நம் குரல்

Friday, May 6, 2011

வெல்லப்போவது யாரு?


நகரில் வீடுகள் தோறும் வளர்கின்றன
தின்று கொழுத்து
வாலாட்டித் திரியும்
தினவெடுத்த மிருகங்கள்

அந்நியர் யாரும் எதிர்ப்பட்டால்
சீற்றம் நிறைந்த உறுமலோடு
அனல் கக்கும் பார்வையோடு
கடைவாயில் எச்சில் ஒழுக
அவர் மீது பாய எத்தனிக்கின்றன

உரிமையாளரின் அதட்டலையும் மீறி
திமிறிக்கொண்டு நம்மை முறைக்கின்றன
ஒரு பிடி சதை கிடைக்குமா
ஏக்கப்பார்வை எட்டிப்பார்க்கிறது

எப்போதோ கேட்ட
வளர்த்தவனையே கடித்த நாய்கள் கதைகள்
பயவிதைகளை உள்ளே தூவியிருக்கின்றன

நானும் வளர்க்கிறேன்
ஒரு பொல்லாத மிருகத்தை
தனக்கான தீனியை
என்னை வற்புறுத்தித் தேடித்தின்று
என்னை மிஞ்சிக்
கொழுத்துக்கொண்டிருக்கிறது

இப்படி வளர்ந்து பெரிதாகும்
என்று அறிந்திருந்தால்
என்னையே வென்றுவிடும்
வீரியம் அதனுள் விளையுமென்றால்

கலகம் செய்து என்னையே
கலைத்துப் போடுமென்றால்
உயிரிரக்கம் இல்லாமல்
என்னையே கடிக்க முனையுமென்றால்

வாலாட்டி என்னை நாடியபோதே
விட்டு விலகியிருப்பேன்
எட்டி நடந்திருப்பேன்
அன்றி..
தெருமுனையில் எங்காவது விட்டிருப்பேன்

கொன்று தொலைக்க வேண்டும் இதனை
இன்று தீர்மானம் நிறைவேற்ற மட்டுமே
முடிகிறது என்னால்

அதைக்கொல்ல நானும்
எனைக்கொல்ல அதுவும்
தொடரும் போராட்டத்தில்
வெல்லப்போவது யாரு?


No comments:

Post a Comment