நம் குரல்

Sunday, March 14, 2010

கை நிறைய சாணி



அப்பெல்லாம்
ஒவ்வொரு நாளும் சாணி
எங்கையில

தோட்டப்பள்ளியில
மணி அடிச்சா
வீட்டுக்கு ஓடுவேன்
குசினிப் பானையில
ஆறிய பழச
அள்ளிக்கொட்டிக்கிட்டு
பட்டிக்கு ஓடுவேன்

போனா..
பத்து மாடும் போயிருக்கும்
மேச்சலுக்கு
பாத்தா..
பட்டி முழுக்க
ஒரே சாணியாயிருக்கும்

அள்ளுவேன்..
எல்லாத்தையும் அள்ளுவேன்
ரெண்டு கையால

எங்காவது கொல்லையில
வறட்டு கொய்யாக்கா கெடைக்கும்
கடிச்சிக்கிட்டே திரும்புவேன்

எப்படிக் கழுவினாலும் போவாது
நாள் முழுக்க மணக்கும்
கையில சாணி

சாணி, மாட்டுப்பட்டி, தோட்டம்
எல்லாம் விட்டு ரொம்ப நாளாச்சு

பின்னாடி, எங்காவது மாடுகள பாத்தா
பொசுக்கின்னு எட்டிப்பார்க்கும்
பழைய நெனப்பு
சாணி வாசம் மூக்கை தொளைக்கும்

இப்பெல்லாம் சாணி ஞாபகம்
கொஞ்சம் கொஞ்சமா குறையிது
கையை பாத்தா
சாணி இல்ல
வாசம் இல்ல

இப்ப என் எதிரிங்க கையில சாணி
எங்கையில
எழுதுகோல்

No comments:

Post a Comment