நம் குரல்

Wednesday, June 4, 2014

வாழ்வு தேடி..



நகரப் பெருவெளியின் இடுக்குகளில்
கட்டடக் காடுகளின் கிளைகளில்
கூடுகட்ட இடம்தேடி
அலுத்துத் திரும்புகின்றன
அந்தப் பறவைகள்

ஆகாயம் கொத்தும் அதன் அலகுகளில்
தட்டுப்படுகின்றன
அவற்றின் நினைவுச் சரங்களில்
கோர்க்கப்பட்ட மணிகளாய்
நகரப் பெருவெளியின் மண்ணில் புதைந்த
பழைய காடும் அதன்  பசுமையும்

எங்காவது வீதியோரத்தில்
தானியங்களை வீசும்
கருணைக் கைகளை எதிர்பார்த்து
அவை ஏமாந்து திரும்புகின்றன

எதிர்பாராத் தருணங்களில்
கொடூரக் கைகளிலிருந்து
வந்து விழும்
கற்களால் விரட்டப்படுகின்றன

நிச்சயமின்மை விரவிக்கிடந்தாலும்
ஒவ்வொரு நாளும்
கூடு கட்டும் ஆசையைச் சுமந்தபடி
மீண்டும் மீண்டும் பறந்து
நகரக் காற்றைச் சுவாசிக்கின்றன

காற்றுவெளியில் கசிந்து கரையும்
அதன் சோக இராகங்களில் சுருதிகள்
யார் காதுக்கும் எட்டுவதில்லை

பறவையாய்ப் படைக்கப்பட்டதால்
பறந்துகொண்டே இருக்கின்றன

பரபரக்கும் கால்கள்
அவற்றைப் புறக்கணித்தவாறு
தம் போக்கில் பயணப்பட்டாலும்

பறந்துகொண்டே இருக்கின்றன
சுயநலத்தில் தோய்ந்த
இரக்கமில்லா இதயங்கள் மிதக்கும்
வெளியைக் கடந்தபடி

No comments:

Post a Comment