் சிலரின்
மீசையை இழுத்துப் பார்த்தேன்
கையோடு வந்துவிட்டது

அப்படியானால் எல்லாருக்குமா..?


சொல்லிச் சென்ற மரணங்கள்



மரணத்தின் கோரப்பற்கள் எப்பொழுது எங்கு யாரைக் கடித்துக் குதறும் என்று முன்கூட்டியே கணித்துக் கூறுவது சிரமம்.

பெரும்பாலும் முன் அறிவிப்பு இன்றி அழையா விருந்தாளியாய் திடுதிப்பென்றுதான் அது முன்வந்து நிற்கிறது.

கடன் வாங்கியவனிடம் வட்டி, முதல் இரண்டையும் மொத்தமாய் வசூலிக்க வந்த ஆலோங்கைப் போல் ஈவு இரக்கமில்லாமல் வாசலுக்கு வந்து வம்பு செய்கிறது.

வாழ்க்கையைத் தொடங்கலாம் எனத் தயாராகும் தருணங்களில் “நான் விட்டால்தானே” என வழியை மறித்துகொண்டு மரணம் குறுக்கே வந்து நிற்கிறது.

சில சமயங்களில் தலைமாட்டிலேயே தலைசாய்த்தவாறு “காலதாமதமானாலும் பரவாயில்லை. கையோடு அழைத்துகொண்டு போகிறேன்” எனப் பிடிவாதமாய்க் காத்திருக்கிறது.

மரத்தை அடிவேரோடு சாய்த்துக் குதூகலிக்கும் புயலின் கோரத்தாண்டவத்தை ஒத்திருக்கிறது மரணத்தின் செய்கைகள்.

நமக்குப் பின்னால் துரத்திக்கொண்டு வரும் முதுமையோடு உடன் கைகோர்த்துக்கொண்டு வருகிறது மரணம்.

கண் முன்னே அன்போடு பழகியவர்களை எல்லாம் எங்கோ பிடித்து ஒளித்து வைத்துக்கொண்டு கண்ணா மூச்சி விளையாடி நம்மைக் கவலைக்குளத்தில் தள்ளிவிட்டுக் கைக்கொட்டிச் சிரிக்கிறது.

மனித மனங்கள் தமக்குள் கூடுகட்டும் வண்ண வண்ணக் கனவுகளை ஒரு நொடியில் கலைத்துப்போட்டு முடிவுரை அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளியை முன் மொழிகிறது.

மழை நின்ற பின்னும் இலைகளில் சொட்டிக்கொண்டிருக்கும் நீர்த்துளிகள்போல் மரணத்தின் சுவடுகள், இறந்தவரை விட்டுவிட்டு இருப்பவர்களின் இதயங்களில் துயரத் துளிகளைக் கசியச் செய்கின்றன.

சிறு வயது முதலே மரணத்தைப் பற்றிய பய விதைகள் எப்படியோ என் மனத்துக்குள் விழுந்து முளைக்கத் தொடங்கி விட்டன.

நான் வாழ்ந்த தோட்டத்தில் நிகழ்ந்த கோர மரணங்கள் ஒவ்வொன்றும் இனம் காண முடியாத மரணம் குறித்த மிரட்சியை எனக்குள் கசியச் செய்துள்ளன. அருகிலுள்ள ரவாங் நகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு திரும்பியபோது காரால் மோதப்பட்டு இறந்த கிருஷ்ணன், ஈயம் தோண்டப்படும் குட்டையில் தவறி விழுந்து இயந்திரத்தால் கால்கள் அரைபட்டு இறந்த விஜயன், வீடு தீப்பற்றியதால் தூக்கத்திலேயே கருகி இறந்த சிவகாமி - இப்படி இளவயது மரணங்கள் என்னை உலுக்கியிருக்கின்றன.

சாவு வீடுகளில் பிணங்களை எட்டிப் பார்ப்பதற்கும் பயந்துகொண்டு சோகத்தில் மூழ்கிய முகங்களை உற்றுப் பார்த்தவாறு நிற்பேன். ‘டண்ணணக்க’ என சாவு மேளம் அதிர, அந்த மரண இசையை மனத்துக்குள் சேமிப்பேன். எல்லாச் சாவு வீடுகளிலும் ஒரே மாதிரியான பிண வாடை வீசுவதாக என் நாசி உணர்ந்திருக்கிறது.

தோட்டத்தில் இறப்பென்றால் எல்லாரும் திட்டி போட்டு சாவு வீட்டில் திரள்வதால் தோட்டத்தின் ஒவ்வொரு மரணமும் முக்கியத்துவம் பெறும். இறுதி ஊர்வலம் லாரியில் தொடங்கி இடுகாட்டில் முடியும்வரை வேடிக்கை பார்க்கும் என் ஆர்வம் தொடரும்.

புதைகுழிக்கு அருகில் சாங்கியங்கள் முடிந்து பக்கத்திலிருக்கும் கொட்டகையில் கூடி வெட்டியானுக்குக் கணக்கைத் தீர்த்துவிட்டுத் தோட்ட லயங்களுக்குத் திரும்பி நடப்போரைத் பின் தொடர்வேன்.

இப்படித் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தவனிடம் மரணம் நெருங்கிவந்து சொல்லிவிட்டுப் போன தருணங்களை இப்போது நினைத்தால் உடலும் உணர்வும் சிலிர்க்கின்றன.

மரணம் 1 - அண்ணனின் மரணம்

1980 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு நாள், வழக்கம்போல் என் அண்ணனைப் பார்க்க செராஸ் லேடி டெம்பெளர் மருத்துவமனைக்குப் போயிருந்தேன். ரவாங், சுங்கை சோ தோட்டத்திலிருந்து பேருந்தில் பயணப்பட்டுக் கோலாலம்பூருக்கு வந்து செராஸ் நோக்கிப் போகும் இன்னொரு பேருந்தில் ஏறி மருத்துவமனைக்குப் போகவேண்டும்.

ஒவ்வொரு முறையும் அந்தப் பயணங்கள் எனக்குக் கண்ணீரால் நனைந்த பயணமாகவே அமைந்துவிடும். பிறந்தது முதல் அண்ணனுக்கு இருதயத்தில் ஏதோ கோளாறு. 26 வயதில் நோயின் தீவிரம் கூடி ஒரு மாதமாக மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற்று வந்தார். எனக்கு வழிகாட்டியாக என் உயர்வுக்கு உந்துசக்தியாக அவரையே முழுமையாக நம்பியிருந்தேன்.

இப்பொழுது உள்ள இருதய மருத்துவமனையும் அதற்கான சிகிச்சையும் அப்பொழுது இல்லை. வாரத்தில் இரு முறையாவது அம்மாவிடம் கெஞ்சி எப்படியாவது பேருந்துக் கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு அண்ணனைப் பார்க்கப் போய்விடுவேன். போகும் பொழுதும் திரும்பும்பொழுதும் அண்ணனுக்கு நேர்ந்த நிலைக்காக அழுதுகொண்டே பயணிப்பேன். இப்பொழுதும் ரவாங் நகருக்குப் பயணித்தால் அந்தக் கண்ணீர் நாள்கள் நினைவில் அலையாய் மோதும்.

அன்று ஒரு மரணச் செய்தியைக் கொண்டு போயிருந்தேன். இரண்டு நாள்களுக்கு முன் மரணமடைந்த சமூகக் கலைமணி சா.ஆ.அன்பானந்தனைப் பற்றியது அது. கோலாலம்பூர் யுனைடெட் ஆசியன் வங்கியில் பணியாற்றிய என் அண்ணன், கோலாலம்பூர் இலக்கிய நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்வார். அதிலும் சா.ஆ.அன்பானந்தன் மேல் பெருமதிப்புக் கொண்டிருந்தார்.

