நம் குரல்

Saturday, April 23, 2011

ஸ்ரீமுருகன் நிலையம் - கல்விப் பணியில் 28 ஆண்டுகள்



‘ஸ்ரீமுருகன் நிலையம்’

இந்நாட்டு இந்தியரின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பெயர். பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் பாதம் பதிக்க உதவியும் உத்வேகமும் ஊட்டிவரும் கல்வி நிலையம். இது திருமுருகனின் திருப்பெயரால் தகைசார்ந்த டத்தோ டாக்டர் தம்பிராஜாவாலும் அவர்தம் மாணவர் படையாலும் தொடங்கப்பட்ட அமைப்பு. பலரின் கடுமையான உழைப்பால் திட்டமிட்ட பணியால் இன்று நாடு முழுதும் கிளைகள் பரப்பி, 28 ஆண்டுகளாகச் சிறந்த சமூக அமைப்பாகத் திகழ்ந்து வருகிறது. இதை யாரும் மறுக்க முடியாது.

ஸ்ரீமுருகன் நிலையம் என் வாழ்வின் உயர்வுக்கு வழியமைத்ததை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். 1985 ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சியினை முடித்து (ரவூப்) பகாங் மாநிலத்தில் ஆசிரியராகப் பணியாற்றினேன். எப்படியாவது படித்துப் பல்கலைக்கழகம் போகவேண்டும் என்ற எண்ணம் தீயாக என்னுள் கொளுந்துவிட்டு எரிந்த வேளை. எங்கே போய்ப் படிப்பது என்று தவித்தபோது ஸ்ரீமுருகன் நிலையம்தான் கைகொடுத்தது. ரவூப் நகரிலிருந்து நானும் காராக் நகரிலிருந்து நண்பன் ஆவுடையாரும் ஒவ்வொரு வார இறுதியில் செந்தூல் தம்புசாமித் தமிழ்ப்பள்ளியில் நடத்தப்பட்ட ஸ்ரீமுருகன் நிலைய ஆறாம் படிவ வகுப்புகளில் சேர்ந்து படித்தோம்.

அங்குக் கிடைத்த முறையான வழிகாட்டலும் தன்முனைப்பு உரைகளும் எனக்குள் உத்வேக விதைகளைத் தூவின. போய்ச் சேர்ந்த மறுவாரமே சரித்திரப் பாடத்தில் தேர்வு. மோசமான புள்ளிகள் கிடைத்தன. தேர்ச்சி பெறாதவர்கள் வகுப்புக்கு முன்னால் அழைக்கப்பட்டோம். அவமானமாக இருந்தது. ஆனால், அந்த அவமானம்தான் பிறகு தேர்வுகளில் எனக்கு வெகுமானத்தைப் பெற்றுத் தந்தது. பாங்கி தேசியப் பல்கலைக்கழகத்தில் மலாய் இலக்கியத்தில் இளங்கலையும் முதுகலையும் பெற்று இப்பொழுது இடைநிலைப்பள்ளியில் பணியாற்றுகிறேன்.

காஜாங் ஸ்ரீமுருகன் நிலையத்தில் கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராக என்னை இணைத்துக்கொண்டுள்ளேன். ஏழு லட்சம் வெள்ளிக்கும் மேலான மதிப்புடைய சொந்த 3 மாடிக் கட்டடத்தில் காஜாங் ஸ்ரீமுருகன் நிலையம் கல்விப் பணியாற்றி வருகிறது. தன்னலமற்ற சேவையாளர்கள் இணைந்துள்ள அமைப்பில் நானும் ஓர் அங்கமாக இருப்பதைப் பெருமையாக எண்ணுகிறேன். என் கனவுகளை நனவாக்கிய ஸ்ரீமுருகன் நிலையத்தின் திருப்பெயரை மனம் மறவாமல் உச்சரிக்கிறது.

அண்மையில் (ஏப்ரல் 17) பெட்டாலிங் ஜெயா ஹில்டன் தங்கும் விடுதியில் ஸ்ரீமுருகன் நிலையத்தின் தேசிய நிலையிலான கருத்தரங்கில் கலந்துகொண்டேன். 28ஆம் ஆண்டாக நடந்த கருத்தரங்கு. நாடு முழுவதுமிருந்தும் நானூற்றுக்கும் அதிகமான ஆசிரியர்களும் ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர். வழக்கம்போல் சூடான உரைகளும் சுடச்சுடத் தகவல்களும் கிடைத்தன.

