நம் குரல்

Thursday, March 31, 2011

அப்புவும் நானும்



என்னை எதிர்பார்க்கவில்லை
அப்புவின் கண்களில் மிரட்சியும் பயமும்
உள்நுழைந்த என்னை எதிர்கொண்டன

அவன் கைகளில்
பறந்துவிட்ட ஏதோ பறவையின்
மிருதுவான சிறகுகள் மிஞ்சியிருந்தன

பறிபோகுமோ என்ற பதட்டமோ
சிறகு இறுக்கிய கைகள்
பின்னால் பதுங்கின

அறை முழுதும்
சிறகசைத்த பறவைகளின் கீச்சொலியும்
அவற்றின் பிம்பங்களும் நிறைந்திருந்தன

நீட்டிய பொம்மையை நிராகரித்து
வேகமாய் ஓடிக் கட்டிலுக்கடியில் இருந்த
கரடியைத் தாவியணைத்தான்

அங்கே நிராதரவாய்
காயங்களோடு சில மிருகங்கள்
ஒதுங்கிக் கிடந்தன

சுவர்களில் அவன் புதைத்து வைத்த
மிருகங்கள் வெளியேறி ஓசையெழுப்பியதை
ஆசையாக ரசித்தான்

அறையின் மூலையில்
அவன் கிழித்து வீசியெறிந்திருந்த
படத்திலிருந்து வெளியேறிய கடவுள்
அழுதுகொண்டிருந்ததைக் கண்டான்
கைகளைத் தட்டிக் கொண்டாடினான்

அவன் கைகளில் சிக்கிப்
பொம்மையாகும் வழியறியாது
வெளியேறினேன்

(பாலமுருகன் எழுதிய அப்பு பற்றிய 3 கவிதைகளைப் படித்த
காரணத்தினால் என்னை மறந்த ஆழ்ந்த உறக்கத்திலும் அப்பு
என்னோடு இருந்ததை உணர்ந்தேன். அதைக் கவிதையாக எழுத
மனம் விழைந்தது. அதன் விளைவே இந்தப் படைப்பு.
பாலமுருகனுக்கு நன்றி)


1 comment:

  1. பாலா,
    வார்த்தைகள் புரிகின்றன.
    படிமங்கள் காட்சிகளாக விழுகின்றன.
    கவிதையின் பொருள் விளங்குவது போல் இருக்கிறது.ஆனால் விளங்கவில்லை. படைப்பாளனுக்கே உண்மையான நோக்கம் புரியும்.
    கொஞ்சம் விளக்கம் தேவை.

    ReplyDelete