இடையில் அண்ணனுக்குக் குடல்வால் (எப்பெண்டிக்ஸ்) அறுவை சிகிச்சை நடந்ததால் தகவல்கள் தெரியவில்லை. அவரின் மரணச்செய்தியைக் கூறியபோது அவர் முகம் மாறி, அழுத்தமான வருத்தம் இழையோடியதைக் கவனித்தேன். அவர் ஒன்றும் பேசவில்லை. கட்டிலில் சாய்ந்தவாறு மேல் நோக்கிப் பார்த்தவாறு இருந்தார். சா.ஆ.அன்பானந்தனின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிறகு, கோப்புகளில் அவர் எழுதிவைத்திருந்த குறிப்புகளைப் படித்திருந்ததால் இருவரின் மானசீகமான நட்பினை நான் அறிந்திருந்தேன்.

போகும்பொழுது நாளிதழ்களையும் வீட்டிலிருந்து எடுத்து வரச்சொன்ன நூல்களையும் கொண்டு போவேன். அவற்றைப் புரட்டியவாறு இருவருக்கும் நேரம் போகும். பேசுவது குறைவுதான். சின்னச் சின்ன விசாரிப்புகளோடு உரையாடல்கள் நின்றுபோகும். வீட்டிலும் அதே நிலைதான். அப்பா அம்மா இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொள்வதும் குறைவு. அதனால்தானோ அண்ணன், அக்கா, நான், இரு தம்பிகள் என ஐவரும் அப்படியே வளர்ந்திருந்தோம்.

அன்று மாலை நான்கு மணியளவில் நான் விடைபெற எண்ணி எழுந்தேன். அண்ணன் என்ன நினைத்தாரோ என்னை அருகில் அமரும்படி சொன்னார். அமர்ந்தேன். அதன் பிறகு, சுமார் ஒரு மணி நேரம் என்றுமில்லாமல் எதையெதையோ முதல் முறையாக மனம்விட்டுப் பேசினார். நானும் என்னை மறந்து அவர் மனத்தோடு மனம் கலந்தேன்.

“மலாய் பரீச்சையில எப்படியாவது கிரேடிட் எடுத்துடு. உன்னால முடியும். சிறுகதையெல்லாம் அப்புறம் எழுதலாம். உன் ஆர்வம் தெரியுது. அடுத்த வருசம் படிவம் ஆறு படிச்சு யூனிவசிட்டிக்குப் போற வழிய பாரு. தம்பி குணா நல்லா படிப்பான். அவன படிக்க வைக்கணும். அம்மா பத்திதான் உனக்கு தெரியுமே. எதையாவது பேசிடும். அதெல்லாம் பெரிசு படுத்தாதே. அம்மாவ பார்த்துக்க..” இப்படி இன்னும் நிறைய பேசினார். அப்பொழுது எதையும் ஆராய்ந்து பார்க்கும் மனம் எனக்கில்லை. என்றும் இல்லாத மகிழ்ச்சியோடு நான் வீடு திரும்பினேன்.

சரியாக ஒரு வாரம் கழித்து, பேருந்துக்குப் பணம் இல்லாததால் அண்ணனைப் பார்க்கப் போக முடியாத ஒரு நாளில், சுங்கைசோ தோட்டக் கலைமகள் நூலகத்தில் நண்பர்களோடு உறங்கிக் கொண்டிருந்த நள்ளிரவில் கதவு தட்டும் சத்தம் கேட்டுக் கதவைத் திறந்தபோது, அண்ணனின் நண்பர் சுப்ரமணியம் அழுதுகொண்டே சொன்னார் “அண்ணன் நம்மல விட்டுட்டுப் போய்ட்டாரு”

மரணம் 2 - அப்பாவின் மரணம்

அண்ணன் மறைந்து மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு நாள், கொளுத்தும் வெயிலில் வீட்டிற்கு முன்னே நான் கோடரியால் விறகு பிளந்துகொண்டிருந்தேன். அண்ணனின் பிரிவால் மனத்தைப் பிழிந்த சோகம் முற்றும் வடியாத காலம். கால்போன போக்கில் ரப்பர் மலைக்காடுகளில் நடந்துபோவேன். ஏதேதோ குழப்பமான சிந்தனைகள் மனத்தைக் கௌவிப் பிடித்து உலுக்கும். பாதிப்பயணத்தில் வழியே களவுபோனதால் திகைத்து நிற்கும் பயணியைப்போல் நான் உடைந்துபோயிருந்தேன்.

அன்று அப்பா வீட்டிற்கு வந்திருந்தார். வயதானதால் தோட்டத்தில் பணி ஓய்வு பெற்ற பின்னர் அம்மாவோடு ஏதோ மனவருத்தம் வந்து கோபித்துக்கொண்டு ஆடு மாடுகளை விற்றுவிட்டு, பத்துகேவ்ஸ் பக்கம் உறவினர் வீட்டில் சில மாதங்களாகத் தங்கியிருந்தார். அண்ணனின் மரணத்திற்கு வந்துபோனவர் திடீரென்று வந்திருந்தார். மனமாற்றத்திற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

நான் கோடரியை உயர்த்தியபோது, அருகில் வந்த அப்பா கையால் என்னைத் தடுத்தார். நான் அதைப் பொருட்படுத்தவில்லை. எப்பொழுதும் அவரோடு என் உரையாடல்கள் சுருக்கமாகவே இருக்கும்.

என்னைக் கூர்ந்து நோக்கினார். ஆழமான பார்வை. அப்படி அவர் என்னை நெருக்கமாக நின்று இதயம் துழாவும் பார்வையால் பார்த்ததே இல்லை. கண்கள் ஒடுங்கி, ஆழமான சோகம் இழையோடிய பார்வை. ஒரு கணம் அவர் பார்வையை எதிர்கொண்டேன். மறுகணம் என் கவனம் விறகில் பதிந்தது.

“நீ படிடா. நான் படிக்க வைக்கிறேன். நீ ஏன் வீணா கவலப்படுற? அண்ண இல்லாட்டி என்ன? நான் இருக்கேன் இல்ல” நான் மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை. நின்று பார்த்தார்.

வீட்டிற்குள் போனார். என் அக்காள் குழந்தைகள் வாணி - சிவா இருவரோடும் கொஞ்சிப் பேசினார். அம்மா சமைத்த மதிய உணவைச் சாப்பிட்டார். குழந்தைகள் கைகளில் பணத்தைத் தந்தார். நான் ஒரு பக்கமாக அமர்ந்து அதைக் கவனித்துக்கொண்டிருந்தேன். அவரிடம் பேசுவதற்கு நான் சொற்களை இழந்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் புறப்பட்டு விட்டார். அவர் போவதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

மூன்று நாள்கள் கழித்து இரவில் பத்துகேவ்ஸிலிருந்து உறவினர்கள் அப்பாவைத் தேடிக்கொண்டு வந்தபோது பயம் எனக்குள் பரவத் தொடங்கியது. இரண்டு நாள்களாக அப்பாவைக் காணவில்லை என்பதால் தேடி வந்ததாகக் கூறினர்.

தெரிந்த இடங்களிலெல்லாம் தேடினோம். இறுதியாக கோலாலம்பூர் பெரிய மருத்துவம¨னையின் சவக்கிடங்கிற்கு என்னை அழைத்துச் சென்று ஒவ்வொரு பிணமாகக் காட்டி அடையாளம் காணச் சொன்னார்கள். நான் பயத்தில் உறைந்து வெளியே வந்துவிட்டேன்.

பிரசவத்திற்காக மருத்துவனையில் இருந்த பெரியப்பா மகளைப் பார்க்க பெக்கிலிலிங் சாலையோரம் நடந்துபோகையில் வாகனத்தால் மோதப்பட்டு மருத்துவமனையில் மரணமடைந்த அப்பாவை உறவினர்கள் அடையாளம் காட்டினார்கள்.