ஸ்ரீமுருகன் நிலையத்தின் தோற்றுநர் டத்தோ டாக்டர் தம்பிராஜா, இணை இயக்குநர் திரு. சுரேந்திரன் ஆகிய இருவரின் உரைக்குப் பிறகு, நாட்டின் 13ஆவது தேர்தல் குறித்த சிந்தனைகளைத் துணை அமைச்சர் டத்தோ தேவமணி முன் வைத்தார். 12ஆவது தேர்தலுக்குப் பிறகு, அரசாங்கத்தின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றம் - அதன் விளைவுகள், பிரதமரின் திட்டங்கள் பற்றி விரிவாகப் பேசினார். அதே தலைப்பில், அரசியல் ஆய்வாளர் திரு. அன்புமணி பாலனும் பேசினார். மழைக்குப் பிந்திய காளான்களாக முளைக்கும் அதிகமான அரசு சார்பற்ற அமைப்புகளினால் நம் போராட்டங்கள் நீர்த்துப்போகும் நிலைமையை விளக்கினார்.


ஸ்ரீமுருகன் நிலையத்தின் இணை இயக்குநர் திரு. பிரகாஸ்ராவ் அரசின் உபகாரச் சம்பளம் குறித்த விளக்கத்தை அளித்தார். கருத்தரங்கில் அனைவரையும் கவர்ந்த இன்னொரு முக்கிய அங்கம் மலாய்மொழி வல்லுநர் டாக்டர் கதிரேசனின் ‘இண்டர்லோக்’ நாவல் குறித்த கண்ணோட்டம். அவரின் எட்டு பக்க ஆய்வுக் கட்டுரையில் ஆறு பக்கங்களில் அப்துல்லா ஹ¤சேனின் படைப்புத்திறனைப் பாராட்டி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

ஆனால், கடைசி இரண்டு பக்கங்களில் இரண்டு காரணங்களை முன்வைத்து பள்ளிகளில் இந்நாவல் பயன்படுத்தக்கூடாது என வலியுறுத்தினார். இந்நாட்டுக்கு வந்த இந்தியர்கள் தாழ்ந்த குடிகள் என இழிவுபடுத்துவதாலும் இந்தியர்களும் சீனர்களும் இந்நாட்டிற்கு வந்தேறிகள் என்ற சிந்தனையை இன்றைய தலைமுறைக்கு அழுத்தமாகக் கூறுவதாலும் பயன் ஒன்றும் விளையாது. இதனால் இன ஒற்றுமைக்கு பெரும் பாதகம் ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கருத்தை அழுத்தமாக முன்வைத்திருந்தால் ம.இ.கா அனுப்பிய குழுவினர் தம் வாதத்தில் வெற்றிபெற்றிருக்கலாம். ஆனால், கதைப்போக்கில் காணும் குறைகளை முன்வைத்து நம் போராட்டத்தில் தோற்றிருக்கிறோம் என டாக்டர் கதிரேசன் கூறினார். நிறைவு அங்கத்தில் துணை அமைச்சர் டத்தோ பழநிவேல் உரையாற்றினார்.

மாலை மணி 4.30க்கு கருத்தரங்கு நிறைவுபெற்றது. தங்கும் விடுதியை விட்டு வெளியேறும் போது இந்தக் குறள்தான் என் நெஞ்சில் இனித்தது:

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்


Sunday, April 17, 2011

எதை இம்முறை?


ஒவ்வொரு முறையும் தங்கத் தட்டில்
எங்கள் விசுவாசத்தை இட்டு நிரப்பி
உங்கள் காலடியில்
தாரை வார்த்துக்
கைகளை ஏந்தினோம்

எங்களைப் புரிந்துகொண்டதுபோல்
புன்னகையைப் பரிசளித்தீர்கள்
உங்கள் இதழ்களின் மலர்ச்சியை
இதயங்களில் ஏந்தி
புளகாங்கிதம் அடைந்தோம்

ஒவ்வொரு முறையும்
காறி உமிழ்ந்தீர்கள்
கைக்குட்டையையும் தந்தீர்கள்
எச்சிலைத் துடைத்தோம்
எரிச்சலை மறந்தோம்

ஒவ்வொரு முறையும்
காவடிகள் ஏந்தி
கருணை வரம் வேண்டி
அதிகாரப் படிகள் ஏறினோம்
எங்கள் பக்தியை மெச்சினீர்கள்.

