நம் குரல்

Tuesday, October 5, 2010

தோற்றவர் பக்கம்



தோற்றவர் பக்கம்
நான் நின்றுகொண்டிருக்கிறேன்

இடம் மாறச்சொல்லி
என்னை வற்புறுத்துகிறீர்கள்
உங்களின் இனிப்பு வார்த்தைகளைப்
புறந்தள்ளி இவர்களோடு புறப்படுகிறேன்

இங்கே கண்ணீரும் வியர்வையும்
விரக்தியும் வேதனையும்
சரிவிகிதத்தில் சதிராடுகின்றன

தன்னம்பிக்கை முனைகள்
இங்கே முறிந்து கிடக்கின்றன

கனவுத் தோணிகள்
தரை தட்டிக் கவிழ்ந்து கிடக்கின்றன

எதிர்பார்ப்பு வேர்களில் விஷம் பரவி
இற்றுக்கொண்டிருக்கின்றன

துவண்டுகிடக்கும் இவர்களின்
தோள்களை நோக்கி
என் கைகள் நீளுகின்றன

ஆதரவுக்காய்த் தவிக்கும்
இவர்களை நோக்கி
என் அன்பு மொழிகள் கசிகின்றன

காயங்களைத் துடைத்து
மருந்திட்டு ஆற்ற
விரல்கள் விரைகின்றன

வெற்றி முகாமில் மூழ்கிய
உங்களுக்குக்
கண்ணீரின் கனம் தெரியாது

வியர்வைத் துளிகளின்
வேதனை புரியாது

வெற்றி கானத்தை மீட்டி மீட்டியே
அதனுள் கரைந்து
நீங்கள் காணாமல் போவீர்கள்

வெற்றிக்கதையைப் பேசிப்பேசியே
கனவு வளர்ப்பீர்கள்
அதன் சுகலயத்தில் சொக்கிப்போவீர்கள்

உங்களின் உத்வேகத்தை வாங்கி
நெஞ்சுக்கு இடம் மாற்றிக்கொண்டு

உங்களின் வெற்றியின் வியூகங்களை
யூகித்து உள்வாங்கிக்கொண்டு

நெஞ்சு நிறைய கனவுகளை அள்ளி
நிறைத்துக்கொண்டு

தன்னம்பிக்கை முனைகளை
கூர் சீவிக்கொண்டு

ஆறிக்கொண்டிருக்கும்
பழைய காயங்களைப் பொருட்படுத்தாமல்

வெற்றியின் திசைநோக்கி
இவர்கள் புறப்படுகிறார்கள்

இவர்கள் வென்று வந்தாலும்
தோற்று மீண்டாலும்
இவர்கள் பக்கம் எப்போதும் நான்

ந. பச்சைபாலன், மலேசியா

No comments:

Post a Comment