மரணம் 3 - மாணவனின் மரணம்

1998ஆம் ஆண்டு முதுகலைபட்ட ஆய்வுக்காக கணினியில் மூழ்கியிருந்த தருணம். பிற்பகல் ஒரு மணி. ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நான் தமிழ் வகுப்பு நடத்தும் செமினி உங்கு ஹ¤சேன் இடைநிலைப் பள்ளியின் நான்காம் படிவ மாணவன் சந்திரபாபுதான் அழைத்திருந்தான்.

“சார், இப்ப நான் தமிழ்மொழிக் கழகத்துக்கு தலைவரா இருக்கேன். சில திட்டங்கள செயல்படுத்தலாம்ணு இருக்கேன். உங்ககிட்ட பேசணும் சார்.” அவன் குரலில் ஆர்வம் பொங்கியது. கவிதை, கதைகளில் ஈடுபாடு உள்ளவன் சந்திரபாபு. அவன் அப்பா தமிழ்ப்பள்ளி ஆசிரியர். என்னோடு நெருக்கமாக இருப்பவன். எனக்கு நியமனம் பெறாத உதவியாளனாகச் செயல்படும் பணிவுள்ள மாணவன்.

“அப்படியா, மகிழ்ச்சி சந்திரபாபு. இந்த வாரம் வகுப்புக்கு வரும்போது பேசுவோம். நான் சில ஆலோசனை சொல்றேன்”

“சார், உங்க கிட்ட பேசணும். நீங்க ஐடியா கொடுங்க சார். போன வருசத்தவிட இந்த முறை நல்ல திட்டமா இருக்கணும். உங்க உதவியெல்லாம் வேணும் சார்’

“சரி, அதற்கென்ன பேசுவோம். இந்த வாரம்தான் பார்ப்போமே” உரையாடலைத் துண்டித்தேன். மீண்டும் ஆய்வில் மூழ்கிப்போனேன். உங்ககிட்ட பேசணும்னு எத்தனை முறைதான் சொல்வான்.

மணி ஆறு இருக்கும். சந்திரபாபுவின் அப்பா அழைத்தார். குரலில் பதற்றம் தெரிந்தது. “சார், என் மகன் சந்திரபாபு ரெண்டு மணிக்கு மோட்டார் சைக்கிள்ல போனான். செமினி ரோட்டுல லோரி மோதி செத்துட்டான் சார்” நான் அதிர்ச்சியில் உறைந்துபோனேன். ஒரு மணிக்கு என்னோடு பேசியவன் இரண்டு மணிக்கு இல்லாமல் போய்விட்டானா? என்னோடு பேச வேண்டும் என்று மீண்டும் மீண்டும் சொன்னானே!


இன்னும் சில மரணங்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள், படிவம் ஒன்று மாணவர்களுக்கு வகுப்பில் வரலாற்றுப் பாடம் நடத்திக்கொண்டிருந்தேன். அவசர அழைப்புகள் வந்தால் தேவையென்பதால் வழக்கம்போல் கைப்பேசியை உடன் வைத்திருந்தேன்.

அதுவரை கைப்பேசியினால் மாணவரை வகுப்பில் படமெடுத்ததில்லை. ஆனால், அன்று என்ன நினைத்தேனோ தெரியவில்லை. ஒரு மலாய்க்கார மாணவனைக் கைப்பேசியால் படமெடுத்தேன். அவனும் சிரித்துக்கொண்டே எனக்கு முகம் காட்டினான்.

மறுநாள், மாலை வகுப்பு மாணவர்களின் சபை ஒன்றுகூடலில் ஆசிரியர் ஒருவர் முக்கிய அறிவிப்பினைச் செய்தார். எங்கள் பள்ளி மாணவன் ஒருவன், அன்று காலை இன்னொரு

பள்ளி மாணவனோடு பயணம் செய்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி இறந்துவிட்ட சோகச் செய்தியே அது. ஆயிரம் மாணவர்களில் அந்த மாணவன் யார் என ஆசிரியர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கும் அவன் யார் எனத் தெரியவில்லை.

அப்பொழுது, ஒரு மலாய் மாணவி என்னிடம் வந்து, “நேற்று அவனை நீங்கள் படம் பிடித்தீர்களே! இன்னும் அந்தப் படம் இருக்கிறதா?” எனக் கேட்டாள். நான் அதிர்ந்து போனேன். அவன்தானா? கைப்பேசியில் புகைப்படக் கோப்பைத் திறந்து பார்த்தேன். அங்கே என்னை நோக்கிச் சிரித்தவாறு அதே மாணவன். ஆசிரியர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன், தமிழக எழுத்தாளர் மாலனின் கட்டுரை, சிறுகதை நூல்கள் கோலாலம்பூரில் வெளியீடு கண்டன. அவற்றை வாங்கி வந்த நான், ஒரு நாள் இரவு மணி 11.30 ஆகியும் தூக்கம் வராமல் எதையாவது படிக்கலாமே என மாலனின் கட்டுரை நூலைப் பிரித்தேன். ஐந்தாவது கட்டுரை ‘வீரப்பனை ஏன் போலீசாரால் பிடிக்க முடியவில்லை?’ கண்ணில் பட்டது. ஆர்வத்தோடு படித்தேன்.

மறுநாள் காலை பள்ளிக்குத் தயாராகிக் காரில் அமர்ந்து வானொலியைத் திறந்து தமிழ்ச்செய்தியைக் கேட்டேன். தலைப்புச் செய்தியாக என் காதில் விழுந்தது “நேற்று இரவு சந்தனக் கடத்தல் வீரப்பன் போலீசாரல் சுட்டுக் கொல்லப்பட்டான்”.

பள்ளித் தேர்வில் எல்லாக் கேள்விகளுக்கும் விடைகள் இருக்கும். ஆனால், வாழ்க்கையில் சில கேள்விகளுக்கு விடைகள் கிடைப்பதில்லை. மரணம் குறித்த கேள்விகளையும் நான் அப்படித்தான் எதிர்கொள்கிறேன். மரணம் விட்டுச் சென்ற அண்ணனின் கடைசிச் சொற்கள், அப்பாவின் ஆழமான பார்வை, மாணவன் சந்திரபாபுவின் கடைசிக் குரல் இன்னமும் தீராத உணர்வலைகளை என்னுள் எழுப்புகின்றன.


ந.பச்சைபாலன்
(Thangameen.com) Okt 2011

Tuesday, October 11, 2011

காணாமல் போகும் மாணவர்கள்

‘பள்ளிக்குச் சென்ற ஐந்தாம் படிவத் தமிழ் மாணவன் கண்ணன் காணாமல் போனான்’

தமிழ் நாளிதழில் முதல் பக்கச் செய்தியாக இதனைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். கண்ணனுக்கு என்ன ஆனது என அறிந்துகொள்ளும் ஆர்வம் அனைவருக்கும் எழும். இந்தச் செய்தியால் சமூகத்தில் ஒரு பரபரப்புக் காய்ச்சலே பரவும். இப்படியொரு செய்திக்காகக் காத்திருக்கும் அறிக்கை மன்னர்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். ‘பள்ளிகளில் மாணவர்களுக்குப் பாதுகாப்பு இல்லையா? கல்வி அமைச்சு விரைந்து செயல்பட்டு கண்ணனைக் கண்டுபிடிக்க வேண்டும். பள்ளி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு வேண்டாம்’. இப்படியெல்லாம் அறிக்கைகள் ஏடுகளை அலங்கரிக்கும்.

