நம் குரல்

Saturday, April 30, 2016

மனம் நிறைய பூக்கள் - 3



                                                வட்டங்களில் நாங்கள்


ஒரு வட்டம் என்பது
எப்போதும் ஆகாது எங்களுக்கு

ஒன்றிலிருந்து இன்னொன்றாகப்
புதுப்புது வட்டங்களில் நுழைந்து
வாழ்ந்து பார்ப்பதே அலாதி இன்பம்

ஒவ்வொரு முறையும்
வட்டங்களில் ஓட்டைகள் உள்ளதாக
உணரத்தொடங்கியபோது

வேண்டிய ஒருவருக்குப் பரிவட்டம் கட்டி
சபையேற்ற
இடையூறுகள் முளைத்தபோது

வட்டத்துக்குள் விதியாகும்
சட்டங்களை மதியாமல்
எதிர்மாறாய்த் துருவங்கள்
தலைதூக்கியபோது

வட்டத்துக்குள்ளிருந்து சிலரை
வெளியே தள்ளிக்
கதவடைக்க முடியாதபோது

வட்டத்தின் அளவைச் சுருக்கிச் சுருக்கி
கழுத்தை நெரிக்கும் அளவுக்குக் குறுகியபோது

வட்டத்தின் எதிர்காலம் குறித்து
அவநம்பிக்கைகள் மனத்தை அரித்தபோது

வட்டத்திலிருந்து வெளியேறும்
அல்லது வெளியேற்றப்படுபவர்களுக்கு
ஆதரவுக் கரம் நீட்ட முனைந்தபோது

இதே வட்டத்திலிருந்தால்
இனி இலாபமேதும் காணவியலாது
என்றுணர்ந்தபோது

ஒன்றிலிருந்து ஒன்பதாக
பலப் பல வட்டங்களை உருவாக்கினோம்

எல்லா வட்டங்களிலும்
கண்ணுக்குத் தெரிகின்றன
அதிகார பீடங்களில்
வீற்றிருக்கும் தலைகளின் பின்னால்
ஒளிவட்டங்கள்

அந்த ஒளி வாங்கி
வாழ்வுக்குள் வினியோகிக்கும்
வழிதேடுவதிலேயே கழிகிறது காலம்

ஒவ்வொரு வட்டமும்
வெளிப்பார்வைக்கு
ஒரு சுழியமென்பது
வட்டத்துக்குள்ளே இருப்பவர்களுக்கு
ஒரு போதும் தெரிவதேயில்லை


நதி இணைப்பும் நாடுகள் இணைப்பும்கூட
சாத்தியமாகலாம்
வட்டங்கள் இணைப்புக்கு இங்கே
வாய்ப்பே இல்லை

No comments:

Post a Comment