ஒவ்வொரு முறையும்
அடிப்படைத் தேவைகளுக்காக
உங்கள் மனக் கதவுகளைத்
தட்டித் தட்டித் தளர்ந்தோம்
கதவுகளுக்குப் பின்னால்
உங்களின் பரிவான குரல்
கேட்டுக்கொண்டே இருந்தது

அவ்வப்போது
காயம் ஆறாப் புண்களைக்
கிளறுவீர்கள் சீழ் வடியும்
மறவாமல் உடனே
களிம்பு தடவுவீர்கள்
கிளர்ச்சி பெறுவோம்

எப்போதாவது
கிச்சுகிச்சு மூட்டுவீர்கள்
வாய் வலிக்கச்
சிரித்து வைப்போம்

பசியால் அழுதோம்
நொறுக்குத் தீனிகளைக்
கைகளில் கொடுத்து
பைகளில் சில்லறைகளைத் திணித்து
சமாதானம் சொன்னீர்கள்

மீண்டும்
தங்கத்தட்டு ஏந்தி
உங்கள் காலடி நோக்கி வருகிறோம்
தட்டில் எதை இட்டு நிரப்புவது
இம்முறை?

சிந்திக்கத் தூண்டுகிறது
கொஞ்சம் மிச்சமாய்
உணர்விலும் உயிரிலும்
இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கும்
சூடும் சுரணையும்


Saturday, April 16, 2011

நடுப்பகல் நாய்கள்

வீடுகள்தோறும் காத்திருந்து
ஏக்கத்தோடு எதையும்
ஏறிட்டுப்பார்க்கும்

அதன் கண்களில்
அடர்ந்து நிறைந்து வழியும்
சொல்லமுடியாத அடர்ந்த சோகம்

காலை உண்ட உணவு கரைந்துபோக
பசியோடு வாசலைப்
பார்த்துக் காத்துக்கிடக்கின்றன

சோம்பலாகக் கழியும் பகற்பொழுதின்
தூக்கத்தின் மயக்கத்தில்
ஏதும் ஒலி கேட்டால்,
யாரும் முன்னே கடந்துசென்றால்
குரல் கொடுத்துத் தன்னிருப்பை
உறுதிசெய்கின்றன

கண்முன்னே
நாய் ஏதும் கடந்தால்
ஆசையாய்க் கவனிக்கின்றன

வாசல்களைத் தொட்டு வீட்டுக் கதவுவரை
வெயில் மெதுவாக ஊர்ந்து
உடல் மேல் படர்கையில்
அவை உக்கிரமடைகின்றன

வீட்டின் பாதுகாப்பு உண்டென்ற நினைப்பில்
அலுலக வேலைகளில் மூழ்கியிருக்கும்
அதன் முதலாளிகளின் நினைவில்
அவை எட்டிப்பார்ப்பதில்லை

அவற்றைப்போலவே
வீடுகளின் சன்னல்களின் வழியாய்
வருவோர் போவோரையெல்லாம்
வெளிப்பார்வையால் விசாரித்தவாறு
விரக்தியால் புன்னகைக்கிறார்கள்
நடுப்பகல் மனிதர்கள்


Thursday, March 31, 2011

அப்புவும் நானும்



என்னை எதிர்பார்க்கவில்லை
அப்புவின் கண்களில் மிரட்சியும் பயமும்
உள்நுழைந்த என்னை எதிர்கொண்டன

அவன் கைகளில்
பறந்துவிட்ட ஏதோ பறவையின்
மிருதுவான சிறகுகள் மிஞ்சியிருந்தன

பறிபோகுமோ என்ற பதட்டமோ
சிறகு இறுக்கிய கைகள்
பின்னால் பதுங்கின

அறை முழுதும்
சிறகசைத்த பறவைகளின் கீச்சொலியும்
அவற்றின் பிம்பங்களும் நிறைந்திருந்தன