மேற்குறிப்பிட்ட செய்தி கற்பனைச் செய்தியன்று. ஒவ்வோர் ஆண்டும் கண்ணனைப்போன்று பல்லாயிரக்கணக்கான தமிழ் மாணவர்கள் இடைநிலைப்பள்ளிகளில் காணாமல் போகும் அவலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. யூ.பி.எஸ்.ஆர். தேர்வில் தமிழைத் தேர்வுப் பாடமாகப் பயின்ற மாணவர்கள், இடைநிலைப்பள்ளிகளுக்குச் சென்ற பிறகு, பி.எம்.ஆர். தேர்விலும் எஸ்.பி.எம். தேர்விலும் தமிழைப் புறக்கணிக்கும் நிலை ஐம்பது விழுக்காட்டை நெருங்கிவிட்டது.

கீழ்க்காணும் அட்டவணை, 2005ஆம் ஆண்டில் யூ.பி.எஸ்.ஆர் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை இடைநிலைப்பள்ளி சென்ற பிறகு படிப்படியாகச் சரிந்து போனதைக் காட்டுகிறது.


§¾÷×

¬ñÎ

Á¡½Å÷ ±ñ½¢ì¨¸

¸¡½¡Áø§À¡É Á¡½Å÷¸û

Å¢Ø측Î

ä.À¢.±Š.¬÷.

2005

14 471

À¢.±õ.¬÷.

2008

10 306

4 165

28.78%

±Š.À¢.±õ.

2010

7 657

6 814

47.09%

இது பற்றித் தமிழ்ச்சமூகம் எந்தவிதமான சலனமுமின்றித் தாமுண்டு தமக்கே உரிய மற்ற சிக்கல்களுமுண்டு என அவற்றிலே உழன்றுகொண்டிருக்கிறது. வழங்கப்பட்ட உரிமைகளையும் புறந்தள்ளிவிட்டுப் பிறப்புப் பத்திரங்களுக்கும், அடையாள அட்டைகளுக்கும் இப்பொழுது அலைந்துகொண்டிருக்கிறது. தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி என்றால் உரத்தக் குரல் கொடுப்பவர்களும் இது பற்றிக் கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக்கொள்ள, இந்நாட்டில் தமிழ்க் கல்வியின் வளர்ச்சியே கேள்விக்குறியாகி வருகிறது.

இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் மாணவர்கள் ஏன் காணாமல் போகிறார்கள்? அவர்களுக்கும் தமிழுக்கும் ஏன் இடைவெளி கூடி வருகிறது? இவைபற்றி எண்ணிப்பார்த்தேன். எண்ணிப் பார்த்ததை உங்களின் பார்வைக்குக் கொண்டு வருகிறேன்.

இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் மாணவர்கள் தமிழை விட்டு விலகிப் போவதற்குப் பல காரணங்கள் உண்டு. தமிழ்ப்பள்ளிகளில் ஆறு ஆண்டுகள் தமிழ் படித்தும் ஒரு பகுதி மாணவர்கள் தமிழ் மொழியிலும் பிற மொழிகளிலும் வாசிப்பு, எழுத்து போன்ற அடிப்படைத்திறன்களை அடையாமல் இடைநிலைப்பள்ளிக்கு வருகிறார்கள். தமிழ்ப்பள்ளியோடு தமிழுக்கு முழுக்குப் போட்டு விட்டு இனி தமிழோடு உறவே வேண்டாம் என ஒதுங்குகிறார்கள்.

பள்ளியில் கால அட்டவணையில் தமிழ் சேர்க்கப்பட்டுச் சொல்லித் தரப்பட்டாலும் தமிழ் வேண்டாம் என முடிவெடுக்கிறார்கள். தமிழில் தங்களால் தேர்ச்சி அடைய முடியாது என்ற அவநம்பிக்கைக்கு ஆளாகிறார்கள். யூ.பி.எஸ்.ஆர். தேர்வின் தோல்வி அல்லது குறைந்த தேர்ச்சி பெற்ற அனுபவம் அவர்களைப் பயமுறுத்துகிறது.

இவர்களில் சிலர், படிவம் ஒன்றிலும், படிவம் இரண்டிலும் தமிழ் படிப்பதாகப் பாவனை செய்தாலும் படிவம் மூன்று வந்தவுடன் பி.எம்.ஆர். தேர்வில் தமிழோடு தங்கள் உறவை முறித்துக் கொள்ளும் முடிவை எடுக்கிறார்கள். தமிழ் வகுப்பில், தேசியப் பள்ளிகளில் படித்த தமிழறியாத மாணவர்கள் தமிழ் படிக்காமல் அமர்ந்து இருப்பதைப் பார்த்து அவர்களுடன் இணைந்துகொள்கிறார்கள். பள்ளி நேரத்திற்குப் பிந்திய தமிழ் வகுப்புகள் நடைபெறும் பள்ளிகளில் தமிழ் வகுப்புக்கு மட்டம் போடும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகும். பெரும்பாலும் போக்குவரத்துச் சிக்கலைக் காரணம் காட்டி வகுப்புகளைப் புறக்கணிக்கிறார்கள்.

மாணவர்கள் தமிழ் வேண்டாம் என்று ஒதுங்கும் நிலைக்குப் பெற்றோர்களும் காரணமாகிறார்கள். தமிழ்ப்பள்ளியில் பயின்றவரை தம் பிள்ளைகளின் கல்வியில் ஓரளவு அக்கறை செலுத்திவரும் அவர்கள் இடைநிலைப்பள்ளியில் பிள்ளைகள் தொடர்ந்து தமிழைப் படிக்கிறார்களா என்று கவனிக்கத் தவறுகின்றனர். இதனை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டு தமிழுக்கு முழுக்குப் போடுகிறார்கள். “பாடங்கள் கூடிவிட்டன. அவற்றோடு சிரமமாக இருக்கும் தமிழையும் பிள்ளைகள் சுமக்கவேண்டாமே” என்று பெருமனத்தோடு பெற்றோரே முடிவுக்கு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பி.எம்.ஆர். தேர்வுக்குப் பிறகு, படிவம் நான்கில் பாடங்கள் கூடுகின்றன. இதன் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் படிவம் நான்கில் தமிழ் மாணவர்கள் எண்ணிக்கை மேலும் சரிகிறது.

“என் மகனுக்குத் தமிழ் படிக்க விருப்பமில்லை. எனவே, தமிழ் வகுப்பில் என் மகனைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று பெற்றோரே எழுதிய கடிதங்களைப் பெற்ற அனுபவம் எனக்குண்டு. தமிழில் குறைவான புள்ளிகளைப் பெறுவதால் ஒட்டுமொத்தத் தேர்ச்சியும் வீழ்ச்சியடைவதும் இதற்குக் காரணமாகிறது.

இதனை ஆழ்ந்து நோக்கினால், பெற்றோர் - மாணவர் மனநிலைக்கு இன்னொரு காரணமும் மறைவாகக் கண்சிமிட்டுவதை உணரலாம். “தமிழ்க்கல்வி தமிழ்ப்பள்ளியோடு போதும். மருத்துவம், பொறியியல், கணினி, போன்ற உயர்கல்விக்குத் தமிழ் பயன்படாது. எனவே, இடைநிலைப்பள்ளியில் தமிழ் வேண்டாம்” என்ற எண்ணம் அவர்களை ஆட்டிப்படைக்கிறது. வயிற்றுக்காக எந்த மொழியையும் எந்தப் பாடங்களையும் படிக்கலாம். ஆனால், வாழ்க்கை மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற ஆழமான தமிழ் உணர்வு பெற்றோருக்கும் மாணவருக்கும் இருந்தால்தான் தமிழ் புறக்கணிப்புக் கதையை ஒரு முடிவுக்குக் கொண்டு வரமுடியும்.

