நம் குரல்

Friday, July 15, 2011

சவப் பரிசோதனை அறிக்கை


தகவல் வந்ததும்
அந்தப் சவப் பரிசோதனைக்குப்
பிரியத்துடன் இணங்கினேன்

இறந்தவர் எனக்குத் தெரிந்த
இலக்கியவாதி என்பதால்
அவரைப் பற்றி இன்னும் அறிய
ஆவல் எழுந்தது

வழக்கம்போல் பணியாளர்கள்
உடன் இணைய
அவரை நெருங்கினேன்
‘நிர்வாண நிஜம்’ அவர் எழுதிய சிறுகதை
நினைவில் மோதியது

ஒவ்வோர் அங்கமாக அறுத்துப் பார்த்தேன்
முதுமையின் நட்டக்கணக்கு பல்லைக் காட்டியது

“நெம்புகோலாய் உலகையே
என் எழுத்தால் புரட்டிப் போடுவேன்”
மேடையில் புரட்சி பேசிய உதடுகள் உறைந்திருந்தன

மற்றவரை மட்டம் தட்டி
மற்றவர் பெயரில் படைப்புகள் எழுதி
பரிசுகள் அள்ளிய
அவரின் அற்புதக் கைகள் அடக்கமாயிருந்தன


அங்கீகாரமில்லையே என
நொந்து நொந்து வயிற்றெரிச்சலால்
வயிற்றுக்கடுப்புக்குள்ளாகி
அமிலங்களின் பிரவாகத்தால்
சமன்நிலை சீர்குலைந்து
நோய் முகாமிட்டு வென்றதற்கு
ஆதாரங்கள் கிடைத்தன
குறித்துக்கொண்டேன்

இருந்தாலும் இதயத்தையும்
அறுத்துப் பார்க்க ஆவல் மிகுந்தது
நெஞ்சக்கூடு எலும்புகளை விலக்கி
ஆழமாகக் கத்தியைச் செருகி
இதயத்தை மட்டும் தனியே எடுத்துச் சோதித்தேன்

இதயத்தின் இரத்த நாளங்கள் நெடுக
இலக்கிய மோசடிகளாலும் பொய்யாலும்
நனைந்த குருதியின்
பயணம் தடுக்கும் அடைப்புகள் கண்டேன்

அறுத்துப்போட்டதைத் தைப்பதற்கு
ஆள்கள் தயார்
நான் கையுறை கழற்றி
அறிக்கை எழுதி
ஏமாற்றத்துடன் வெளிவந்தேன்

No comments:

Post a Comment