நீட்டிய பொம்மையை நிராகரித்து
வேகமாய் ஓடிக் கட்டிலுக்கடியில் இருந்த
கரடியைத் தாவியணைத்தான்

அங்கே நிராதரவாய்
காயங்களோடு சில மிருகங்கள்
ஒதுங்கிக் கிடந்தன

சுவர்களில் அவன் புதைத்து வைத்த
மிருகங்கள் வெளியேறி ஓசையெழுப்பியதை
ஆசையாக ரசித்தான்

அறையின் மூலையில்
அவன் கிழித்து வீசியெறிந்திருந்த
படத்திலிருந்து வெளியேறிய கடவுள்
அழுதுகொண்டிருந்ததைக் கண்டான்
கைகளைத் தட்டிக் கொண்டாடினான்

அவன் கைகளில் சிக்கிப்
பொம்மையாகும் வழியறியாது
வெளியேறினேன்

(பாலமுருகன் எழுதிய அப்பு பற்றிய 3 கவிதைகளைப் படித்த
காரணத்தினால் என்னை மறந்த ஆழ்ந்த உறக்கத்திலும் அப்பு
என்னோடு இருந்ததை உணர்ந்தேன். அதைக் கவிதையாக எழுத
மனம் விழைந்தது. அதன் விளைவே இந்தப் படைப்பு.
பாலமுருகனுக்கு நன்றி)


Monday, March 28, 2011

யார் ஆண்டாலும்


தேர்தல் பரபரப்பின்
சாலைப் புழுதியில் சிக்காது
தெருவோர மண்ணில் முடங்கி
கால்நீட்டி ஆகாயம் வெறித்து
பெருமூச்சுவிட்ட
கிழவனின் நெஞ்சக் குளத்தில்
ஆசைக் குமிழிகள்
உருவாகி உருவாகி உடைந்தன
யார் வருவார் ஆட்சிக்கு?
எவர் தருவார்
அதிக இலவசங்கள்?
ஆடு வாங்க லோன் கிடைக்குமா?
அடுப்புக்குக் கேஸ் கிடைக்குமா?
மிக்ஸியும் கிராண்டரும்
சொன்னபடி வீடுவருமா?
போனமுறை சொன்ன டிவி
இனியாகினும் கண்ணில் வருமா?


ஆவதும் நீரால்..


அற்றை நாளில் வள்ளுவரும்
நற்றிணைப் பாடலில்
கபிலரும் மொழிந்தனர்
நீரின்றி அமையா உலகு
இற்றை நாளில்
கடல்பொங்கி மொழிந்தது
நீரின்றி அழியா வாழ்வு

ஆவதும் பெண்ணால்
அழிவதும் பெண்ணால்
பொய்யாய்ப் போனது முதுமொழி
ஆவதும் நீரால்
அழிவதும் நீரால்
மெய்யாய் ஆனது நிகழ்மொழி

நீலிக்கண்ணீர் முதலைக்கண்ணீர்
எல்லாம் காய்ந்து போய்விடும்
இது ஆழியில் எழுந்த
ஊழிக்கண்ணீர்
உயிர்களைத் தின்றும்
உறுபொருள் சிதைத்தும்
அசுரப்பசியைத் தீர்க்கும்

வாழ்வோ விளையாட்டோ
எல்லை கடந்தால் என்றும்
தீராத தொல்லைதான்
நீர் கரையை உடைத்து
எல்லையைக் கடந்தால்
தீராத இடும்பைதான்


உழைப்புக்கு வியர்வை
உறவுக்குச் செந்நீர்
அன்புக்குக் கண்ணீர்
இனக்காப்புக்கு உயிர்நீர்
உயிர்மூச்சுக்கு மழைநீர்

நீரால் நிறைந்து
நீரால் கரைந்து
நீரால் வரைந்த கோலம் நாம்
நீர்க்குமிழி போல
நினைக்கும் கணத்தில்
உடைந்து மறையும் மாயம் நாம்

உதிரம் பாலாக்கி
உழைப்பை எருவாக்கி
ஊனுருக்கி சேய் வளர்ப்பாள்
அந்தத் தாயைப் பழிக்கவில்லை