யூ.பி.எஸ்.ஆர். தேர்வுக்குப் பிறகு, தமிழ் ஆசிரியர் இல்லாத, தமிழ் வகுப்புகள் நடைபெறாத இடைநிலைப்பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் நிலையோ இன்னும் மோசமானது. யூ.பி.எஸ்.ஆர். தேர்வில் தமிழ்மொழியில் சிறந்த தேர்ச்சி இருந்தும் தொடர்ந்து தமிழைப் படிக்கமுடியாத நிலையில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்களை அங்கு இழந்து வருகிறோம். உணர்வுள்ள பெற்றோர்கள் மட்டும் விடாப்பிடியாக வெளியில் எங்காவது தமிழ், தமிழ் இலக்கிய கூடுதல் வகுப்புகளுக்குப் பிள்ளைகளை அனுப்பித் தமிழ் மாணவர்களைக் காப்பாற்றி வருகிறார்கள்.

தாய்மொழி வகுப்புகள் நடைபெற வேண்டுமானால் பள்ளியில் குறைந்தது 15 மாணவர்கள் இருக்க வேண்டும் என்ற கல்விச் சட்டமும் சில வேளைகளின் சிக்கலை ஏற்படுத்துகிறது. 15 மாணவர்களுக்கும் குறைவாக இருந்தால் எவ்வளவு போராடினாலும் தமிழ் வகுப்புகள் தொடங்குவது சிரமம்தான்.

மேற்கூறிய காரணங்களைத் தவிர்த்து, இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களே தமிழ் மாணவர்கள் எண்ணிக்கைச் சரிவுக்குக் காரணமாவது உண்டு. தமிழ்மொழியில் பின் தங்கிய மாணவர்கள் தேர்வுக்கு அமர்ந்தால் தமிழ்மொழித் தேர்ச்சி வீழ்ச்சியடையும் என்பதால் அவர்களிடம் தேர்வைத் தவிர்க்குமாறு ஆலோசனை கூறும் நிலை உள்ளது. பி.எம்.ஆர். தேர்வில் விடுபடும் மாணவர்கள் அதன் பிறகு, படிவம் நான்கில் தமிழ் வகுப்பில் வெறும் பார்வையாளர்களாக அமர்ந்திருப்பர். பள்ளிகளில் மாணவர் தேர்ச்சி விழுக்காடு அப்பள்ளியின் தன்மானப் பிரச்சினையாக மாறிவருவதால் தேர்ச்சிபெற வாய்ப்புள்ள மாணவரை மட்டும் தேர்வுக்கு அனுப்பும் சூழலில் தமிழ் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து சரிவைக் காணும் என்பது திண்ணம்.

எஸ்.பி.எம். தேர்வில் தமிழ் இலக்கியப் பாடத்தைத் தேர்வு செய்யும் மாணவர்கள் எண்ணிக்கையும் கவலையளிப்பதாக உள்ளது. பல தரப்பினரின் தீவிர முயற்சிகளுக்குப் பின்னரும் அந்த எண்ணிக்கை 23 விழுக்காடாக இருப்பது (தேர்வெழுதிய 14 471 யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களில்) ஏமாற்றத்தைத் தருகிறது. அறிவியல் துறைசார்ந்த உயர்கல்வியில் முனைப்பு காட்டினாலும் தமிழ் இலக்கியத்தின் பயன் அறிந்து அதைப் படித்துச் சுவைக்க மாணவர்களை ஆற்றுப்படுத்தவேண்டிய கடமை ஆசிரியர், பெற்றோர் ஆகிய இரு தரப்பினருக்கும் உண்டு. கீழ்க்காணும் பட்டியல் தமிழ் இலக்கியத்தின் நிலையைக் காட்டுகிறது.

§¾÷×

¬ñÎ

Á¡½Å÷

±ñ½¢ì¨¸

§ÅÚÀ¡Î

Å¢Ø측Î

ä.À¢.±Š.¬÷.

2005

14 471

±Š.À¢.±õ.¾Á¢ú þÄ츢Âõ

2010

3 283

11 188

77.31

நம் சமூகத்தின் இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் ஒட்டு மொத்தக் கவனமும் தமிழ்ப்பள்ளிகளைச் சுற்றியே வருகிறது. தமிழ்ப்பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்பவேண்டும் என்ற உணர்வு பெற்றோர்களிடையே மேலோங்கி உள்ளது. அதோடு, தங்களின் தமிழ்க்கடமை முடிந்துபோனதாக அவர்கள் நினைக்கிறார்கள். தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்தவேண்டும் என்ற முனைப்பும் உழைப்பும் இடைநிலைப்பள்ளிகளில் நீர்த்துப்போவதை எப்பொழுது உணரப்போகிறோம்?

தமிழ்க்கல்வி குறித்து நாம் ஆயிரம் ஆராய்ச்சி மாநாடுகளையும், கருத்தரங்கங்களையும் பயிற்சிப் பட்டறைகளையும் தொடர்ந்து நடத்தலாம். ஆனால், யாரை மையமிட்டு அவற்றை நடத்துகிறோமோ அவர்களே காணாமல் போகிறார்கள் என்னும்போது நம் முயற்சிகளால் என்ன பயன் விளையப்போகிறது?

‘தமிழ் எங்கள் உயிர்’ என்று தமிழவேள் கோ.சாரங்கபாணி சமூகப் போராட்டத்தைத் தொடங்கி நிதி திரட்டி மலாயாப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுமொழியாகத் தமிழை நிலைநிறுத்தினார். இன்றைய சூழலில், ‘இடைநிலைப்பள்ளியில் தமிழைக் காப்போம்’ என்னும் அறப்போராட்டத்தைச் சமூக இயக்கங்கள் தொடங்கிக் கடுமையாகப் போராடினால் ஒழிய இச்சிக்கலுக்குத் தீர்வு பிறக்காது.


‘தமிழ் மாணவரே! தமிழ் மாணவரே

தமிழைப் படிக்கத் தயங்கு கின்றேரே!

தமிழைத் தமிழ் மாணவர் படிக்காமல்

இமிழ்கடல் உலகில் எவர் படிப்பாரே’

நம் கவிஞர் பொன்முடி பாடிய இந்தக் கவிதையை இன்னும் எத்தனை காலத்திற்குப் பாடிக்கொண்டிருப்பது?


Friday, July 15, 2011

யாருமற்ற நாளில்


யாருமற்ற நாளில்
பேய்களோடு கழிந்தது பொழுதெனக்கு
பேய்களோடு பேசக்கூடாது என்று
அப்பா சொன்னதும் காரணமாயிருக்கலாம்
என் பேய் சகவாசத்துக்கு

சன்னல் கதவுகள் படபடக்க
வேகமாக வீசிய காற்றின் கைபிடித்து
வீட்டுக்குள் ஏதோ நுழைவது போலிருந்தது
கைகளில் படபடத்த
‘கல்லறையின் கூச்சல்’ நாவலின் பக்கங்களில்
பதுங்கிருந்த பேய்கள் ஒவ்வொன்றாய் வெளிவந்து
என்னோடு பேசத்தொடங்கின

ஒவ்வொரு பேய்க்கும் ஒவ்வொரு கோர முகம்
எல்லாப் பேய்களையும் ஒரே முகத்தோடு
கற்பனை செய்த தவறெனக்குத் தெரிந்தது

பேய்களிடமும் நிறைய கதைகள் இருந்தன
ஊர் முழுக்கச் சுற்றிச் சேகரித்த கதைகளைச்
என்னிடம் சொல்லத் தொடங்கின
தூக்குப்போட்டு இறந்த தொங்கவீட்டு முனியாண்டி
கங்காணியால் கர்ப்பமாகி தீயில் கருகிய மாலா
சுடுகாட்டு முச்சந்தியில் பஸ்சுக்குள் சிக்கிய மோகன்
குளிக்கப்போய் காணாமல் போன மனோகரன்
காதலன் கைவிட்டதால் மாத்திரைகளை விழுங்கிய உமா

