நம் குரல்

Wednesday, October 22, 2014

தீராத தாகம்





சபைகள் தலைகளால் நிறைகின்றன
சமயப் போதனைகள் நடக்கின்றன
இறைவனின் பேராற்றல் உணர்த்தப்படுகிறது
அவனின் திருநாமம் உச்சரிக்கப்படுகிறது
ஒலிபெருக்கிகள் பெருங்குரலில் இரைகின்றன
உணர்ச்சி தூண்டும் சொற்கள் கலக்கின்றன
விடைபெறும் மனங்களோடு ஒட்டிக்கொண்டு
கோரமுகம் மறைத்தவாறு பயணிக்கிறது
தீவிரவாதம்

இரகசிய இடங்களில் சந்திப்பு முடிவாகிறது
கைகுலுக்கல்கள் நிகழ்கின்றன
இறைவனின் திருநாமம் போற்றப்படுகிறது
ஆயுதப் பரிவர்த்தனை நடக்கிறது
திட்டங்கள் தீட்டப்படுகின்றன
உயிர்க்கொடை உன்னதமாகிறது
ஆள் மாறாட்டம் முடிவாகிறது
             
                               இன்னொரு பக்கம்
                                கருத்தாய்வுகள் அரங்கேறுகின்றன
                               சேதங்கள் முன்வைக்கப்படுகின்றன
                                இலாபங்கள் கணக்கிடப்படுகின்றன
                               அபாயங்கள் நினைவுறுத்தப்படுகின்றன
                                தீர்மானங்கள் முன்மொழியப்படுகின்றன
                                ஆயுதங்கள் பட்டியலிடப்படுகின்றன
                                அமைதி உடன்படிக்கை கையெழுத்தாகிறது
             
                                  எங்கோ
                                 இறைவனின் திருநாமம் உச்சரித்தவாறு
                                 குரல்வளை கடித்துக் குதறப்படுகிறது
 செங்குருதி பீச்சியடித்துப் பாய்கிறது
குற்றுயிராய்ப் பாலைவன மண்ணில்
தலைகுப்புறக் கவிழ்கிறது
மனிதாபிமானம்

இன்னும்
தாகம் தீராமல்
குருதியில் நனைந்த ஆயுதங்களைச்
சான்றுகளோடு துடைத்துவிட்டு
அடுத்த குரல்வளை தேடித் திரிகிறது
மதாபிமானம்

இடைவேளை இல்லாமல் எங்கும்
எல்லா இடங்களிலும் தொடர்ந்து
ஒலித்துக்கொண்டே இருக்கிறது
இறைவனின் திருநாமம்
             


No comments:

Post a Comment