எண்ணிமாளா உயிர்களை
தன்னிலே புதைத்துவிட்டு
எஞ்சிய உயிர்களை
கண்ணீரில் நனையவிட்ட
தண்ணீரைப் பழிக்கின்றேன்
நான் தண்ணீரைப் பழிக்கின்றேன்





Wednesday, March 16, 2011

நடுநிசி நாய்களும் எச்சரிக்கை மணியும்






இந்தத் திரைப்படத்தைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் முதலில் எனக்கு இல்லை. படத்திற்கு எதிர்ப்பு என்ற செய்தியும் படம் குறித்த விமர்சனமும் என் ஆர்வத்தைக் கிளறிவிட்டன. முகநூலில் கே.பாலமுருகனின் சுருக்கமான விமர்சனம் வேறு என் ஆர்வத்தை மேலும் தூண்டியது. கௌதம் மேனன் ஏமாற்றமாட்டார் என்ற நம்பிக்கையும் சேர செந்தூல் திரையரங்கிற்குப் போனேன். படம் பார்க்க மூன்று பேர்தான் இருந்தோம். ஐந்து பேர் இருந்தால்தான் படத்தை ஓட்டமுடியும் என்று டிக்கெட் முகப்பிடத்தில் கூறிவிட்டார்கள் (படம் இரண்டு வாரங்களாக ஓடுகிறது. எனவே ஆள்கள் குறைந்ததில் ஆச்சரியமில்லை). எப்படியோ 6 பேர் சேர்ந்தோம். படம் பார்க்கும் வாய்ப்பினைப் பெற்றோம்.

எதிர்பார்த்தபடியே கௌதம் மேனன் ஏமாற்றவில்லை. ஆல்பெரெட் ஹிச்கோக்கின் ‘சைக்கோ’, மூடுபனி, சிவப்பு ரோஜாக்கள், மன்மதன் போன்ற படங்களின் சாயல் இருந்தாலும் நடுநிசி நாய்கள் தனித்து மனத்தில் பதிகிறது. சமுதாயத்தில் நல்லவர்களாக நடமாடும் மனிதர்களில் மனம் பிறழ்ந்தவர்களும் குரூர தன்மை உடையவர்களும் கலந்து கிடக்கும் நிலையை இந்தப் படம் எச்சரிக்கை மணியாய் ஒலிக்கிறது.

பம்பாயில் வசிக்கும் ஒரு சிறுவன் (சமர்) எட்டு வயதிலேயே தன் மோசமான தந்தையினால் பாலியல் களியாட்டங்களில் பங்குகொள்ள வற்புறுத்தப்படுகிறான். அவை அவனை ஆழமாகப் பாதிக்கின்றன; ஆறாத ரணமாகிப் பின்னர்க் கொடுங்கனவுளாகி அவனை இம்சிக்கின்றன. அவனின் நிலையறிந்த அண்டை வீட்டு நடுத்தர வயது மாது(மீனாட்சி), போலீஸ் துணையோடு அவனைக் காப்பாற்றுகிறார். அவனின் தந்தை தற்கொலை செய்துகொள்ள அவனை அந்த மாதே வளர்க்கிறார்.

பதின்ம வயதையடைந்திருந்தாலும் அவனால் மனத்தில் ஆழப் பதிந்த கொடுங்கனவிலிருந்து மீளமுடியவில்லை. தாயாகப் பேணிக்காக்கும் அவரையே நேசிக்கிறான்; பலாத்காரம் செய்கிறான். இந்தக் காட்சியும் படத்தில் அது நீண்டுபோனதும் பலத்த எதிர்ப்புக்குக் காரணமாகிவிட்டன. சிறுவயது பாதிப்புகள் எவ்வளவு ஆழமாய் ஒருவனைப் பாதிக்கும் என்பதைத்தான் கதைப்போக்கு உணர்த்துகிறது.

குற்ற உணர்விலிருந்து மீள மீனாட்சி திருமணம் செய்துகொள்கிறார். அவன் (சமர் வீரா என பெயர் மாறுகிறது) அதை ஏற்றுக்கொள்ள முடியாது மீனாட்சியின் கணவனைக் கொலை செய்கிறான். மீனாட்சி அப்போது ஏற்பட்ட தீவிபத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சில காலத்திற்குப் பிறகு காலமாகிறார். வீரா பம்பாயிலிருந்து சென்னை திரும்புகிறான். சென்னையில் பல பெண்களை ஏமாற்றித் தன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டுபோய் கொலை செய்கிறான்.