கதைகளிலிருந்து வெளியேறிய புதிய பேய்கள்
என்னைச் சுற்றி நின்று உற்றுப் பார்க்க
நாவலில் பக்கங்களில் மேலும் சில பேய்களோடு
பேசத் தொடங்கினேன்

பேய்களோடு பேசும் அனுபவம்
திகிலாக இருந்தாலும் பிடித்திருந்தது
நள்ளிரவு தாண்டியும் ஆளில்லாத வீட்டில்
விருப்பத்தோடு அலையும்
பிரியமான பேய்களை அழைத்துக்கொண்டு
முச்சந்திச் சுடுகாடுவரை போய்
விட்டுவிட்டுத் திரும்பினேன்


பை நிறையக் காரணங்கள்


தங்கும் விடுதியில்
அதிகாலை நேரத்தில்
போலீஸாரின் அதிரடிச் சோதனையில்
மாட்டிக்கொண்டு விழிக்கும்
காதலர்கள்போல்

இடத்துக்கும் நேரத்துக்கும்
தகுந்தாற்போல்
அறிக்கைகளால் சமாளிக்கும்
அரசியல்வாதியைப்போல்

உதவி தேடிவருவோருக்கு
தகுந்தாற்போல்
முகம்பார்த்துப் பரிகாரம் சொல்லும்
குருவைப்போல்

இன அழிப்புப் போருக்கான
தன் வாதங்களை
பக்கம் பக்கமான அறிக்கைகளால்
உலகஅரங்கில் வைக்கும்
கொடுங்கோலன்போல்

தம் பிள்ளைகளைத்
தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பாமல்
ஏடுகளின் ஆசிரியர்களாக
எழுதிக்குவிக்கும் எழுத்தாளர்களாக
இயக்கங்களின் பொறுப்பாளர்களாக
போதையூட்டும் கருத்தால்
தமிழ் இனத்தின் பெருமை பேசும்
தலைவர்கள்போல்

வாங்கிய கடனை
திருப்பிச் செலுத்தாமல்
வகையாய்க் காரணங்களால்
காலத்தை நீட்டிக்கும்
கடன்பட்டும் கலங்கா
நெஞ்சினர்போல்

பேருந்துக் கட்டணம்
தந்து உதவினால்
ஊர்போய்ச் சேர்வதாக
போதையோடு கைநீட்டி
வழிமறிக்கும் இளைஞனைப்போல்

எப்போதும்
கால்சட்டைப்பை நிறைய
காரணங்களை வைத்துக்கொண்டு
திரிகிறார்கள்
தப்பு செய்யும் மாணவர்கள்

சவப் பரிசோதனை அறிக்கை


தகவல் வந்ததும்
அந்தப் சவப் பரிசோதனைக்குப்
பிரியத்துடன் இணங்கினேன்

இறந்தவர் எனக்குத் தெரிந்த
இலக்கியவாதி என்பதால்
அவரைப் பற்றி இன்னும் அறிய
ஆவல் எழுந்தது

வழக்கம்போல் பணியாளர்கள்
உடன் இணைய
அவரை நெருங்கினேன்
‘நிர்வாண நிஜம்’ அவர் எழுதிய சிறுகதை
நினைவில் மோதியது

ஒவ்வோர் அங்கமாக அறுத்துப் பார்த்தேன்
முதுமையின் நட்டக்கணக்கு பல்லைக் காட்டியது

“நெம்புகோலாய் உலகையே
என் எழுத்தால் புரட்டிப் போடுவேன்”
மேடையில் புரட்சி பேசிய உதடுகள் உறைந்திருந்தன

மற்றவரை மட்டம் தட்டி
மற்றவர் பெயரில் படைப்புகள் எழுதி
பரிசுகள் அள்ளிய
அவரின் அற்புதக் கைகள் அடக்கமாயிருந்தன


அங்கீகாரமில்லையே என
நொந்து நொந்து வயிற்றெரிச்சலால்
வயிற்றுக்கடுப்புக்குள்ளாகி
அமிலங்களின் பிரவாகத்தால்
சமன்நிலை சீர்குலைந்து
நோய் முகாமிட்டு வென்றதற்கு
ஆதாரங்கள் கிடைத்தன
குறித்துக்கொண்டேன்

இருந்தாலும் இதயத்தையும்
அறுத்துப் பார்க்க ஆவல் மிகுந்தது
நெஞ்சக்கூடு எலும்புகளை விலக்கி
ஆழமாகக் கத்தியைச் செருகி
இதயத்தை மட்டும் தனியே எடுத்துச் சோதித்தேன்

இதயத்தின் இரத்த நாளங்கள் நெடுக
இலக்கிய மோசடிகளாலும் பொய்யாலும்
நனைந்த குருதியின்
பயணம் தடுக்கும் அடைப்புகள் கண்டேன்

அறுத்துப்போட்டதைத் தைப்பதற்கு
ஆள்கள் தயார்
நான் கையுறை கழற்றி
அறிக்கை எழுதி
ஏமாற்றத்துடன் வெளிவந்தேன்

அமைதிப் பேரணிக்கு முன்னும் பின்னும்


அமைதிப் பேரணிக்கு முன்:

சாலையை அடைத்துக்கொண்டு
புகைகக்கிப் பறக்கும்
வாகனங்களின் இடுக்குகளில்
மனிதக் கால்கள் பதியும் சாலை நெடுகிலும்
பேரங்காடி, பேருந்து - இரயில் நிலையங்களில்
உணவகங்களில் ஓயாது அசையும் உதடுகளில்
ஏடுகளின் முதல் பக்கங்களில்
எங்கும் நீக்கமறக் நிறைந்து
வழிந்துகொண்டிருந்தன

மிரட்டல்கள்
கண்டன அறிக்கைகள்
பயமுறுத்தும் குறுஞ்செய்திகள்
பீதி கிளப்பும் புரளிகள்
பிடிவாதங்கள்
போலீஸ் புகார்கள்
சட்ட நுணுக்கங்கள்
ஊகங்கள்
எதிர்பார்ப்புகள்
வேடிக்கை விரும்பிய இதயங்கள்
நீதிமன்றத் தடைகள்
எக்காளக் குரல்கள்

அமைதிப் பேரணிக்குப் பின்:

வெறிச்சோடிய சாலைகளில்
அங்கங்கே சிதறிக்கிடந்தன
காலணிகள்

கனிமநீர் பாட்டில்கள்
நெகிழிப்பைகள்
காகிதக் குப்பைகள்
உடைந்த பொருள்கள்

சுதந்திரமாய்
வண்ணங்களில் நனைந்த
வண்ணத்துப்பூச்சிகள்
வாகனமற்ற சாலைகளில் பறக்க
சாலைநெடுக உயர்ந்த கட்டடங்கள்
அழகை முழுதுமாய்க் காட்ட
மழைக்குப் பிந்திய வானம்
கட்டட இடுக்குகளில் வண்ணம் தோய்க்க
பயத்தில் மூடிக்கொண்ட
வாணிப நிறுவனத்தின் கதவுகள்
மூடியே கிடக்க

எதிர்பாராப் பணிமுடித்துக்
களைத்துத் திரும்பிக்கொண்டிருந்தன
போலீஸ் வாகனங்கள்


எனக்கான விடுதலை


அரிய பொருளைத் தொலைத்தவனின்
சஞ்சலம் மிகுந்த தவிப்பைப்போல்
நீண்டுகொண்டே இருக்கிறது
என் தேடுதலின் தாகம்

என் கைகளை இறுக்கும்
கைவிலங்கைத் திறக்கும் சாவி
யார் கையில் இருக்குமென
வருவோர் போவோரையெல்லாம்
தீவிரமாய் விசாரித்தாயிற்று
எல்லாரும் உதடு பிதுக்கி
கைகளை விரித்து
ஏளனப் பார்வை சிந்தி
நமட்டுச் சிரிப்போடு
என்னைக் கடந்து போகிறீர்கள்

