நம் குரல்

Monday, June 26, 2017

நடந்து முடிந்த தேர்தலில்


நடந்து முடிந்த தேர்தலில்
யார் வெற்றியாளர் என அறிந்துகொள்ள
பரபரப்புக் காய்ச்சல் எல்லார் மனங்களிலும்
பரவியிருந்தது

பக்கம் பக்கமாக எழுதிய எழுத்துகள்
பலரின் மனத்தை வளைத்திருக்கலாம்
நம்பிக்கை விதைகள் இதய இடுக்களில்
தவறியாவது விழுந்திருக்கலாம்
விடியலின் கீற்றுகள் நுழைய
கதவுகள் திறக்கலாம்
பலரின் எண்ணங்களில்
எதிர்பார்ப்பு இழைகள்
பின்னத் தொடங்கின

பல்முனைத் தாக்குதல்களுக்கும்
மௌனமொழியால் உரக்கப் பேசி
நிராயுதபாணியாய்
மார்பு காட்டி நின்றவர்கள்                                        
நம்பிக்கைத் தோணியைப் பற்றியவாறு
ஆயுதங்களை நம்பாமல்
மனங்களோடு பேசிப்பேசி
வியூகங்களை வகுக்க
பலரின் எண்ணங்களில்
எட்டிப்பார்க்கவேயில்லை
புயல் பற்றிய கவலைகள்

தேர்தலின் முடிவு எந்நேரத்திலும்
வந்துவிடும் என அறிவிப்பு வந்தது

காத்திருந்த
அந்த நெருப்பு நிமிடங்களில்தான்
அதுவரை பெயரறிந்து முகமறியாதவர்களோடு
கைகுலுக்கிக் கொள்ள முடிந்தது

எழுதிக்குவித்த விரல்களைப் பற்றி
அவற்றின் ஸ்பரிசம் உணர்ந்து
பழைய படைப்புகளின் மீது
பயணிக்க முடிந்தது                               

முதுமையெனும் முரடனிடம்
வண்ணம் இழந்தாலும்
நம்பிக்கையிழக்காத உள்ளங்களோடு
உறவாட முடிந்தது.

எழுதியெழுதி ஓய்ந்து கிடந்தவர்கள்
எழுந்து வந்திருந்தார்கள்
நீங்களா அவர்?
எனப் புருவ விளிம்புகள்
ஆங்காங்கே உயர்ந்தன

எதிர்பார்த்த தருணம் வந்தது

பதிந்துகொண்டவர்களைவிட
பதிவான மொத்த வாக்குகளில்
ஒன்று கூடுதலாக கணக்கில் வந்ததால்

யாரும் வெற்றிபெறவில்லை என்று
அறிவித்தார்கள்


No comments:

Post a Comment