மீனாட்சி கோர முகத்தோடு மருத்துவமனையிலிருந்து நலமடைந்து வீராவுடன் சென்னை வீட்டில் வசிப்பதாகவும் அவன் செய்யும் கொலைகளுக்கு அவளே தூண்டுதலாகவும் இருப்பதாகவும் காட்டப்படுகிறது. ஆனால், அது அவனின் மனத்தின் பிறழ்ச்சியிலால் ஏற்பட்ட கோளாறு என முடிவில் நமக்குத் தெரியவருகிறது. சமர், மீனாட்சி, வீரா என மூவரின் ஆளுமையினால் ஒருவன் ஆட்டிப்படைக்கப்படுவதை கௌதம் நேர்த்தியாகப் படமாக்கியுள்ளார்.

படம் முழுதும் அடுத்து என்ன நடக்கும் என்ற திகில் பரவி நம்மை இருக்கையின் நுனிக்குத் தள்ளுகிறது. மனோஜ் பரமஹம்சாவின் கேமரா இரவின் இடுக்குகளையும் விட்டு வைக்காது தேடிப் பதிவுசெய்கிறது. குறிப்பாக ஒலிப்பதிவு திகிலுக்குச் சுதி சேர்க்கிறது. வழக்கமான தமிழ்ச்சினிமாவில் வரும் நகைச்சுவை, பாட்டுகள், என எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு திகிலில் சமைத்த உணவைப் பரிமாறியிருக்கிறார் கௌதம்.

படத்தில் நான்கு நாய்கள் வருகின்றன. அவைதான் நடுநிசி நாய்களா என நண்பர் ஒருவர் கேட்டார். உண்மையில் கௌதம் சொல்ல வரும் நாய்கள் வேறு. இன்றைய நவீன வாழ்க்கையில் இரவில் நடமாடுவது பலருக்கு இயல்பாகிவிட்டது. பலரும் பலரைச் சந்தித்துப் பேசுகிறார்கள்; பழகுகிறார்கள். ஆனால், மனிதர்களில் நல்லவர்களாக முகங்காட்டும் எல்லாரும் நாம் நினைப்பதுபோல நல்லவர்களா? அல்லது அவர்களில் சிறுவயது பாதிப்புகளினால் மனநோய்க்கு ஆளாகி, ஆனால் தங்களில் இன்னொரு முகத்தை மறைத்துக்கொண்டு வேறு முகத்தைக் காட்டி இயல்பாகப் பழகும் மனிதர்களா?

இது பெண்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கை மணியாக எனக்குப் படுகிறது. சான்றுக்கு வேறு எங்கும் போகவேண்டாம். நம் நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்னால், பங்சாரில் ஒரு சீனப் பெண், பேரங்காடியின் கார் நிறுத்தும் இடத்திலிருந்து கடத்தப்பட்டு பல மணி நேரம் விடிய விடிய காரில் திகில் பயணத்தில் அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் கொடுமைக்குப்பின் கொலை செய்யப்பட்டு தீமூட்டி எரிக்கப்பட்டதை நாம் செய்தியாகப் படிக்கவில்லையா?

‘நடுநிசி நாய்கள்’ எனக்கு அந்த சம்பவத்தைத்தான் நினைவூட்டியது. அதே போன்ற கடத்தல் சம்பவம் படத்திலும் வருகிறது. நடுநிசி நாய்கள் பசிவெறியோடு தம் கோர முகத்தை மறைத்துக்கொண்டு வாலாட்டிக்கொண்டு வழியில் போவோரை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. பயணிக்கும் நாம்தான் கவனமாக இருக்கவேண்டும். அந்த அபாய எச்சரிக்கை மணியைத்தான் கௌதம் மேனன் அடித்திருக்கிறார்.

வழக்கத்தை மறுதலித்துவிட்டு புதிய திகில் அனுபவம் பெறவேண்டுமா? ‘நடுநிசி நாய்கள்’ நமக்காகக் காத்திருக்கின்றன.