உங்களில் யாரோதான்
திட்டமிட்டு
என் சாவியைத் திருடிவிட்டு
என்னைத் தவிக்க வைப்பதாய்
என் காதுக்குத்
தகவல்கள் வருகின்றன

நான் ஓரிடத்தில் முடங்க
தடுப்புச் சுவரெழுப்பி
எனைத் தவிக்கவிடுவது
நண்பர்களில் யாரோதான்
நம்பத் தொடங்கினேன்


எவ்வளவோ முயன்றும்
விலங்கை உடைத்தெறிய நினைத்து
போராடிப் போராடி
நிறைவேறாமலே போனது
விலங்குடைக்கும் எண்ணம்

எல்லாரையும் எல்லாவற்றையும்
குறை சொல்கிறேன்
எதிர்ப்படும் முகங்களைச்
சந்தேகப் பார்வையில் சலிக்கிறேன்
என் மீது வீசப்படும்
விமர்சனங்கள் மீது
விசாரணை நடத்துகிறேன்

மிஞ்சுவது வெறுமையும்
மனம்நிறைய விரக்தியும்
கைநிறைய ஏமாற்றங்களும்

கடைசிவரை
என்னை இறுக்கும் கயிறுகளை
என் கைகளே பற்றியிருக்கும்
கொடுமை அறிந்திலேன்

இதிலே
எங்கிருந்து வந்து
விலங்கு என்னைச் சிறைப்படுத்தியது?
விபரம் அறிந்திலேன்


Tuesday, July 12, 2011

பசித்தவர் இங்கே! பத்தி எழுத்துகள் எங்கே?


‘ஸ்டார்’ (Star) ஆங்கில நாளேட்டில் எழுதிவரும் 41 பத்தி எழுத்தாளர்களில் (columnists) 30 பேரை அண்மையில் அழைத்துச் சிறப்பித்து அவர்களின் குழுப்படத்தை அந்நாளேடு பெருமையோடு வெளியிட்டிருந்தது. ‘பல்வேறு துறைகளில் மாறுபட்ட சிந்தனைகளை முன்வைத்து எங்கள் நாளேட்டுக்குத் தனித்தன்மையைத் தந்துவரும் இவர்களுக்கு நன்றி’ என அவர்களின் பங்களிப்புக்கு மகுடம் சூட்டியிருந்தது.

வாரந்தோறும் 41 எழுத்தாளர்கள் ‘ஸ்டார்’ நாளேட்டில் கல்வி, பொருளாதாரம், அரசியல், சமுகம் தொடங்கி உலக நடப்புகள், சமையல், விளையாட்டு, இலக்கியம், கலையுலகம் என பல துறைகளில் நுணுக்கமாக அலசித் தம் சிந்தனைகளை வாசகர்களுக்குப் பந்தி வைக்கிறார்கள். இதனால் அதன் வாசகர்கள் தொடர்ந்து புதிய வாசிப்பு அனுபவத்தையும் மாறுபட்ட சிந்தனைகளையும் பெறுகிறார்கள். மேலும், ஏடுகளில் அச்சேறும் செய்திகள் பற்றிய அலசல்களில் ஆழமான புரிதல்களைப் பெறுகிறார்கள். மலாய் ஏடுகளிலும் பத்தி எழுத்தாளர்களின் படைப்புகள் தொடர்ந்து வருகின்றன. வாரத்தின் ஏழு நாட்களிலும் பத்தி எழுத்துகள் ஏடுகளை அலங்கரிக்கின்றன.

‘ஸ்டார்’ நாளேட்டில் பத்தி எழுத்தாளர்களின் படத்தைப் பார்த்தபோது அத்தகைய நிலை நம் தமிழ் நாளேடுகளில் இல்லையே என்ற ஏக்கம்தான் எனக்குள் எட்டிப் பார்த்தது. நீண்ட காலமாக இந்நாட்டில் தமிழ் நாளேடுகள் வெளிவருகின்றன. உணவுக்குத் தொட்டுக்குக் கொள்ளும் ஊறுகாயாக எப்போதாவது சிலரின் சிந்தனைகள் எட்டிப்பார்க்கின்றன. ஆனால், மருந்துக்குக்கூட பத்தி எழுத்துகளைக் காண்பது அரிதாக இருக்கிறது. ஏன் நமக்கும் பத்தி எழுத்துகளுக்கும் அறவே ஆகாதா? அல்லது பத்தி எழுத்து பாரம்பரியம் நமக்கு இல்லையா? தலையங்கம் தாண்டி மற்றவர் சிந்தனைகளை ஆராதிக்கும் மனம் நமக்கு இல்லையா? இப்படி வண்டாகக் குடையும் கேள்விகளுக்கு பதில் என்ன?

பத்தி எழுத்துகள் இல்லாவிட்டால் என்ன? நம் நாளேடுகள் படிப்பதற்குச் சுவையாகத்தானே உள்ளன? ஆசிரியரின் தலையங்கம் வருகிறதே? என உங்களில் பலர் கேட்கலாம். பத்தி எழுத்துகள் நாளேட்டிற்குச் சிறப்புத்தன்மையைத் தருகின்றன. தலையங்கம் என்பது நாளேட்டின் ஆசிரியர் ஒரு முக்கியச் செய்தியை, நாட்டு நடப்பை அவரின் பார்வையில் அலசும் பகுதியாக உள்ளது. அது தவிர்த்து, கேள்வி-பதில் பகுதியில் வாசகரின் சந்தேகங்களுக்குத் தம் கருத்துகளை அவர் முன் வைக்கிறார். இவை மட்டும் போதுமா என்றால் நிச்சயம் போதாது என்பதுதான் நடுநிலையாளர்களின் கருத்தாக இருக்கமுடியும்.

தமிழ் நாளேட்டின் ஆசிரியர் அறிவு ஜீவியாகவே இருக்கட்டும். அவர் ஒருவரின் சிந்தனை மட்டும் இந்தச் சமுதாயத்திற்குப் போதுமா? ஒருவரால் எல்லாத் துறைகள் பற்றிக் கருத்துகளை ஆழமாக முன்வைக்க முடியுமா? பல துறைகள் பற்றி மேலோட்டமாக அவர் சொல்ல முனைந்தால் வாசகருக்கு இதனால் பயன் விளையுமா?

நம் சமுதாயத்தில் நிலவி வரும் ஒரு முக்கியக் குறைபாடு, சமுதாயச் சிக்கல்கள் குறித்து நம் அறிவு ஜீவிகள், கல்விமான்கள் வாயைத் திறப்பதில்லை. போகிற போக்கில் துண்டு துணுக்காகச் சின்னச் சின்ன கருத்துகளைச் சொல்லிவிட்டு நழுவிவிடுகிறார்கள். அவற்றை அலசி விரிவாக கருத்துகளைப் பதிவுசெய்வதில்லை. அதற்கான களமும் இல்லை என்பதுதான் உண்மை. சான்றுக்கு ‘இண்டர்லோக்’ நாவல் விவகாரம் ஒன்று போதுமே! மலாய், ஆங்கில ஏடுகளில் விலாவாரியாக அலசி கட்டுரைகளாகப் பதிவு செய்தபோது நம் நாளேடுகளில் அறிக்கைப் போர் நடத்தினோம்.

