நம் குரல்

Saturday, April 30, 2016

மனம் நிறைய பூக்கள் - 2


வருந்திச் சுமப்பவர்கள்




பாதையெங்கும் கொட்டிக் கிடக்கின்றன
சின்னங்களும் அடையாளங்களும்
கண்டுகொள்ளாமல் கடந்து போவோர் சிலர்
கைநிறைய ஆசையாய் அள்ளிக்கொண்டு
பயணம் தொடர்வோர் பலர்

பயணம் தொடங்கியபோது அவற்றின் நினைப்பின்றி
எல்லாரும் வெறுங்கையோடு
சீந்துவார் யாருமில்லை
காடுகளையும் மலைகளையும் பள்ளத்தாக்குகளையும்
பாலைவனங்களையும் கடக்கும்போது
சேகரிக்கத் தொடங்கினார்கள்
தங்களுக்குப் பிடித்தமான சின்னங்களை அடையாளங்களை

சிலர் அவற்றை அணிகளாய் அணிந்தனர்
சிலர் அவற்றைப் பொழுதுபோக்காய்ப் போற்றினர்
சிலர் அவற்றை ஆடையாய் ஆராதித்தனர்
சிலர் அவற்றை ஆயுதமாக்க ஆலோசித்தனர்
சிலர் அவற்றை அடையாளமாய் ஆக்கினர்

சின்னங்களும் அடையாளங்களும் வளர்ந்து வளர்ந்து
அவர்களையே வளைக்கத் தொடங்கின
அவற்றைக் கண்டு வணங்கத் தொடங்கினார்கள்
அவற்றிலிருந்து விடுபட முயன்றார்கள்
வேறு வழியின்று
அவற்றை பூஜிக்கத் தொடங்கினார்கள்

தங்கள் சின்னமெனில் போற்றவும்
அடுத்தவர் சின்னமெனில் வெறுக்கவும் காறிஉமிழவும்
மனத்தைப் பழக்கினார்கள்
அவற்றால் தமக்குத் தீங்கு நேருமென எண்ணினார்கள்
அவற்றைக் கண்டு  பயப்படத் தொடங்கினார்கள்
அவற்றால் தம் அடையாளங்களும் சின்னங்களும்
மதிப்பற்றுப் போகுமென முடிவுக்கு வந்தார்கள்

தங்கள் சின்னங்களைப் பாதுகாப்புக் கவசமாய்
தங்களைச் சுற்றி எழுப்பத் தொடங்கினார்கள்
தங்கள் வீடுகளுக்கு அவற்றைச் சன்னல்களாக்கி
அவற்றின் வழியே வெளியே எட்டிப்பார்த்தார்கள்

சின்னங்களும் அடையாளங்களும் மாயக்கரமாகி
கண்களை மறைத்து கழுத்தை நெரித்து
இதயத்தின் ஈரம் நீக்கி
மனிதனெனும் அடையாளம் அழிப்பதை

உணர்வதேயில்லை ஒவ்வொருவரும்

No comments:

Post a Comment