நம் குரல்

Monday, September 13, 2010

மாரான் மரத்தாண்டவர் கோயிலில்..






கோயில்களுக்குப் போய் வருவதென்றால் எனக்கு மிகவும் விருப்பம். இதற்கு முக்கியக் காரணம் கடவுள் இருக்கிறார் என்பதை என் ஆழ்மனம் நம்புகிறது. பேய்க்கதைகள் படிக்கப் பிடிக்கும் என்றாலும் பேய் இருப்பதை நான் நம்பவில்லை. சத்தியமாகச் சொல்கிறேன். என் வாழ்வில் இதுவரை ஒரு பேயையையும் பார்த்ததில்லை. ஆனால், எனக்கும் மேலே ஏதோ ஒரு சக்தி இருப்பதைப் பல முறை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

அண்மையில், பகாங் மாநிலத்தில் அமைந்துள்ள மாரான் மரத்தாண்டவர் கோயிலுக்குக் குடும்பத்தோடு போயிருந்தேன். என் மைத்துனர் சுப்ரமணியம் புதிய வாகனம் வாங்கியிருந்தார். எனவே, சிறப்பு பூஜைக்காகச் சென்ற அவரின் குடும்பத்தோடு நாங்களும் சென்றோம். கோலாலம்பூரிலிருந்து 2 1/2 மணி நேரப் பயணம். அகலமான நெடுஞ்சாலையால் அது களைப்பில்லாத பயணமாக அமைந்தது. வழிநெடுக இரு பக்கங்களும் பசுமை போர்த்திய காட்சிகள் கண்களுக்குக் குளுமையாக இருந்தன. ஜெங்கா பெல்டா நிலத்திட்டத்திற்கு நடுவே அடர்ந்த பகுதியில் இக்கோயில் அமைந்திருக்கிறது. சுற்றிலும் பெரும்பாலும் மலாய்க்காரர்களின் வசிப்பிடப் பகுதிகள்.

இங்கே எப்படி முருகன் கோயில் தோன்றியது? தல புராணத்தைக் கோயில் உள் கோபுரப் பகுதியில் வரைந்திருக்கிறார்கள். 1870களில் இப்பகுதியில் சாலை அமைக்கும்போது சாலைக்கு நடுவே ஒரு மரம் இடையூறாக நிற்க, வெள்ளைக்கார முதலாளி கட்டளைப்படி அங்கு வேலை செய்த தமிழர்கள் அதனை வெட்டிச் சாய்க்க முயன்றிருக்கிறார்கள். முடியவில்லை. மரத்திலிருந்து சிகப்பு நிறத்தில் ரத்தம்போல் பிசின் வடிந்திருக்கிறது.

இயந்திரம்கொண்டு சாய்க்க மேற்கொண்ட முயற்சியும் (இயந்திரம் பளுதாகி) தோல்வியில் முடிந்திருக்கிறது. வெள்ளைக்காரர் தாமே மரத்¨தைச் சாய்க்க முயன்றபோது உடல் செயலிழக்க, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாராம். மரத்தில் ஏதோ சக்தி இருப்பதாகத் தமிழர்கள் எடுத்துச் சொன்னதால் அங்குக் கோயில் எழுப்புவதாக வெள்ளைக்காரர் வேண்டிக்கொண்டாராம். கோயில் எழுப்பப்பட்டதும் அவர் முழுமையாகக் குணம் அடைந்தாராம். கோயிலைச் சுற்றிவரும் சாலை அந்தப் பழைய வரலாற்றைப் பேசுகிறது.

ஒரு நூற்றாண்டைக் கடந்து இன்று மாரான் மரத்தாண்டவர் கோயில் கம்பீரமாக காட்சி தந்து நாடி வருவோர்க்கு அருள்பாலிக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது அப்பாவுடன் இந்த கோயிலுக்கு வந்தது நினைவிருக்கிறது. அப்போது, இரண்டு மரங்களுக்கு நடுவே சாலை இருந்தது. குறுகிய இடம் இன்று விஸ்தாரமாகிவிட்டது. முக்கியமான மரம் இருந்த இடத்தில் இன்று கோயில் கருவறையும் அதனைச் சுற்றி அழகிய கோயிலும் அமைந்திருக்கிறது. சீரமைப்புப்பணி முடிந்து அண்மையில் கும்பாபிஸேகம் நடந்திருக்கிறது.

கோயிலின் அமைப்பு சற்று வித்தியாசமானது. பக்தர்கள் சுற்றி நடந்து வருவதற்கு வசதியாக கோயில் வட்டமாக அமைந்திருக்கிறது. பளிங்குத்தரை தனி அழகைத் தருகிறது. கோயிலின் உட்பகுதி பறவைகளின் சரணாலயமாகத் திகழ்கிறது. பலிபீடத்திற்கு அருகிலிருக்கும் மரத்தில் வந்துபோகும் மனிதர்களின் ‘மனசின் மகஜர்களாக’ மஞ்சள் துணியில் முடிச்சுகள் தொங்குகின்றன. என் மகள் பொன்முல்லையும் தன் வேண்டுதலை மஞ்சள் துணியில் கட்டிவிட்டு வந்தாள். கோயில் வளாகத்திற்கு வெளியில் நின்று பார்த்தால் மஞ்சள் நிறத்திலான கோயில் கட்டடம் கண்களைக் கவர்கின்றது.

வழிபாடு, அன்னதானம் முடிந்து காஜாங் நகருக்குப் புறப்பட்டபோது, கோயிலின் தோற்றமும் மஞ்சள் நிறமும் மனத்தின் அறைகளில் நீக்கமற நிறைந்திருப்பதை உணர்ந்தேன்

No comments:

Post a Comment