நம் குரல்

Friday, February 19, 2010

கடற்கரை யோகம்





நீங்கள் வராத நாளில்
நான் மட்டும் சென்றிருந்தேன்
அந்தக் கடற்கரைக்கு

நம் அரட்டைகள் இல்லாத
அந்தக் கணங்களில்
என்னுடன் உரக்கப் பேசியது காற்று

நம் சிரிப்பலைகளில் தவறவிட்ட
அலைகளின் செல்லச் சிணுங்கல்கள்
காதுமடல்களை நனைத்தன

கால் விரல் இடுக்குகளில் மறைந்து
என்னுடன் பயணிக்க விழைந்தன
மண் துகள்கள்

தொலைத்தூரத்து மஞ்சள் வானத்திலிருந்து
குளிப்பதற்காக கடலுக்குள் இறங்கியது
அந்திச் சூரியன்

நம்மைப்போல கூட்டமாகக் கதைபேசி
எங்கோ அவசரமாகப் பயணப்பட்டன
மேகங்கள்

நாம் இதுவரை காணத்தவறிய
சின்னஞ் சிறு நண்டுகள்
மணலில் விளையாடக் கண்டேன்

நாம் பேசியிருந்த தருணங்களில்
வேகங்காட்டிய மணித்துளிகள்
மெல்ல மெல்ல நகர்ந்தன
வினாடிகளாய்....

நீங்களும் போய் வாருங்களேன்
அந்தக் கடற்கரைக்கு ஒருநாள்
தனியாக..

No comments:

Post a Comment