![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiriPxeDE6X8JcTae5tLLUuCBHhqsjq6Tw5CIjqnPp6TAVkW0BpperTrPLwRwcX3p7_5gpEKhJmoXT86gcQZO_lFm_bO3Z5aBuDI-Rgre3HyRODqGPic-1waFyMWBq8gYRpj8f6__Wk5JY/s400/mirror.jpg)
ஒன்றின்மேல் ஒன்றாய் அழுந்திக்கிடக்கும்
நினைவின் அடுக்குகளில்
ஏதேனும் ஒன்றை உருவினாலும்
பழைய முகத்தின் சாயல்
தூசி படிந்த கண்ணாடிக் காட்சியாய்
உயிர் பெறுகிறது
ஒவ்வொன்றிலும்
கடந்துபோன கணங்களின் துயரமோ
மகிழ்ச்சித் துளியோ
சொல்லமுடியாத உணர்வின் கசிவோ
ஏதோ ஒன்று ஒட்டியிருக்கிறது
ஒவ்வொன்றிலும்
யார் யாரோ உடன் வந்து
பெயர் சொல்லி
முகம் காட்டுகிறார்கள்
ஒவ்வொருவரும் இப்போதும்
ஏதோ சொல்ல நினைத்துத் தயங்குகிறார்கள்
ஒவ்வொன்றிலும்
எனை நோக்கிய
பாராட்டுகள், குற்றச்சாட்டுகள், கசப்புகள்
வேதனைகள், கடுஞ்சொற்கள், துரோகங்கள்
வாசிக்கப்படுகின்றன
ஒவ்வொன்றிலும்
எல்லாக் காட்சிகள் மறைந்தும்
ரசமிழந்த கண்ணாடியின் மேல்
காயாமல் எஞ்சியுள்ளன
சில கண்ணீர்த் துளிகள்
No comments:
Post a Comment