நம் நாளேடுகளில் எது அறிக்கை, எது செய்தி எனப் பிரித்தறிந்து கொள்ளமுடியாத மயக்க நிலை உள்ளது. பலரின் அறிக்கைகள் செய்திகளாக முக்கியத்துவம் பெற்று ஏடுகளை அலங்கரிக்கின்றன. ஓர் அறிக்கைக்கு பதில் அறிக்கை, மறுப்பு அறிக்கை, ஆதரவு அறிக்கை என தொடர் அறிக்கைகள் வருகின்றன. அறிக்கைகளைத் தாராளமாக வெளியிட வாய்ப்பு உள்ளதால் பல இயக்கங்களின் தலைவர்கள் அறிக்கைகள் வெளியிடுவதைத் தம் இயக்கத்தின் முக்கியத் செயல்திட்டமாக எண்ணிச் செயல்படும் நிலைமை உள்ளது. ஒரு சமுதாயச் சிக்கலை, அது பற்றி ஆழமாக அறிந்த ஒரு வல்லுநர் கருத்துகளை பத்தி எழுத்தாக முன்வைத்தால் அறிக்கைகள் ஒதுங்கிக்கொள்ளும் நிலை உருவாகும்.

நம் தமிழ் நாளேடுகளில் பத்தி எழுத்துகள் ஏன் இல்லை என்று எண்ணிப் பார்த்தேன். நீண்ட காலமாகப் பத்தி எழுத்துப் பாரம்பரியம் தமிழ் ஏடுகளில் இல்லை. எனவே, காலப்போக்கில் அதுவே ஒரு மரபாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அனைவராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. ஒருவர் பத்தி எழுத்துகளை வழங்க முன்வந்தாலும் ஏடுகள் அவற்றை ஏற்க யோசிக்கும். அதை ஓர் அறிக்கையாக ஏதாவது இயக்கத்தின் சார்பாகத் தந்தால் உடனே வெளியிட முன்வரும். பத்தி எழுத்துகளை வெளியிடா மரபைக் கட்டிக்காப்பதால் இழப்பு இனத்துக்குத்தான் என்பதை யார் எப்படி உணர்த்துவது?

பத்தி எழுத்துகளை வெளியிட தமிழ் ஏடுகள் தயக்கம் காட்டுவதற்கு முக்கியக் காரணம் பணமா?. நமக்கு மூன்று தமிழ் நாளேடுகள் உள்ளன. சமுதாயத்தில் ஐம்பது விழுக்காட்டினர் தமிழ்ப்பள்ளிகளைத் தவிர்த்துத் தேசியப் பள்ளிக்குப் போகின்றனர். மிஞ்சியுள்ள ஐம்பது விழுக்காட்டில் தமிழ் நாளேடுகளை வாங்கிப் படிப்போர் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதுதான் நிதர்சன உண்மை. நம் ஏடுகளின் விற்பனையோடு விளம்பர வருமானமும் குறைவு. இதனால் எழுத்துப் படைப்புகளுக்குச் சன்மானமும் வழங்கப்படுவதில்லை என்று காரணங்கள் கூறப்படுகின்றன.

அண்மையக் காலத்தில்தான் சிறுகதைப் படைப்பாளர்களுக்கு RM50 வழங்கப்படுகிறது. கவிதைகள், கட்டுரைகள் படைப்போர் ‘ஆயுளுக்கும் இலவயமாக எழுதிக்கடவாய்!’ என்று சபிக்கப்பட்ட கூட்டத்தார். விற்பனை குறைவு என்றாலும் ஓரளவு இலாபத்தோடுதான் நாளேடுகள் நடத்தப்படுகின்றன. எனவே, பணம்தான் காரணம் என்று புறமொதுக்காமல் நாளேடுகள் மனம் வைத்தால் நாளுக்கு ஒருவராக குறைந்த அளவில் ஒவ்வொரு நாளேட்டிலும் வாரத்திற்கு ஏழு பத்தி எழுத்தாளர்களுக்கு வாய்ப்பளிக்க முடியும்.

அண்மையில், பத்தி எழுத்துகள் குறித்து ஒரு தமிழ் நாளேட்டின் ஆசிரியரோடு பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஏடுகளில் பத்தி எழுத்துகளுக்கு வழிவிடுவதால் ஏற்படும் சிக்கல்களை அலசினார். “பத்தி எழுத்தாளர்கள் தமிழ் ஏடுகளில் இல்லை என்பது ஒரு குறைதான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அவர்கள் தொடர்ந்து நடுநிலையோடு எழுதிவர வேண்டுமே. அவர்கள் ஒரு சார்பாக தம் சிந்தனைகளை முன்வைத்தால் நமக்குப் பாதகமாக ஆகிவிடுமே” என்று தம் பயத்தை வெளிப்படுத்தினார்.

அவரின் பயம் எனக்கு நியாயமானதாகத் தெரியவில்லை. ‘ஒரு சார்பு’ என்பதைவிட எந்தக் கருத்தும் காய்தல் உவத்தலின்றி, நடுநிலையோடு உணர்ச்சிக்கு இடம்தராமல் அறிவுசார்ந்து அலசப்பட்ட கருத்தாக இருந்தால் அதற்கு இடமளிக்கும் ஆண்மை ஏடுகளுக்கு வேண்டும். எடுத்துக்காட்டாக, “இண்டர்லோக் நாவல் விவகாரத்தில் உங்கள் கருத்துகளை முன் வையுங்கள். ஆனால், அவை எங்கள் பத்திரிகை நிர்வாகத்தின் கொள்கைக்கு ஏற்றபடி இருக்கவேண்டும்” என்று எழுதுகோலுக்குக் கடிவாளமிட்டு எழுதச்சொல்லலாமா? அப்படி எழுதப்படும் எழுத்துகளால் யாருக்கு என்ன பயன்?

பத்தி எழுத்துகளுக்குத் தமிழ் ஏடுகள் இடமளிக்கத் தயங்குவதற்கு மற்றொரு காரணம் ஆசிரியரின் தலையங்கத்திற்கு அவை போட்டியாக உருவெடுக்கும் என ஆசிரியர் நினைப்பதும் காரணமாக இருக்கலாம் என அவரே கூறினார். இப்படி நியாயமில்லாத பயத்தைக் காரணமாக்கிக் கொண்டால் எந்தக் காலத்திலும் தமிழ் நாளேடுகளில் பத்தி எழுத்துகளைக் காணவே முடியாது. ஆங்கில, மலாய் ஏடுகளில் தலையங்கம் இடம்பெறும் பக்கங்களில் பத்தி எழுத்துகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

நம் சமுதாயத்தில் அறிவு ஜீவிகளும் கல்விமான்களும் தத்தம் துறைசார்ந்த வல்லுநர்களும் நிறைந்து இருக்கிறார்கள். அவர்களின் சிந்தனைச் சேமிப்பும் இனத்தின் மேன்மைக்கு வழிகாட்டல்களும் அரிய கருத்துகளும் நம் வாசகர்களின் பார்வைக்கு வரவேண்டும். இலக்கியம், சமயம், அரசியல், கல்வி, மருத்துவம், உலக நடப்பு, பொருளாதாரம் என எந்தத் துறையாக இருந்தாலும் அவற்றை அலசி மாற்றுச் சிந்தனையை முன்வைக்கும் எழுதுகோல்களை வரவேற்போம். வண்ணத்தில் கவர்ச்சிகாட்டிப் போதையூட்டும் சினிமாப் பக்கங்களைவிட கருத்துலகத்தில் வாசகர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் பத்தி எழுத்துகளுக்கு முதல் மரியாதை செய்யும் புதிய மரபு நம் தமிழ் நாளேடுகளில் மலர வேண்டும்.

இத்தகைய பத்தி எழுத்துகளுக்காக புதிய தலைமுறை வாசகன் பசித்திருக்கிறான். முன்னேறத் துடிக்கும் வாசகனுக்கு ஏடுகளில் வந்து குவியும் வெறும் அறிக்கைகளால் தீராத சலிப்புதான் ஏற்படும் என்பதை நம் தமிழ் ஏடுகள் புரிந்துகொள்வது எப்போது?

ந.பச்சைபாலன்

செம்பருத்தி 3/2011